அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்
கலியுகத்தில் சற்குருமார்கள் தோன்றுவதுண்டா, எங்கே என் சற்குருவைத் தேடுவேன், சற்குருவைப் பெறுதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற பல ஆன்மீக வினாக்களுக்குத் தக்க தெளிவுரையாக அமைகின்றவையே இந்த “அடிமை கண்ட ஆனந்தம்” தொடரில் நீங்கள் காண்கின்ற குரு-சிஷ்ய அனுபூதிகளாகும். சிறுவயதிலேயே சற்குருவின் அருளரவணைப்பில் பொலிந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் இன்று திருஅண்ணாமலையில் தம் சற்குருவின் அருளாணையின்படி, அருளாசியின்படி ஸ்ரீலஸ்ரீலோபாமாதா, அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நிறுவி பௌர்ணமி தோறும், பிரார்த்தனைகளுடன் கனிந்து வரும் கிரிவலம் வரும் அடியார்கட்கு அன்னப்பிரசாதம் பரிபாலிப்பதன் ஆன்மீகப் பின்னணியே அவர் சிறுவயது முதல் பூண்ட குருகுலவாசத்தின் மகத்தான அனுபூதிகளாம்,

ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை
செம்பொனார்கோவில்

ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர்
செம்பொனார்கோவில்

குருகுல முறைப்படி இன்றைய மாதாந்திரப் பௌர்ணமி அன்னதானம் சித்புருஷர்களில் முத்தாய்ப் பிரகாசிக்கும் சிவகுரு மங்கள கந்தர்வ ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் நேரடி மேற்பார்வையில் குருகுலவாசம் பெற்ற ஸ்ரீவெங்கடராமன், சிறுபிராயத்திலும், இளம் பருவத்திலும் தம் சற்குருவுடன் அருணாசல கிரிவலத்தில்தான் செழித்தார் என்றார் மிகையாகாது! ஆமாம், குரு மங்கள கந்தர்வா என்றால் என்ன பொருள்! உங்கள் உள்ளத்தில் ஊறிக் கிடக்கும் பழுத்த வினா இது!
என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாய், கோடானு கோடி சதுர் யுகங்களாய் பூலோகம் மட்டுமின்றி அனைத்து கோடி லோகங்களிலும் ஜீவன்களின் நல்வாழிற்கென அருட்பணி ஆற்றுகின்ற நித்ய சிரஞ்சீவிகளாய்ப் பொலிகின்ற சித்புருஷர்கள் உறைகின்ற விண்வெளி லோலகங்களுள் ஒன்றுதான் குருமங்கள கந்தர்வ லோகம். ஸ்ரீராமருக்கு, “ஸ்ரீஆதித்ய ஹிருதயம்” மந்திரத்தை உபதேசிக்கும் பெரும் பாக்யம் பெற்ற ஸ்ரீஅகஸ்தியர் இன்றும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதைத் தம் நித்ய வழிபாடுகளாய்க் கொண்டிருக்கின்றார் என்றால் சித்தர்களின் மஹிமையையோ, சித்தர்களுக்கே அருள்பாலிக்கும் அருணாசல மகாத்மியத்தையோ எப்படித்தான் எடுத்துரைப்பது! அந்த குருகுலவாசத்தில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்! ஒவ்வொரு அனுபவமும் நல்லதோர் அனுபூதியாக மலர்ந்து கோடானு கோடி பொன் மலர்களாய்ப் பிரகாசித்து இன்றைக்கு “அடிமை கண்ட ஆனந்தமாய்”, ஆயிரமாயிரம் ஜீவன்களுக்கு வாழ்க்கைப் பாடமாய் அறவழி விளக்காய், துன்பக் காரிருளைப் போக்கும் நன்னெறி தீபமாய் விளங்குகின்றதன்றோ!
“எம்புருஷனுக்கு அடிக்கடி ஒடம்புக்கு வந்து, பாடாய் படுத்துதே, நல்ல பணம், காசு கொடுத்த ஆத்தா இந்த மாதிரி வியாதியையும் கொடுத்துட்டாளே”, என்று ஒரு அம்மாள், புலம்பிட, “ஏம்மா அழகா நெத்தில குங்குமப் பொட்டு வக்கற இடத்துல பிளாஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டு வச்சிருக்கியே, எந்த நெத்தி குங்குமத்தைப் பாத்து பாத்து புருஷனுக்கு, ஆயுளும், ஆரோக்யமும் பெருகணுமோ, அந்த மங்களகரமான நெத்திய பிளாஸ்டிக் ஸ்டிக்கர் வெச்சு கெடுத்தா, ஏன் வியாதி வந்து படுத்தாது! நல்ல மாங்கல்யத்த நூல் சரடுல மாட்றதுதான் விசேஷம், தங்கச் சங்கிலல மாங்கல்யத்த மாட்டினா புருஷன் உடம்பைப் படுத்தத்தான் செய்யும்! ....... போ..  ..போ..... நீ முதல்ல மங்களகரமா இருக்கற வழியப் பாரு! ஒம் புருஷன் ஆடோமேடிக்கா தானே எந்திரிச்சு நல்ல நடத்து தேறிடுவான் பாரு.... எந்த மருந்தும், டானிக்கும் வேண்டாம்...! ”
இந்த மாதிரி எத்தனையோ அரிய தெய்வீக விஷயங்களைப் பாமரரும் உணரும் வண்ணம் உணர்த்துகின்ற சித்புருஷரிடம் தான் தன்னுடைய குருகுலவாசம் பூஞ்சோலையாய்ப் பரிணமித்து கொண்டிருக்கின்றது என்பதை சிறுவன் அப்போது உணர்ந்தானில்லை! “உணரவில்லை” என்று நம் குரு சொல்வதும் நடிப்புத்தானோ! திடீரென்று கிரிவலத்திற்குக் கிளம்பி விடுவார் . சில சமயங்களில் சென்னையிலிருந்து பெருநடை! சமயத்தில் செங்கல்பட்டில் பஸ் ஏறி விடுவார்! அப்போதெல்லாம் கிரிவலச் சாலை நல்ல மண் பாதையாகவே இருந்தது!
நினைத்தால் அவசர அவசரமாய் மூன்று கல்லை வைத்து எங்கிருந்தோ “சால்” (பானை) கொண்டு வந்து, சுள்ளி விறகைப் பொறுக்கி எடுத்து வைத்து சமைக்க ஆரம்பித்து விடுவார்! அரிசி, பருப்பு, காய்கறி ... இத்யாதிகள் எங்கிருந்து வருகின்றன! யாரறிவார், பராபரமே! உஷாராக “டேய் போய் நாலணாவுக்கு மந்தார இலை வாங்கி வா, போ, போ, ஓடு , ஓடு!” என்று சிறுவனைத் துரத்துவார்.

ஸ்ரீசூரிய தீர்த்தம்
செம்பொனார்கோவில்

சிறுவனும் எத்தனையோ முறை, “இவர் எங்கிருந்து அரிசி, பருப்பு..... எல்லாவற்றையும் கொண்டு வருகின்றார்”, என்ற ஆராய்ச்சியில் இறங்கி இறங்கி ஏமாந்திருக்கின்றான்? ஏதேனும் சாக்கு போக்குச் சொல்லி பார்த்தால் மளிகைச் சாமான்கள் நிரம்பி இருக்கும். அப்போதுதான் பெரியவர் வேண்டுமென்றே... பூ... பூ. ... பூ என்று அடுப்பை ஊதிப் புகையைப் பெருக்கி subjectஐயே மாற்றி விடுவார்!  பொறுத்து பொறுத்துப் பார்த்து சிறுவன் ஒருநாள், பெரியவரைக் கேட்டே விட்டான்., “ஏன் வாத்யாரே மாய மந்திரத்துல எல்லாத்தையும் கொண்டு வந்து கண்ணு பொகைய, பொகைய ஊதறதுக்கு ஸ்டரெயிட்டாவே சாம்பார் சாதப் பொட்டலமாகவே கொண்டாறதுதானே!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுடா, நீ அந்தப் பக்கம் கடைக்குப் போனியா, இந்த பக்கம் எல்லாரும் வந்து உப்பு, புளி, மொளகான்னு ஏதாச்சும் கொடுத்துடறாங்கடா !” ஏதோதோ சொல்வார்! “இப்படியெல்லாம் அண்ணாமலையார் முன்னாடி பொய் சொல்றியே வாத்யாரே”, என்று சிறுவன் கிண்டி விடுவான்! பெரியவர் சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார்!
ஒரு நாள்..... பெரியவரை இரண்டு, மூன்று நாட்களாக அங்காளம்மன் ஆலயத்தில் காணாமையால் சிறுவன் அழஆரம்பித்து விட்டான். உள்ளுக்கும் வெளிக்குமாக ஓடி ஓடி அலைந்து விட்டான் சிறுவன்! பெரியவரை ஒருநாள் பார்க்கா விட்டால் சிறுவனுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது! அதிலும் மூன்று நாட்களாய், அவரைக் காணவில்லை என்றால் சிறுவன் பரிதவித்துப் போய்விட்டான்! திடீரென்று எங்கிருந்தோ தோன்றிய பெரியவர் சிறுவனை அரவணைத்துக் கொண்டார்!
“என்னடா கண்ணு! ரொம்ப ஏமாந்து போய்ட்டியா! ஒரு கால் மணி நேரம் வெளில போனதுக்கே இப்படி நீ கூத்தடிக்கிறியே உன்ன வச்சு எத்தனையோ தான, தர்மம் பண்ணனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேனே, எப்படியடா, நீ அதையெல்லாம் செய்யப் போற?”

ஸ்ரீசூரியமூர்த்தி
செம்பொனார்கோவில்

அதுசரி, நீ எங்க போயிருந்த, சொல்லு, மூணு நாளா உன்னக் காணோமே”, என்றான் சிறுவன்.
“எங்கயும் இல்லடா, சும்மா பொதிய மலைக்குக் கூப்பிட்டாங்க, நம்ப ராஜாவான அகஸ்தியருக்கு சூட்டு, கோட்டு தைக்கணும்னு சொன்னாங்க, நல்ல சான்ஸ் ஆச்சேடா, விட்டுட முடியுமா?” “என்ன சொல்கிறார் இவர் புரியவில்லையே”, சிறுவன் நன்றாகக் காதைத் தீட்டிக் கொண்டான், ஏதோ சித்த அனுபூதி ரகசியம் வெளிவந்து கொண்டிருக்கிறது அல்லவா!
“முந்தா நாளு பாரு அங்காளி கோயில் வெராண்டா ஃபுல்லா ஒரே வி.ஐ.பீஸ்டா. அவனவன் தேவலோகத்துலேந்து நேரே இங்க வந்துட்டாணுங்க இல்ல!”
பெரியவர் சிரித்தார்... தேவலோக சம்பவங்களை எல்லாம் பெரியவர் வர்ணிப்பது ஆனந்தமாக இருக்கும்! தனக்கே உரிய “தமிழ் மொழியில்” பெரியவர் உரைப்பதைக் கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனாக இனிக்கும்! (இறைவனின்) அடிமை கண்ட (பரம) ஆனந்தமல்லவா, அதற்கு எல்லை ஏது? நிகரேது? 
“ஆமாண்டா, நீ நினைக்கிற மாதிரி சித்தன்னா ஜடாமுடி வெச்சுகிட்டு, கமண்டலம் தூக்கிக்கிட்டு இருக்க மாட்டாங்கடா! இந்தியாவில் மட்டுமில்ல, இந்தோனேஷியாலேந்து, ஸாம்பியா வரைக்கும் எந்த நாட்டுல சித்தன் இல்ல சொல்லு பார்க்கலாம்., அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி வேஷம் போட்டுகிட்டு இருப்பாங்கடா சித்தனுக! அமெரிக்கானா பாண்ட், சூட், டை மாட்டிக்கினு இருப்பாங்க! மெக்ஸிகோன்னா பெரிய தொப்பி வச்சுக்குணு சுத்துவாங்க! ஆப்பிரிக்கான்னா சுருட்ட, சுருட்டயா முடில குழாயை உருட்டிச் சுத்திக்கிணு நடமாடுவாங்க! சித்தனுக இல்லாத இடம் எது சொல்லு பாக்கலாம்! ....ம்....ம்..ம்ம்.. நல்ல சப்ஜக்ட்டுக்கு வர்றேண்டா கண்ணு! ருத்ர கண்ட சித்தர்னு ஒரு பெரிய மஹான், சிவபெருமானுக்கே சந்தோஷம் கொடுத்த சித்தர்னா அவர் எப்பேர்பட்ட சித்தர்னு தெரிஞ்சுக்க... அவரு யாரோடயோ  கர்மபாக்கியத் தீக்கறதுக்குன்னு மெக்ஸிகோல பொறந்தாரு! அவர ஒத்தன் அடிமையா வெலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு கூட்டியாந்து ரொம்ப கொடுமைப்படுத்திட்டான்! மகா தபஸ்வி அவர்! நெனச்சா பூலோகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிடுவாரு! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க, மகான்களோ, சித்தர்களோ தங்களோட POWERஐ எப்பவுமே வெளில காட்டறது கெடயாது! அவ்வளவு அடக்கமா, பணிவா இருப்பாங்க.

ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி
செம்பொனார்கோவில்

அந்த அமெரிக்கா முதலாளி இவரப் படாதபாடுபடுத்தி, சோறு, தண்ணி ஒழுங்கா கொடுக்காம பைத்தியம் மாதிரி, அடிச்சு த்வம்சம் பண்ணிட்டான், அவ்வளவுதான் சித்தலோகத்துல ஒரே டிஸ்கஷன், யார் .. எப்படி அவரப் போய் காப்பாத்தறதுன்னு? ஆனா எல்லாருக்குமே ஒரு பயம்! அது என்னன்னா, இப்படி அடிமையா இருக்கறவரோ பெரிய சித்தர்! அகஸ்திய லோகத்துலேந்தே நேரா வந்தவரு! அவரோ எல்லாம் கர்ம வினைன்னு சொல்லி சகிச்சுக்கிட்டு இருக்காரு! இப்படியாப்பட்ட பெரிய சித்தர்கிட்ட போய் நான் ஒங்களக் காப்பாத்த வந்திருக்கேன்னு சொன்னா எப்படியிருக்கும்? கூச்சமா இருக்காது? எப்படி, என்ன செய்யறதுன்னுதான் யோசிச்சுக்கிட்டு., இருந்தாங்க! நம்பதாண்டா சித்தன்னா வேஷ்டி இல்லாட்டி கோவணம் கட்டிக்கிட்டு இருப்பார்னு நெனக்கிறோம்! இப்படியே வடக்கால நகர்ந்து போனியின்னா வெஸ்ட் பெங்கால் ஸைடுல சித்தருங்க அந்த ஸ்டேட்டு வழக்கப்படி பைஜாமா, குர்த்தா போட்டுருப்பாங்க! அப்படியே தாய்லாந்து பக்கம் போனின்னா,, சித்தருங்க மஸ்ஸின் ஜிப்பா போட்டுக்கிட்டு ரோட்ல சுத்திக்கிட்டு இருப்பாங்க! எந்த டயத்துல எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுடா... ஏன்? இதச் சொல்றேன்னா , அமெரிக்கால ஒரு பணக்காரன்கிட்ட சிக்கிட்டு இருக்காரே ருத்ர கண்ட சித்தரு, அவர காப்பாத்தப் போகணும்னு போற அந்த சித்தரும், சூட், பாண்ட் போட்டு கிட்டுத்தானே போகணும்! மஹா தபஸ்வி ஆச்சே! எத்தனையோ கோடி லோகங்களுக்கு அனுக்கிரகம் பண்ணக் கூடிய ஒரு பவர்புல் சித்தர் தானே ஒரு கர்மவினைய சுமந்துகிட்டு கஷ்டப்படரார்னா நாம என்ன செய்யணும்? ஸ்ரீஅகஸ்தியருக்கே நியூஸ் போயிடுச்சு அவ்வளவுதான் ஸ்ரீருத்ர கண்ட சித்தர் பேரைச் சொன்னதுமே அகஸ்தியர் எழுந்துட்டாரு! சரி சரி அடியேனே போய் அவர மீட்டுக்கிட்டு வந்துடறேன்! அப்படீனுட்டு, அகஸ்தியரே பொறப்பட்டுட்டாரு.!”
சிறுவன் வாய் மூடாது கேட்டுக் கொண்டிருந்தான்.... முக்காலத்தையும் அறிந்த சித்தர்களே தாங்கள் எடுத்து வந்த கர்மவினைக் கோட்பாட்டின்படி நடந்து கொள்கின்றார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்.

தென்காசி மகாத்மியம்

செம்பொனார் கோவில் – 5 தென்காசி மகாத்மியத் தொடர்
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!
கடந்த இதழ்களில் தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசிப்பதற்கான சித்புருஷர்கள் அருள்கின்ற திருத்தல வழிபாட்டு முறையினை விளக்கி வருகின்றோம் அல்லவா! தென்காசி நாதரைத் தரிசிப்பதற்கு முன்னர் இத்தலங்களுக்கெல்லாம் சென்று தீர்த்தமாடி, மூர்த்தியை வணங்கி, அடிப்பிரதட்சிணம் செய்து நன்முறையில் வழிபட்ட பின்னர் தென்காசி நாதரைத் தரிசிக்கின்ற போதுதான், அவருடைய தரிசன பலன்கள் யாவும் குருவருளால் பரிபூரணமடைகின்றன! தென்காசித் திருத்தல வழிபாட்டில் ஐந்தாவது திருத்தலமாக விளங்குவது செம்பொனார் கோவில் ஆகும். வெற்றியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு முன் நம்முடைய குறிக்கோளில் நமக்கு ஏற்பட்டுள்ள பொறுப்புகளை உணர்தல் வேண்டும். ஏதோ பலரை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களின் மேல் வேலை பளுவைச் சுமத்துவது பொறுப்பு ஆகாது. அதே சமயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதையும் உணர்ந்து அறிதல் வேண்டும். குறிக்கோளைச் சுற்றிலும் குறிக்கோளுக்கு அப்பாற்பட்டதாகவும் சில குடும்ப, சமுதாய, தெய்வீகக் கடமைகள் உள்ளன, கடமையை உணர்ந்தால்தான் எந்தக் காரியத்தையும் செம்மையாகப் பொறுப்புணர்ந்து செய்தல் முடியும். இந்திர, குபேர தேவர்கள் தம்முடைய கடமையைச் செம்மையாகச் செய்வதற்கு இத்திருச்சொம்பன் வழி எனப்படும் செம்பொனார் கோயிலில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரருடைய அருளை வேண்டித் தவமாகப் பெற்றார்கள்.

ஸ்ரீஜேஷ்டாதேவி
செம்பொனார்கோவில்

நம்முடைய தினசரி வாழ்க்கையிலும், வியாபாரத்திலும், அலுவலகத்திலும் ஏற்படுகின்ற துன்பங்கள் தான் எத்தனை எத்தனை ? ஆனால் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு அவற்றை வெல்வதற்கான புண்ய சக்தியை நாம் பெற்று இருக்கின்றோமா! புண்யசக்தி வேறு, தெய்வ சக்தி வேறு! நாம் செய்கின்ற நற்காரியங்களின் பயனாக வருவதே புண்ய சக்தியாகும். ஆனால் இப்புண்ய சக்தியை நாம் நன்முறையில் பயன்படுத்திட வேண்டும். லஞ்ச லாவண்யங்கள், அதர்மம், பொய்மை, பொய்மை சேர்ந்தால் நம் புண்ய சக்தி வீணாக விரயம் ஆவதோடு இவற்றிற்கான தண்டனைகளிலிருந்து நம்மை ஓரளவு தற்காத்துக் கொள்வதற்காகவே புண்ய சக்தி அனாவசியமாகக் கரைந்து விடுகின்றது. தெய்வ சக்தி என்பது நம்முடன் எப்பொழுதும் நிலைத்து நின்று நன்மை தருவதாகும். புண்ய சக்தியை தெய்வ சக்தியாக மாற்றுவதற்கான நல்வழி முறைகளை குருவாய் மொழிகளாக அறிந்து, உணர்ந்து செயல்பட வேண்டும்!
அடுத்ததாக வெற்றியில் நமக்குக் குறுக்கிடுவது பொறுப்பற்ற உணர்ச்சியாகும். ஆரம்பத்தில் சற்றுப் பொறுப்பு இருக்கும். ஆனால் வியாபாரத்திலோ, வாழ்க்கைக் காரியங்களிலோ ஏற்படும் ஏமாற்றம், நஷ்டம், பிறரால் வஞ்சிக்கப்படுதல் போன்றவை காரணமாக சலிப்பு ஏற்பட்டு அந்த பொறுப்பு உணர்வே, பொறுப்பில்லாத உணர்ச்சியாக மாறி மேலும் பல இன்னல்களைப் பெருக்கித் தந்துவிடும். இவை எல்லாம் ஏற்படுவதற்குக் காரணம் நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகள் மட்டுமின்றி இப்பிறப்பிலும் நாமே நமக்குத் தேடிக் கொள்கின்ற கர்மவினைகளும் ஆகும். எனவே எங்கு சென்றாலும் சரி, கர்ம வினைக் கழிப்பு என்ற நியதி ஏற்பட்டால் தான் அங்குள்ள தடைகள் நீங்கிடும். திருமணத் தடங்கல்களுக்குக் கூடக் காரணம் கர்மவினைகளேயாகும். இவைகளை நீக்குவதற்காகத் தான் பல பிராயசித்த வழிமுறைகள் அளிக்கப்படுகின்றன.
ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர் வாழ்க்கையிலே பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்குப் பெரிதும் அருள்புரிகின்றார்.. எனவே நம்முடைய குழந்தைகளை இத்திருத்தலத்திற்கு அடிக்கடி அழைத்துச் சென்று ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரரை தரிசனம் செய்வித்தால் அவர்கள் பொறுப்புணர்வுடன் நல்ஒழுக்கத்துடன் வளர்ந்து பெருந்துணையாக நமக்கு இருப்பார்கள். வேலையில்லாமல் திரிவது, தீய நட்பால் அலைவது, பொறுப்புணர்ச்சியற்று ஓடித் திரிவது இவ்வாறாகப் பல குடும்பங்களிலும் எத்தனையோ வேதனைச் சுமைகள் குவிந்த வண்ணம் தானே இருக்கின்றன.

ஸ்ரீபிரகாச பிள்ளையார்
செம்பொனார்கோவில்

இத்தகைய தடங்கல்களை எல்லாம் கடந்து நம்மை வெற்றிப் பாதையில் நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர் பெரிதும் அருள்பாலிக்கின்றார். குறிப்பாக, வியாழக்கிழமையில் குரு ஹோரையில், ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரருக்கு மாம்பழக் காப்பும், கேசரிக் காப்பும் இட்டு வழிபட்டு இதனைப் பிரசாதமாக ஏழைகளுக்கு அளித்து வந்தால் நம்முடைய பிள்ளைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நன்முறையில் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.. பொறுப்புணர்ச்சியை உய்த்தலும், கடமையை அறிதலும் வேண்டும். குடும்பத்திற்கு, அலுவலகத்திற்கு, செய்ய வேண்டிய பல கடமைகள் உண்டு. ஏதோ நம் பாங்கில் குடும்பத்தை நடத்துதல் மட்டும் வெறும் கடமை ஆகாது. அந்தக் கடமை உணர்ச்சியைக் கூட்டுவதும் ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரரே!
இந்தக் கடமை உணர்ச்சி இல்லாமையால்தான் இன்றைக்கு பல வியாபாரத் துறைகளிலும், அலுவலகங்களிலும் பலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு பல நஷ்டங்களை உருவாக்கிப் பல தொழிற்சாலைகளையும், மூடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே தொழில் அதிபர்களும், வியாபாரிகளும் செவ்வாய்க் கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரரை வழிபட்டு வந்திடில் இதன் பலனே அவர்களுடைய பணியாட்களும் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்வும் தாமே வரப் பெற்றவராய் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
ஸ்ரீமருவார்குழலம்மை
செம்பொன்னார்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை அம்மன் அபூர்வமாக திருமணக் கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளது காணக் கிடைக்காத காட்சியாகும். ஸ்ரீதாயுமான ஈச திருத்தலத்தில் எழுந்தருளிய அம்பிகையைப் போல செம்பொனார் கோவிலிலும் அதே திருநாமத்துடன் மேற்கு நோக்கி அன்னை ஈசனைப் பார்த்தவாறு எழுந்தருளி இருப்பது கிடைத்தற்கரிய பேறுதானே? அகில், சந்தனம் கலந்த சாம்பிராணி தூபம் அடர்த்தியாக இத்தலத்தில் இட்டு குறிப்பாக அம்பிகையையும் ஈசனையும் வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
மேற்கு நோக்கிய அம்பாள் திருஆனைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியைப் போல திருவாசி ஸ்ரீபாலாம்பிகையைப் போல மிகவும் சக்தி வாய்ந்த தெய்வ மூர்த்தியாக விளங்குவதால் ஸ்ரீஆதிசங்கரர் திருஆனைக்காவில் பிரதிஷ்டை செய்தது போல் செம்பொனார் திருத்தலத்தில் ஸ்ரீபிரகாச பிள்ளையார் ஈசன் அம்பிகை இடையே எழுந்தருளி உள்ளார். ஏக தந்தத்துடன் விளங்கும் விநாயகப் பெருமானின் தரிசனம் வாஸ்து தோஷங்களைக் களைவது போல இத்தலத்தில் ஒரே தூணுடன் விளங்கும் ஸ்ரீபிரகாச பிள்ளையார் சன்னதியும் வாஸ்து தோஷங்களைக் களைவதுடன் தம்பதிகளிடைய ஒற்றுமையைப் பெருக்குகிறது.
அபூர்வமாக ஸ்ரீவனதுர்கையின் தரிசனமும் வாயு மூலையில் ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனமும் விளங்குவதால் இத்தரிசனங்களால் தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருகி குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பதால் தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் நிலவும் தரித்திர நிலை நீங்குவதோடு மட்டுமல்லாமல் மன ஒற்றுமையை வளர்க்கும் தலமாகவும் செம்பொனார்கோவில் விளங்குகிறது. மேலும் கோயிலின் முன்னே உள்ள சூரிய தீர்த்தம் பெற்றோர்கள் குழந்தைகள் சிறப்பாக ஆண் குழந்தைகளிடையே நிலவும் கருத்து வேற்றுமையைக் களைவதால் இந்த தீர்த்தத்தில் நீராடி முடியாதவர்கள் இத்தீர்த்த நீலை தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை முறையாக வழிபடுவதால் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு அடங்கி ஒழுக்கத்துடன் திகழ்வார்கள் என்பது உறுதி.

தெய்வீக வாழ்வு

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

இல்லறமாம் நல்லறமே முக்தி நிலையை எளிதில் தருமாதலின் சித்தர்கள் அருள்கின்ற இல்லறத்தோடு இணைந்த எளிய அறவழிமுறைகளைக் கடைபிடித்து திருஅருள் பெற்றிடுங்கள்! ஆன்மீகம் என்றால் வயதான பின், retired ஆன பிறகு நுழைய வேண்டிய துறை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். இளமை, ஆர்வம், உடல் வலிமை, மனவலிமை, வசதி, நல்வாய்ப்புகள் இருக்கும் போதே நிறைய தெய்வீகக் காரியங்களை ஆற்றிக் கொள்ள வேண்டும். வயதானபின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு “வா” என்று அழைத்தால் புண்ய சக்தி வந்திடுமா? “போ” என்றால் உடனே கர்மவினைகள் போய்விடுமா என்ன? தினமும் உறக்கத்திலிருந்து எழுவது முதல் உறங்கச் செல்லும் வரை உள்ள அனைத்து வாழ்க்கைக் காரியங்களிலும் சித்தர்கள் காட்டும் வழியில் தெய்வீக அம்சங்களை எளிதில் இணைத்திடலாமே!
சித்தர்கள் காட்டும் எளிய வழிமுறைகள்

ஸ்ரீவனதுர்கை
செம்பொனார்கோவில்

இந்த அற்புதமான தலைப்பின் கீழ் நம்முடைய தினசரி காரியங்களில் எவ்வாறு சித்புருஷர்கள் அருளியுள்ள வகையில் எளிய தெய்வீக வழிபாட்டு முறைகளை இணைத்து நல்ல பரிசுத்தமான வாழ்க்கையினைப் பெற முடியும் என்பதை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் குருவாய் மொழிகளாக அளித்து வருகின்றோம் அல்லவா! இந்தப் பகுதிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும், மேலும் நூற்றுக்கணக்கான அடியார்கள் பலவிதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி அவற்றிற்குத் தக்க தீர்வுகளைத் தரும்படி கேட்டுள்ளமையாலும் தனிப்பட்ட முறையில் பதில் அளித்தல் என்பது இயலாததோடு, தனி ஒருவருக்கு ஆன்மீகப் பலன்கள் செல்வதை விடப் பல்லாயிரக்கணக்கானோருக்கு அத்தெளிவைப் பெற்றுத் தந்தால் ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பயன் பெறுவர் என்பதாலும் இங்கு இதனை மீண்டும் தொடர்கின்றோம். “ஈசனைப் பேசா நாளெல்லாம் பிறவா நாளே”, என்பது சித்தர்கள் வாக்கு, எப்படிப் பேசி, எப்படித் தொழுது, அருளைப் பெறுவது இதோ!
ரம்மியமான காலை, மாலை சந்தியா நேரங்கள் :- அமைதியும் சாந்தமும் தழுவுகின்ற காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் மிகவும் ரம்மியமான தெய்வீக நேரங்களாகும். குறிப்பாக காலை 4-6 1/2 மணி வரையிலும் மாலை 4 1/2 – 6 ¾ மணி வரையிலுமான நேரத்தில் நிலவுகின்ற சாந்தம் தரும் தெய்வீக அமைதியை நீங்களே நன்கு அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். இந்த கலியுகச் சமுதாயத்திலே வன்முறைகளும், தீய சக்திகளும் நிறைந்திருந்தாலும் இவற்றிற்கிடையிலும் இந்த இரண்டு புனிதமான நேரங்களில் மகத்தான தெய்வீக சந்தியா சக்தி பூரித்திருப்பதை நீங்கள் பரிபூரணமாக உணர்ந்திடலாம்... இதற்காகத்தான் பிரம்ம முகூர்த்த காலை பூஜைகளும் (விடியற்காலை 3 to 5.30 மணி வரை), காலை மற்றும் மாலை சந்தியா காலங்களும் இறை வழிபாட்டிற்கு மிகவும் உத்தமமான, அபரிமிதமான பூஜா சக்திகளைத் தருவதான இறை நேரமெனவும் நம் மூதாதையர்கள் பகுத்துத் தந்துள்ளனர். எனவே உங்களுடைய முக்கியமான அலுவலக, வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான தீர்வைப் பெற இந்த சந்தியா கால பூஜை, தியான, ஜெப வழிபாடுகள் பெரிதும் உதவும்.
சந்தியா கால வழிபாடுகள் :- காலையில் எழுந்தவுடன், உள்ளங்கை (கிரக) ரேகை தரிசனம், சூரிய பகவானை யோகாசனமிட்டு வணங்குதல், விடியற்காலையிலும், மாலைப் பொழுதிலும் நட்சத்திரங்களைத் தரிசித்தல், குறிப்பாக ஸ்ரீவசிஷ்ட மாமுனியின் பத்தினியான ஸ்ரீஅருந்ததி நட்சத்திரத்தைக் கண்டு வணங்குதல், பசு தரிசனம், பசுவிற்குப் பழங்கள், புல் அளித்தல், கோபுர கலச தரிசனம், ஆலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல், அரசு, வேம்பு, புரசை போன்ற புனிதமான ஸ்தல விருட்சங்களை தரிசித்து மஞ்சள் பூசித்தொழுதல் கங்கை, காவிரி மற்றும் புனிதமான நதிகளில், ஆலயத் தீர்த்தங்களில் நீராடுதல், புனித நீரைத் தலையில் தெளித்துக் கொள்தல், அடிக்கடி மகான்கள், சித்புருஷர்களின் ஜீவ சமாதி தரிசனம், ஜாதி, மத, இன, குல வேறுபாடில்லாது 60, 70, 80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளுக்குப் பாத பூஜை இப்படியான எத்தனையோ எளிமையான இறைக் காரியங்களை நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் கூட்டிக் கொள்ளலாமே.
இதில் என்ன பெரிதாக நேரமோ, பணமோ செலவாகப் போகின்றது? சற்றே சிந்தித்துப் பாருங்கள். நாம் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போல ரேஷன் கடையிலும், ஹோட்டலிலும், பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், டிவியின் முன்னாலும், கிரிக்கெட் மாட்ச் பார்ப்பதற்காகவும், தொலைபேசியில் அரட்டை அடிப்பதற்கும் நீங்கள் வீணாகக் கழிக்கின்ற நேரத்தைப் பார்க்கின்ற போது மேற்கண்ட எளிய தினசரி இறைவழிபாடுகளுக்கு ஆகின்ற நேரம் மிக மிகக் குறைவு என்பதை நீங்களே மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளலாமல்லவா? ஏன் இறைவன் தந்த பொன்னான காலத்தை வீணடிக்கின்றீர்கள்!
எப்போதும் மனதினுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதப் பழகிக் கொண்டால் நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் உள்ளூர மனதினுள் ஒரு சிறு தெய்வீக ஓடை போல் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் ஓடிக் கொண்டிருக்கும் அல்லவா! இதுவே நல்ல ஞாபக சக்தியையும், தியான நிலைகளையும் சாந்தமான மனதையும் கூட்டும். எந்தக் காரியத்தைச் செய்தாலும் சரி, ஒரு சிறு காரியத்திற்காக வெளியே செல்கிறீர்கள் என்றால் சட்டையை எடுத்து மாட்டிக் கொள்ளும் போதும், சீப்பினால் தலைமுடியை வாரும் போதும், வெளிய செல்லும் போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ஸ்ரீவிநாயகர் காயத்ரீ போன்ற எளிய மந்திரங்களைச் சொல்லிச் செய்கின்ற பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டீர்களேயானால் நீங்கள் எப்போதுமே இறைமையிலேயே பூரித்துப் பூத்திருக்கலாமல்லவா?
ஏதோ தெய்வீகம் என்றால் காவியைக் கட்டிக் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருந்து அணுக வேண்டிய பூஜை முறை என்று மட்டும் தயவு செய்து எண்ணாதீர்கள்! விரதம் என்பது உங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் தூய்மையைத் தருவதற்காகத் தான்! மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் அதிலும் குறைந்தது இரண்டு வேளையாவது, வெறும் நீர், துளசி, வில்வம் கலந்த நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருப்பதற்குப் பழகிக் கொள்ளுங்கள்! மாதந்தோறும் ஒருநாளாவது குறைந்தது 18 மணி நேரம் மௌன விரதத்தை மேற்கொள்ளப் பழகுங்கள். இதுதான் ஐயா, இல்லறத்தில் தெய்வீகத்தைப் பேணும் எளிய முறை!
வாரந்தோறும் அரச மரத்தை வலம் வருதல், பசுவை நீராட்டி மஞ்சள், சந்தனம் பூசி, பழங்கள், புல் அளித்துப் பூஜை செய்தல், சிறு சிறு பழங்கள், புஷ்பங்கள், கைக்குட்டை, காலணி போன்ற எளிய தானங்கள், யானைக்கு உணவிடுதல், வெள்ளி தோறும் ஜாதி, இன பேதமின்றி சுமங்கலிகளுக்கு குங்குமம், மங்கலப் பொருட்கள் அளித்தல், மூன்று வேளையும் கோபுர தரிசனம் போன்றவற்றைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இவ்வாறு எளித தெய்வ வழிமுறைகளை கடைபிடித்து வந்தால் தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றின் ஊடே இறைவன் நிச்சயமாக நமக்குக் கை கொடுப்பான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே பக்தி கூடியதாகப் பெருகும்.
கடவுள் நம்பிக்கை வலுக்க வேண்டும்! வெறும் இறை நம்பிக்கை மட்டும் போதாது, அது ஆழமாக உள்ளத்தில் பதிய வேண்டும். எந்நிலையிலும் ஒவ்வொரு விநாடியும் நாம் உயிர் வாழ்வது இறைப் பெருங்கருணையினால் தான், எத்தகைய துன்பச் சூழல்களிலும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான எண்ணம் மேம்பட வேண்டும்., எனவே சிறிய இறை நம்பிக்கை மட்டும் போதாது. அது ஒவ்வொரு நிமிட நேரமும் மேலும் வலுப்பெற்று வலுப்பெற்று உங்களுடைய ஒவ்வொரு கண் அசைவுக்கும் காரணம் அந்த இறைப் பரம்பொருளே என்று புனிதமான எண்ணம் உள்ளத்தில் ஊறியாக வேண்டும். இப்போது புரிகின்றதா இறை நம்பிக்கை என்றால் என்னவென்று? வெறும் கடவுள் நம்பிக்கை என்று மட்டும் கொள்ளாது அதை மணிக்கு, மணி, நிமிடத்திற்கு நிமிடம் விநாடிக்கு விநாடி அதனை ஆழ்ந்த நம்பிக்கைக் கோபுரமாக்குங்கள். இதன் பிறகுதான் பக்தி மலர் பூக்கத் தொடங்கும். இதுவே உண்மையான பக்தியின் ஆரம்ப நிலையும் கூட!
குவிகின்ற திருமணப் பத்திரிக்கைகள்!
பலருடைய இல்லங்களிலும் திருமணப் பத்திரிகைகள் குவிகின்றன அல்லவா! எத்தனையோ உபநயன, காதுகுத்து, புனித நீராட்டு மற்றும் திருமணப் பத்திரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கும்! உற்றம், சுற்றம் அலுவலக நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீடு என்று ஒரு மாதத்திலே வந்து சேருகின்ற கல்யாணப் பத்திரிக்கைகளோ ஏராளம்! ஏராளம்!! இவற்றை என்ன செய்வது? கிழித்துப் போடுவதற்கும் மனம் வராது, எல்லா திருமணங்களுக்கும் செல்வதும் சாத்தியமல்லவே! இந்த நிலையில் நம்மிடம் சேருகின்ற திருமணப் பத்திரிக்கைகளை என்ன செய்ய வேண்டும்? இத்தகைய மிகவும் சாதாரணமான பிரச்னைக்கும் கூட நல்ல எளிய தீர்வு, முறைகளை சித்புருஷர்களே நமக்குத் தக்கதோர் சற்குரு மூலமாகத் தந்திருக்கின்றார்கள்.
ஆனால் இவற்றை நாம்தான் சற்குரு மூலம் பெறத் தவறி விட்டோம் என்பதை இனியேனும் உணருங்கள்.. “குரு இல்லையே குரு இல்லையே” என்று எதிர்மறையாய்ப் புலம்பாதீர்கள். தக்க குருவைப் பெறுதற்கரிய பக்குவத்தை நாம் நிச்சயமாகப் பெறவில்லை. இனியேனும் பெற்றாக வேண்டும், என்று உறுதி கொள்ளுங்கள்.. திருஅண்ணாமலையை ஆழ்ந்த நம்பிக்கையோடு கிரிவலம் வந்து திருஅண்ணாமலையாரையே சற்குருவாக  ஏற்று, பரிசுத்தமான மனதுடன் கிரிவலத்தைத் தொடர்ந்து செய்து வருவீர்களேயானால் உங்களுக்குரித்தான சற்குருவை இறைவனே உங்களிடம் அனுப்பி வைப்பார். ஆனால் அதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.
இன்றைக்கு சற்குரு என்று சொல்லி வணங்கி நாளைக்கு வெறும் மனித உரு என்று அவரை நிராகரித்தல் கூடாது. குரு நம்பிக்கையில் பலத்த சோதனைகள் வரும். எதற்கு? உங்களைக் கனிந்த பக்தி நிலைக்கு இட்டுச் செல்லத்தான் சோதனைகளை வெல்லுங்கள்! அக்காலத்திலேயே நம் பெரியோர்கள் கடிதங்களையெல்லாம் ஒரு கம்பியிலோ/நூலிலோ கோர்த்து மூலையில் கட்டித் தொங்க வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தகனக் கிரியை சம்பந்தமான கடிதங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடிதங்களையும் அந்தக் கம்பி/ நூல் தொகுதியில் வீட்டின் ஒரு மூலையில் காணலாம். இதிலே நல்ல அர்த்தங்கள் எத்தனையோ உண்டு.
தற்போதைய சூழ்நிலையிலும் கூட நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு வருகின்ற திருமணப் பத்திரிக்கைகளையெல்லாம் நல்ல உறுதியான நூலிலே கோர்த்து வாருங்கள்.. கம்பியில் ஓட்டை போட்டுக் கோர்க்க வேண்டாம்! இவ்வாறாக 108 பத்திரிக்கைகள் சேர்ந்தவுடன், மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியன்று (தேய்பிறை சதுர்த்தசி திதி) இதற்குரிய பத்திரிகா பரஞ்சுடர்த் திருமஞ்சனம் செய்திடுதல் வேண்டும். அதாவது 108 பத்திரிக்கைகள் சேர்ந்தவுடன் அவற்றின் மேல் வில்வம், துளசி கூடிய நீரைத் தெளித்து, கடலில் மிகவும் கவனத்துடன் கரைத்திடுதல் வேண்டும். எவ்வாறு விநாயகரை, பிள்ளையார் சதுர்த்தியின் போது கடலில் விசர்ஜனம் செய்கின்றோமோ, அதே போன்று 108 திருமணப் பத்திரிக்கைகள் சேர்ந்தவுடன் அந்த நூலுடன் கோர்ததுக் கத்தையாக துளசி அல்லது வில்வம் சேர்ந்த நீரில் தோய்த்து தக்க மந்திரத்தை ஓதி நூல் கொத்தாகக் கடலில் கரைத்திடுதல் வேண்டும்.
கொத்து கொத்தாய் மங்களக் கதிர்கள்..
ஏன் 108 பத்திரிக்கைகள் சேரும் வரை காத்திருக்க வேண்டும்? திருமணம் என்றாலே சுபமங்கள காரியம்தானே! எனவே ஒவ்வொரு பத்திரிக்கையும் நம் வீட்டிற்கு வரும் போது அது மங்களகரமான கல்யாண கிரணங்களைத் தாங்கி வருகின்றது. எனவேதான் இத்தகைய திருமணப் பத்திரிக்கைகள் நம் இல்லத்தில் இருக்க இருக்க, அவற்றின் மங்கள பாகவதத் தன்மையால் நம் வீட்டில் எப்போதும் சுபகாரியங்கள் நிகழ்ந்தவாறே இருக்கும். இதனால் தான் இவற்றை நம் பெரியோர்கள் நூலில் கோர்த்து வைத்தார்கள்! எனவே கல்யாணப் பத்திரிக்கைகள் வந்தவுடன் அவற்றைக் கிழித்துப் போடுதல் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். 108, 1008 என்று திருமணப் பத்திரிக்கைகள் சேரும் வரை அவை உங்கள் இல்லத்திலேயே நூலில் கோர்த்தவாறு மங்களகரமாக இருக்கட்டும்.
அவற்றை குப்பை, பழங்காகிதம் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வருகின்ற கல்யாணப் பத்திரிக்கையில் நீங்கள் காணுகின்ற (வானத்தில் இறக்கைகளுடன் பறப்பது போல இருக்கும்) தேவதைகள் எல்லாம் மாங்கல்ய லோகத்திலிருந்து, பூலோகத்திலிருந்து வருகின்றவர்கள் ஆவார்கள். திருமணத்தின் போது எழுப்பப்படுகின்ற மேள, நாதஸ்வர ஒலியினை இவர்கள் எப்பொழுதும் ப்ரீதியுடன் கேட்டு ஆசிர்வாதத்தை அள்ளித் தருகின்றார்கள். மேலும் மாங்கல்ய அட்சர தேவதா மூர்த்திகளும் உண்டு. இவர்களும் திருமணப் பத்திரிக்கையில் தான் உறைகின்றார்கள். எனவே இத்தகைய ஆயிரக்கணக்கான மங்கள தேவதைகள் தங்கியிருக்கின்ற கல்யாணப் பத்திரிக்கையையா கிழித்துப் போடுவது என்று சற்றே ஆத்மவிசாரம் செய்து பாருங்கள்.
மேலும் தற்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஏதேதோ நிறத்தில் திருமண இதழை பிரிண்ட் செய்கின்றார்கள். மாங்கல்ய தேவதைகள் இல்லாமல் கல்யாணப் பத்திரிக்கைகளைப் பிரிண்ட் செய்யக் கூடாது. இறை மூர்த்திகளுடைய உருவங்கள் கண்டிப்பாக அவற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் நம் மூதாதையர்கள் நமக்குத் தந்துள்ள இளஞ்சிவப்பு, மஞ்சள் காகிதத்தில் பச்சை வண்ணத்தில் மாங்கல்ய தேவதைகளுடன் திருமண அழைப்பிதழ் இருப்பதுதான் சாலச் சிறந்தது ஆகும். நாகரீகம் என்ற பெயரில் புனிதமான நம் தமிழ்ப் பண்பாடுகளுக்கு மூட்டை கட்டி வைப்பதால் தான் மூட்டை, மூட்டைகளாய் வாழ்க்கைத் துன்பங்கள், சமுதாயப் பிரச்னைகள் தோன்றி விட்டன.
ஓசிச் சாப்பாட்டில் பூசி வரும் வினைகள்!
தற்காலத்தில் திருமணங்களுக்குக் குடும்பத்தோடு சென்று கல்யாண விருந்தை “ஒரு பிடி பிடித்து” ரூபாய் 20, 30 என்று சாதாரணமாக மொய் எழுதி விட்டு வந்துவிடுகின்றார்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஓசியில் சாப்பிட்டீர்களோ, அந்த அளவிற்காவது நீங்கள் பரிசளிக்க வேண்டுமல்லவா? குடும்பத்தோடு ஏழெட்டுப் பேர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு ஒரு 25 ரூபாய்தனை பரிசாக ஓதியிட்டு வந்தால் அதில் நமக்கு கூடுதல் கர்மம் தானே வந்து சேரும்! அதற்காக நாம் எவ்வளவு சாப்பிடுகின்றோமோ அதைக் கணக்கிட்டு வைத்து அதற்குச் சரிசமமாகப் பரிசளிக்க வேண்டுமா என்று கேட்டு மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எதிலும் இறைத் தன்மை பூரிக்க வேண்டும்.
எவ்வகையிலும் அநாவசியமாகத் தீவினைக் கர்மங்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சுயநலமின்றிப் பிறருடைய நல்வாழ்விற்காக நாம் சரீர சேவை செய்தாக வேண்டும் என்பதேயாம். எனவே இயன்ற மட்டும் இறைத் துதிகளுடன் கூடிய ஒரு வாழ்த்துக் கடிதமாவது அனுப்புங்கள், நன்முறையில் சரீர சேவை செய்திடுங்கள்! உற்றம் சுற்றத்தில் கல்யாணத்திற்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஏதோ ஓரளவிற்குச் சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் “எவ்வளவோ செலவாகும் போது இந்தச் சாப்பாட்டுச் செலவில் அன்னதானத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்”, என்று அன்புடனும், பரிவுடனும் சொல்லி அவர்களுக்கு அன்னதானம் செய்வதற்கான ஊக்கத்தை ஏற்படுத்துங்கள்.
மங்களம் தந்து மங்களம் பெறுக!
நன்முறையில் பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமத்தை அவர்களிடம் அளித்திடுங்கள்! திருமணத்திற்குச் செல்லும் போதே நல்ல முழுமையான அரிசிமணிகளை மஞ்சளில் தோய்த்து அட்சதைகளாகத் திரட்டி அதனை அவர்களிடம் கொடுத்து விட்டு வாருங்கள். நுனி உடைந்த பாதி பாதியான அரிசிமணிகளை ஆசீர்வாத அட்சதைக்குப் பயன்படுத்தக் கூடாது. ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற பல தெய்வீக இதழ்களையும், நூல்களையும் பலரும் பெறும்படி பரிசாக அளித்து விட்டு வாருங்கள்.. ஏனென்றால் அத்திருமணக் கூட்டத்தில் எவரேனும் இதனைப் படித்து இறைவழியில் மிளிர நல்வாய்ப்புண்டு! எனவே, திருமணத்தில் சாப்பிட்டு, அரட்டை அடித்து, ஒப்புக்குப் பங்கு பெறாது, இறை ஆக்கப்பூர்வமாக, திருமணப் பங்கேற்பிலும் தெய்வீகத்தைச் சேர்த்திடுங்கள்! வெளியில் செருப்பு, குடையைத் தைக்கும் அந்த ஏழைகளுக்கு நாலைந்து இட்லி, சட்னியுடன் நல்ல கூலியையும், நல்லுடையும் அளித்து மனமாற அவர்களுடைய நல்வாழ்விற்குப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் இறையாக்கம் பெறப் பெற அதன் புண்ய சக்தியில் ஒரு பங்கு உங்களுக்கு நிச்சயமாக வாழ்க்கையில் வந்து சேரும்.
பரிசில் பொலியும் இறைப் பண்பு!
நீங்கள் எங்கும் பரிசாக அளிக்கின்ற பொருளானது இறைச் சக்தி மிகுந்ததாக இருக்கட்டும். ஆன்மீக நூல்கள், பூஜைப் பொருட்கள், கண்டாமணி, சந்தனக் கல், சந்தனக் கட்டை, தேக்கு, மா, பலாப் பலகைகள் போன்று அவை பூஜைக்குத் தேவையானதாக இருக்கட்டும். அதாவது நீங்கள் அளிக்கின்ற பரிசுப் பொருள் எந்த அளவிற்கு தெய்வீக வழிபாட்டிற்காக எத்தனை ஆண்டுகளுக்கு அவர்கள் பயன்படுத்துகின்றார்களோ அதன் புண்ய சக்தி Royalityயாக Goodwillஆக வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு எப்போதும் வந்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். திருமணத்திற்குச் சென்று சாப்பிடுவதில் தவறில்லைதான். ஆனால் ஓசியில் சாப்பிடுவதற்காகத் திருமணத்திற்குச் செல்லக் கூடாது என்பதுதான் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகும். மேலும், உங்களுக்கு வருகின்ற திருமணப் பத்திரிக்கையை உங்களுடைய, பூஜையில் வைத்து அதற்குரிய கோ பூஜை, கோமுகத் தீர்த்தப் பூஜை போன்றவற்றை எல்லாம் முறையாகச் செய்து உண்மையாகவே அந்தத் திருமணத் தம்பதிகள் நன்முறையிலே ஒழுக்கத்துடனும், பக்தியுடனும் வாழ வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தித்து வாருங்கள். இவ்வாறாக ஒரு திருமணத்தில் நீங்கள் பங்கு பெறும் போது ஆற்ற வேண்டிய திருப்பணிகள் ஏராளம்! ஏராளம்!
ஏதோ தேதியைப் பார்த்து விட்டு டக்கென்று Scooterல் தம்பதி/குடும்ப சகிதமாகச் சென்று வருவது மட்டுமே திருமணப் பங்கேற்பு ஆகாது. உங்களுடைய ஒவ்வொரு வாழ்க்கைக் காரியத்திலும் தெய்வீக சக்தி குடி கொள்ளுமாறு செயல்படுக! பலவிதமான திருமண தோஷங்களால் வருந்துவோர் தங்கள் வீட்டிற்கு வருகின்ற திருமணப் பத்திரிக்கைகளை எல்லாம் பத்திரமாகச் சேர்த்து வைத்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நூற்றுக்கணக்கானத் திருமணப் பத்திரிக்கைகளில் நிறைந்திருக்கின்ற மங்களக் கிரணங்கள் தாம் திருமண தோஷங்களை நிவர்த்தி  செய்வதற்குப் பெரிதும் பயன்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறாக ஒரு சிறு திருமணப் பத்திரிக்கையில் நிறைந்திருக்கின்ற ஆன்மீகப் பொக்கிஷங்கள் ஏராளம்! ஏராளம்! அவற்றைத் தக்கச் சற்குரு மூலமாகத் தான் அறிந்து உணர முடியும் என்பதற்காக இதனைப் பற்றி இங்கு விளக்குகின்றோம். தெய்வீகமாக வாழ இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. சற்குருவே இவற்றை எல்லாம் உணர்த்தவல்லவர்!

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசன மகிமை

தன்னைத் தானே ஒருவர் நன்கு அறிந்து உணர்ந்து கொண்டால் தான் பக்தி நிலையில் மேம்பட்டு இறை தரிசனத்தைப் பெற்று பிறவிப் பிணிக்குத் தீர்வு காண முடியும். தன்னைத் தானே அறிவதற்கு முதற்படியாக முதலில் தன்னுடைய நற்குணங்கள், தீய குணங்களைப் பற்றி நன்றாக அலசி, ஆராய்ந்து தினந்தோறும் ஆத்ம விசாரம் செய்து வருதல் வேண்டும். தன்னைத் தானே நன்கு அறிவதற்கு உதவுவதே ஆருத்ரா தரிசனம் தரும் பலன்களில் ஒன்றாம். இறைவன் தன்னைத்தானே உணர்வித்த நடனக் கோலத்தில் அடியார்களை உய்வித்த திருநாளே ஆருத்ரா தரிசன விசேஷத் திருநாளாம். இதற்கு வழிவகுத்தவரே ஸ்ரீருத்ர கண்ட சித்தேஸ்வரர்.
இறை தரிசனம், முக்தி, மோட்சம், இறைவனுடன் ஐக்கியமாதல், சாயுஜ்யம், சாமீபம், சாலோகம், சாரூபம், வைகுண்ட பதவி, சிவ பதவி, பிறப்பு, இறப்பு அற்ற நிலை, மகான்/சித்தர்/யோகி/ஞானியரின் நிலை இவ்வாறாக இறைப் பெருநிலைகளை, பக்தி நிலைகளைப் பலவிதமாக வடித்துக் காட்டுகின்றார்கள். இவையே பல மதங்களாயின, ஆனால் மார்கங்கள் பலவாயினும் மகேஸ்வரன் ஒருவனே! தன்னை அறிந்தால், தன்னலம் புரியும், தன்னலம் மறைந்தால், பெரும் பேரின்பம் என்பது வேத வாக்கு. ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்காக முதலில் SELF-TEST செய்து கொண்டு தன்னுடைய, நற்குணம், சற்குணம், துர்குணம் ஆகியவற்றை அறிந்தாக வேண்டும். இம்மூன்றில் துர் (தீய குணம்) குணத்தை ஒதுக்கி நற்குணத்தையும், சற்குணத்தையும் வாழ்க்கையில் முறையாக இணைத்தாக வேண்டும். இவ்வாறாக, ஆத்ம விசாரம் செய்து, முறையான அறவழி முறைகளைக் கடைபிடிக்கும் போது பல வெகுமதிகள் சித்திகளாக, அனுபோகங்களாக, அனுகிரங்களாக, வசதிகளாக, பரிசாக வந்து சேரும். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆழ்ந்த ஆத்ம விசாரம் மூலமாக இதற்கடுத்த தெய்வீக நிலைகளுக்குத் தயாராகும் வகையில் நம் மனதைப் பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தன்னைத் தானே அறிவதற்கு சித்புருஷர்கள் சிறப்பான அறவழி முறைகளைத் தந்து இருக்கின்றார்களா? ஏன் இல்லை இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்கின்ற இவ்வுலகத்தில் எத்தனை கோடித் துன்பங்கள் இருக்கின்றனவோ அவற்றில் ஒவ்வொரு துன்பத்திற்கும் உரிய பரிகாரத்தை நமக்குப் பெற்றுத் தருவதற்காகவே ஒவ்வொரு சித்புருஷரும் பலகோடி ஆண்டுகள் தவமிருந்து அதற்குரிய கர்மவினைக் கழிப்பு முறைகளைப் பரிகாரமாக, கர்ம நிவாரண நியதியாக நமக்கு அளித்துள்ளார்கள். இவ்வகையில் தன்னைத் தானே உணர்ந்து கொள்கின்ற வழிமுறையை அறிவதற்காகத் தான் ஸ்ரீஉருத்ர கண்ட சித்தேஸ்வரர் என்னும் சித்புருஷர் பூலோகத்திற்கு ஏகினார், எதற்கு? ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே அறிகின்ற தத்துவ வித்தகத்தை நடைமுறை  விரதமாக, வழிபாடாகப் பெற்றுத் தருவதற்காகவே!
உன்னை அறிவாய்! இன்னலை அரிவாய்!
கலியுகத்தில் துன்பங்கள் பெருகுவதற்கு முதற்காரணமே மனிதன் தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நேரமே இல்லாது ஏனோ தானோவென்றூ அன்றையப் பொழுது எப்படியோ கழிந்தால் சரி என்று இயந்திர கதியில் தன் வாழ்க்கையை ஓட்டுவதுதான்! நான் யார் என்பதை உணராமலேயே, அறியாமலேயே எத்தனை வருடங்களைத் தான் ஓட்டுவது? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பெறுதற்கரிய மானுடப் பிறவியை இப்படியா வீணாக்குவது? ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்கு ஆத்மவிசாரம் செய்து கொண்டு தன்னை உய்வித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இறைவனுடைய நல்வரங்களாக நமக்கெனப் பெறும் பொருட்டு ஸ்ரீஉருத்ர கண்ட சித்தேஸ்வரர் என்பார் ஆழ்ந்த தவத்தை மேற்கொள்ளலானார் அல்லவா!
அந்த தவத்தின் ஒருபடியாக விளங்கியதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று கூடிய திருஅருணாசல கிரிவலமாகும். திருவாதிரை நட்சத்திர தினந்தோறும் புதன் ஹோரை நேரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஉருத்திர கண்ட சித்தேஸ்வரர், சிவபெருமானின் ஆணைப்படி, புத்திகாரகனாக விளங்குகின்ற புத பகவானுடைய அனுகிரஹத்தால் பல அரிய தவமுறைகளை நல்வரங்களாகப் பெற்று அவற்றை கைக் கொண்டு நமக்கென அளித்துள்ளார்..
நாம் எத்தனையோ புராணங்களைப் படிக்கின்றோம். கோடானு கோடி வருடங்களாகத் தவம் செய்தவர் முன் இறைவன் தோன்றினார். இன்ன இன்ன வரங்களை நல்கினார் என்று காண்கின்றோம். ஆம், இவை முற்றிலும் உண்மையே! இறைதரிசனத்தைப் பெறவேண்டும் என்ற ஒரே வைராக்யத்துடன் மன உறுதியுடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன் நீங்கள் எந்தவிதமான தவமுறைகளை மேற்கொண்டாலும் எளிய தவமானாலும் சரி அதற்கும் இறைவன் கனிவுடன் இசைகின்றான். ஆனால் இதில் உள்ள முக்கியமான மாயை அல்லது கடினமான சோதனை என்னவென்றால் இறை தரிசனம் என்று ஒன்று கிட்டியவுடன் அங்கு கூட இறைவன் ஒரு மாயா விநோதத்தை ஏற்படுத்துகின்றான்... என்ன மாயையோ அது? என்ன வரத்தைப் பெறுவது என்பதே அந்த சோதனை!
இராவணன், நரகாசுரன், மஹிஷாசுரன் போன்றோர் இறை தரிசனத்தைப் பெற்ற போதும் அங்கு ஏற்பட்ட மாயையின் பால் வசப்பட்டு பல தேவையில்லா வரங்களைப் பெற்று அல்லது பெற்ற நல்வரங்களையும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தித் தாம் பெற்ற இறைதரிசனப் பலன்களையே ஒட்டு மொத்தமாக இழந்தார்கள்.
ஆர் ருத்ரன்?
அக்னிப் பிழம்பாய் ஜ்வலித்த ஸ்ரீஉருத்திர கண்ட சித்தேஸ்வரருடைய தபோ வலிமையைக் கண்டு வியந்த சர்வேஸ்வர அவருக்கு அக்னி அம்ச ஸ்ரீருத்ரனாய்க் காட்சி அளித்திடவே சித்புருஷரும் மனமகிழ்ந்தார். அவருக்கும் மாயை காத்துக் கிடந்தது! ஆனால் இந்த மாயை வலையில் சித்புருஷர்கள் சிக்குவார்களா என்ன? ஸ்ரீஉருத்திர கண்ட சித்தர் சர்வேஸ்வரனைத் தொழுது, “இறைவா! யாம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான், நீயார் என்பதை நீயே உணர்ந்து தவப் பெருமானாய் எனக்கு உணர்வித்தல் வேண்டும். அதாவது தன்னைத் தானே உணர்ந்து, உணர்வித்த நிலையை யார் ருத்ரன், ஆ(ர்)ருத்ரன்? என்பதை நீயே புகட்ட வேண்டும்.” என்று வேண்டிட ஈஸ்வரனே திகைத்து விட்டார்.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருநல்லம் கும்பகோணம்

எவருமே இதுவரை கேட்டிராத நல்வரம் அன்றோ! ஆனந்தத்தில் புன்னகை புரிந்தான் சர்வேஸ்வரன்! “ஆயிரம் கோடி வராகன் வேண்டும், பத்தாயிரம் கோடிப் பசுக்கள் வேண்டும். பூமியையும், வானத்தையும், நட்சத்திர மண்டலங்களை ஆள வேண்டும் தேவாதி தேவர்களை வெல்ல வேண்டும்., மரணமில்லா வாழ்வு தா!” என்றெல்லாம் பலர் கேட்டே பழக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு இது புனிதமான தவச் செறிவாகப் பொலிந்தது தானே!
“ஆனால் அத்தகையவற்றை எல்லாம் எளிதில் தந்திடலாம்.. ஆனால் என்னை நானே உணர்ந்து, உய்வித்து, உய்த்த கோலத்தைக் காட்டி அருள வேண்டுமாமே, சர்வேஸ்வரியாம் உமையவளே கேட்காத வரமாயிற்றே” இறைவன் புளகாங்கித மடைந்தான்! ஆனந்தப் புன்னகை புரிந்தான்! ஆம், இறைவனுக்கே ஆனந்தப் பெருநிலை தந்தது சித்தரின் தவம்! ஸ்ரீஆதிசிவனாம் நடராஜ மூர்த்திக்கு திருநடன வரங்களைத் தந்து அருள்வது ஒரு பொருட்டல்லவே! எழுந்தான் இறைவன் தன்னைத் தானே உணர்ந்ததை, உய்வித்து உணரச் செய்ய ஜோதிப் பிழம்பாய் எழுந்து நின்றான்! அவ்வாறு தன்னால் தானாகத் தன்னுள், தன்பால், தனக்கென எழுந்த ஜோதியைத் தானே, தனதென, தன்னுள் தன்னுடையதாய் தரிசித்து, தனக்கென உணர்ந்தான், மகிழ்ந்தான், உய்வித்துக் கொண்டான். இதுவே காணக்கிட்டா காணுதற்கரிய ஆருத்ரா தரிசனம் என முப்பத்து முக்கோடி தேவர்களும், வானவர்களும், மகிழ்ந்து, ஆராதித்து வணங்கினர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் இந்த திருநடனக் கோலத் தரிசனம் கிட்டவில்லை. ஏனென்றால் இந்த விசேஷமான ஸ்ரீருத்ர தரிசனத்திற்காகக் கோடானு கோடி யுகங்கள் சித்தர் தன்னை ஆட்படுத்திக் கொள்ள மற்றவர்களுக்கு இது எப்படி எளிதாக வந்து விடும்?
“உருத்திரகண்டா! நீ கேட்டபடி என்னை நானே உணர்கின்ற அவதாரக் கோலம் பூண்டுள்ளேன், கண்டாயா! வேறு என்ன வேண்டுமோ உனக்கு!”
தன்(உட்) கோலம்!
“இறைவா! அடியேன் கேட்ட வரத்தையே மீண்டும் கேட்கின்றேன். தாங்கள் தன்னைத்தானே, உணர்ந்து, அறிகின்ற கோலமாக யார் ருத்ரன் (ஆருத்ரன்) என்ற வினாவிற்கு விடையாக வியத்தகு திருநடனக் கோல நடனத்தையும் தந்து அருள வேண்டும், ஏன்? ஒரு அவதாரக் கோலத்தைக் காட்டியாயிற்றே, இது போதாதா? ஒரு வரம் போதாதா? சித்தர்கள் எதிலும் சற்று “பொடி” வைத்துத்தானே கேட்பார்கள்.
ஆனால் இச்சிவதரிசனக் காட்சியைக் காணும் பேறு தானொருவனுக்கு மட்டுந்தானே கிட்டியது. இறைவன் ஆருத்ரா தரிசனத்தை நடனக் கோலமாக மாற்றித் தந்தால் அதனை சகல ஜீவன்களும் காணலாமன்றோ! இந்நல்வரங்கள் இறையருளால் உலக ஜீவன்களான நாமும் பெறுவதாக சித்தர் பெருமான் கூட்டினார்! இறைவனே பெருமிதம் கொண்டான். இத்தகைய அடியார் தமக்கு இருப்பதைக் கண்டு! சித்தர் இவ்வாறு ஏன் கேட்க வேண்டும்?
தன்னையே தான் உணர்ந்து கொண்டவனாய், அறிந்து கொண்டவனாய், பேரின்பத்தில் திளைத்த நாளே ஆருத்ரா தரிசன நாளாகும். தன்னைத் தானே உய்வித்த நிலையை நமக்கு உணர்வித்த திருக்கோலமே ஆருத்ர தரிசனக் கோலமாகும். ஸ்ரீஆருத்ரா தரிசனத்தைப் பெற்ற ஸ்ரீஉருத்ர கண்ட சித்தேஸ்வரர் பேரும் பேரின்பத்தில் திளைக்கலானார். இவ்வாறாக இறைவன் தன்னைத்தானே அறிந்து, உணர்ந்து கொண்டதாக அதை ஜீவன்களுக்குக்கென உய்வித்த கோலமே, ஆருத்ரா தரிசன அவதார நடனக் கோலமாகும். ஸ்ரீருத்ர கண்ட சித்தருடைய பெரும் தவத்தில் திளைத்த சர்வேஸ்வரன் அவருக்குப் பரிசாக “ருத்ர கண்ட சித்தேஸ்வரா, நீ என்றுமே இதே பேரின்பப் பெரும் பேரின்பத் திளைப்பில் இருந்து பிரபஞ்சத்திற்கு நல்வழி காட்டுவாயாக!” என்று கூறி ஆசீர்வதித்துத் தானே ஒரு பெரும் நல்வரத்தை அளித்திட்டார். இவ்வாறாக இறைவன் தன்னைத் தானே அறிந்து கொண்ட கோலத்துடன் உணர்வித்த நாளாகவும், பெரும் பேரின்பத்தில் திளைத்த நாளாகவும், தன்னை உணர்விக்கும் ஐக்கிய நிலையில் யார் ருத்ரன் என்பதை உணர்வித்த கோலத்துடனும், திளைத்த நாளே ஆருத்ரா தரிசனக் கோலமாகும்.
ருத்ரகண்டர் தேடிவரும் சிவத்தலம்!
அந்த யுகத்தின் ஆருத்ரா தரிசனத் திருநாள் முதல் அன்றும், இன்றும், என்றும் சர்வேஸ்வரனுடைய பெரும் பேரின்பத் திளைப்பின் பரிபூர்ணமாக விளங்குகின்ற ஸ்ரீருத்திர கண்ட சித்தேஸ்வரர் ஒவ்வொரு ஆருத்ரா தரிசனத்தின் போதும் எங்கெல்லாம் ஆருத்ரா அபிஷேகமும், தரிசன வழிபாடும் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் அவரே நேரில் பங்கு கொண்டு இறைவனுடைய பெரும் பேரின்பத் திளைப்பின் மகிமையை இன்றைக்கும் பறை சாற்றி வருகின்றார். இதில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அவர் பங்கு ஏற்கின்ற திருக்கோயில்களும் உண்டு. நடப்பு பிரமாதி ஆண்டின் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்திற்கு ஸ்ரீருத்ரகண்ட சித்தேஸ்வரப் பெருமான் உளம் பூரித்துப் பூஜிக்கின்ற திருத்தலம் யாதெனில், அதுவே குற்றாலம் ஸ்ரீகுற்றால நாதேஸ்வரர் திருக்கோயிலாகும்.
ஆம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் தான் நடப்பு பிரமாதி ஆண்டு ஆருத்ரா தரிசனத்தின் போது ஸ்ரீருத்ர கண்ட சித்தேஸ்வரர் சூட்சும வடிவத்திலோ, மானிட ரூபத்திலோ அல்லது இறைவன் ஆணைப்படி எந்த ரூபத்திலும் வந்து ஆருத்ரா தரிசனத்தில் பங்கு கொள்கின்ற திருத்தலமாகும். எத்தனையோ கோடி சித்தர்கள் ஆருத்ரா தரிசனத்தைக் கண்டு தரிசித்து உலகுக்கு அருள்மொழியைத் திருமழையாய்ப் பெய்வித்துச் செல்கின்ற போதிலும் இறைவனே பெரும் பேரின்பத் திளைப்பில் நிலைகொண்டு நிற்பதை நமக்கு உணர்வித்த ஸ்ரீருத்ர கண்ட சித்தேஸ்வரர் பங்கு ஏற்கின்ற திருக்கோயில் என்றால் அதனுடைய மகத்துவம் தான் என்னே! சொல்லுக்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட பெரும் பேரின்பப் பேரானந்த நடனக் கூத்து அன்றோ சர்வேஸ்வரனுடைய ஆருத்ரா தரிசன நடனத் திருக்கோலமாம்! யார் ருத்ரன், ஆருத்ரன் என்ற வினாவில் எழுந்த ஆத்ம உண்ர்வு (ஆருத்ரா) அவதாரக் கோலமே நமக்கு ஆருத்ரா தரிசனப் பெருமானாகக் காட்சி அளிப்பதற்கான நல்வழியைத் தந்தது.
அடியார் : சற்குரு தேவா! சித்தர்கள் வாய் மொழியாய்க் கிடைக்கின்ற விரத முறை என்றால் அதனுடைய மகத்துவம் தனிதானே! கடினமோ, எளிமையோ தாங்கள் எங்களுக்கு சித்தர்களின் ஆருத்ரா தரிசன விரதமுறையை அளிக்க வேண்டுகின்றோம்.
சற்குரு : கேள்வியைக் கேட்டு விட்டாய். பதில் அளிக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பாகி விடுகின்றது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி விடுகின்றேன். இந்த ஆருத்ரா தரிசன விரதமுறை கடினமோ, எளிமையோ எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் அரிய பொக்கிஷமாய் எத்தனையோ இறை நல்வரங்கள் காத்திருக்கின்றன என்பதை சித்தர்களின் வேதவாக்காக எடுத்துரைக்க விரும்புகின்றோம். பிரமாதி வருட ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை ஒன்று உண்டு. இதனையே ருத்ர சாம்ப விரதம் என்று சித்புருஷர்கள் அழைக்கின்றார்கள். திருவாதிரை நட்சத்திரத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் பரணி நட்சத்திரம் தொடங்குகின்ற நேரம் முதல் இந்த ஆருத்ரா தரிசன விரதம் ஆரம்பிக்கின்றது.

ருத்ர சாம்ப விரதம்!
பரணியில் பரம(ன்) விரதம்!
பரணி நட்சத்திரத்தன்று விடியற்காலையில் எழுந்து, நீராடி, உலர்ந்த ஆடை தரித்து சூரிய உதயத்தின் போது வில்வ தீர்த்தத்தை மட்டும் அருந்தி சூரிய பகவானை பன்னிரெண்டு முறை, வீழ்ந்து வணங்கிட வேண்டும். பிறகு படத்தில் உள்ளபடி சோம பிம்ப யோக முறைப்படி நன்றாக நிமிர்ந்து நின்று வலது காலை இடது முழங்காலின் மேல் சாய்த்து வைத்து நின்ற நிலையில், “நமசிவாய! சிவாயநம! சிவயசிவ! சிவசிவ!” என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீருத்ர நமசிவாய மந்திரத்தை மூன்று மணிநேரம் இடைவிடாது ஓதுதல் வேண்டும்.
ஆம்., இந்த நின்ற கோலத்திலேயே! பிங்கள நடன யோக சூத்திரப்படி சோம பிம்ப யோகதர்சன முறையில் மூன்று மணி நேரம் ருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதியபடி மேற்கண்ட ஆசன நிலையில் நின்று வழிபடுக! நின்றோதும் மந்திரம் நிலை நின்று உயர் நிலை தரும்! 51 முறை சாஷ்டாங்கமாக வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்தபின் சர்க்கரை இல்லாது ஒரு தம்ளர் பால் மட்டும் அருந்திட வேண்டும். பிறகு மீண்டும் மேற்கண்ட முறையிலேயே நன்கு நிமிர்ந்து நின்று இடதுகாலை வலது முழங்காலின் மேல் மாறிய நிலையில் சாய்த்து வைத்து (இடகலை நடன சூத்ர யோகப்படி) சூரிய பிம்ப யோக முறைப்படி மூன்று மணி நேரம் நின்ற நிலையில் ருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதுதல் வேண்டும். பழக்கம் இல்லாமையால் அவ்வப்போது வலி ஏற்படுமாயின், சற்றே நிதானித்து கால்களை விரித்துக் கொண்டு அமைதியாக ஓய்வு கொண்டு, மீண்டும் தொடர்ந்திடுதல் வேண்டும். ஓய்வு என்ற பெயரில் ஒரேயடியாக உட்கார்ந்து விடக் கூடாது! ஆனால் ஒரு போதும் அமரக் கூடாது. குறைந்தது மூன்று மணி நேரம் நின்ற நிலையில் யோகத்தைப் பயில வேண்டும். பிறகு கை, கால், முழங்கால்களில் பொன்னாங்கண்ணித் தைலத்தைத் தடவி நன்றாக நீவி, நன்னீரில் நீராடுதல் வேண்டும். பிறகு நீராடிய புத்துணர்வுடன், மான் தோல் / தர்ப்பைப் பாய்/ பலகை / நல்ல துணியின் மேல் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து நெற்றியானது தரையில் படுமாறு நன்கு குனிந்த நிலையில் இரண்டு மணி நேரம் ருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு இருக்க வேண்டும். இம்மாதிரியான யோகத்திற்கு விஸ்வ சாம்பவ யோகம் என்று பெயர். இதன் பிறகு சிறிது உணவை ஏற்றிடலாம். குறிப்பாக தேன் கலந்த பால் சாதம் சிறப்புடையதாகும்.
மாலை நடை வல பூஜை
பிறகு ஸ்ரீருத்ரா நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு ஏனைய காரியங்களை நிறைவேற்றிடலாம். மாலை சந்தியா வேளையின் போது, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஈங்கோய்மலை, திருச்சி குளித்தலை அருகே உள்ள ஐயர் மலை, திருச்சி மலைக்கோட்டை, கடலாடி அருகே உள்ள பர்வத மலை, வெள்ளியங்கிரி மலை, வெள்ளி மலை, திருத்தனி மலை, திருச்சி அருகேயுள்ள தான்தோன்றி மலை போன்ற மலைத் தலங்களில் மாலையில் ஐந்து மணி நேரத்திற்குக் குறையாமல் ருத்ர நமசிவாய மந்திரத்தை இடைவிடாது ஓதியவாறு கிரிவலம் வருதல் வேண்டும். மலைத்தலத்தில் இல்லாதோர் அருகில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஐந்து மணி நேரத்திற்குக் குறையாது அடிப்பிரதட்சிணம் அல்லது நடைப் பிரதட்சிணம் செய்தல் வேண்டும். இதன்பிறகு இரவில் நன்கு படுத்து உறங்கி ஓய்வு எடுத்திடலாம். இரவில் வேறு எவ்வித உணவும் ஏற்றல் கூடாது. நீர் மட்டும் அருந்திடலாம்.

பர்வதமலை

கார்த்திகையில் ஊர்த்துவ விரதம்
அடுத்த நாள் கார்த்திகை நட்சத்திர நாளாகும். இன்று விடியற்காலையில் எழுந்து நன்றாக நீராடி தேன் கலந்த பாலை மட்டும் அருந்தி மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் பாய், கம்பளி, நல்ல உலர்ந்த ஆடையில் அமர்ந்து படத்தில் உள்ளதுபடி ஜீவிதபாத்ர முறைப்படி யோகாசனம் பூண்டு குறைந்தது மூன்று மணி நேரம் ருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதிடுதல் வேண்டும். மூன்று மணி நேரமும் இதே யோக ஆசன நிலையில் அமர்வது மிகவும் முக்கியமானதாகும். கை, கால்களில் சற்றே வலி ஏற்படுமாயின் ஒரு சில நிமிட நேரம் ஒய்வெடுத்து மீண்டும் இதே யோகாசனத்தைத் தொடர்தல் வேண்டும். இதன் பிறகு வடக்கு நோக்கி ஸ்ரீருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு 101 முறை வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும். பின் நன்றாக அமர்ந்து இரண்டு கால்களையும் நீட்டி படத்தில் உள்ளபடி வலது கையால் வலது கால் கட்டை விரலையும் இடது கையால் இடது கால் கட்டை விரலையும் பிடித்தபடி, இந்நிலையில் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சங்கமித்ர யோகாசனம் கூட்டி ஸ்ரீருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதுதல் வேண்டும். பிறகு எளிய உணவை ஏற்றிடலாம். பிறகு காரட் துருவல், தேங்காய்த் துருவலும் சேர்ந்த உணவும் சிறப்பு உடையதாகும். நீரை நன்றாக அருந்திடலாம்.

ஏன் இத்தகைய கடுமையான நியதிகள் என்ற எண்ணம் ஏற்படுமல்லவா! உடலை வருத்திக் கொண்டு இவ்வித கடினமான யோகாசன நிலைகளில், இறைத் துதிகளை ஓதுவதால் என்ன பயன் என்று கேட்கும் எண்ணமும் உண்டாகின்றதல்லவா?  ஆருத்ரா தரிசனத்தின் போது இறைவன் பேரின்பத் திளைப்பில் ஆருத்ரா யோக நடனக் கோலத்தைக் கூட்டியமையால் அந்த நடனக் கிரணங்கள் காலத்தை முன் கடந்து ஐந்து நாட்கள் முதலிலிருந்தே ஆருத்ரா கிரணங்கள் பிரபஞ்சத்தில் பரிணமிக்கத் தொடங்குவதால் இந்தக் கிரணங்களை நமது உள்ளத்திலும், உடலிலும், மனதிலும் படிய வேண்டுமானால் அதற்குரிய பரிசுத்தத்தை நாம் பெற்றாக வேண்டும்.
ஆசாபாசங்களுடன், அழுக்குப் படிந்த மனதுடன் இருந்தோமேயானால், இந்தக் கிரணத்தின் புனிதத் தன்மையை நம்மால் ஏற்க இயலாமல் போய்விடும் இத்தகைய யோகாசன விரதம் கூடிய முறைகளால்தான் நமக்கு மனசுத்தியும், உடல் சுத்தியும் கிட்டுகின்றன என்பதையும் மறவாதீர்கள்!  காரட் துருவல் + தேங்காய்த் துருவல் கலந்த உணவே இன்றையப் பொழுதிற்குரிய, கார்த்திகை நட்சத்திர யோக நிலைக்கேற்ப அமைந்திருப்பதால், இந்த உணவே இந்நாளுக்குச் சிறப்புடையதாகும். தாராளமாக நீர் அருந்திடலாம். இதன் பிறகு படத்தில் உள்ளபடி வடக்கு நோக்கி பிருங்க நித்ய யோக நிலையில் அமர்ந்து இரண்டு மணி நேரம் ஸ்ரீருத்ர நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு, யோகாசனம் பூண வேண்டும்.
குறைந்தது 5 மணி நேரம் வரை கிரிவலத்தையும், அடிப்பிரதட்சணத்தையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் ஓய்வு எனும் பெயரில் பொழுதை வீணடிக்கக் கூடாது. அவரவர் உடல்வாகிற்கேற்ப ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்வில் பெறுதற்கரிய விரதமுறை என்பதாலும், 60 ஆண்டுக்கு ஒருமுறை பிரமாதி வருடத்தில் மட்டும் வரும் விரதம் என்பதாலும் தீவிர வைராக்கியத்துடனும், மன உறுதியுடனும் இவ்விரதத்தைச் சிறப்பான முறையில் பித்ரு தேவர்களின் ஆசியாகக் கைக் கொள்ள வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் நீங்கள் செயல்படுவீர்களேயானால், இறையருளால் விரதத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றுகின்ற வைராக்கியச் சிறப்பினை ருத்ர மூர்த்தியே மனமுவந்து அளிக்கின்றார்.
 நம் யோகியர்கள், சித்தர்கள் போல் கோடானு கோடி யுகங்கள் ஒரு காலிலோ, ஒரு விரலிலோ, ஊசி நுனியிலோ தவம் புரிந்திட நாம் அத்தகைய தேவசக்தியைப் பெறவில்லை. இவற்றிற்கு ஈடாக பலகோடி யுகங்களுக்குரித்தான் தவப்பலனை இறைவனே மனமுவந்து ஆருத்ரா விரத தரிசனப் பலன்களாக அளிக்கின்றான் என்றால் எத்தகைய அரிய தெய்வீக மனிதப் பிறவியை நாம் பெற்றுள்ளோம் என்று நீங்கள் உணரலாம். இன்று இரவு நன்றாக உறங்கலாம். இரவில் நீரைத் தவிர எந்த உணவையும் ஏற்கக் கூடாது.

ஏன் இவ்வாறு உடலை வருத்துகின்றோம் என எண்ணாதீர்கள். 365 நாட்களில் நன்றாக உண்டு ஓரிரு நாட்கள் மட்டும் இருப்பதான உண்ணா நோன்புப் பலனை எண்ணிப் பார்த்தீர்களானால் எந்த உடல் வருத்தத்தையும் நிச்சயம் உங்களால் பொறுத்துக் கொள்ள இயலும். விரதத்தில் ஏற்படும் பொறுமையும், அடக்கமுமே, வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை எதிர்நோக்கிச் சமாளிப்பதற்கான மன உறுதியையும், ஆழ்ந்த இறை நம்பிக்கையும் தருகின்றது என்பதை உணர்ந்து கொள்வீர்களேயானால், இவ்விரதத்தின் கடினமான நியதிகள் உங்களுக்கு மிகவும் சுலபமாகவே தென்படும். எந்த எண்ணமும், உங்கள் மனத்தளவில் தான் இருக்கிறது. கயிறு என எண்ணினால் கயிறுதான். பாம்பு என்று எண்ணினால் பாம்புதான். உங்கள் இறைப் பகுத்தறிவை நன்கு பயன்படுத்தி விரத முறைகளில் தெய்வீக சக்தியை உணர்ந்து கொள்ளுங்கள்.
ரோகிணி நட்சத்திர நாள்!
இன்று விடியற்காலையில் எழுந்து நீராடி தேங்காயும், பனை வெல்லமும் கலந்த உணவினை சிறிதளவு ஏற்க வேண்டும். பின் 51 முறை கிழக்கு நோக்கித் தோப்பு கரணம் இடுதல் வேண்டும். தோப்பு கரணம் என்றால் இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு, ஏதோ அரைகுறையாக ஒப்புக்குக் குனிந்து நிமிர்தல் கிடையாது. உண்மையான தோப்புக் கரணம் என்ற முறையில் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியே தோப்புக் கரணம் இடுவது போல பிருஷ்ட (குத) பாகமானது குதிகாலின் மேற்பகுதியில் நன்கு அழுந்துமாறு உட்கார்ந்து எழுவதாகும். இவ்வாறு செய்வதால் நம் உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளும் ஊக்கம் அடைகின்றன. மனிதன் சோம்பேறித்தனமாக, உடல் இன்பத்திற்கு அடிமையாவதற்குக் காரணமே அவனுடைய 72,000 நாடி நரம்புகளில் 1000 நரம்புகள் மட்டுமே அவனது ஆக்கத்திற்கு உட்படுவதால் தான் மற்றவற்றை அவன் ஆக்கப்படுத்துவதில்லை!
எனவேதான் அவன் ஆன்மீகத்தில் சோம்பித் திரிகின்றான்.  அனைத்து 72,000 நாடி நரம்புகளையும், ஊக்குவிக்கின்ற சிறந்த யோகப் பயிற்சியே தோப்புக் கரணமாகும். வெறும் தேகப் பயிற்சி மட்டுமே அல்ல இது! நம் உடலில் பெரும் பகுதி குதிகாலில் நன்கு அழுந்துமாறு நிதானமாக உட்கார்ந்து, நின்று, எழுந்து தோப்புக்கரணம் இட்டால் வேறு எவ்வித உடற்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும் தேவையில்லை எனச் சொல்லும் அளவிற்கு இந்தத் தோப்புக் கரணப் பயிற்சியானது, சிறந்த யோக சக்தியை நல்ல உடல் சக்தியோடு கூடும்படி செய்வதோடு நல்ஆரோக்கியமும் அளிக்கவல்லதாம்.
ஜயமாத்ரு யோகம்
இதன்பிறகு மேலும் முக்கியமான ஆனால் சற்று கடினமான ஜயமாத்ரு யோக முறையை மேற்கொள்ள வேண்டும்.. படத்தில் இந்த யோகமுறை விளக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2 மணி நேரமாவது இருக்கப் பழக வேண்டும். சற்றுக் கடினமான யோகாசன முறைதான்! அவ்வப்போது கை, கால் முட்டிகளில் வலி ஏற்பட்டால் சற்றே நிதானித்துச் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு, இதனை முறையாகச் செய்யப் பழகுவீர்களானால் மிக அற்புதமான மனோ சக்திதனை அளிக்கவல்ல இந்த யோகாசனத்தின் தெய்வீகத் தன்மையை நீங்களே உணர்வீர்கள்! ஆருத்ரா தரிசன விரதமுறையில் மட்டுமின்றி தினந்தோறும் இந்த யோகத்தை செய்யப் பழகுவீர்கள் எனில் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பல அற்புத சித்தியையும், நல்வரங்களையும், தெய்வீக சக்தியையும், யோக பூர்வமாகத் தரவல்லதே இது என்பதை நீங்களே உணர்வீர்கள்.
இந்த யோகாசனத்தைச் செய்யும் பொழுதெல்லாம் ருத்ர நமசிவாய மந்திரத்தை  தொடர்ந்து ஓதிட வேண்டும் என்பதை மறவாதீர்கள். மதிய உணவாக இன்று சிறிதளவு உணவு ஏற்கலாம். தேங்காய் சாதம் சிறப்புடையது. இதன்பின் சுகாசனத்தில், அதாவது சாதாரணமாக மண்டியிட்ட நிலையில் குறைந்தது 2 மணி நேரம் அமர்ந்து ருத்ர சிவ மந்திரம் ஜபித்திடல் வேண்டும். மாலையில் வழக்கம் போல் கிரிப்பிரதட்சிணமும், 5 மணி நேரங்களுக்குக் குறைவின்றிச் செய்து இரவில் பால் மட்டும் அருந்தி நன்கு உறங்கலாம்.
மிருகசீரிட நட்சத்திர தின விரதம்
அடுத்த நாள் விடியற்காலையில் நீராடி குறைந்தது 51 பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்து, ஒரு பசுவிற்கேனும் நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு கோ பூஜை செய்து 21 முறை வலம் வந்து நான்கு திசைகளிலும் வணங்கி எழுதல் வேண்டும். இதன்பின் “அம்மா அமிர்தம் தா” என பசுவிடம் வேண்டி, அப்பசுவிற்குரிய சொந்தக்காரரின் அனுமதியுடன் பசுவின் பாலைப் பெற்று பச்சைப் பாலாகவே (காய்ச்சாது) அருந்துதல் வேண்டும். பின் நதி, கடல், கோயிலின் தீர்த்தப் பகுதியில் சுகாசனமாக , 2 மணி நேரம் ருத்ர நமசிவாய மந்திரம்தனை உள்ளூர மௌனமாக ஓதி தியானம் புரிதல் வேண்டும்.
இன்று மதியம் மாதுளம்பழம் அல்லது அன்னாசி அல்லது செவ்வாழை ஏற்கலாம். மாதுளம் மற்றும் அன்னாசிப் பழச்சாறு சிறப்புடையது. அன்னாசிச் சாறு எனில் சிறிதளவு தேன் கலத்தல் வேண்டும். இதன் பிறகு பத்மாசனம் இட்டு 3 முதல் 5 மணி நேரம் ருத்ர நமசிவாய மந்திரம் ஓதி, மாலையில் கிரிவலம் மற்றும் ஆலய அடிப் பிரதட்சிணத்தைக் குறைந்தது 5 மணி நேரமேனும் கடைபிடிக்க வேண்டும். இன்று கிரிவலம் அல்லது ஆலய அடிப்பிரதட்சிணம், புண்ணிய நதி, கடல் மற்றும் ஆலய திருக்குள தீர்த்தங்களின் ஓரம் நடந்து சென்றவாறு ருத்ர நமசிவாய மந்திரம் ஓதியும், மாலை பூஜையை மேற்கொள்ளலாம்.
சந்தியாவந்தன பூஜையை முறையாகக் கடைபிடிப்போர் விரத நாட்களில் மூன்று வேளையிலும் முறையாக சந்தியா வந்தன பூஜையைக் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். மிருகசீரிட நட்சத்திர நாளான இன்று இரவு உறங்குதல் கூடாது. வேறு எவ்வித உணவையும் ஏற்றலும் வேண்டாம். ஏனெனில் அடுத்தநாள்  திருவாதிரை ஆருத்ரா தரிசனம் என்பதை மறவாதீர்கள். இரவு முழுவதும் ஆருத்ரா அபிஷேகத்திற்கான பொருட்களை சுத்தம் செய்வதிலும், அபிஷேக, ஆராதனைகளுக்குரித்தான காரியங்களை மேற்கொள்வதுமாக, இறைச் சிந்தனையிலேயே இரவுப் பொழுதைக் கழித்து, அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் பெற வேண்டும். இக்காட்சியே ருத்ர கண்ட இறைவன், பெரும் பேரானந்தத்தில் திளைக்கின்ற காட்சியாகும். ஆருத்ரா தரிசனக் கோலம் ஒன்றுதான் தன்னைத்தானே அறிவிக்கின்ற, தகைமையை அளிக்கவல்ல உத்தம தெய்வாவதாரக் கோலமாகும். ஏதோ கோயிலுக்குச் சென்றோம் அபிஷேகம் பார்த்தோம். ஆராதனைகளைக் கண்டோம், வணங்கினோம் என்று ஆருத்ரா தரிசனத்தை எளிமையாக எண்ணாதீர்கள். ஆருத்ரா தரிசனக் கோலம் என்பது, உங்களை நீங்களே நன்கு உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய தருணம் ஆகும்.
சித்தருடன் சிவ தரிசனம்!
 ஸ்ரீருத்ர கண்ட சித்த ஈஸ்வரர் இந்த ஆருத்ரா தரிசனம் நிகழும் இடமெலாம் விஜயம் செய்வதால், அவருடைய அருளால், இறைவனின் பேரின்ப நிலையை உணர்கின்ற நல்வாய்ப்பை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். இக்கடின விரதமுறையை குருவருளால் கைக்கொண்டால்! இந்த திருவாதிரை நட்சத்திரக் காலம் முழுதும், குறைந்தது 30 பேர் முதல் உங்கள் வசதிக்கேற்ப, எத்துணை பேருக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் அன்னதானம் செய்யலாம். இதில் முக்கியமானது என்னவெனில் திருவாதிரை நட்சத்திர நேரம் முழுவதும், அன்னதானக் கைங்கர்யம் நடைபெற வேண்டும் என்பதே!
தனித்து நடத்துவதை விட இறைக் காரியங்களை சத்சங்கமாக ஒன்று சேர்ந்து நிறைவேற்றினால் மிகப் பெருமளவில், நிகழ்த்துவதோடு மட்டுமின்றி அபரிமிதமான இறை சக்தியையும் எளிதில் பெற்றுவிடலாம். இதனையே சத்சங்கத்வே நித்சங்கத்வம் என்று சங்கர தத்துவமும், ஸ்ரீவள்ளலார் சுவாமிகளின் சமரச சன்மார்க்கமும் ஒருமைப்பாட்டுடன் வலியுறுத்துகின்றன. ஆருத்ரா தரிசன பலாபலன்களைப் பரிபூரணமாக பெறுவதற்கான ஆருத்ரா தரிசன விரத முறை படிப்பதற்கு சற்றுக் கடினமாக இருப்பினும், பிரமாதி வருட ஆருத்ரா தரிசன விரதமுறையை நன்முறையில் கைக்கொள்வோர்க்குத் தான் எத்துணையோ கோடி பலாபலன்கள் தாமாகவே வந்து நல்வரமாக வந்து குவிகின்றன.

ஸ்ரீஅகத்திய பெருமான்
திருக்குற்றாலம்

ருத்ர கண்ட சித்தரின் சூட்சும அல்லது தூல வடிவ தரிசனம், இவ்விரதந்தனை முறையாகக் கடைபிடிப்போருக்குக் கிட்டும். இதில் ஐயமே வேண்டாம். மேலும், ருத்ர கண்ட சித்தர் மிகவும் முக்கியமாக விஜயம் செய்கின்ற பிரமாதி வருட ஆருத்ரா தரிசன ஆலயமாக விளங்கும் திருக்குற்றாலம், குற்றாலநாதர் சிவாலயத்தில், இந்த ஆருத்ரா விரதத்தை நிறைவேற்றுவது மிக மிகச் சிறப்புடையதாகும். இந்த ஆருத்ரா தரிசனப் பலன்களாக பல முக்கிய கர்மவினைக் கழிப்புகளும் நிகழ்கின்றன என்பதையும் உணருங்கள். இத்தகைய கர்மவினைகளுக்குகானப் பிராயச்சித்தம் எங்கும் கிட்டாது. வேறு எந்த லோகத்திலும் பெறவும் இயலாது.
மனைவியின் பேச்சைக் கேட்டு, தாய், தந்தையரை அவமதித்து அவர்களை அனாதையாக்கி, வாடி வருந்தச் செய்த குற்றத்திற்கு இந்த ஆருத்ரா தரிசன விரதம் தக்க பிராயச்சித்தத்தை அளிக்கும். அதுவும் ஒரே ஒரு முறைதான். இந்நாளில் தம்முடைய தவற்றை உணர்ந்து மனமாரத் திருந்தி தம் பெற்றோர்களை மீண்டும் அழைத்து வந்து, அவர்களுக்கு தக்க உதவி செய்து நன்முறையில் வாழ வைப்பதே இந்த ஆருத்ரா தரிசன விரதத்தின் மகாபலன்களில் ஒன்றாம். பெற்றோர்கள் சிவ பதவி உற்றிருப்பின் அவர்களுக்குப் பிடித்தமானவற்றை அன்னதானமாக, தர்மமாக அளித்திடல் வேண்டும்.
தன் மனைவியை நிராகரித்தோ, அல்லது கணவனோ, மனைவியோ தான் மணந்த கணவன்/ மனைவியை ஒதுக்கி, பிறருடன் வாழ்ந்து, கணவனையோ / மனைவியையோ வருந்தச் செய்தோர் இன்று தம் வாழ்வின் ஒரே ஒரு முறையான பிராயச்சித்தமாக ஆருத்ரா தரிசன விரதத்தை முறையாகக் கடைபிடித்து தம்முடைய பாவங்களுக்கும் பிராயச்சித்தம் வேண்டி, மனமார நெஞ்சுருகக் கதறி வேண்டி தன்னால் நிராகரிக்கப்பட்ட கணவனுக்கு / மனைவிக்குத் தக்க உதவி செய்து மீண்டும் நல்ல முறையிலான வாழ்வைத் தொடர, இந்த ஆருத்ரா தரிசனம் உதவுகிறது என்பதை உணர வேண்டும். இதுவும் வாழ்வில் ஒரேயொரு முறை கிட்டும் அரிய சந்தர்ப்பம் ஆகும்.
ஆனால் கணவனையோ / மனைவியையோ வருத்துகின்ற பாவம் மிகக் கொடியதாகும். இதற்குப் பிராயச்சித்தம் என்பது இறைவனே மனமுவந்து அளித்தால் தான் உண்டு!  இல்லையெனில் இல்லைதான்! எம்முறையில்தாம் பிறரை வருத்தினார்களோ, அதே முறையில் வருத்தப்பட்டு, வறுக்கப்பட்டு, துன்பங்களை ஏற்று மீண்டும் கோடானுகோடி பிறவியெடுத்து வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால்தான் இப்பாவத்தின் கடும் கொடூரத் தன்மை புரியும். தம்பதியர் இல்லறத்தில் மனமொருமித்து, வாழ்தலே இல்லற இலக்கணத்தின் தெய்வீகப் பண்பாகும். மாற்றான் மனைவியை மனதால் நினைத்தால் கூடப் பெரும்பாவமே! இதற்கும் வாழ்வில் ஒரேயொரு முறையான பிராயச்சித்தமாக, இந்த ஆருத்ரா விரதத்தை தக்க முறையில் குருவருளுடன் கைக் கொண்டால், ஸ்ரீராமர் போல ஏகபத்னி விரதம் கொண்டு, அருந்ததி போல், கணவனே கண் கண்ட தெய்வமாகி எவ்வித மனச் சஞ்சலங்கட்கும் இடம் கொடாமல் நன்முறையில் வாழ இந்த ஆருத்ரா தரிசன விரதம், தக்க பிராயச்சித்த அளிக்கவல்லதாம்.
பொதுவாக முறையற்ற காம உணர்ச்சிகளுக்கும், நல்ல தீர்வு தந்து, நல்ல மனவொழுக்கத்துடன் உடல் ஒழுக்கத்துடன் வாழ இந்த ஆருத்ரா தரிசனம் பெரிதும் உதவுகிறது இவ்வாறாக நம் மூதாதையரும், சித்புருஷர்களும், நாம் பண்புடனும், பக்குவத்துடனும், நல்லொழுக்கத்துடனும், சிறந்த பக்தியுடனும் வாழ எத்துணையோ விரதங்களை, பண்டிகைகளை நமக்களித்துள்ளார்கள். இவற்றை நன்முறையில் கடைபிடித்தால் தான் நாம் சிறப்பான வாழ்வைப் பெற இயலும். பலவிதமான ஏக்கங்களுடனும், கொடிய பாவங்களுடனும், தீவினைக் கர்மங்களுடனும் இப்பிறவி முடிந்து இவற்றின் பயனாய் எண்ணற்ற பிறவிகள் தாம் தொக்கி நிற்கும் என்பதை உணர வேண்டும்.
பாம்பு, பூரான், கரப்பான் என்று எவை எவற்றிற்கோ மனிதன் அஞ்சுகிறான். ஆனால் பாவத்திற்கோ, தீவினைகளுக்கோ, தீயொழுக்கச் செயல்களுக்கோ சற்றும் அஞ்சுவது கிடையாது! புகை, மது, சூதாட்டம் முறையற்ற காமம், லஞ்சம், தீயொழுக்கம், வஞ்சகம், பகைமை, பொய்மை, குரோதம் போன்ற எத்துணையோ கொடிய தீவினைகளுடன் உறவாடுகின்றான். இவ்வாறன்றித் தன்னைத் தானே உணர்ந்து தன்னுடைய சற்குணம், நற்குணம், துர்குணம் மூன்றையும் அலசி ஆராய்ந்து துர்குணத்தை ஒதுக்கி ஸ்புடம் போட்ட பொன்னாக மிளிர்ந்திட இத்தகைய விரதங்கள் உதவுகின்றன என்று உணர்ந்தால்தான் இத்தகைய பண்டிகைகளின் மகாத்மியத்தை நன்கு உணர்ந்து அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் தோன்றும். அதற்காகத்தான் குருவின் வாய்மொழிகளாய் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பலவிதமான பண்டிகைகளின் மகாத்மியத்தை அளிக்கின்றோம். பண்டிகைகள் எல்லாமே சமுதாயத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவே என்பதை இனியேனும் உணருங்கள். இவற்றைக் கடைபிடிப்பதும் ஒரு சிறப்பான சமுதாயத் தொண்டேயாம்.

ஐயப்ப விரத மகிமை

விரத மாலை
கடந்த பல இதழ்களாக ஸ்ரீஐயப்ப விரதத்தில் நடைமுறையில் காணப்படுகின்ற குறைபாடுகளை விளக்கி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டி அருளியுள்ள வழிபாட்டு முறைகளை நாம் அளித்து வருகின்றோம் அல்லவா! கடந்த இதழிலிருந்து ஸ்ரீஐயப்ப விரதத்திற்குரித்தான மாலை அணியும் முறை பற்றி சித்புருஷர்கள் அருளியவாறு விளக்கி வருகின்றோமல்லவா! முதல் ஆண்டில் அணிய வேண்டிய தாமரை மணிகள் பற்றிய விளக்கங்களை ஏற்கனவே அளித்திருந்தோம். முதலாமாண்டு பரிபூரண விரதத்திற்குப் பின்னர், அதை பத்திரப்படுத்தி வைத்து இரண்டாம் ஆண்டும் அதே மணிமாலைகளை அணியலாம். ஆனால் இரண்டாம் ஆண்டு விரதத்தின் போது முதலில் அணியப்பட வேண்டியது ஒன்று அல்லது மூன்று சந்தன மாலைகளாகும். இதன் பின்னர் முதல் ஆண்டின் தாமரை மாலையையும் சேர்த்து அணியலாம்.
விரதத்திற்கான மணி மாலைகள் பின்னப்பட்டுவிட்டால் என் செய்வது என பலரும் வினவி உள்ளார்கள்.. விரதத்திற்குரித்தான, மணிமாலையானது அணிந்திருக்கும் போதே பழுதடைந்தால், அதனை இயன்றால் சீர்செய்து கொள்ளலாம். இல்லாவிடில் புதுமாலையைத் தான் அணிய வேண்டும். இதற்காகத்தான் மணிமாலைகளைப் பூஜை செய்யும் போதே குறைந்தது மூன்று மாலைகளை பூஜையில் வைத்து தினந்தோறும் பூஜிக்க வேண்டும், ஒவ்வொரு மாலையும் குறைந்தது ஒரு மண்டலத்திற்காக (48 நாட்கள்) பூஜிக்கப் பட்டால்தான் அது விரதத்திற்குரிய மணி மாலைக்கான தெய்வீக அம்சமாகின்றது. எப்போதும் விரதமாலை ஒன்றையேனும் கழுத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மூன்று தாமரை மணிமாலைகளை முதல் ஆண்டு அணிகிறார்கள். பழுதுற்ற விரத மாலையை சரி செய்த பின் மீண்டும் அதற்கு கற்பூர ஆரத்தி செய்து தோஷம் நீக்கி அணிந்து கொள்ள வேண்டும்.
விரதத்தின் போது, சிறுநீர், மலங்கழித்தலின் போது கடைபிடிக்க வேண்டிய சில இறைநியதிகள் உண்டு. அந்நேரத்தில் ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை வைத்து, ஆசமனஞ் செய்து சிறுநீர், மலங்கழித்தலுக்கு செல்ல வேண்டும். உடல் கடன்கள் முடிந்த பின், மீண்டும் ஆசமனம் செய்து கொள்ள வேண்டும். சிறுநீர், மலஜலம் கழித்தல் என்றால் நம் உடலிலுள்ள அசுத்தங்களை நீக்குதல் மட்டுமல்ல. அவற்றின் சிறுசிறு கர்மவினைகளும் அவற்றின் மூலம் வெளிச் செல்கின்றன என்பதையும் அறிய வேண்டும். சிறுநீர், மலங்கழிக்க வெளிச் செல்லும் போது, அவ்விடங்களில் உள்ள தீவினைகள், தோஷங்கள் நம்மை அணுகாவண்ணம் நம்மைக் காத்திடவே ஆசமனம் செய்யப்படுகிறது.
ஒரு முக்கிய விளக்கம்
ஐயப்ப விரதத்தின் போது எண்ணெய் ஸ்நானம் கூடாது என்று பலரும் தவறாக எண்ணுகின்றார்கள். மூலிகைத் தைலத்திற்கு எப்போதுமே விதிவிலக்கு உண்டு. மூலிகைத் தைல ஸ்நானம் என்பது ஒரு ஆரோக்கிய தெய்வீக நீராடலாகக் கருதப்படுகின்றதே ஒழிய, ஐயப்ப விரதத்தின் போது எண்ணெய் தேய்த்துக் குளித்தல் கூடாது என்பது தவறான அபிப்பிராயம் ஆகும். தாராளமாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்..
தைலம் கூட்டும் ஐயன் அருள் : ஸ்ரீஐயப்ப விரதத்திற்கு மிக முக்கியமானவைகளில் ஒன்று தான் மூலிகைத் தைலச் சக்தி உடலில் சேருவதாகும். ஏனென்றால் ஸ்ரீஐயப்ப மூர்த்தியைத் தரிசிக்கச் செல்லும் போது காடுகள் வழியே நடந்து செல்கையில் கோடிக்கணக்கான மூலிகைச் சரங்களை நீங்கள் தாண்டிச் செல்கின்றீர்கள். காற்று மூலமாகவும், உரசுதல் மூலமாகவும் நில அதிர்வுக் கிரணங்கள் மூலமாகவும் வெளிப்படுகின்ற இந்த மூலிகைச் சக்திகள் உங்கள் உடலில் சேரவேண்டுமென்றால் அதற்குரியத் தைலச் சக்திகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் பொன்னாங்கண்ணித் தைலத்தை உடலில் தேய்த்துக் கொண்டு ஊறிய நிலையில் நீங்கள் மூலிகைக் காடுகள் வழியே செல்கின்ற போது, வெண்காவிச் சாரளம் என்கின்ற மூலிகைக் கற்பாறையின் கிரணங்கள் வந்து உங்கள் உடலிலே சேர்ந்து தோலுக்கு நல்ல ஆத்ம சக்தியைத் தருகின்றது.
இதனால் தோல் வியாதியால் ஏற்படும் துன்பங்கள் தணிவதோடு எத்தகைய தோல் நோய்கள் அணுகாவண்ணம் உங்கள் உடலுக்கு இரட்சைக் காப்பு ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த வெண்காவிச் சாரளக் கற்பாறையின் கிரணங்கள் உடலில் தோய வேண்டுமென்றால் அதனை ஈர்க்கக் கூடியச் சக்தியைப் பொன்னாங்கண்ணித் தைலம் மட்டுமே பெற்றுள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். இதற்காகத்தான் ஐயப்ப விரதத்தின் போது தைலச் சக்தி பெருகும் முறையினை சேர்க்கின்றார்கள். ஞாயிற்றுக் கிழமையன்று சூரிய ஹோரையின் போது தலையிலும், பாதங்களிலும், கைவிரல்களிலும் பொன்னாங்கண்ணி தைலத்தைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
தானத்துடன் சேர்ந்த ஐயன் கானம்!
தைல கானம் என்பது ஐயப்ப யாத்திரையின் போது செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடாகும். ஸ்ரீஐயப்ப விரதம் என்றால் வெறும் வழிபாடு, நாமசங்கீர்த்தனப் பூஜைகள் மட்டுமல்ல. அதில், சில மிக முக்கியமான தான தருமங்களும் சேர்க்கப்படுகின்றன. ஏனென்றால் புனித யாத்திரையின் போது செய்யப்படுகின்ற தான, தருமங்களுக்குப் பன்மடங்குச் சக்திகள் உண்டு. இந்தப் புண்ணியச் சக்திகள்தான் கல்லும், முள்ளும் காடுகளையும் கடந்து செல்கின்ற யாத்திரையில் உங்களுக்கு ரட்ச தேவதையாகத் துணை வந்து அருள்புரியும். பொன்னாங்கண்ணித் தைலம், செம்பருத்தித் தைலம், மருதாணித் தைலம், கரிசாலங்கண்ணித் தைலம் போன்ற மூலிகைத் தைலங்களைத் தேங்காய் எண்ணெயுடனோ நல்லெண்ணயுடனோ சேர்த்து வழியெங்கும் தானம் செய்து வருதல் வேண்டும்.
ஒரு சிறு பாட்டிலில் தைலத்தை வைத்து ஒரு வேளைக்குப் போதுமளவு இருந்து அதை அளித்தால் கூட மிகவும் சிறந்த தானமாக விளங்குகின்றது. பலரும் ஒன்று கூடி பெரிய பாட்டில்களில் தைலத்தை வைத்து ஆங்காங்கே உள்ள ஏழைகளுக்கு எண்ணெய் தானம் அளித்து வந்தால், எண்ணெய் தானத்தின் மகிமையோ சொல்லவும் பெரிதாக விரிகிறது. “காய்ந்தத் தலைக்குக் கட்டித் தைலம் மாய்ந்து போகும் மாமலை வினைகள்”, என்பது ஆன்றோர் வாக்கு. ஏனென்றால் வறுமையால் காய்ந்து கிடக்கின்றத் தலைகள் எண்ணெய்ப் படிவம் பெறும் வண்ணம் ஏழைகளுக்கு எண்ணெய் தானம் அளித்து வருவீர்களேயானால் உங்கள் வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஏற்படுகின்ற மனஸ்தாபங்கள் தணிகின்றன.
மேலும் மந்தமாக உள்ள பிள்ளைகள் நன்குப் படிப்பதற்கும் தைல தான புண்ய சக்தி பெரிதும் உதவுகின்றது. நாம் அடிக்கடி வலியுறுத்துவது போல் ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது இல்லறத்தார் ஒரு போதும் காவி உடையை அணிதல் கூடாது. துறவிகள் மட்டுமே அணிந்திடலாம். கறுப்பு அல்லது நீலநிற ஆடைகளே ஸ்ரீஐயப்ப விரதத்திற்கு உகந்ததாகும், ஸ்ரீஐயப்ப விரதத்திற்கான உடைகளை வாங்கும் போது அவற்றிற்குத் தக்க பூஜைகளைச் செய்து ஒவ்வொரு முறையும், மந்திர சக்தி அதில் தோயும் வண்ணம், குறைந்தது 1000 முறை காயத்ரீ மந்திரத்தை முறையாக ஜபித்து அதன் பிறகே ஸ்ரீஐயப்ப உடைகளை அணிந்திடுதல் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
மூங்கில் தரும் ஆசாரம்
ஐயப்ப விரதத்தின் போது ஆங்காங்கே நீர் அருந்த வேண்டிய நிலை ஏற்படுமல்லவா! கண்ட கண்ட இடங்களில் நீரை அருந்துவதால் கர்மவினைகள் தான் சேருகின்றன. மிகச் சிறந்த ஆசாரம் உள்ளதாக விளங்குவது மூங்கில் குப்பியில் நீரை அருந்துவதாகும். எனவே நல்ல மூங்கில் தம்ளர்களை வாங்கி வைத்துக் கொண்டு, பெரும்பாலும் புண்ய நதி அல்லது ஆலயத் தீர்த்த நீரை மட்டும் அருந்திடுக. செப்பு தம்பளரில் நீரை வைத்துக் கொள்ளக்கூடாது. ஆதலால் நீரைச் செப்பு தம்பளரில் சேமித்து வைக்காதீர்கள். நீரைப் பருகுவதர்குச் செப்பு தம்ளரைப் பயன்படுத்திடலாம். இது உடலுக்கு நல்லதாகும்.
நன்கு காய்ச்சிய வெந்நீரை அருந்துதல் தான் சிறந்ததாகும். எந்த நீராயினும் சரி வில்வமோ, துளசியோ போட்டு வைத்து, ஊறிய பிறகு அருந்துவது இன்னும் விசேஷமானதகும். நெல்லிக்கட்டை, நெல்லிக்காய், சீரகம் போன்றவற்றை நீரில் போட்டு வைத்து அருந்துவதும் சிறந்ததாகும். இவையெல்லாம் உடலுக்குப் புனிதத் தன்மையைக் கூட்டுவதால் ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது நடைமுறை வாழ்க்கையில் நாம் இவ்வகையான எளிமையான தெய்வீக வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். அனைவருமே பூணூல் அணிதல் வேண்டும். ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருமே பூணூல் அணிந்திடலாம் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம் அல்லவா!
ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது பூணூல் அணிந்து கொண்டு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைத் தினந்தோறும் கண்டிப்பாக ஜபித்தல் வேண்டும். அதுவும் பம்பை நதி, காவிரி நதி போன்ற புண்ணிய நதி தீரங்களில் ஜபிக்கப்படுகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு என்பதும் நீங்கள் அறிந்ததே! பூணூல் போடும் போது அதாவது உபநயனத்தின் போது மட்டும் தான் பூணூலில் மான் தோல் தரிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்! எப்போதுமே உங்கள் பூணூலில் மான்தோல் சிறிது கட்டியிருப்பது சிறப்புடையதாகும். ஆனால் மான்தோலைப் பெறுவதற்காக மானைக் கொல்வது பெரும் பாவமாகும். இயற்கையாகவே இறந்த மானிலிருந்துத் தக்க வழிபாடுகளுடன் பெறப்பட்ட மான் தோல் தான் புனிதச் சக்தியைத் தரும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய், நல்லெண்ணய், வேப்பெண்ணய், போன்ற பலவகை எண்ணெய் தீபங்களை உங்கள் ஐயப்ப விரதத்தின் போது ஆலயங்களில் ஏற்றி வாருங்கள். எந்த அளவிற்கு விதவிதமான எண்ணெய் தீபங்களை ஏற்றுகின்றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு வெவ்வேறு விதமானப் புண்ணிய சக்தி உண்டாகும். புண்ணிய சக்தி மிகுந்திருந்தால் தான் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பலவகையானத் துன்பங்களை நீங்கள் சமாளிக்க முடியும். மேலும் ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது, செருப்பு அணிதல் கூடாது என்ற நியதி உண்டு. ஆதலின் அரசமரம், ஆலமரம், வன்னிமரம், வேப்ப மரம் போன்ற பலவிதமான புனித விருட்சங்களை அடிப்பிரதட்சிணம் செய்தும், விதவிதமான புண்ணியச் சக்திகளைத் திரட்டிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் ஸ்ரீஐயப்ப விரதத்தைக் கைக்கொண்டு விரதத்தை முடிக்கும் போது, எத்தனையோ விரதங்களில் நீங்கள் புண்ணியச் சக்தியைச் சேர்த்தாக வேண்டும்.
இவைதாம் ஒன்று திரண்டு, ஐயப்ப தரிசனத்தின் பரிபூரண பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரும். இவ்வாறாக ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள், பூஜை விரத முறைகள் ஏராளம்! ஏராளம்! ஏதோ விரத உடைகளை மாட்டினோம்., மற்றவர்களைப் போல் சாதாரணமாகத் தெரிந்தவரை, விரதம் கடைபிடித்தோம், சென்றோம், வந்தோம் என்றிருந்து நாம் ஐயப்பனின் அருளைக் கோட்டை விடக் கூடாது அல்லவா!

அமாவாசை தர்ப்பணம்

அமாவாசையின் விசேஷ சக்திகள்
எவ்வாறு மாதாந்திரப் பௌர்ணமியானது எண்ணற்ற தெய்வீக சக்திகளைத் தன்னுள் நிறைத்துக் கொண்டுள்ளதோ அதே போலத்தான் சூரியனும், சந்திரனும் சேருகின்ற தினமான அமாவாசையும் எத்தனையோ அற்புதமான இறைச் சக்திகளைத் தன்னுள் கொண்டுள்ளது. சந்திர கிரகமும், சூரிய கிரகமும் ஒன்றாக இணைகின்ற நாளே, பித்ருக்களுக்கு உரித்தான விசேஷமான தினமான “அமாவாசை” என்பதை நாம் நன்கு அறிவோம். உங்களுடைய தினசரிப் பூஜைகளில் பஞ்சாங்கத்தைத் தொட்டு வணங்கி அந்நாளுக்கான கிழமை, தேதி, நட்சத்திரம், யோகம், கரணம் தனைப் படிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியுள்ளோம் அல்லவா!
தினந்தோறும், எந்தெந்த கிரகம் எந்தெந்த இராசியில் உள்ளது என்பதை ஒரு படமாக வரைந்து அந்தப் படத்தை வணங்கி வர வேண்டும். ஒரு சில பஞ்சாங்கங்களில் தினசரி கிரக ராசி சஞ்சார நிலைகள், சக்கரங்களாக, படங்களாக வரையப் பெற்றுள்ளன. தினசரி கிரக சஞ்சார பலன்களானவை விநாடிக்கு விநாடி கூட மாறுபடும். குருபகவான் மேஷம், மிதுனம் என ஒவ்வொரு இராசியிலும் விதவிதமான பலன்களைத் தருகின்றார். இதே போல மேஷத்தில் குருவும், தனுர் ராசியில் சுக்கிரனுமாக இவ்வாறாக விதவிதமான கிரக சஞ்சார நிலைகள் தருகின்ற பலன்களோ வெவ்வேறானவையே! ஒரு விநாடியில் அமைகின்ற கிரக சஞ்சார நிலைகளின் பலன்கள் அடுத்த விநாடியில் மாறிவிடுகின்றன. உங்களுடைய பிறந்த நாளுக்குரித்தான கிரகத்தின் நிலைகளை ஜாதகத்தில் பாருங்கள். அதே கிரகங்கள் இந்நாளில் வெவ்வேறு நிலைகளில், ராசிகளில் குடிகொண்டிருக்கும்.
பூஜையில் உங்கள் ஜாதகச் சக்கரம்!
அவரவர் தம்முடைய ஜாதகச் சக்கரத்தை, இராசிச் சக்கரத்தைத் தாமிரத் தகடுகளில் பொறித்துப் பூஜையில் வைத்து வர வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? “ஸ்ரீராமருடைய ஜாதகத்தைத் தானே, பூஜையிலே வைப்பார்கள். அவரவர் சுயநலமாக தம்முடைய ஜாதகச் சக்கரத்தைப் பூஜையிலே வைக்கலாமா?” என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படும். நீங்கள் உங்கள் ஜாதகச் சக்கரத்தைத் தாமிரத் தகட்டில் பொறித்து பூஜையில் வைக்கும் போது, எதனை நீங்கள் வழிபடுகின்றீர்கள் என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தாமிரத் தகட்டில் பொறிப்பதோ, எழுதுவதோ, நவகிரக மூர்த்திகளுடைய பலவிதமான ராசிப் பிரவேச நிலைகள் தாம்!
வெறுமனே உங்களுடைய ஜாதகம் மட்டும் அல்ல! உதாரணமாக உங்களுடைய இராசிச் சக்கரத்தில் தனுசுவில் சுக்கிரனும், மிதுனத்தில் ராகுவும் இவ்வாறாகப் பலவித நிலைகளில் கிரகங்கள் இருக்கும் போது அதனை நீங்கள் சக்கரமாகப் பொறித்து வைக்கின்ற போது ஒவ்வொரு கிரகமும் அந்தந்த இராசியில் இருக்கின்ற கிரக சஞ்சாரச் சக்கரத்தைத் தானே நீங்கள் வழிபடுகின்றீர்கள்! இங்கு உங்களுடைய ஜாதகச் சக்கரம், நமக்குரித்தான ஜாதகம் என்ற எண்ணம் எழுதல் கூடாது. நீங்கள் வழிபடுவது அந்தந்த கிரக மூர்த்திகளைத்தாம். அந்தந்த இராசியில் இருக்கின்ற கிரஹ சக்கரப் பிரமாணத்தைத் தான்!
இன்னும் சொல்லப் போனால் உங்கள் ஜாதக இராசிச் சக்கரத்தில் உள்ள கிரக நிலைகள் எத்தனையோ கோடானு கோடி வருஷங்களுக்கு ஒருமுறைதான் மீண்டும் திரும்பி வரும் என்பதை நன்றாகத் தெரிந்திடுக! எனவே உங்கள் ஜாதக சக்கரத்தை நீங்கள் பூஜையில் வைக்கும் போது உங்களுடைய ஜாதகம் தானே, வைக்கலாமா என்ற சுயநலமோ, சந்தேகமோ ஏற்பட வேண்டாம் , மாறாக நீங்கள் வழிபடுவது கிரகமூர்த்திகளின் வேறுவிதமான சஞ்சார ராசிப் பிரவேசம் என்பதே உண்மை! கிரஹ தேவ மூர்த்திகளின் சஞ்சார, அனுகிரஹ சக்திகளைப் பூஜிக்கின்றீர்கள் என்பதே பட்டவர்தனமான உண்மை! மேலும் ஒவ்வொரு ஜீவனின் உள்ளும் உறைவது தெய்வமே! இதை உணருகின்ற அளவுக்கு உடல் சுத்தியோ, மன சுத்தியோ ஏற்படவில்லை. இதனைப் பெறுவதற்காகத் தான் மனிதப் பிறவி என்பதை உணர்ந்தாக வேண்டும்.
பஞ்சாங்கத்தைப் பார்த்தீர்கள் என்றால் அமாவாசையன்று ஒரே ராசியில் சூரிய, சந்திர மூர்த்திகள் இணைந்து இருப்பதை நீங்கள் காணலாம். எனவே அமாவாசைத் தர்ப்பணத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு என்னவென்றால் முதலில் அன்றைய தினத்திற்கான ராசிக் கட்டக் கோலத்தை அரிசி மாவினால் போட்டுக் கொள்ளவும். அதாவது எவ்வாறு ஒரு ஜாதகக் கட்டத்தில் எவ்வளவு 12 ராசிக் கட்டங்கள் உள்ளனவோ அதே போல நீங்கள் அரிசிமாவு ஜாதகக் கோலம் இட்டு போட்டுக் கொள்கின்றீர்கள் .
அமாவாசையன்று நாம் குறிப்பிட்டது போல ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் கூடுகின்றார்கள் அல்லவா! எனவே, அமாவாசைக்குரிய அந்தக் கோல ராசிச் சட்டத்தில் எந்த ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்றார்களோ அந்த ராசிச் சட்டத்தில் சூரிய பகவானுக்கு உரித்தான பொருட்களையும், சந்திர மூர்த்திக்குப் ப்ரீதியான பொருட்களையும் படையலாக வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சூரிய பகவானுக்குரித்தான கோதுமை, ஆரஞ்சு நிற ஆடைகள், ஆரஞ்சு நிற பழவகைகள், சந்திர மூர்த்திக்குரிய பால், முத்து, அரிசி போன்ற வெண்மைப் பொருட்களை வைத்து சூரிய, சந்திர மூர்த்திகளை வழிபடுதல் வேண்டும். சர்வேஸ்வரனுடைய வலது கண்ணும், இடது கண்ணும் சூரிய சந்திர மூர்த்திகளாக விளங்குவதால் இரண்டு பார்வையும் தியான நிலையில் ஒருமிக்க சர்வேஸ்வரனுடைய புருவ மத்தியில் அமாவாசை பிறக்கின்றதாக சித்புருஷர்கள் கூறுகின்றார்கள்.
இது பற்றிய விளக்கங்களை நாம் ஏற்கனவே அளித்துள்ளோம். எனவே, ஒவ்வொரு அமாவாசையின் போதும் நீங்கள் அரிசி மாவினால் ராசிச் சக்கரக் கோலமிட்டு அதில் அந்த நாளுக்குரிய ராசியில், சூரிய, சந்திர மூர்த்திகளைப் படமாக வரைந்து அதில், சூரியனுக்குரித்தான கோதுமை, ஆரஞ்சு நிற ஆடைகள், ஆரஞ்சு நிற ரத்தினம், எருக்கு போன்றவற்றை வைத்திடுதல் வேண்டும். சந்திர பகவானுக்குரித்தான வெண்மை நிற வஸ்திரங்கள், அரிசி, வெளை அரளி, புஷ்பம், முத்து, ஈயப் பொருட்கள், முறுக்கு என்னும் தாவர மூலிகை போன்றவற்றையும் வைத்திடுதல் வேண்டும்.
ஒரு சிறிய கோலத்தில் எவ்வாறு இது அனைத்தையும் வைக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா! ஏன் கோலத்தைச் சிறியதாகப் போட வேண்டும்? நன்றாகப் பெரிதாக, ஐந்து அடிக்கு ஐந்து அடியான அளவில் நல்ல பெரிய ராசிச் சக்கரத்தை அரிசி மாவினால் வரைந்து சூரிய, சந்திரன் நிற்கின்ற ராசியில் பெரிய தர்ப்பைப் பாயையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ வைத்து அதில் இந்த எல்லாப் பொருட்களையும் வைத்திடலாமல்லவா! இதுதான் ஒவ்வொரு அமாவாசைக்குரித்தான விசேஷமான பூஜைமுறையாகும். இவ்வாறு சூரிய, சந்திர கிரகங்களை அந்தந்த ராசியில் அமைந்தவுடன் சூரியன் மற்றும் சந்திரனுக்கு குரிய துதிகளை ஓதி இந்த அமாவாசை ராசிச் சக்கரத்தை வழிபடுங்கள் இதுவே அமாவாசைக்கான சக்கர பூஜை!
ஆலயங்களில் இறைவனுக்குச் சூடிய (பழைய), நிர்மால்யப் பூக்களைப் பெற்று ஆலய சுத்திக்கு உதவி செய்து நிர்மால்யப் பூக்களைக் கடலில் சேர்ப்போர்க்கு நல்ல நிரந்தரப் பதவி கிட்டும். இதுவே நல்லதோர் திருப்பணியாக அபரிமிதமான புண்ய சக்தியையும் பெற்றுத் தருவதாகும். அமாவாசையன்று சூரிய, சந்திர கிரகங்கள் ஒன்று சேருகின்ற போது இதன் பின் ஒளியிலே ஏற்படுகின்ற அற்புதமான சூட்சும ஒளி உலகில்தான் பித்ரு தேவர்கள் தங்கள் விசேஷமான நாராயண பூஜைகளைக் கடைபிடிக்கின்றார்கள். ஆம்! நம்மைப் போலவே நம்முடைய மூதாதையர்களான பித்ருக்களுக்கும் அனைத்தும் விதமான பூஜைகளும், பண்டிகைகளும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆன்மீகத்தில் உள்ள ஓர் அற்புதம் என்னவென்றால் நீங்கள் எந்த தெய்வீக நிலைக்குச் சென்றாலும் அதற்கு அடுத்ததாக ஓர் உத்தமமான ஒரு தெய்வீக நிலை உண்டு என்பதே! இறைவனோடு ஐக்கியமாகி, பரம்பொருளின் பிம்பமாக விளங்குகின்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் இன்றைக்கும் தினந்தோறும் மூன்று கால சந்தியா வழிபாடுகளை மேற்கொண்டு ஆறுகால பூஜைகளையும் செய்து கொண்டு, திருஅண்ணாமலை கிரிவலம், சூரிய நமஸ்காரம், அமாவாசைக்கான பித்ரு தர்ப்பண பூஜைகள், பௌர்ணமிக்கான கிரிவலம், ஹோம வழிபாடுகள் போன்றவற்றை முறையாகச் செய்து வருகின்றார் என்றால், நாம் எம் மாத்திரம் என்று உங்களுக்குள் உங்களையே ஆத்ம விசாரம் செய்து உங்கள் தெய்வீக நிலையை விருத்தி செய்ய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொள்க!
எத்தகைய கொடியவனாயினும் அவனுடைய உள்ளத்திலே ஒரு சிறு தெய்வீகச் சுடராவது பரிணமித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அனைவர் உள்ளத்திலும் உறைகின்ற அற்புத தெய்வீக ஆற்றலை வெளிக் கொணர இயலாவண்ணம் தீவினைகள் தாம் தடுக்கின்றன. வரும் பிரமாதி வருட கார்த்திகை மாத அமாவாசையன்று நாம் செய்கின்ற அமாவாசை வழிபாடு பற்றி சித்புருஷர்கள் அருளியவாறு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழியாக இங்கு அளிக்கின்றோம்.
எவ்வாறு ஒவ்வொரு மாதாந்திரப் பௌர்ணமியும் விசேஷமானப் பெயரைத் தாங்கி விதவிதமான விசேஷமான பலன்களை நல்குகின்றதோ, அதே போன்று ஒவ்வொரு அமாவாசைக்கும் உரித்தான வழிபாட்டு முறைகளும் சிறப்பான வழிபாட்டுத் தலங்களும் உண்டு. இவ்வகையில் பிரமாதி வருடத்திற்கான கார்த்திகை மாத அமாவாசை தினத்தில் எந்தெந்த கிரகம் எந்தெந்த ராசியில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து கிரகச் சஞ்சார நிலைகளின் பலங்களாக உருவகித்து சித்புருஷர்களால் நமக்கு அருளப்பட்டுள்ளது. எந்த வருடத்தில் எந்த அமாவாசை, பௌர்ணமியில் எவ்விதமான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இன்றைக்கும் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களாக தீர்கதரிசனமாக வடிக்கப்பட்டுள்ளன.
இவற்றை அறிந்தவர்தாம் சற்குரு ஆவார். அவை தக்க சற்குருமார்களின் ஒளி வடிவப் பொருட்களாக சிராவண சாஸ்திரமாக, எழுதாக்கிளவியாக, விளங்கி வருகின்றன. சற்குருவே தமக்குரிய தெய்வீக சக்தியினால் வேதமாக இவற்றை நமக்குப் பெற்றுத் தருகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, தக்க சற்குருவைப் பெற்றுவிட்டால் நீங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டியது வேறு ஒன்றுமே இல்லை.
தர்ப்பணச் சட்ட முறை
 பிரமாதி கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று மேற்கண்ட முறையிலே சூரிய, சந்திர கிரக நிலைகளை அரிசி மாக் கோலத்தில் வரைந்து சூரிய சந்திரத் துதிகளை ஓதி வழிபட்டுப் பிறகு தர்ப்பண பூஜையை மேற்கொள்ள வேண்டும். வெறும் தரையில் இன்று கோதுமை தானியத்தைப் பரப்பி, அதன் மேல் ஆரஞ்சு நிற புதுத் துணியை வைத்து அதற்கு மேல் வெண்மையான முழு அரிசி மணிகளை நிரப்பி, இதனை (சந்திர பகவானுக்குரித்தான) வெண்மையான புதுத் துணியினால் அதனையும் மூடிட வேண்டும். இதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்து தர்ப்பணம் இட வேண்டும்.
அதாவது நீங்கள் உங்களுடைய பித்ருக்களுக்கு இடுகின்ற தர்ப்பண நீர்த் தாரையானது தர்ப்பணச் சட்டத்தின் வழியாக வெண்மை நிறத் துணி மூலமாக அரிசி மணிகளை அடைந்து பிறகு ஆரஞ்சு நிற வஸ்திரம் மூலமாக சூரிய பகவானுக்குரித்தான கோதுமையைச் சென்று அடைகின்றது. இது ஒரு சாதாரண நிகழ்ச்சியைப் போன்று தோன்றினாலும், இதனுடைய சூட்சுமப் பின்னணியிலே எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்துள்ளன. நீங்கள் அளிக்கின்ற அமாவாசைத் தர்ப்பண நீர்த்தாரையானது பலவிதமான லோகங்களைக் கடந்து செல்கின்றது என்பதை சூட்சுமமாக உணர்விப்பதற்காகத் தான் இந்த விசேஷமான தர்ப்பணச் சட்டமுறை பிரமாதி வருட கார்த்திகை அமாவாசைத் தினத்திற்கான விசேஷ பூஜை முறையாக உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சூரிய தீர்த்தம்
பரிதிநியமம்

சந்திர தீர்த்தம்
பரிதிநியமம்

நீங்கள் உங்கள் அமாவாசைத் தர்ப்பணத்திற்காக சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் உள்ள ஆலயங்களிலிருந்து பெறப்பட்ட தீர்த்தத்தை தர்ப்பணத்திற்கு பயன்படுத்துதல் விசேஷமானதாகும். தமிழகம் எங்கும் எவ்வளவோ நூற்றுக்கணக்கான ஆலயங்களில் சூரிய தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் நிறைந்துள்ளன. நீங்களே தல வரலாறுகளைப் படித்தும், தக்க பெரியோர்களை நாடியும் எந்தக் கோயிலில் சூரிய, சந்திர தீர்த்தங்கள் நிறைந்துள்ளன என்பதைக் கேட்டு அறிந்து கொள்க! 
ஆலயங்களில் சூரியன் மற்றும் சந்திர மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனிதமான நீரையும் தாராளமாக இந்தத் தர்ப்பணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய, சந்திர மூர்த்திக்கு தனிப்பட்ட முறையில் சந்நிதி உள்ள ஆலயங்களில் குறிப்பாக சூரியனார் கோயிலில் சூரிய, சந்திர மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரானது கோமுகம் வழியாக வெளிவரும் அல்லவா! அதனைப் பெற்று எடுத்து வந்து இந்த அம்வாசைத் தர்ப்பணத்தை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி விடலாம்.
தர்ப்பணப் பலன்கள் :- பிரமாதி வருட கார்த்திகை மாத அமாவாசைத் தர்ப்பணத்தினால் பலவிதமான விசேஷ பலன்கள் கிட்டுகின்றன.
1. பலவிதமான கண் நோய்களினால் அவதிப்படுவோருடைய நோயின் கடுமைகள் தணிவதற்கும், நன்முறையில் குணமாவதற்கும் இந்த அமாவாசை தர்ப்பணப் பூஜை உதவுகின்றது.
2. பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர்களாகவும், வாழ்க்கையின் இடையில் கண் பார்வையை இழந்தும், கண்நோயால் அவதிப்பட்டு உயிர் துறந்தோருக்கும் இந்தத் தர்ப்பண வழிபாடு நற்கதியைப் பெற்றுத் தருகின்றது.
3. மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றை மிகவும் விரைவாக ஓட்டிச் சென்று இதனால் ஏற்படுகின்ற விபத்தால் இறந்தவர்களுக்கும் இந்த அமாவாசைத் தர்ப்பணமானது நல்ல பிராயசித்தத்தைத் தரும். அது மட்டுமல்லாமல் கவனக்குறைவால் ஏற்பட்ட பெரும் பாவங்களுக்குத் தகுந்த தீர்வைப் பெறுவதற்கான நல்ல பரிகாரங்களை அடைவதற்கான வழியையும் பெற்றிடலாம்.
4. வஞ்சனை, சூது, பகைமை காரணமாக பல குடும்பங்களைப் பிரித்தோர் இன்றைக்கேனும் தங்களுடைய தவறுகளுக்கு மனப்பூர்வமாக வருந்தி தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்து தங்களுடைய மூதாதையர்களுக்கு மேற்கண்டபடி தர்ப்பணம் அளித்தால் அவர்களே முன்வந்து இத்தகையப் பாவங்களுக்குரித்தான தக்கப் பிராயசித்தங்களை அருள்கின்றார்கள்.
அமாவாசைக்குரிய மூர்த்தி வழிபாடு
ஒவ்வொரு அமாவாசைக்கும் உரித்தான விசேஷமான வழிபாடு மட்டுமல்லாது அந்தந்த அமாவாசை தினத்தில் வழிபட வேண்டிய விசேஷமான மூர்த்திகளும் உண்டு. ஏனென்றால் பித்ரு லோகங்களில் கூட ஒவ்வொரு அமாவாசையும் பிரம்மோற்சவமாகத்தான் கொண்டாடப்படுகின்றது. அதாவது பித்ரு மூர்த்திகள் ஒவ்வொரு அமாவாசையிலும் பூலோகத்தில் அந்தந்த அமாவாசைக்குரிய மூர்த்திக்குரித்தான ஆலயங்களில் தங்களுடைய விசேஷமான பூஜைகளை மேற்கொள்கின்றார்கள். இவ்வகையில் பிரமாதி வருட கார்த்திகை அமாவாசைக்குரித்தான விசேஷமான தலமாக விளங்குவது ஸ்ரீதானுமாலய மூர்த்தியாக இறைவன் அருள்பாலிக்கின்ற திருத்தலமாகும்.

எங்கெல்லாம் ஸ்ரீதாணுமாலயன் என்ற நாமத்தைப் பூண்டு சிவபெருமான் அருள்பாலிக்கின்றாரோ அத்தகைய தலங்களிலுள்ள தீர்த்தங்களில், கிணறு மற்றும் குளங்களில், நதிக்கரைகளில் அமாவாசைத் தர்ப்பணம் செய்து அன்னதானத்துடன் தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்வது சிறப்புடையதாகும். இன்றைய தினம் ஸ்ரீதாணுமாலயன் மூர்த்திக்குத் தேனும், பாலும் கலந்து அபிஷேகம் செய்தலும், கோதுமையாலான உணவுப் பண்டங்களைப் படைத்து அன்னதானம், அளித்தலும் சிறப்புடையதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் ஆலயத்தில் ஸ்ரீதாணுமாலயனாக ஈஸ்வரன் அருள்பாலிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று கோதுமையாலான அல்வா, சப்பாத்தி, பூரி, ஆரஞ்சு வண்ண ஆடைகள்., சூரிய கிரஹத்திற்குரிய மாணிக்கம் பதித்த ஆபரணங்கள் போன்றவற்றை தானமாக அளித்தலும் ஆலயத்தின் தக்க அனுமதி பெற்று இங்கு உழவாரத் திருப்பணி புரிதலும் சிவபெருமானுக்கு எருக்கம் பூமாலை அணிவித்து வழிபடுதலும் சிறப்புடையதாகும். உழவாரத் திருப்பணி என்றால் நிறைய ஆட்கள் வேண்டுமே, பணம் செலவாகுமே என்று மலைத்து விடாதீர்கள். ஒரு பெரிய பையை எடுத்துச் சென்று ஆங்காங்கே ஆலயத்தில் கிடக்கும் குப்பை, தேங்காய் நார், தீக்குச்சி, தீப்பெட்டி பழைய புஷ்பம், இலை, தழைகள், பிளாஸ்டிக் கற்பூரப்பை போன்றவற்றை வெட்கமோ, சங்கோஜமோ பாராமல் பொறுக்கி பை நிறைந்தவுடன் வெளியில் தக்க குப்பைத் தொட்டியில் சேர்த்தலும் மிகச் சிறந்த இறைத் தொண்டே! மனம் இருந்தால் மார்கமுண்டு! மணமுள்ள இறைமார்கமும் இதுவே!

ஸ்ரீவாஸ்து பூஜை

ஸ்ரீவாஸ்து நேரம்
வாஸ்து நேரம் என்பது அஸ்திவாரத்திற்கு மட்டுமல்ல, புது வீடு, பழைய வீடு, அலுவலகம், நிலபுலன் அனைத்திற்குமே வாஸ்து நேர பூஜை செய்தாக வேண்டும். ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தி உறங்குகின்றார் என்று சொல்வதை விட யோக நித்திரை பூண்டிருக்கின்றார் என்பதே உண்மையானதாகும். ஸ்ரீவாஸ்து மூர்த்தி விழித்திருக்கும் நேரம் என்பதை விட யோக நித்திரையிலிருந்து மீண்டு தேஜோமயமாய் பிரத்யட்சமாய் அருள்பாலிக்கும் நேரம் என்று சொல்வதுதான் சரியானதாகும். பலவிதமான நில தோஷங்களுக்கும் பரிகாரமாக ஸ்ரீவாஸ்து நேர பூஜை அமைகின்றது என்பது பலரும் அறியாததாம்.
அறிந்தோ, அறியாமலோ, வீட்டிலும், நிலத்திலும், அலுவலகக் கட்டிடங்களிலும் உள்ள பலவிதமான நில தோஷங்களுக்குத் தொடர்ந்து செய்யப்படுகின்ற ஸ்ரீவாஸ்து நேர பூஜைதான் தக்க பரிகாரங்களைத் தரும் என்பதை உணர்ந்து கொள்க! நில தோஷங்களைத் தீர்ப்பதற்காக எத்தனையோ ஹோமங்களையும்,  தான தருமங்களையும் செய்தாலும் கூட, ஸ்ரீவாஸ்து நேரத்தில் செய்யப்படுகின்ற ஹோமத்திற்கும், பூஜைக்கும் தான, தருமங்களுக்கும் மகத்தான சக்தி உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வசிக்கின்ற இல்லங்களில், பிளாட்களில், நிலங்களில் வியாபாரம் நடத்தப்படுகின்ற இடங்களில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், எத்தனையோ நிலதோஷங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. இவற்றில் ஒரு சிலவற்றையே நாம் அறிந்திருக்கின்றோம். நாம் அறியாத தோஷங்கள் பலப்பல. அவற்றிற்கும் நிவர்த்தி தருவதே ஸ்ரீவாஸ்து பூஜை!

வாஸ்து தோஷங்களை களையும்
ஸ்ரீபூமிநாதர் திருநல்லம்

ஸ்ரீபூமிநாதரை வழிபடும்
ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம்

நிலதோஷம் பலவகை : பள்ளச்சுவடு தோஷம், வடிவுக் குத்து தோஷம், எச்சில்மல தோஷம், சிறுநீர் பூசு தோஷம் போன்று எத்தனையோ விதமான நிலதோஷங்கள் உண்டு. காலியாக மனைக் கிடக்கின்றதே அல்லது பாழ்மனையாக இருக்கின்றதே என்று பலரும் சில இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது அந்த இடங்களில் சிறுநீர் பூசு தோஷம் ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமானதாகும். ஏனென்றால் ஒரு மனிதனின் உள்ளத்திலும், மனத்திலும், உடலுலும் உறையும் முறையற்ற காம எண்ணங்களும், தீ வினைகளும், கொடிய கர்ம வினைகளுமே சிறுநீர் வழியாகவும், மலம் வழியாகவும், சனி மூலமாகவும் வெளிவருகின்றது. எனவே இவற்றை அந்த நிலப் பகுதிகள் பெறும் போது அந்தந்த நில தோஷங்களாக இவை மாறுகின்றன. எச்சில் தோஷங்களாக இவை மாறுகின்றன.
எச்சில் துப்புவதால் கூட பல தீய கர்மவினைகள் சேருவது உண்டு. மேலும் எலும்பு, தோல், பாம்புச் சட்டை, பல்லிச் சட்டை, கோட்டான் ஜல்லி, குத்துப் பட்டப் பூச்சிகள் போன்றவை வெளிவரும் போதும் அவை பலவிதமான தோஷங்களைக் குறிக்கின்றன. ஆமாம் இத்தகைய தோஷங்கள் இருக்கும் போது, இவற்றை நாம் அறியாமலிருக்கும் போது, எப்படித்தான் இவற்றிற்குப் பிராயச்சித்தத்தைத் தேடுவது? இதற்காகத்தான் நம் மூதாதையர்கள் பலவிதமான விசேஷ தினங்களைப் பண்டிகைகளை அந்தந்த தினத்திற்கு உரியதாகப் பஞ்சாங்கத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.  இவற்றை ஆழ்ந்த நம்பிக்கையுடன் நாம் முறையாக கடைப்பிடித்தால் எத்தனையோ தோஷங்களை எளிதில் நீக்கி விடலாம். இவ்வாறாக பெறுதற்கரிய ஸ்ரீவாஸ்து நேரத்தில் சித்தர்கள் அருளிய வழிமுறைகளிலே நீங்கள் ஸ்ரீவாஸ்து பூஜையை எளிமையுடன் கடைப்பிடிப்பீர்களேயானால் உங்களையும் அறியாமல் நீங்கள் வசிக்கின்ற இல்லங்களில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், திரண்டுள்ள நில தோஷங்களை மிக எளிதில் நீக்கிவிடலாம். எனவே ஸ்ரீவாஸ்து நாள் கிடைத்தற்கரிய நாளே! பேய்ச்சுருட்டி, நிலவடம், அங்கண்ண முடுக்கு, அலங்கரிச்சான் போன்ற நில தோஷங்களை நீக்குவது மிகவும் கடினமானதாகும். தற்கொலை நிகழ்ந்த இடம், உடல் புதைக்கப்பட்ட இடம், ஆடு, மாடு, கோழி போன்றவை வெட்டப்பட்ட இடம், கொலை நிகழ்ந்த இடம், விபத்து நடந்த ஸ்தலம் போன்றவை இத்தகைய கடுமையான நில தோஷங்களில் சேர்ந்து விடுகின்றன. மேலும் இத்தகைய தோஷங்களை உருவாக்குகின்ற ஐங்குறு நூற்றாதி நில தோஷ யட்சணிகள் உள்ளார்கள். இவர்களெல்லாம் நில தேவதைகள் ஆவார்கள். நில தேவதைகளில், துர்தேவதைகளும் நல்ல தேவதைகளும் உண்டு.
பலவிதமான பாவங்களை பூமியில் நிகழ்த்தும் போது, நல்ல தேவதைகள் கூட கோபங்கொண்டு சாபங்களை அளித்து விடுகின்றன மேலும், சிகரெட் பிடித்து அதைப் பூமியில் வைத்துக் காலால் மிதித்து இதனால் ஏற்படும் அக்னி தோஷம், கஞ்சா புகையிலையை பூமியில் புதைத்தல், துப்புதல் போன்று பலவிதமான நிலவழிப் பாவங்களைக் கண்டு கோபங் கொண்டு ஐங்குறு நூற்றாதி யட்சணிகள் பலவிதமான சாபங்களை நிலத்திற்குத் தோஷமாகச் சேர்த்து விடுகின்றனர். மேலும் இத்தகைய நிலதோஷங்கள் மிகுந்திருக்கின்ற நிலங்களில்தான், பயிர்களுக்கு நிலப்புழு, சுருள்காரி, பயிர்ப்பூச்சி, அரிப்பு என்ற பயிர்க் குறைவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த தோஷ்ங்களால் நில அளவு பற்றிய தகராறுகளும் ஏற்பட்டு விவசாயமே பாதிக்கப்பட்டு, எத்தனையோ குடும்பங்கள் கூட பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகின்றன.
பிரமாதி வருடத்தில் தை மாதத்தில் வருடத்தில் வருகின்ற ஸ்ரீவாஸ்து நேரத்திற்குப் பலவிதமான நிலதோஷங்களை நீக்குகின்ற விசேஷமான அனுக்ரஹ சக்திகள் உண்டு. எனவே இந்த நாளில் நிலைப்படி, தலைப்படி, வாசற்படி போன்றவற்றிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அரிசி மாக்கோலமிட்டு ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்திக்கான காயத்ரி மந்திரத்தை ஓதியவாறே, ஸ்ரீவாஸ்து வழிபாடு, ஸ்ரீவாஸ்து ஹோமத்தை நிகழ்த்தினால் குறிப்பிட்ட பல நில தோஷங்கள் நிவர்த்தி பெறுகின்றன. இந்நாளில் பசுவின் குளம்பு பட்ட மண் துகளை எடுத்து, பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுகோமியம், பசுஞ்சாணி ஆகிய ஐந்தும் சேர்ந்த பஞ்சகவ்யத்தில் வீடு, நிலம், அலுவலகம், தொழிற்சாலைகளில் தெளித்தல் வேண்டும். இதற்கு “நிலைப்படி மண் பூஜை” என்று பெயர். காரட் துருவலும், சர்க்கரையும்  சேர்ந்த உணவை நிலத்தின் மேற்குப் பகுதியில் வைத்து ஸ்ரீவாஸ்து தேவமூர்த்திக்குப் படைத்து அன்னதானமிட்டும், எறும்புகளுக்கு உணவாகவும் இடுதலால் பட்ட அட்சரப் பரிகார முறையாக விவசாய நிலங்களிலும், அலுவலகங்களிலும், இல்லங்களிலும் ஏற்பட்டுள்ள குத்து வர தோஷம் நிவர்த்தி பெறுகின்றது.

குத்து வர தோஷம் என்றால் பலவிதமான பகைமைகளுக்கிடையே வாங்கிய இடத்திலும், எங்கெங்கோ கடனை வாங்கிக் கடனைக் கட்ட முடியாமல் திணறி வாங்கிய இடங்களிலும், புதிய மரப் பொருள்களை வாங்க வசதியின்றி தோஷங்கள் நிறைந்த மரம், செங்கல், மண், கல் , சிமெண்ட் போன்றவற்றால் கட்டப்பட்ட பலவிதமான தோஷங்களுக்கும் தக்க பிராயச்சித்தம் கிட்டும்.
மூன்றாவது பூஜையாக இன்று எள்ளும், வெல்லமும் சேர்ந்த கலவையை நிலத்தின் தெற்குப் பகுதியில் வைத்து அந்தராட்சன் ஈசல் என்று சொல்லப்படுகின்ற யட்சணிக்குப் ப்ரீதியாகப் பலியிடுதல் வேண்டும். பலியிடுதல் என்றால் மிருகங்களைப் பலியிடுதல் என்று பொருளல்ல. ஒரு மாக்கல்லில் எள்ளும், வெல்லமும் கலந்த கலவையை வைத்து பலிபீடமாக பாவித்து கொண்டு அந்தரட்சன் ஈசல் என்ற யட்சணியின் பெயரைச் சொல்லி, “அம்மா, தாயே, ஈஸ்வரியே, தேவதையே என்னுடைய நிலத்தில் உள்ள குத்து வர தோஷங்களுக்கு நிவர்த்தியை எங்களுக்குப் பெற்றுத் தருமாறு, பித்ருக்களுக்குப் ப்ரீதியான எள் வெல்லம் கலந்த அன்னத்தின் சாட்சியாய் வேண்டுகின்றோம்”, என்று பிரார்த்தித்துப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் வேண்டும். நான்காவது பூஜையாக இன்று நிலத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு பசுமாடுகளைக் கன்றுகளுடன் நிற்க வைத்து தயிரும், வெங்காயமும் கலந்த கலவையை ஸ்வாமிக்குப் படைத்து பசுமாட்டிற்கு உணவாக அளித்து ஏழைகளுக்கும் தானம் அளித்தலால் கம்பிச் சருகு தோஷம் என்னும் ஒரு விதமான நிலதோஷம் நீங்குகின்றது.
“கம்பிச் சருகு தோஷம்” என்றால் நம் வீட்டிற்கு வருகின்ற, நம் வீட்டில், அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களில் படிந்துள்ள தோஷங்களைக் குறிக்கும். இவை நம் இல்லத்திற்கு வந்து அவை நம்மைத் தாக்கக்கூடும். ஏனென்றால் இரும்போ, அலுமினியமோ, பூமிக்கு அடியிலிருந்து, வெட்டி எடுக்கப்படும் போது எத்தனையோ கோடி ஜீவன்கள் மரணமடைவதால் அப்போது எழுகின்ற கடுந் தீயால் சுற்றிலும் இருக்கின்ற கோடானுகோடி உயிரினங்களுக்கும் துன்பங்கள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாது ஆங்காங்கே புதைக்கப்பட்டுள்ள பலவிதமான பூத உடல்களுக்கும் இவை நில நடுக்கத்தைக் கொடுத்து பிரேத சாபத்தைப் பெற்றுத் தருகின்றன.
எனவே இந்தக் கம்பிச் சருகு தோஷம் நீங்குவதற்கு இந்த நான்காவது பூஜை பெரிதும் உதவுகின்றது. நில தோஷங்களுக்குப் ப்ரீதியாக அமைவது தான் வரும் பிரமாதி ஆண்டு தை மாதம் அமைகின்ற வாஸ்து பூஜையாகும். எனவே மேற்குறித்த வகையில் இந்த வாஸ்து பூஜையைக் கொண்டாடி நீங்களே உங்களுடைய இல்லங்களில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் உள்ள நில தோஷங்களுக்கு நிவர்த்தியைத் தேடிக் கொள்வீர்களாக! மற்றவர்களுக்கும் இதன் மஹிமையைப் புலப்படுத்தி ஸ்ரீவாஸ்து நாள் பூஜையைப் பலரும் கொண்டாடும்படி செய்திடுங்கள்!

ஸ்ரீஉய்யவந்த அம்மன்

உய்யவந்த அம்பாள் மகிமை

“வா” என்றழைத்தால் ஓடோடி வந்துதவும் உய்யவந்த அம்பாள் மகிமை. காரைக்குடி புதுவயல் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஉய்ய வந்த அம்பிகையின் மகிமையைப் பற்றி நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் சித்புருஷர்கள் அருளிய வகையிலே எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா? கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீஉய்ய வந்த அம்மனைத் தரிசனம் செய்கின்ற முறையையும் விளக்கி வருகின்றோம்.

ஸ்ரீஉய்யவந்த அம்பிகையைத் தொழுத பின்னர் அருகில் பேராலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீஉமையவள் சமேத ஸ்ரீவீரசேகர ஸ்வாமியையும் தரிசித்தாக வேண்டும் என்பது முக்கியமானதாகும். ஸ்ரீராமனுக்கு அருள் வீரம்தனை ஊட்டியளித்த, உத்தம மூர்த்தியாக அருள்பாலிக்கின்றவர் ஸ்ரீவீரசேகர மூர்த்தியானவர் பெரும் ஆலயத்தில் சிறுமூர்த்தியாய் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். ஸ்ரீஉமையவளுக்கான வருடாந்தர உற்சவம்தனை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்ற நாட்டாண்மையார்களும், சுற்றுப்புற கிராமவாசிகளும், நகரத்தார்களும் மிகவும் போற்றி வழிபடுகின்ற உத்தம அம்பிகையே ஸ்ரீஉமையவள் ஆவாள். ஸ்ரீஉய்யவந்த அம்பிகையின் பரிபூர்ண தரிசனப் பலன்களைப் பெற வேண்டுமெனில் ஸ்ரீஉமையவள் அம்பிகையையும் தரிசித்தாக வேண்டும். பொதுவாக, உடல் பெருத்து, நீர்க் கோளாறுகளினால் அவதியுறுவோர் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கு உரித்தான, செவ்வாய்க் கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6-7, மாலை 1-2) ஸ்ரீஉய்யவந்த அம்பிகையை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து ஸ்ரீவீரசேகர ஸ்வாமி ஆலயத்தை, நடைச் சிரமம் பாராது ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தை அடிப்பிரதட்சிணமாக வந்து சுரைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய் ஆகிய மூன்று வகை காய்கறிகள் கலந்த உணவினை ஸ்வாமிக்குப் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்தல் வேண்டும். குறிப்பாக சுரைக்காய்க் கறிச்சோறு தானமானது நீர் சம்மந்தமான வியாதிகளுக்கான நிவாரணத்தைத் தருகின்றது.
 “நீர் பூத்த சுரையால் பசியாற்றல் நீர்த்தினைப் பிணிபோக்கும் நிலம் நடக்கும்”, என்ற அகஸ்திய கிரந்த வாக்கியத்தின்படி சுரைக்காய் சோறு தானமானது நீர் சம்பந்தமான வியாதிகளுக்கு நிவாரணம் தந்து நீர் வீக்கத்தையும் குறைத்து நல்ல முறையில் நிலத்தில் நடப்பதற்கு அருள்பாலிக்கின்றது. எந்த சுரைக்காயானது நீர்ச்சத்தைக் கொண்டுள்ளதோ அந்த சுரைக்காய்ச் சோறு (சோற்றுடன் சுரைக்காய்கறி அளித்தல்) தானமே நீர்சம்பந்தமான வியாதிகளைத் தீர்க்கின்றதென்றால் என்னே விந்தையிது! இதே போல் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டோர் தங்களால் உண்ண இயலாத சர்க்கரை கலந்த இனிப்புகளை தானமாக அளித்தால் எந்த சர்க்கரையை தன்னால் அனுபவிக்க முடியவில்லையோ அதை பிறர் சுவைத்து ஆனந்திக்கும் போது ஏற்படுகின்ற புண்ணிய சக்தியானது சர்க்கரை வியாதியின் கடுமையினை தணிக்கும். இதுவும் தெய்வீக விந்தை தானே! முற்காலத்தில் தெய்வீகத்தில் திளைத்த ஏழு தலைப் பெரும் வேந்தர்கள் இவ்வம்பிகையை வழிபட்டு வந்தமையால் இதே பாரம்பரிய வழிபாடு இன்றும் தொடர்வது பேரானந்தத்திற்கு உரியதாகும்.
முதல் பெரும் வேந்தர், நாட்டாண்மை மரபை சார்ந்தோர் ஞாயிற்றுக்கிழமையன்று 108 வெற்றிலைகளில் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுதல் வேண்டும். சாதி, இன பேதமின்றி  108 சுமங்கலி பெண்களுக்கு தான, தர்மங்கள் செய்வது சிறப்புடையதாகும். இதனால் நற்குலம் விருத்தியாகும்.
இரண்டாம் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர் திங்கட்கிழமையன்று மாலை நேரத்தில் அம்பிகைக்கு வெண்பட்டு சார்த்தி, நெய் தீபத்தால் வழிபட்டு பால் தயிர், கலந்த அமுதத்தைப் படைத்து அன்னதானம் செய்து வருதலால் குடும்பத்தின் உட்பூசல்கள் தீர்ந்து சமுதாய ஒற்றுமை பெருகும்.
மூன்றாம் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர் செவ்வாய்க் கிழமையன்று சிவப்பு அரளிப் பூக்களால் அம்பிகையை அலங்கரித்துத் தேனும் தினை மாவும் படைத்து தானம் அளித்துவர கிராமத்தில் ஏற்படும் பிணிகளும், பஞ்சமும் தீர்ந்து நன்முறையில் கிராம ஒற்றுமை பெருகி வளம் பெருகும்.
நான்காம் நாட்டாண்மைப் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர் புதன்கிழமையன்று அம்பிகைக்குப் பச்சை நிற வஸ்திரம் சார்த்தி கீரை வகை உணவு வகைகளைப் படைத்து அன்னதானம் செய்து வருதலால் தரித்திர நிலைமையும், பணப்பற்றாக்குறையும் மறைந்து நன்முறையில் செல்வ வளம் பெருகும்.
ஐந்தாம் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர் வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி எலுமிச்சை அன்னம் படைத்து 108 எலுமிச்சைபழத் தோல் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வந்திட குழந்தைகளுக்கான பிணிகள் நீங்கி, மனத் துயரங்களும் நீங்கும்.
ஆறாம் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர் வெள்ளிக் கிழமையன்று ஸ்வாமிக்கும், அம்பிகைக்கும் பட்டு வஸ்திரம் சார்த்திப் பால் குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்து கோயிலைச் சுற்றி வலம் கையில் நீர்க் குடக் கலசம் ஏற்றி வந்து சிவபுராணம் ஓதி அம்பிகையை வணங்கிட, இளைஞர்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் நன்முறையிலே திருமண வாழ்வு அமைந்து நல்லொழுக்கமும், ஒற்றுமை மனப்பான்மையும் பெருகும். பொதுவாகத் திருமணத் தடங்கல்களுக்கு நிவர்த்தியாக இந்த வெள்ளிக்கிழமை பூஜை அமைகிறது. 
சனிக்கிழமையன்று ஏழாம் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர், 36 தாமரை இலைகளில் சர்க்கரைப் பொங்கலைப் படைத்து ஸ்வாமிக்கு நெய்தீபம் ஏற்றி, ஆலயத்திற்குள் அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபடுதல் வேண்டும். இதனால் பொதுவாக கிராமத்தில் தடைப்பட்டுள்ள நற்காரியங்களில் உள்ள தடங்கல்கள் நீங்கி, கிராமங்கள் சுபிட்சம் பெறும். குறிப்பாக குடிநீர் வசதி, சாலை வசதி, கிணறு வசதி, பள்ளி வசதி போன்ற சமுதாய வசதியள் குறைவுபட்டிருப்பின் அவை நிறைவு பெற்று நல்முறையிலே மக்களின் நல்வாழ்வு அமைந்திட இது பெரிதும் உதவும். இந்த ஏழு விதமான வார பூஜைகள் மிகச் சிறந்த சமுதாய பூஜைகளாக அமைந்து அபூர்வமான இறை சமுதாயத் திருப்பணிகளாக அமைகின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.
திருவிழா தினத்தன்று மட்டும் குழுமி ஸ்வாமிக்கு அருட்காரியங்களை நிறைவேற்றுவது என்றில்லாமல், தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் கோயிலுக்கான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவது தான் பெரும் வேந்தர் மரபைச் சார்ந்தோர்க்குச் சிறப்புடையதாக அமைகின்றது. மேற்கண்ட இறைத் திருப்பணிகளை அனைவருமே கடைபிடித்து அந்தந்த நற்காரிய சித்திகளைப் பெற்றிடலாம். மீண்டும் வலியுறுத்துகின்றோம் முதலில் உய்ய வந்த அம்பிகையைத் தரிசித்து அதன் பின் ஸ்ரீஉமையாம்பிகையைத் தரிசித்தால் தான் பரிபூரணமானப் பலன்களை ஒருவர் பெற்றிட முடியும்!

மார்கழி மகிமை

புனிதமிகு மார்கழி மாத பூஜை

தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களும், தேவர்களுக்குரித்தான பகல் பொழுதாகவும், நமக்கு உத்தராயணப் புண்ய காலமாகவும் அமைகின்றது. இதே போன்று ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் தேவர்களுக்கான இரவுப் பொழுதாகவும் நமக்கு தக்ஷிணாயனப் புண்ய காலமாகவும் விளங்குகின்றது. அதாவது, நம்முடைய மனிதக் கணக்கில் ஆறுமாத காலமானது தேவர்கள் கணக்கில் பன்னிரண்டு மணி நேர ஒரு பகல் பொழுதாகும். ஆடி மார்கழி ஆறு மாதங்களும் அவர்களுக்கு 12 மணி நேர இரவாகும். இவ்வாறாக தேவர்கள் கால கணிதத்தைப் பார்க்கும் பொழுது நமக்கு ஒரு வருடம் என்பது அவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகவும் இவ்வகையில் மார்கழி மாதமானது அவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக  (தேவ கணக்கில் விடியற்காலை 3.00 மணி முதல் 5.30 மணிவரை) அமைகின்றதல்லவா! எவ்வாறு நமக்கு பிரம்ம முகூர்த்த நேரம் விசேஷமானதாக விளங்குகின்றதோ அதே போல தேவர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்த நேரமாக விளங்குகின்ற  நமக்குரிய மார்கழி மாதக் காலமானது விடியற்காலைப் பூஜைக்கு மிகவும் புனிதமானதாகும்.
Ozone  என்று விஞ்ஞானத்திலே சொல்லப்படுகின்ற மிகவும் சக்தி வாய்ந்த வாயு பரிமாணம் நிறைந்த காலமாகவும் மார்கழி மாதம் விளங்குகின்றது. மார்கழி மாதத்தில் தான் வானத்தில் விஞ்ஞானப் பூர்வ Ozone ஆன தெய்வீகமய ரஞ்சித கிரணங்களும் நிறைகின்ற நாட்களாதலின் மார்கழி மாத 30 நாட்களிலுமே விடியற்காலையில் எழுந்து நீராடி, பூஜைகளைச் செய்வது நிறைவேற்றுவது உடலுக்கும், உள்ளத்திற்கும், ஆரோக்யத்தையும், தெய்வீக ஆக்கத்தையும், புனிதசக்தியையும், பரிசுத்தத்தையும், நிச்சயமாகத் தருவதாகும். மார்கழி மாதம் ஆயிற்றே, குளிராக இருக்குமே என்றெல்லாம் எண்ணாதீர்கள். மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, நீராட , பூஜை செய்து அதனுடைய தெய்வீகப் புத்துணர்ச்சியை உணர்ந்தால் தானே நீங்களும் அறிந்து அனுபவப் படிப்பாக பிறருக்கும் உணர்த்த முடியும். குளிர், குளிர் என்றால் என்றுதான் குளிர் விடும்?
பக்தி நிலையை மேம்படுத்துவதற்கும், விருத்தி செய்வது, தெய்வீக நிலையை உணர்வதற்குமான கிணற்று நீரில் மார்கழி மாதத்தில் நீராடுதல் என்பது கொடுத்த வைத்த சிலருக்குத்தான் கிட்டும். உங்களுடைய வாழ்க்கையிலே இதுவரையும் நிறைவேற்ற முடியாத நல்லவிதமான கோரிக்கை இருக்கிறதென்றால் அதனை நிறைவேற்றுவதற்காக பிரமாதி வருட மார்கழியின் முப்பது நாட்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 3.00 மணி முதல் 5.30 வரை) எழுந்து, நீராடி, பூஜை செய்து  பிரமாதி மார்கழிக்கான குறித்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஓதி மார்கழி மாதத்திற்குரிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வாருங்கள்! மார்கழி மாத பூஜை நல்ல வரப் பிரசாதி!
ஸ்ரீகிருஷ்ணனால் எதைத்தான் நமக்காக சாதிக்க முடியாது? ஆனால் உங்களுடைய பிரார்த்தனை சுயநலமற்றதாக நன்முறையில் இருக்கட்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிட்ட வேண்டும் என்று அதர்மமாக ஏங்கி விடாதீர்கள். நியாயமானதாக, தார்மீகமானதாக, உங்களுடைய கோரிக்கை இருக்க வேண்டும். இத்தகையவற்றை நிறைவேற்ற பிரமாதி வருட மார்கழி மாத தனுர்பூஜை மிகவும் உதவுகின்றது.
மார்கழி நீராடல்
முதல் நாள் இரவிலேயே ஸ்ரீகிருஷ்ணனுக்குப் ப்ரீதியான மூங்கில் மர இலைகளை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மார்கழி மாத விடியற்காலை நீராடலை மேற்கொண்டு பயன் பெறுங்கள். மூலிகை இலைகளுக்கு காரியசித்தியைத் தரவல்ல அற்புத தெய்வீக சக்திஉண்டு. அதிலும், இந்த பிரமாதி வருடக் காலத்தில் மார்கழியில் மூலிகை இலை நீராடல் மிகவும் சிறப்புடையதாகும். அதற்காக, மூலிகை மரத்தையே வெட்டி சாய்த்துக் கொண்டு வந்துவிடாதீர்கள்! தாவர விருத்தியை மேற்கொள்வது மனிதக் குலத்தின் பண்பாடாகும்., கடமையும் கூட.
ஒரு முறை வில்வ தளங்களைச் சுமந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தபோது, அக்கம்பக்கத்திலுள்ள அனைத்து வில்வ மரங்களையும் ஒட்ட வெட்டிப் பறித்து, வில்வத்தையே விலைக்கு விற்கின்ற நிலையை கலியுகத்தில் நாம் கண்ணால் பார்த்து வேதனை கொண்டோம். ஏனென்றால் இறைவனுக்குப் பயன் படுத்த வேண்டிய வில்வம், தாமரை, துளசி போன்றவற்றை ஒரு போதும் விற்கக்கூடாது.
பூஜைக்காக வில்வ தளங்களை தானமாகக் கொடுத்தால் எவ்வளவோ பலாபலன்கள் உண்டு. மேலும், பூஜை நோக்கிற்காக இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் வில்வதளங்களை, துளசியை ஒரு போதும் பறித்தல் கூடாது. பூஜைக்காகத்தான் வில்வமோ, துளசியோ பறிக்கப் பட வேண்டுமே தவிர, வியாபாரத்திற்காக அல்ல! தக்க மூலிகை பூஜைகளுடன் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்திடலாம். ஆனால் துளசி, வில்வம் கலந்த மருந்தினை ஒரு போதும் வியாபாரமாக்கக் கூடாது. இலவசமாகவே அளிக்க வேண்டும். வில்வம், துளசி போன்ற புனித தளங்களை காசுக்காக விற்றால் கடும் சாபங்கள் குடும்பத்திற்கு ஏற்படும்.
மார்கழியில் ஸ்ரீ ஆருத்ரா தரிசனம்
சர்வேஸ்வரனுக்கு ருத்ரன் என்ற பெயரும் உண்டு அல்லவா! ருத்ர வடிவில் அக்னி அம்சங்களைத் தாங்கி தெய்வீகத் தன்மையின் சிறப்பை உணர்த்துபவர் தான் ஸ்ரீருத்ர மூர்த்தி ஆவார். ருத்ரம், சமகம் போன்ற பல வேதப் பகுதிகள் உண்டு. இதிலே ஸ்ரீருத்ர மந்திர வேத மந்திரங்களை முறையாக ஓதி வருவீர்களேயானால் ருத்ராக்னி என்ற அபூர்வமான தெய்வீக வயிற்றுப் பசி ஏற்படுவதை நாம் பரிபூர்ணமாக இன்றும் உணரலாம். ஏனென்றால், அக்னி சக்தியை உடைய ருத்ர மூர்த்தியின் ஸ்ரீருத்ர மந்திரங்களை ஓதும் போது ஜடவாக்னி போன்ற புனிதமான வயிற்றுப் பசி அக்னி சக்தியாக உருவாகின்றது. உடற்பசி என்றால் நம் உடலையே ஹோம குண்டமாகக் கொண்டு அதில் நம் பசித் தீயை அக்னியாக வளர்த்து, நாம் உண்ணுகின்ற உணவையே அதற்குரித்தான ஆஹுதியாக அளித்து வழிபடுகின்ற அற்புதமான வழிபாட்டு முறையாம். ஏதோ பசித்தது, வேக வேகமாகத் தின்றோம். விழுங்கினோம், உண்டோம் என்று இயந்திர கதியான வாழ்க்கையை மேற்கொள்ளாதீர்கள்.
நீங்கள் உண்பது புனித உடலுக்கான ஒரு ஹோம வழிபாடே என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.  ஸ்ரீஈஸ்வரனுடைய ருத்ர சக்தியின் வெளிப்பாடே ஆருத்ரா தரிசனத்தின் போது நீங்கள் பெறுகின்ற பரிபூர்ணமான அம்சமாகும். அக்னி சம்பந்தமுடைய அவதாரமாதலால் ருத்ர தரிசனமோ, ருத்ர சக்தியோ, நம் உடலுக்கும், மனதிற்கும், உள்ளத்திற்கும் அப்பாற்பட்டதாகவே விளங்குகின்றது. ஆனால் ஆருத்ரா தரிசனத்தன்று இறைவனே தன்னுடைய அக்னி சக்தியை நம்முடைய மனதிற்கும், உள்ளத்திற்கும் உட்பட்டவராக உணரும்படியான தன்மையில் தன்னை நமக்காகவே எளிமையாக ஆக்கிக் கொண்டு ஆருத்ரா மூர்த்தியாக தரிசனம் தருகின்றார் என்பதை உணர்க!
ஏனிந்த ஆருத்ரா தரிசனம்?
எவ்வளவோ வீதிகளில் குப்பை, கூளங்களைப் பார்க்கின்றோம். நெருப்பைக் கிளப்பி அதில் குப்பைக் கூளங்களை பஸ்மம் செய்து குப்பையாகிய அசுத்தங்களைப் போக்குகின்றார்கள். அதைப் போலவே இறைவன் அளித்த நம் உடலிலும், உள்ளத்திலு, முறையற்ற காம உணர்ச்சிகள், தீய சக்திகள், தீய எண்ணங்கள், வன்முறை, பகைமை, குரோதம், விரோதம் இப்படியாக அப்பப்பா எத்தனை எத்தனை குப்பைக் கூள தீய மன சக்திகள் நிறைந்திருக்கின்றன. இறைவன் நம்மை தெய்வீகமான குழந்தையாய்த்தான் இவ்வுலகிற்கு அனுப்பினான். நாம்தான் குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனாக வளரும் போது மேற்கண்ட தீயசக்திகளை எண்ணங்களை, குப்பைக் கூளங்களைச் சேர்த்துக் கொண்டு அழுக்குடன் விளங்குகின்றோம்.
இந்த தீய எண்ணங்களுடன் வில்வம், துளசி போன்ற புனித தளங்களை விலைக்கு விற்றால் கடும் சாபங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அல்லவா! இதை எப்படிப் போக்குவது? அவற்றை பஸ்பம் செய்வதற்கான பர்வத ருத்ர அக்னியை எழுப்ப வேண்டும். அந்த புனிதமான நெருப்பு எங்கு இருக்கின்றது? அதனைத் தான் ருத்ர மூர்த்தியானவர் ஆருத்ரா தரிசனத்தின் மூலம் நமக்கு மார்கழி மாதத்தில் எடுத்துரைத்து நம்முடைய மனக் குப்பைகளை பஸ்மம் செய்யும் நல்வழி முறைகளை தரிசனப் பலன்களாக மார்கழி விரதாதிகள் மூலமாகத் தருகின்றார்!
அடியார் : சற்குரு தேவா! ஆருத்ரா தரிசனத்திற்குரிய விரத முறையை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?
சற்குரு : தெய்வீகத்தில் ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தை அவற்றைக் கடைபிடிப்பதில் காட்டுவதில்லை மக்கள் கலியுகத்தில். தற்போது ஒரு வேளை விரதம் என்றால் முகத்தைச் சுளிப்பவர்கள் தான் ஏராளம்! ஆனால் சித்புருஷர்களோ பிரமாதி வருட ஆருத்ரா தரிசனத்திற்கான கடினமான விரத முறையை அளிக்கக் காத்திருக்கின்றார்கள். சொன்னால் மக்கள் செய்வார்களா! அல்லது கேட்டுக் கொண்டு வழக்கம் போல் விட்டுவிடுவார்களா! கஷ்டப் படாமல், உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும், அருள் பெற வேண்டும் என்பதுதானே பெரும்பாலோருடைய மனோ நிலை! தெய்வீகத்திலும் உழைத்தால்தான் புண்ணிய சக்தியை சம்பாதிக்க முடியும்! நீங்கள் அனுபவிக்கின்ற வசதிகள் உணவு, உடை, பதவி யாவுமே புண்ய சக்தியிலிருந்து பெறப்பட்டவைதாம். விரத உழைப்புதான் நல்ல புண்ணியத்தைச் சம்பாதித்துத் தான, தர்மத்திற்கான உழைப்போ பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான அற்புதமான நிரந்தரமான புண்ணிய சக்தியைத் தரும்.

அமுத தாரைகள்

1. மண் தாலி மகிமை
பொன் தாலியை விட மண்தாலிக்கு தெய்வீக சக்தியும் மகத்துவமும் அதிகமாகும். மண்தாலியில் பஞ்சபூத சக்திகள் மிகுந்திருப்பதால் மண்தாலி பூஜைக்கு சுமங்கலித்வ சக்தியைத் தரும் தன்மைகள் மிகுதியாம். மண்தாலிக்கு பொன் தாலியை விட மந்திர சக்திகளையும், பீஜாட்சர சக்திகளையும் ஈர்த்து நிலைத்து வைக்கின்ற சக்தி நிரம்ப உண்டு.  நம் மூதாதையர்கள் கல் தோன்றா, மண் தோன்றா காலத்தில் உலோகங்கள் பற்றி அறியாத காலத்தில் (சுட்ட) மண்ணால் ஆகிய தாலியையே அணிந்தனர் என்பதை அறிந்திருப்பீர்கள். மண்ணால் ஆனதுதானே என சாதாரணமாகக் கருதாதீர்கள். ஒரு பொன் மாங்கல்யத்தை விட எத்துணையோ கோடி புண்ய சக்தியைக் கொண்டதே மண் தாலியாகும். ஒரு பொன்னாலான  குத்து விளக்கை விட, மண்ணாலாகிய அகல் தீபத்திற்கு, பெரும் மகத்துவம் உண்டு. என்னதான் கேஸ் வைத்துச் சமைத்தாலும், மண் அடுப்பில் சமைக்கப்படும் உணவிற்குத் தான் ஆரோக்கியத்தையும், தீர்க ஆயுளையும் தருகின்ற தெய்வீக சக்தி நிரம்ப உண்டு. அதனால் தான் இன்றும் பல ஆலயங்களில் மண் அடுப்பு வைத்துதான், ஆண்டவனுக்குரிய பிரசாதம் சமைக்கின்றார்கள். வெள்ளி தோறும் மண்தாலிக்கு பூஜை செய்து வந்தால் கணவனுடைய வியாதிகள் தீரும்.

திருவெள்ளறை பெருமாள் தலம்

2. மகத்துவம் நிறைந்த மடப்பள்ளித் திருப்பணி
திருச்சி அருகே திருவெள்ளறையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் மண் அடுப்பின் தரிசனத்திற்கே எத்துணையோ கொடிய பாவங்களை நீக்க வல்ல சக்தி உண்டு என்பதை உணருங்கள். எனவே தான் இந்த ஆலயப் பிரசாதத்திற்கு பல்லாண்டு பிணிகளை தீர்க்கின்ற பெரும் தெய்வீக சக்தியைக் கொண்டதாகும். பெருமாளின் திருவருளால், சில ஆண்டுகளுக்கு முன், திருவெள்ளறை ஆலயத்தின் மடப்பள்ளியை சுத்திகரிக்கும் பெரும்பேறு நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய அடியார்களுக்கு உழவாரத் திருப்பணியாகக் கிட்டியது. நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் மேற்பார்வையில் கூடிய திருவெள்ளறைப் பெருமாளின் ஆலய மடப் பள்ளி உழவாரப்பணியானது இனி எத்துணை கோடி ஜென்ம எடுத்தாலும் கிட்டாது. குருவருளாலும், திருவருளாலும் இவ்வரிய மடப்பள்ளி அடுப்படியை சுத்தி செய்கின்ற மாபெரும் இறைப்பணி ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாளின் அருளாலேயே பெரும் பேறாகக் கிட்டியது என உண்ணி உளம் பூரித்து உங்களுக்கும் எடுத்துரைக்கிறோம். எனவே ஆலயத்திருப்பணிகளில் மடப்பள்ளியை சுத்திச் செய்கின்ற நல்வாய்ப்பு கிட்டினால் நழுவ விடாதீர்கள்!

முஞ்சிப்புல்

3. தினசரி தர்ப்பண பூஜை தேவையே!
தற்போது மாதந்தோறும் அமாவாசை அன்று மட்டுமே தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்கின்ற வழக்கம் நிலவி வருகிறது. உண்மையில் நாம் தினந்தோறும் தர்ப்பணம் செய்தாக வேண்டும். மேலும் எவரேனும் குடும்பத்தில் இறந்தால் அவர் இறந்த நாள் முதலாகவே தர்ப்பணம் அளித்தாக வேண்டும். ஒரு வருடம் கழித்துத்தான் தர்பணத்தைத் துவங்க வேண்டும் என்று பலரும் தற்போது தவறாக எண்ணுகின்றார்கள். இறப்புத் தீட்டு ஒரு வருடத்திற்கு கோயில், குளம் தீர்த்தத்திற்குச் செல்லாமல் வாழ்க்கையை பலரும் வீணாக்குகின்றார்கள். ஏன் இந்த தவறான அணுகுமுறை? குடும்பத்தில் எவர் இறந்தாலும் அக்குடும்பத்தினர் தீட்டு என்ற பெயரில் பல நல்ல காரியங்களுக்குத் தடைவிதிக்காமல் தாராளமாக அவர்கள் எந்தக் கோவிலுக்கும், மலைத் தலத்திற்கும் சென்று வழிபடலாம். பிரார்த்தனைகளையும் நிறைவேற்றிடலாம். கோலமிடுதல், தீபம் ஏற்றுதல், காது குத்துதல், தலைமுடி இறக்குதல் போன்றவற்றிற்கும் இறப்பு தீட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இவற்றையெல்லாம் தாராளமாக கடைபிடித்திடலாம். துக்கம் என்ற பெயரில் பலவிதமான நற்காரியங்களுக்குத் தடை போடுகின்றவர்கள் உண்மையிலேயே துக்கம் என்றால் மூன்று வேளையும் சாப்பிடாமல் அல்லவா இருக்க வேண்டும்! சாப்பாட்டில் எக்குறையும் வைப்பது கிடையாதே! இறப்புத் தீட்டின் போதும் விட்டுவிடாமல் சந்தியாவந்தன வழிபாட்டைச் செய்தல் வேண்டும் என்ற நியதி இருக்கும் போது யாவருமே எவ்வித அச்சமுமின்றி நற்காரியங்களாய் இறைவழிபாடுகளை இறப்புத் தீட்டின் போது நிச்சயமாக நிறைவேற்றிடலாம்.

பஞ்ச பைரவ மூர்த்திகள்
ஆவூர் சிவத்தலம்

4. தரித்திரம் நீங்க : பணக் கஷ்டத்தால் தரித்திர நிலையில் வாடுவோர், திருத்துறைப்பூண்டி கீவளூர் அருகே உள்ள தேவூர் சிவாலயத்தில் சதுர ஆவுடையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு வெள்ளிக் கிழமை தோறும் சுக்கிர ஹோரை (காலை 6-7, மதியம் 1-2) நேரத்தில் முழுத் தாமரை மலர்களால் அலங்கரித்து அடிப்பிரதட்சிணம் செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்துத் தானம் செய்து வந்தால் பணக் கஷ்டத்திலிருந்து  தக்க நிவாரணம் பெறுவர். குபேரப் பெருமானே வழி பட்டு சங்க பதும நிதிகளைப் பெற்ற தலம். சதுர ஆவுடையாருக்கு திருச்செல்வம் தரும் அருட்செல்வப் பாங்கு மிகுதியாம்.

5. முஞ்சிப்புல் மஹிமை
முஞ்சிப்புல் என்ற ஓர் அற்புதமான மூலிகைக் கொடி உண்டு. ஸ்ரீவாமனப் பெருமாளின் பூணூல் அணியும் வைபவத்தின் போது அவருடைய இடையில் பிரகாசித்த முஞ்சிப் புல்தான் வேத சக்திகள் மிகுந்த்தாய் இன்று பல கிராமங்களிலும் முஞ்சிப் புல்லாய் வளர்ந்து கிடக்கின்றது. ஸ்ரீவாமன மூர்த்தியையும், ஸ்ரீஅகத்தியப் பெருமானையும், வேண்டி அவிட்ட நட்சத்திர நாளில் முஞ்சிப்புல்லை எடுத்து மூலிகைப் பூஜைகளை நிகழ்த்தி மூலிகைக் கொடிக் கயிறாக்கி சென்னை திருவள்ளூர் அருகில் உள்ள திருவாலங்காடு ஆலயத்தில் தவக்கோலம் பூண்டிருக்கும் முஞ்சி கேசி (சுனந்த) முனிவருக்கு இடைநாணாக சார்த்தி பிரசாதமாகப் பெற்று இல்லத்திற்கு எடுத்து வந்து காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் இடுப்பில் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து வந்தால் உடலில் நல்ல புனிதமான தேஜஸ் உண்டாகும்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
திருநல்லம் சிவத்தலம்

6. பஞ்ச பைரவ மூர்த்திகள்
கும்பகோணம் அருகே ஆவூரில் ஐந்து பைரவ மூர்த்திகளை ஒரு சேர தரிசித்திடலாம். இதே போன்று “சபை விநாயக” தரிசனப் பாங்கில் சென்னை – திருவள்ளூர் அருகே திருப்பாசூர் சிவாலயத்திலும் , புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சிவன் கோயிலிலும் பல விநாயக மூர்த்திகளை ஒரு சேர தரிசித்திடலாம். ஐந்து பைரவ மூர்த்தி வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கீழ்க்கண்ட கூட்டு எண்ணையால் விளக்கேற்றி (நல்லெண்ணய் + தேங்காயெண்ணய் + விளக்கெண்ணெய் + வேப்பெண்ணெய் + பசு நெய் + இலுப்பெண்ணெய்) பைரவருக்குப் ப்ரீதியான நெய் முறுக்கைப் படைத்து தானமாக அளித்து வந்தால் பெற்றோர்கள் – பிள்ளைகளுக்கு இடையில் உள்ள பகைமையும் , பிரிவும் மறைந்து குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படும். கௌரவம், சந்தேகம், அந்தஸ்து காரணமாக மனப் பிணக்கு கொண்ட தம்பதியர் நன்முறையில் ஒன்று சேர்ந்திட பஞ்ச பைரவ மூர்த்திகளுக்கான வழிபாடு நல்வழி காட்டும்.

ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர்

திருஅண்ணாமலை சிவாலய ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் மஹிமை

தர்மத்தை நிலை நிறுத்தி நீதியின் சிகரமாய் விளங்கிட மட்டுமின்றி நீதிபதிகளும், வக்கீல்களும், காவல் துறையினரும் தங்களுடைய துறையிலே நியாயமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் விளங்குவதறகு அருள்பாலிக்கின்ற மூர்த்தியாகவும் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தி விளங்குகின்றார்.. ஏனென்றால் தர்ம தேவதைகளை உபாசித்தவர்களே இப்பிறவியில் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும், காவல் துறையிலும் பணிபுரிகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும். இவ்வாறு பூர்வ ஜன்ம வரம் வேண்டிப் பெற்ற தர்ம சம்பந்தமான பணிகளில் லஞ்சம், அதர்மம் nepotism போன்றவை புகுந்தால் தர்ம தேவதையே சினந்து பல சாபங்களை அளித்து விடும். இது குடும்பத்தையே, சந்ததியையே பாதிக்கும். சமுதாயத்தில் ஒழுக்கத்தை நிலை நிறுத்துவது என்பது அக்காலத்தில் மன்னர்களுடைய பணியாக விளங்கியது.
எனவே ஒரு காலத்தில் வேந்தர்களாகச் செழித்து விளங்கியவர்களும், தர்ம தேவதைகளை உபாசனை செய்தவர்களும் தாம் இப்பிறவியில், இத்துறைகளில் அமர்ந்துள்ளனர். திருஅண்ணாமலைத் திருக்கோயிலில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரமூர்த்தி மிகவும் அற்புதமான முறையிலே “துலா அஞ்சன நேத்ர தீட்சை” மூலமாக அருள்பாலிக்கின்றார் அல்லவா! இந்த நேத்ர தீட்சை பாவமானது பெறுதற்கரிய அவதாரக் கோலமாகும். பொதுவாக நீதித்துறை, வழக்குத் துறை, காவல் துறையில் இருப்போர், உத்திராட நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள், செய்து, வணங்கி கிரிவலத்தைத் தொடங்கி, ஸ்ரீசரப மூர்த்தியின் திருவடிகளிலேயே கிரிவலத்தை முடித்தலால் அவரவர் துறையிலே உண்மையுடன் உழைத்து நன்முறையில் பேரும், புகழும் பெற்று, சிறப்படைய இக்கிரிவலப் பலாபலன்கள் பெரிதும் உதவுவதாகும்.
ஏனென்றால் தர்ம தேவதைகள் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற திருநாளாக விளங்குவதே உத்திராட நட்சத்திரத் திருநாளாகும். உத்திராட நட்சத்திர நாளன்று தர்ம தேவதைகளுடைய அனுகிரக சக்திகள் கிரிவலப் பாதையில் நிறைந்திருக்கும். உயர்ந்த வருமானம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பலவிதமானத் துன்பங்களுக்கு ஆட்பட்டு “தாய்நாடு திரும்பினால் போதும், எப்போதும் தாய்நாடு திரும்புவோம்”, என்று வேதனையுறுவோரும் உண்டு. இவர்கள் தங்களுடைய முழு வருமானத்துடன் நன்முறையில் தாய்நாட்டிற்குத் திரும்பிட, இவரது குடும்பத்தைச் சார்ந்தோர் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்திக்கு உத்திராட நட்சத்திரத்தில் வழிபாடுகள் செய்வார்களேயானால் வெளிநாடு சென்றோர் நன்முறையில் வீடுதிரும்புவர்.
பதவி, பணம், ஆள் பலம், அசுரபுத்தி, கொடூரத்தன்மை காரணமாக பலருடைய இன்னல்களுக்கு ஆட்பட்டு இருப்போர் ஏராளம், ஏராளம், இத்தகைய மேலதிகாரிகளும், குடும்பத்தினரும், உறவினர்களும் அமைவது தற்பொழுது சகஜமாகி விட்டது. இவ்வகையான அசுரத்தனமான குணங்களை உடையோர்களிடமிருந்து மீண்டு நன்முறையில் வாழ்க்கையைப் பெறுவதற்கு “துலா அஞ்சன நேத்ர தீட்சை” நிறைந்த ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை வணங்கி உத்திராட நட்சத்திரத்தில் கிரிவலம் வருதல் வேண்டும். பொதுவாக மேற்கண்ட துறையில் உள்ளோர் உத்திராட நட்சத்திரத்தில் அரசமரத்தின் வடக்கு வேரால் செய்யப்பட்ட லிங்கத்தைத் தாங்கியும், நீலம் கலந்த, தங்க லிங்க மூர்த்தியை (சுவர்ண மூர்த்தி) தாங்கியும் கிரிவலம் வந்து தங்களுடைய நேர்த்திகளை நிறைவேற்றிட வேண்டும். இதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வந்தால் பலவிதமான இன்னல்களுக்கு விடிவு ஏற்பட்டு நன்முறையில் வாழ்க்கை அமையும்.

பஞ்சவிநாயக மூர்த்திகள்
லால்குடி சிவத்தலம்

தீர்க தரிசனம் பெற :- ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், மந்திர சித்திகளில் மேம்பட விரும்புவோர் முதலில் இவற்றை சமுதாயத் தொண்டாகச் செய்ய ஒரு பெரும் சித்த மனோ வைராக்கியத்தைக் கொள்ள வேண்டும். மந்திர சித்தியில் சிறந்து விளங்க விரும்புவோரும், இறை வழிபாட்டில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவோரும், கோயில் பூசாரிகள், பண்டார சந்நதியினர், குருக்கள், தீட்சிதர்கள் போன்றோர் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை முறையோடு ஆசார, அனுஷ்டானங்களோடு வழிபட்டு வந்தால் அவர்களுக்கு சகலவிதமான மந்திர சித்திகளும் கிட்டுவதோடு இறைவனை ஆத்ம ஞானத்தோடு ஆராதிக்கின்ற தேஜோ அபிவிருத்தியும் ஏற்படும்.
ஜோதிடக் கலையில் சிறந்து விளங்குவோருக்கு மந்திர சித்தியும், தீட்சண்ய சக்தியும், வாக்சக்தியும், நிரம்பத் தேவை, பொய்மையும், தீமையும், பாலிச்சைகளும் பொசுங்கினால்தான் தீர்க தரிசனமான எதிர்காலத்தை உணரும் சத்யப் பிரகாசம், தனிப்பட்ட முறையில் வானத்தாரை போல ஒளிவிடும். எனவே அனைத்துத் தீமைகளையும் மாய்த்திட வல்ல ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை முறையோடு ஆராதித்து வந்தால் நல்லொழுக்கம் மேம்படுவதோடு வாக்சக்தியும் பெருகி முக்காலத்தையும் உணரும் மந்திர சித்திகளை எளிதில் பெற்றிடலாம். ஆனால் இவற்றைக் கடைபிடிப்போர் ஜோதிடத்தையும், மாந்த்ரீகத்தையும், சமுதாயத் தொண்டாக, இலவசத் தொண்டாக ஆற்றிட வேண்டும். மிகவும் புனிதமான ஜோதிடத் துறையில் திளைக்கின்றவர்கள் பணம் சம்பாதித்துப் பேரும், புகழும் சம்பாதிக்க விரும்புவதைத் தவிர்த்துப் புனிதத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக தாம் இருக்கின்ற இடத்தை விட்டுப் பெரிதும் நகராது இருந்த இடத்திலேயே பலவிதமான வழிபாடுகளை மேற்கொள்வோருக்குத்தான் ஜோதிடக் கணிதம் நன்முறையில் பலிக்கும் மாதந்தோறும், ஏன் அடிக்கடியே ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை வழிபட்டு, குறிப்பாக நவமி திதியில் ஸ்ரீசரபேஸ்வரரை ஆராதித்து நவமி திதியிலேயே கிரிவலம் தொடங்கியும் நவமி திதியிலேயே கிரிவலத்தை முடித்தும் வருதல் வேண்டும். இல்லத்திற்குத் திரும்பி அடுத்த நவமி வரை இல்லத்தை, சொந்த ஊரை விட்டோ பெரிதாக எங்கும் நகராது தக்க விரதத்துடன் இறைவழிபாடு முறைகளைக் கடைபிடித்து வந்தால் வாக்சக்தி நன்கு பெருகும். இதற்காகத்தான் அக்காலத்தில் ஜோதிடர்கள் தம் ஊரை விட்டு குறித்த காலத்திற்கு அதிலும் குறிப்பாக வளர்பிறையில் எங்குமே வெளிச் செல்ல மாட்டார்கள்.
“இருக்கும் இடமே, பெருக்கும் ஜோதியே, சுருக்கெனக் காலம் காலம் காட்டும் கண்ணாடிப் பெட்டகம்”, என்பது சித்தர்களுடைய பரிபாஷையாகும். சமுதாயத் துறைகளில் எதுவுமே சோடை போவதில்லை. அரசியல் என்பது கூட அக்காலத்தில்  மன்னர்களால் பேணப்பட்ட மிகச் சிறந்த சமுதாயத் தொண்டாகும். ஏனென்றால் மற்ற துறையில் கூட ஒரு சிலருக்கோ, 100, 200 பேருக்கோ, 1000, 2000 பேருக்குத்தான் சேவையாற்ற முடியும். ஆனால் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையுமே சமுதாயத்திற்காகத் துறந்து சுயநல வாழ்க்கை கொள்ளாது, பொதுநல வாழ்க்கையை மேற்கொண்டு நேர்மை, நியாயம், உண்மை, வாக்கு நாணயம் போன்ற அணிகலன்களையே அணிந்து மிக்ச் சிறந்த அரசியல் வாழ்க்கையை பெறுவோர்தாம் கோடிக்கணக்கான பேருக்கு தம்முடைய வாழ்நாளிலேயே, மிகக் குறுகிய காலத்திலேயே அற்புதமாகப் பணியாற்றிட முடியும்.
இதனால்தான் அக்காலத்தில் நம் பண்டையத் தமிழ் மன்னர்கள் இறைவனோடு நேருக்கு நேர் பேசுகின்ற பெறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு தெய்வ தரிசனமும் நினைக்கும் பொழுது எல்லாம் கிட்டியது. எனவே அரசியல் துறையில் இருப்போர் மிகச் சிறந்த முறையில் பக்தியுடன் தொண்டாற்றிட நியாயமாகவும், நேர்மையாகவும் பொது வாழ்வில் சிறந்திட ஸ்ரீகண்டநிவர்த்தி சரபேஸ்வரரைத் தொழுது வணங்கி வருதல் வேண்டும். இறைவன் ஒவ்வொரு துறையிலும் கந்தாய முடிச்சுகளை வைத்திருக்கின்றான். அரசியல் பணி, ஆசிரியர் பணி, மருத்துவப் பணி போன்றவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மிக எளிதான முறையிலே சமுதாய இறைப்பணி ஆற்றிட முடியும் அதே சமயத்தில் பொது வாழ்விற்கான அரசியல் துறையில்தான் பல இன்னல்களும் குவிந்து கிடக்கும். பொன், பொருள், புகழ் அனைத்தையும் பெற்றுத் தரக் கூடிய பல சமுதாயத் துறைகள் விளங்குவதால் கூடா நட்பும், தீயொழுக்கமும், சுயநலமும், பதவி வெறியும், லஞ்ச லாவண்யமும் சற்றே அணுகாது, நேர்மையானவராய், உண்மையானவராய், பக்தி உடையவராய் தார்மீகமாக விளங்குவதற்கு ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர வழிபாடு சிறந்து விளங்குகின்றது.

ககார மந்திரம்

கற்கட ககார மந்திர உபதேசம்

“ஓம் ககாராய நம:”
கற்கட ககார மந்திர உபதேசம்
அனைத்துவிதமான மந்திரங்களும் சற்குருவாலும், தக்கப் பெரியோர்களாலும், உபதேசிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டால்தான் நன்முறையில் பலன்களைத் தரும். தாமாகவே மந்திர உபதேசம் செய்து கொண்டு ஜெபிப்பதால் கிட்டுகின்ற மந்திரப் பலன்கள்யாவும் நிலையான பலன் தராது. அவை அரைகுறை சித்திகளாகவும், அகங்கார சம்பவங்களாகவும் இவை மாறி மனதை அலைக் கழித்து விடும். எந்த மந்திரமானாலும் சரி, அதற்குரிய மகரிஷிகளின் அனுகிரகத்தைப் பெற்று, சற்குருவின் அருளாய்ப் பெறுதல் வேண்டும் என்பதே அனைத்து யுகங்களுக்கும் உள்ள கண்டிப்பான நியதியாகும்.
தற்காலத்தில் பலரும் புத்தக அறிவு கொண்டும் மற்றும் அவரவர்களுக்குப் பிடித்தமான மந்திரத்தை எடுத்துக் கொண்டும், ஜெபித்துச் சித்தி செய்ய முனைகின்றார்கள். பலரும் தங்களுக்கு சற்குரு ஸ்தானம் கிடைத்து விட்டது என்று நினைத்துக் கொண்டு பலருக்கும் அபரிமிதமான மந்திர உபதேசத்தை இஷ்டம் போல் தருகின்றார்கள். எந்த ஒரு மந்திரத்தையும் குறைந்தது மூன்று கோடி முறைக்கு மேல் முறையாகப் பயின்று, ஜபித்து மந்திர தியான யோக சித்திகள் செய்தவர்கள் தான், பிறருக்கு அந்த மந்திரத்தை உபதேசமாக அளித்திட முடியும். மேலும் தனக்கு அந்த மந்திரம் குருவாய் மொழியாக உபதேசிக்கப்பட்டிருந்தால் தான் பிறருக்கு அளிக்கின்ற தகுதியையும் பெற முடியும். இதில் எவ்வித ஜாதி, மத, இன பேதம் கிடையாது!
சற்குருவின் அருளாசியே பிரதானமானது! பலரும் “அந்தப் பெரியவர் இந்த மந்திரத்தைச் சொன்னார். இந்த சந்நியாசி அந்த மந்திரத்தை ஓதி வரச் சொன்னார்”, என்று சொல்லியவாறு தாமாகவே ஏதேனும் ஒரு மந்திரத்தை வைத்துக் கொண்டு தினமும் ஜபித்து வருகின்றார்கள். குருவாய் மொழியாக உபதேசிக்கப்பட்ட மந்திரம்தான் பரிபூர்ணமான பலன்களைத் தரும். ஆனால் சாதாரண முறையில் மந்திரத்தை ஓதி அதற்குரிய பலன் சிறிது கிட்டினாலும் கூட அந்த மந்திர பலாபலன்கள் யாவும் நிலை கொள்ளாது எளிதில் விரயம் ஆகிவிடும் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும். சித்தியில் லயித்தால் மனம் பேதலிக்கும்.
வசிய மந்திர சக்தி :- எத்தனையோ வசிய தேவதைகள் உண்டு. அந்த தேவதா மந்திரங்களை நாம் சித்தி செய்தோமேயானால் அந்தந்த தேவதைகள் நம் முன் வந்து நிற்கும். “இந்த மாம்பழத்தை அங்கு கொண்டு போய் வை, இந்த விக்ரகத்தை இந்த அரிசிப் பானைக்குள். கொண்டு போ, இந்தப் பொருளை அந்த இடத்தில் வைத்து விடு”, என்ற வசிய ஆணை கூடிய வேலைகளையெல்லாம் அந்த தேவதைகள் செய்யும்.
இவ்வாறாக எதற்கும் பயனற்ற பல சிறிய சித்திகளைக் கொண்டு பலரையும் மயக்குவோரும் உண்டு. இந்த வசிய வேலைகள் எல்லாம் ஒரு சில காலத்திற்குத்தான் வேலை செய்யும். ஏனென்றால் வசிய தேவதையென்றால் அதற்குரிய தேவப் பசியைத் தீர்த்துக் கொண்டிருந்தால் தான் அந்த வசிய தேவதை அடங்கி நிற்கும். இல்லையென்றால் அது ஒரு நாளைக்கு வெடித்துக் கொண்டு மேலேயே பாய்ந்து சித்தி செய்பவரையே பாதித்து விடும். இதனால்தான் பலரும் அரைகுறை சித்தியால் மனபிரமை ஏற்பட்டுத் துன்புறுவர். எனவே இதன் உட்பொருள் யாது என்றால் எந்த மந்திரமுமே தக்க குரு மூலமாக உபதேசமாகவே பெறுதல் வேண்டும் என்பதேயாகும். ஒரு சற்குரு மட்டுமே ஏன் மந்திரத்தை உபதேசிக்க வேண்டும்? அவருக்கு மட்டுமே ஏன் இந்தப் பொறுப்பு ஏற்பட்டது?
ஏனென்றால், உண்மையான சற்குரு ஒருவருக்குத்தான் எவருக்கு எந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். எவருக்கு எந்த மந்திரத்தைப் பெறும் மனத் தகுதி உள்ளது, எவருகு எந்த மந்திர சித்தி தேவையானது, எவருக்கு எந்த மந்திர சக்தி முறையாக உடலிலும், மனத்திலும் ஒன்றாகச் சேரும் என்ற பலவிதமான யோக்யதாம்சங்களை நிர்ணயிக்கின்ற இறைப் பண்பு கூடியிருக்கும். நம்முடைய அலுவலகத்திற்கு வருகின்ற பெரும்பாலான கடிதங்களில் மந்திர சித்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கேட்டுத்தான் நிறைய உள்ளன. பலரும் தங்களுக்குச் சற்குரு இல்லையே யாரை சற்குருவாக ஏற்றுக் கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிலரோ தாங்கள் குருவாக முதலில் ஒருவரை ஏற்றுக் கொண்டு அதிவேகத்துடன் குருவைத் தொடர்ந்து பின்னர் விதியின் பயனால் மந்த கதியில் தடுமாறும் நிலையும் உண்டு! ‘குருவைத் தேர்ந்தெடுப்பதில் இத்தனை பிரச்சினைகளா?’ என்று கேட்பவரும் உளர். இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் என்னவென்றால், உங்களுக்கென ஓர் சற்குரு கிட்டும் வரையில் திருஅண்ணாமலையாரை சற்குருவாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து கிரிவலம் வர வேண்டும். கிரிவலம் என்றால் ஓரிரண்டு முறை வந்து விட்டு, குரு வருகிறாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டாம். ஒரே கிரிவலத்திலும் உங்களுக்குத் தெய்வ அருள் குருவருளாகக் கிட்டக் கூடும். பல ஆண்டுகளாக கிரிவலம் தொடர்ந்த பின்னரும் குரு உங்களுக்கு அமையக் கூடும். அவரவருடைய விதியைப் பொறுத்துத்தான் இது அமைகின்றது.
ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருவைப் பெற்றாக வேண்டும் என்பது உங்களுடைய சித்தாந்தமாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கென சற்குரு தானகவே வந்து அரவணைக்கின்ற தெய்வீக நிலையை நீங்கள் பெறுவீர்கள் என்பது திண்ணம் இதில் ஐயமே வேண்டாம். அது சரி, “எங்களுக்கு ஏதேனும் ஒரு எளிமையான மந்திரத்தைச் சொல்லுங்களேன். எங்களுக்கான குரு வரும் வரை அதைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்”இ என்று கேட்போரும் உண்டு. இது பற்றி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் பல விளக்கங்களை நாம் கேட்டு அவற்றின் திரட்சியை இங்கு உங்களுக்கென அளிக்கின்றோம்..
எந்த ஒரு மந்திர உபதேசத்தையும் பெறுவதற்கு முன்னால் அதனை ஜபிப்பதற்கான உடல், மனம் மற்றும் உள்ளத்திற்கான ஆரோக்கியத்தை நீங்கள் பெற்றாக வேண்டும். அதற்காக நன்றாக திடகாத்திரமான உடல்நிலை உள்ளவர்கள்தான் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பது இல்லை. இறக்கும் தருவாயில் கூட ஒரு சிறிய மந்திரத்தை உபதேசமாகப் பெற்று அதனை ஐந்து நிமிடங்களுக்கு மட்டும் ஜபித்து உயிர் துறந்து நன்னிலை பெற்றவர்களும் உண்டு. இது அவரவருடைய கர்ம வினைகளின்படி குருஅருளால் நிகழ்வதாகும்.
கழிப்பின் சிறப்பு :- மந்திர உபதேசம் பெறுவதற்கான முதல் யோக்கியதாம்சமே உங்கள் உடலில் மலஜல கழிப்பு நன்றாக நிகழ வேண்டும். “என்ன இது கேட்பதற்கே வியப்பாக இருக்கின்றதே” என்று யோசிக்காதீர்கள்! ஆம் நமது உடலிலிருந்து சிறுநீரும், மலமும் நன்முறையில் பிரிந்தால் தான் உங்களுக்கு மந்திர உபதேசம் பெறும் ஆரம்பத் தகுதி ஏற்படுகின்றது. ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல உடலில் உள்ள கெட்ட நீரும், உபயோகமில்லாத உணவுச் சக்கை மட்டுமே சிறுநீராகவோ, மலமாகவோ மாறுகிறது என்று எண்ணாதீர்கள். சிறுநீரிலும், மலத்திலும் பயனற்ற உணவுப் பொருட்களும், அசுத்தமான நீர்த்தன்மையும் விலகுவதோடு உங்களுடைய கர்ம வினைகளும் அவ்வப்போது இவை மூலமாகக் கழிந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைத் தான் கூத்திடும் குறுவினையைக் குதத்திற் போக்கினாயா என்று சித்தர்களின் பரிபாஷையில் கேட்பார்கள்.
குத சுத்தியிலும் பல அறவழி முறைகள் உண்டு. ஆமாம், வியப்பாக இருக்கின்றதல்லவா! ஆற்று மண், கடல் மண், உவர் மண் என்று அக்காலத்தில் மண்ணைக் கொண்டுதான் குதத்தை சுத்தம் செய்தார்கள். தற்காலத்தில் தான் chemical toilet என்று பலவிதமான நவீனக் கழிப்பறைகள் வந்துவிட்டன. மலம் கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும் போதும் நாம் பூமாதேவிக்கு சில அபசாரங்களைச் செய்கின்றோம். இதற்காகவே நாம் தினந்தோறும் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். எனவேதான் சிறுநீர், மலம் கழிப்பதற்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டியதாக ஆசமனம் என்ற மந்திரப் பிரயோக முறையை விதித்தார்கள்.
ஆசமன மந்திரம் :
ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று ஓதி மூன்று முறை தீர்த்தத்தை அருந்தியும் நான்காம் முறை “ஓம் கோவிந்தா” என்று ஓதி தீர்த்தத்தை பூமியில் விட்டும் இந்த ஆசமனப் பிரயோகம் மிக எளிமையான முறையில் அமைந்திருக்கின்றது. இதனை ஜாதி, இன, மத வேறுபாடின்றி அனைவரும் கடைபிடித்திடலாம். சிறுநீர், மலஜலம் கழிக்கும் போது, பூமியை பாதிக்காவண்ணம் இந்த ஆசமனப் பிரயோகம் நல்ல இரட்சையாக செயல்படுகின்றது. மேலும் கோவிந்தா என்று மந்திரம் ஓதி பூமியில் தெளிக்கின்ற போது பூமிக்கு ஏற்படுகின்ற மந்திரக் குளிர்ச்சியால் சிறுநீர், மல ஜலத்தில் உள்ள உஷ்ணமானது பூமியை தாக்காது காக்கும் மந்திரக் காப்பாகச் செயல்படுகின்றது. இவ்வாறாக சிறியதாகத் தோன்றும் ஆசமன மந்திரத்திற்கே எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் உடலாலும், உள்ளத்தாலும், கண்ணாலும், காதாலும், எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். முறையற்ற காம எண்ணங்களுடன் எதையும் பார்ப்பதும் பெரிய பாவமாக நிகழ்கிறது. இவ்வாறு தினந்தோறும் நாம் சேர்க்கின்ற தீவினைகளும் கூட மலஜல கழிப்பிலும் சேருகின்றது என்பது நீங்கள் அறியாத ஓர் ஆன்மீக விந்தையாகும். கழிப்பு உறுப்புக்களையும் நன்னீரால் தக்க மந்திரம் ஓதி சுத்தம் செய்கின்ற முறையும் உண்டு. இதனை தக்க பெரியோர்களிடம் அறிந்து செயல்பட வேண்டும் . இதனால் நல்லொழுக்கம் மேம்படும். நம் உடலில் உள்ள 72,000 நாடி, நரம்புகளிலும் அங்க தேவதைகள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்கள்.
இவற்றில் கழிப்பு உறுப்புகளிலும் உறைந்து அருள்பாலிக்கின்ற தேவதைகள் உண்டு. கழிப்பு உறுப்புக்களையும் நாம் நன்முறையில் பயன்படுத்திட வேண்டும். உடல் இன்பத்திற்காகத் தவறான முறைகளைக் கையாண்டால் இந்த அங்க தேவதைகள் சினம் கொண்டு அந்தந்த உறுப்புகளில் பலவிதமான வியாதிகளைச் சாபமாகச் சேர்த்து விடுகிறார்கள். இதற்காகத் தான் தினந்தோறும் ஆசமன மந்திரம் ஓதி மலஜல கழிப்பை மேற்கொண்டால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு கழிப்பு உறுப்புக்களை ஒழுக்கத்துடன் நன்முறையில் இறைவன் அளித்த நியதிப்படி பயன்படுத்துகின்ற நல்ல ஒழுக்க மனப்பாங்கினையும் நாம் பெற்றிடுவோம். மந்திர உபதேசம் என்று ஆரம்பித்து எத்தனையோ அறநெறி விதிகளைச் சொல்லிக் கொண்டு செல்கின்றீர்களே என்று தோன்றுகின்றதல்லவா!
ஆமாம் மந்திர உபதேசங்களுக்கு முன்னால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடங்களோ ஏராளம், ஏராளம்!  ஏதோ வகுப்பறையில் சென்று அமர்ந்து கொண்டு, மந்திரத்தைக் கேட்டால் அது உபதேசம் ஆகிவிடாது. தொடர்ந்து ஏழு நாட்களோ, ஒன்பது நாட்களோ, மரத்தடியில் அமர்ந்து கொண்டு உபதேச மந்திரத்தை பெறுதலும் சரியாகாது. எவ்வாறு ஒருவர் மந்திர உபதேசத்திற்குத் தகுதி பெறுகிறார் என்பதை உணர்வதற்குத் தான் மலஜல கழிப்பு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வைத்தியரிடம் செல்கின்ற போது அவர் கேட்கின்ற முதல் கேள்வியே மலஜல கழிப்பு நன்கு நடைபெறுகின்றதா என்றுதான்! இதைப் போலத் தான் மலஜல கழிப்புக்கான மந்திரங்களும் உண்டு, ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா!
மலப்புழு சித்தர் : - எதை அடக்கினாலும் மலஜலத்தை அடக்குதல் கூடாது! எம்மலமும் குடலை விட்டுத் தக்கத் தருணத்தில் வெளியாக வேண்டும். மலப்புழு சித்தர் என்று ஒரு மகான் இருந்தார். அதிஅற்புத சித்தர். எப்போதும் மலம் கிடக்கும் பூமியிலேயே அன்றும், இன்றும், என்றும் வாழ்பவர். ஆனால் அவர் கையிலிருந்து சிறிய திருநீற்றுப் பிரசாதத்தைப் பெற்றாலும் கூட கமகமவென்று நறுமணம் வீசும். அவர் உடலிலிருந்து ஒரு துளி துர்நாற்றம் கூட வீசாது, மாறாது அவர் இருக்கும் இடம் எங்கும் மல்லிகையின் மணமும் நறுமணப் பூக்களின் வாசனையும் தான் மிகுந்திருக்கும்.
மலப்புழுச் சித்தர் மலத்தைக் கிண்டி அதில் உள்ள மலப்புழுக்களையெல்லாம் எடுத்து உண்பார். உண்டார் என்று சொல்வது கூடத் தவறுதான்! ஏனெனில் அந்த மலப்புழுக்களுக்குத் தன்னுடைய தேஜோமயமான ஒளி பொருந்திய உடலில் ஹோம ஆகுதியாகப் பாவித்து தாமுண்டு அவற்றிற்கு முக்தி அளித்தார் என்றே சொல்ல வேண்டும். ஒருவர் வெளிவிடுகின்ற சிறுநீர், மலத்தைப் பொறுத்து அவருடைய கர்மவினைப் பாங்கினை எளிதில் எடுத்துரைத்திடலாம். இதற்காகத்தான் அக்காலத்தில் சிறுநீர்ச் சோறு என்று சொல்லி வெண்மையான சாதத்திலே சிறுநீரை வடிக்கச் செய்து அதன் நிறம் மாறுகின்ற தன்மையைப் பொறுத்து ஒருவருடைய உடல் வாகையும், நோயின் தன்மையையும் அறிகின்ற வைத்திய முறையைச் சிறப்பாகக் கடைபிடித்து வந்தார்கள். மலப்புழுச் சித்தரானவர் அவரவர் இடுகின்ற மலத்தைப் பொறுத்து அவரவருடைய கர்மவினைகளை அறிந்து அதற்கான பரிகாரங்களை எடுத்துரைத்துத் தக்க அருள் நெறிமுறைகளையும் வழங்கி வந்தார்.
ஆனால், ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டு அவரிடம் செல்பவர்களுக்குத்தான் இந்தத் தெய்வீகப் பரிகாரங்கள் கிட்டும். ஏதோ  மலத்தில் ஊறிக் கிடப்பவர் என்று ஒதுங்கி அருவறுப்புடன் செல்பவர்கள் தெய்வீகச் சந்தர்ப்பங்களை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே எந்த விலங்கினத்தையும், எந்தச் செடியையும், ஒரு எறும்பையும், அருகம்புல், புழு மற்றும் வண்டையும் கூடச் சாதாரணமாகக் கருதி விடாதீர்கள். அனைத்து உயிரினங்களிலும், திட, திரவ வாயுப் பொருள்களிலும் இறைவன் உய்கின்றான் என்பதை உணர்த்தும் முகமாகத் தான் மலப்புழு சித்தர் இந்த அவதாரத்தைக் கொண்டு, இன்றும் மலப்புழுச் சித்தராக திருஅண்ணாமலை, வெள்ளியங்கிரி மலை, பொதிய மலை போன்ற இடங்களில் அவ்வப்போது தரிசனம் தந்து கொண்டுதான் இருக்கின்றார்.
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் அவர்கள் மலப்புழு சித்தரைப் பன்முறை தரிசிக்கின்ற பெரும் வாய்ப்பினைப் பெற்றவர்கள்தாம், அவர்தம் சற்குரு நாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் குருஅருட்கடாட்சத்தால்! அவரைத் தரிசித்து அடிபணிந்து வணங்கி வரும் போதுதான் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகள் நம் குரு மங்கள கந்தர்வாவிற்கு மலஜலக் கழிப்பின் ஆன்மீக விளக்கங்களை எடுத்துரைத்து மந்திர உபதேச விளக்கங்களையும் தந்திட்டார்! ஆமாம், மந்திரத்தை உபதேசம் பெறுவதற்கு முன் முறையான மலஜலக் கழிப்புத் தேவை என்பதை உணர்ந்தோம் அல்லவா! இதனை எவ்வாறு பெறுவது?
ஆம், இதற்கும் ஒரு மந்திரம் உண்டு. என்ன இது, முறையான மலஜலக் கழிப்பிற்கு ஒரு மந்திரமா? ஆம், உண்மையே! இந்த மந்திரத்தின் தெய்வீகப் பாங்கு என்னவென்றால் இதனை தினந்தோறும் குறைந்தது 10,000 முறையாவது குருஅருளுடன் ஜெபித்து வந்தால் முறையான மலஜலக் கழிப்பு ஏற்படுவதுடன் மந்திர சித்திக்கான உடல் மனப்பாங்கினையும் நாம் எளிதில் பெற்றிடலாம். என்ன மந்திரமோ அது?
மந்திரக் கட்டுகள் ;- மந்திரம் என்று சொல்கின்றீர்களே, அந்த மந்திரத்தை குரு உபதேசமாகத்தான் பெற வேண்டும் என்றும் சொல்கின்றீர்கள்! ஆனால், இப்போது கூறப் போகின்ற மந்திரத்தை நாங்கள் ஜபித்து வரலாமா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு கட்டு மந்திரம் என்ற ஒன்றை விதிப்பார்கள். கட்டும் மந்திரம் என்றால் என்ன? ஒரு மந்திரத்தின் முழுபலனையும் பெற வேண்டுமென்றால் அதற்கு முன்னால் அந்த மந்திரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய ஹோமம், புரஸ்சரணம், ஜபம், தியானம் போன்று ஒவ்வொரு நிலை உண்டு, எண்ணிக்கையும் உண்டு!
அந்தந்த நிலை வரும் போது அந்தக் கட்டும் மந்திரமானது விடுவிக்கப்பட்டு, அந்தப் பலன்களைத் தரத் துவங்கும் . எனவே ஒரு மந்திரத்தின் பரிபூரணமான முழுமையான பலன்களைப் பெற வேண்டுமென்றால் அதற்குரித்தான ஜப, தியான எண்ணிக்கையை நிறைவு செய்தாக வேண்டும். அந்த மந்திரத்திலே எத்தனை முடிச்சுகள் (கிரந்திகள்) வைக்கப்பட்டுள்ளனவோ அவையெல்லாம் கட்டு மந்திரங்கள் மூலமாக விடுவிக்கப்படும் போதுதான் அந்த மந்திரம் முழுப் பயனையும் பரிபூரணமாக அளிக்கத் தொடங்கும். இதற்காக அதுவரையில் அந்த மந்திரத்தின் பலன்கள் கிட்டாதா என்று கேட்டிடலாம். ஜபித்தவரை, தியானித்தவரை, கிடைக்க வேண்டிய பலன்களை ஓரளவு அது தந்து கொண்டிருக்கும். அதில் ஐயமில்லை. மேலும் ஒரு குருவானவர் தாம் ஒரு மந்திரத்தை உபதேசிக்கும் போது அந்த உபதேசம் பெற்றவரானவர் எந்த அளவுக்கு அந்த மந்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய பல சோதனைகளை வைத்திடுவார்.
அந்த சோதனைகளையெல்லாம் வென்று ஜெயம் கொண்டால்தான் குருவானவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்டு மந்திரத்தை விடுவித்து மந்திரத்தின் பரிபூரணப் பலன்களைப் பெறுவதற்கான நற்கதியைக் காட்டிடுவார். இப்போது நாம் காணப் போகும் மந்திரமானது “ககார மந்திரம்” என்று அறிக! இதற்குக் கற்கட மஹரிஷிதான் மூலரிஷியாவா. அதாவது இந்தக் கற்கட மஹரிஷிதான் இந்த மந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்தவர்.
ககார மந்திரம் பெறுவீர்!
எங்கே மூன்று  முறை இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
ஓம்
ஓம் ககாராய நம:
ஓம் ககாராய நம:
ஓம் ககாராய நம:
கற்கட மஹரிஷி இந்த மந்திரத்தினைப் பெற்றுத் தந்ததற்குக் காரணமே நம் உடலில் மலஜலக் கழிப்பு முறையாக நடைபெறுவதற்கும் இதன் மூலம் உடல்சுத்தி, மனசுத்தி, கர சுத்தி ஏற்படுவதற்குமாகத்தான்! எனவே, இந்த “ஓம் ஸ்ரீககாராய நம:” என்ற மந்திரத்தைத் தினந்தோறும் ஓதி வருதல் வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு அங்க சுத்தி நன்முறையில் ஏற்படும்., இதன் பிறகு உடல்சுத்தி நன்முறையில் ஏற்பட்டால்தானே மந்திர சித்திக்கும் மந்திர பீஜாட்சர சித்திகளைப் பெறுவதற்கும் உடல் தகுதியுடையதாகின்றது.
மலக் கட்டுடனோ, சிறுநீர் கட்டுடனோ நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் மந்திர ஜப சக்தி மலஜலத்தோடு கழிந்து விடும். ஆனால் முறையான மலஜலக் கழிப்பு ஏற்படும் போது அங்கநாளங்கள் சுத்தமடைவதால் அங்கநாளச் சுவர்களில் உள்ள காலாதீத நரம்புகள் இந்த மந்திரச் சக்திகளைத் தம்முள் ஈர்த்துக் கொள்கின்றன. எனவே, இதனையே நீங்கள் குரு உபதேசமாகக் கொண்டு ஸ்ரீகற்கட மஹரிஷிக்கு வணக்கம் தெரிவித்து தினந்தோறும் “ஓம் ககாராய நம:” என்ற மந்திரத்தை ஓதி வாருங்கள்.
எத்தனை நாட்களுக்கு ஓதி வர வேண்டும். இதுதான் எல்லோர் மனதிலும் எழுகின்ற கேள்வி! மந்திர சித்திக்கும், மந்திர உபதேசத்திற்கும் நாள் கணக்குக் கிடையாது. நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையும், பக்தி நிலையும், குருவைச் சரணடைகின்ற பாங்கும் தான் இதற்கு முக்கியமான நிலைகளாகும். இன்றைக்கு இருக்கின்ற நம்பிக்கை நாளைக்குக் குறைதல் கூடாது. அது வளர்ந்து கொண்டே வருதல் வேண்டும். இதைப் பொறுத்துத்தான் இந்தக் கற்கட ககார மந்திர சித்தியின் பலன்களும், அமையும் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
வெறும் மலஜல சுத்திக்காகவா இந்த மந்திரத்தை ஓத வேண்டும்? நல்ல கேள்விதான், நாம் முன்னரே சொன்னது போல மலஜல சுத்தி என்றால் வெறும் சிறுநீரும், மலமும், கழிவது மட்டுமல்ல! உங்கள் உடலில் சேர்ந்துள்ள தீவினைச் சக்திகளும், தீயொழுக்கப் படிவுகளும் முறையற்ற எண்ணங்களும் தீர்ந்தாக வேண்டுமல்லவா! அதற்கும் இந்தக் கற்கட ககார மந்திரம் பெரிதும் உதவுகின்றது. இதனை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் இம்மந்திரத்தை ஓதிவருவீர்கள். கடைபிடித்துப் பாருங்கள்.. கனிந்த பக்தியைப் பெறுங்கள்! எங்களுடைய எண்ணமெல்லாம், ஒவ்வொருவரும் சற்குருவை அடைந்து நல்ல இறையருளைப் பெற வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் சித்தர்கள் அருள்கின்ற எளிய வழிமுறைகளை இங்கு அளித்து வருகின்றோம்.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடை பிடித்திடில் குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.12.1999 – பாலகணபதி தோத்திரம் இன்று முழுவதும் சொல்லி கொழுக்கட்டை தானம் – பிள்ளைகள் தாய், தந்தை மீது வெறுப்பும், சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்.
2.12.1999 – நாள் பூராவும் தருண கணபதி தோத்திரம் ஓதி அப்பம் தானம் – ரிடையர் ஆகிறவர்கள் பல பிரச்சினைகளிருந்து விடுபடுவர்.
3.12.1999 – பக்தி கணபதி தோத்திரம் பாடி வெல்ல பாயசம் தானம் – கொடுக்கல் வாங்கல் சிக்கல் தீரும்.
4.12.1999 – வீர கணபது துதி சொல்லி தேங்காய் துருவலோடு வெல்லம் கலந்து தானம் – புதிய வேலை இண்டர்வியூ நலமாய் முடியும்.
5.12.1999 – சக்தி கணபதி துதி இன்றைய தினம் முழுவதும் ஓதி கணவன்/மனைவிக்கு பிடித்த உணவு தானம் – குடும்ப சண்டைகள் தீரும்.
6.12.1999 – த்விஜ கணபதி ஸ்தோத்திரம் இன்று பூராவும் சொல்லி வாழைப்பழம் தானம் – வீடு தேடி நற்சேதி வரும்.
7.12.1999 – சித்தி கணபதி துதி நாள் முழுவதும் சொல்லி எள்ளு கொழுக்கட்டை தானம் – வாகன சம்மந்த விக்கினங்கள் தீரும்.
8.12.1999 – உச்சிஷ்ட கணபதி வழிபாட்டுத் துதி இன்று முழுவதும் ஓதி மாதுளம் பழமும், நீல நிற துளசி தானம் – வக்கீல்களும், வைத்தியர்களும் நலம் பெறுவர்.
9.12.1999 – விக்ன கணபதித் தோத்திரம் இன்று முழுவதும் ஓதி சொர்ண (தங்கம்) தானம் – Mines, Mill முதலாளிகள் நலம் பெறுவர்.
10.12.1999 – க்ஷிப்ர கண்பதி தோத்திரம் இன்று பூராவும் சொல்லி செம்பருத்தியால் அர்ச்சித்து, தக்காளி சாதம் தானம் – தங்க வியாபாரிகள் நலம் பெறுவர்.
11.12.1999 – ஹேரம்ப கணபதி தோத்திரம் இன்று முழுவதும் ஓதி சர்க்கரைப் பொங்கல் தானம் – இரும்பு வியாபாரிகள் நலம் பெறுவர்.
12.12.1999 – லக்ஷ்மி கணபதி தோத்திரம் நாள் முழுவதும் ஓதி ஆம்பல் மலரால் அர்ச்சித்து ஆப்பம் தானம் – விஞ்ஞானிகளுக்கு வரும் ஆபத்து தீரும்.
13.12.1999 - மகா கணபதி வழிபாட்டுத் துதி இன்று பூராவும் சொல்லி நெய் தோசை தானம் – Insurance-ல் பணிபுரிபவர்கள் நலம் பெறுவர்.
14.12.1999 – விஜய கணபதி தோத்திரம் இன்று பூராவும் சொல்லி லட்டுதானம் – Banks, Finance , Chit fund –களில் உள்ளோர் இன்று கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
15.12.1999 – இன்று நிருத்த கணபதி தோத்திரம் ஓதி பின் அப்பம் தானம் – முதுகு (Spinal) சம்பந்தமான நோய்த் துன்பங்கள் தணியும்.
16.12.1999 – ஊர்த்துவ கணபதி தோத்திரம் இன்று முழுவதும் ஓதித் தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து, பிஸ்தா, கேக் தானம் – Travels, bus, cabs, லாரி வைத்திருப்பவர்களுக்கு வரும் சோதனைகள் குறையும்.
17.12.1999 – புழுங்கல் அரிசிப் புட்டு தானம் – தபால், தந்தி, டெலிபோனில் வேலை செய்பவர்களுக்கு வரும் துன்பங்கள் தணியும்.
18.12.1999 – வாழைப்பூ வடை + சாம்பார் சாதத்துடன் தானம் – மேம்பாலம், சுரங்கங்களில் வேலை செய்பவருக்கு வரும் ஆபத்து தீரும்.
19.12.1999 – நீர் உருண்டை தானம் – மரவேலை செய்பவர்களுக்கு திடீரென்று நல்லதோர் மாற்றம் தரும்.
20.12.1999 – 5 குழந்தைகள் பெற்ற 70 வயது சுமங்கலிக்குப் பாத பூஜை செய்து ஆடைதானம் அளித்திடில் மின்சாரத் துறையில் பணிபுரிவோர்க்கு வரும் துன்பம் விலகும்.
21.12.1999 – படகோட்டிகளுக்கு மழை கோட்டு தானம் – வங்கி, cashier, தரகர்களுக்கு தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும்.
22.12.1999 – சில்லரை வியாபாரிகள் பாயசம் தானம் செய்திடுக! புதிய சீட்டு சேராமல், பிறரிடம் பணம் போய் மாட்டிக் கொள்ளாது.
23.12.1999 – டீ எஸ்டேட், காபி எஸ்டேட் இவைகளில் வேலை செய்யும் ஏழை தொழிலாளிகளுக்கு மழைக் கோட்டு தானம் – வியாபாரம் முன்னேற்றம் காணும்.
24.12.1999 – தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்வெட்டி, அரிசியுடன் தானம் – Builders நலம் பெறுவர்.
25.12.1999 – சுமங்கலிகளுக்கு அன்னத்தோடு குங்கும தானம் – பழ காய்கறி வியாபாரிகள் நல்ல மாற்றம் காண்பர் தொழிலில்.
26.12.1999 – கண் பார்வையற்றோர்க்குக் கடிகார தானம் – மனக்கவலையைப் போக்கும்.
27.12.1999 – ஏழை கல்லூரி மாணவருக்கு சைக்கிள் தானம் – மனச் சங்கடங்கள் தீரும்.
28.12.1999 – வயதான நோயாளிகளுக்கு படுக்கை தானம் – தாய், தந்தை நலம் பெறுவர்.
29.12.1999 – சப்த மாதர்களுக்கு ஏழுவிதமான பூக்களால் அர்ச்சித்தல் – குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
30.12.1999 – குழந்தைகளுக்குப் பால் தானம் – மார்பு சம்பந்த நோய்களின் வேகம் தணியும்.
31.12.1999 – ஏழைக் குழந்தைகளுக்கு புத்தக தானம் – எதிர்பாராத இடங்களிலிருந்து கல்வி வசதிகள் கிட்டும்.

விசேஷ தினங்கள் – டிசம்பர் 1999

டிசம்பர் 7 – அமாவாசை
டிசம்பர் 9 – மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் – இன்று குறிப்பிட்ட விசேஷமான சந்திரோதய கைவல்ய முத்திரைகள் மூலமாக சந்திர பகவானை தரிசிப்பது விசேஷமானதாகும். காணக் கூடாததைக் கண்டு பார்வையால் உந்தப் பெற்று அவயங்களால் செய்யப்படுகின்ற பாவங்களுக்கு உரிய பிராயச்சித்தத்தைத் தரவல்ல சந்திர தரிசனமாகும்.
16.12.1999 – விஷ்ணுபதி போல ஷடசீதி புண்ய கால தர்ப்பண நாள். ஆறுவகையான தானியங்களைப் பரப்பி (அரிசி, கோதுமை, பயிறு, துவரை, உளுந்து, நிலக்கடலை) அவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் இடல் வேண்டும். தானிய தானம் வரவேண்டிய பணபாக்கியைப் பெற்றுத் தரும்.
22.12.1999 – பௌர்ணமி கிரிவல நாள் 21.12.1999 நள்ளிரவு 2.52 முதல் 22.12.1999 இரவு 11.01 வரை திருக்கணித முறைப்படி பௌர்ணமி திதி அமைகின்றது.
22.12.1999 – இரவு ஆருத்ரா அபிஷேகம்
23.12.1999 – விடியற்காலை ஆருத்ரா தரிசனம்
29.12.1999 – கால பைரவ அஷ்டமி

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam