அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஐயர்மலை தீபம்

அய்யர்மலையில் ஆனந்த வைபவம்! அதுவே அய்யர்மலையில் கார்த்திகை தீபம்!!!

திருச்சி அருகிலுள்ள குளித்தலையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது அய்யர்மலை திருத்தலம். மிகவும் சக்தி வாய்ந்த சிவ மூர்த்தி, மலையின் மேல் சித்தர்கள் இன்றும் வந்து நீராடிச் செல்கின்ற சித்தாம்ருதத் தீர்த்தம் உள்ள அதி அற்புதத் திருத்தலம், கோடானுகோடி யுகங்களாக அருட்பெரும் சித்புருஷர்கள் யோகத்தில் உறைகின்ற குகைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இறையருளால் அய்யர் மலை மற்றும், சுற்றுப்புற கிராம மக்கள் பேராதரவினாலும், உற்சாகத்தினாலும், ஆலய நிர்வாகத்தின் துணையுடனும், நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் அய்யர்மலை சிவாலயத்தில் கார்த்திகை தீப ஜோதி ஏற்றும் வைபவம் கடந்த சில ஆண்டுகளாக நன்முறையில் நடந்து வருகிறது.

இவ்வாண்டும், கிராம மக்கள் மற்றும் ஆலய நிர்வாக ஒத்துழைப்புடன் ஆஸ்ரமத்தின் சார்பாக அய்யர் மலையில் ஏற்றப்படுகின்ற கார்த்திகை தீபஜோதியானது சுற்றியுள்ள நூற்றுக் கணக்கான கிராமங்கட்கு கார்த்திகை தீபப் பரஞ்ஜோதியைப் பரப்பி இறை அருளைப் பெற்றுத் தருகிறது. ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பெரும் முயற்சியால் கிராம மக்களின் நல்லாதரவுடன் இம்மலையில் நடைபெறுகின்ற கார்த்திகை ஜோதித் தீபப் பெருவிழாவின்போது ஐந்து நாட்களுக்கு நம் ஆஸ்ரமத்தின் சார்பில் அன்னதானமும் நடைபெற உள்ளது. காலை கடம்பர் கோயில் (குளித்தலை), மதியம் சொக்கநாதர் (அய்யர்மலை) மாலை ஈங்கோய் மலை என்ற மூன்று விதமான அருட்பெரும் தரிசன முறைகளை ஸ்ரீ அகஸ்திய மாமுனி நமக்குத் தந்துள்ளார். ஒரே நாளில் இம்மூன்று ஆலயங்களையும் தரிசிப்பதால் நம்முடைய நல்ல பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறுகின்றன என்பது கண்கூடு. 191998 நவம்பர் 29, 30, டிசம்பர் 1, 2, 3 ஆகிய தினங்களில் அய்யர்மலையில் நம் ஆஸ்ரமத்தின் சார்பில் அன்பார்ந்த கிராம மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள கார்த்திகைத் தீப ஜோதிப் பெருவிழாவிற்கு அன்பர்களின் நல்லாசிகளையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

தெய்வீகமாக வாழ்வது எப்படி ?

உங்களுடைய சாதாரணமான வாழ்கை முறையிலும் தெய்வீகமான நெறிமுறைகளை எளிதில் இணைத்திடலாம்!இளமையிலேயே, சிறுபருவத்திலேயே தெய்வீகத்தில் உங்களை பிணைத்துக் கொண்டிடுக!

தெய்வீகம் என்றால் வயதான பின்னர் பார்த்துக் கொள்ளலாம், ரிடையர் ஆன பின்னர் தான் நமக்குத் தெய்வீகம் ஒத்து வரும் என்றெல்லாம் எண்ணாதீர்கள். இளமையும், சக்தியும் இருக்கும் பொழுதே தெய்வீகத் திருப்பணிகள் செய்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்னல்களுக்கான இறைத் தீர்வுகளை நாம் இப்பிறவியிலேயே பெற முடியும். இறைப்பணி என்றால் நம்முடைய லௌகீகமான வாழ்க்கையின் சுகபோகங்களுள் குறுக்கிடுவது, சுகத்தை இழந்து கஷ்டங்களுடன் வாழ்வது என்று நினைத்தல் வேண்டாம், ஏனென்றால், நடுத்தர வயதைத் தாண்டிய உடனேயே பலவிதமான நோய்களுக்கும், இன்னல்களுக்கும், வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் மனிதன் ஆட்படுகின்றான், பின் எவ்வாறு தெய்வீகப் பணிகளை அப்போது ஆற்ற முடியும்?

கலியிலும் சற்குரு உண்டே !

நம்முடைய ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் நடக்கின்ற இறைப் பணிகள் யாவும், அடியார்கள் சாதி, இன வேறுபாடின்றி தங்கள் குடும்பங்களோடு, குழந்தைகளோடு சிறு பிராயத்திலேயே இறை நெறிகளை ஊட்டி உணர்த்துகின்றபடி அமைந்திருப்பதால், அவர்களுடைய எதிர்காலம் செம்மையாக அமைவதற்கான, தெய்வீகமான அஸ்திவாரம் இங்கு அளிக்கப்படுகின்றது. தீய வழக்கங்களின் பால் மனம் என்றும், எதையும் நாடாத வண்ணம் இள வயதிலேயே இவ்வாறாக தெய்வீகத்தை நாடி நரம்புகளெங்கும் புகட்டி விடுதல் வேண்டும். இதற்காகத்தான் அக்காலத்தில் குருகுல வாழ்க்கையில் இளவயதிலேயே பிள்ளைகளை குருவிடம் ஒப்படைக்கும் படியான வழக்கம் இருந்தது.

மனித மனம் எதையுமே ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்பதில்லை. கண்ணால் பரிபூரணமாகக் கண்ட பின்னர்தான் குருவின் மீது நம்பிக்கை வருகின்றது. அதுவும் தனக்குரிய சில வசதிகள் சற்குரு மூலமாகக் கிட்டாவிடிலோ பிரச்னைகள் தீராவிடிலோ அந்த குருவின் மீதே கோபம் வருகின்றது! இந்நிலையிலே குருகுல வாசம் என்பது கோடியில் ஒரு சிலருக்கே இந்த பூலோகத்தில், கலியுகத்தில் வாய்க்கின்றது. ஏனையோரும் குருகுல வாசம் இல்லையே என்று ஏங்காது ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலமாக ஒரு குருகுல வாசம் எவ்வாறு செம்மையாக அமைய முடியும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இத்தொடர் அமைகின்றது. ..

Powerful பிரம்ம முகூர்த்த நேரம்

கடந்த சில இதழ்களாக. காலையில் எழுந்தவுடன் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய சில எளிமையான இறை வழிபாடுகளை, குருவாய் மொழியாக விவரித்து வந்துள்ளோம் அல்லவா! பிரம்ம முகூர்த்த நேரமாகிய காலை 3.00 மணி முதல் 5.30 மணிப் பொழுதில் உறக்கத்திலிருந்து எழுந்திருப்பது என்பது இயலாத காரியமாகப் பலருக்கும் தற்போது ஆகிவிட்டது. மாதத்தில் சில நாட்களேனும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கின்ற வழக்கத்தை மேற்கொள்க! இதுவொன்றும் கடினமான காரியம் அல்லவே!.

ஏனென்றால் பகல் நேரத்தில் செய்கின்ற சில வழிபாடுகளைவிட, பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படுகின்ற சில குறித்த பூஜைகளுக்கு குறிப்பாக கனி அலங்கார பூஜைக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. இதற்குக் காரணம் தேவர்களுடையப் பூஜை நேரமாகவும், மகரிஷிகள், யோகியர்கள், சித்புருஷர்களுடைய வழிபாட்டு நேரமாகவும், தேவ கனி விருத்தியாகும் நேரமாகவும் விளங்குகின்ற பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் செய்கின்ற வழிபாடுகள் அனைத்தும் அவர்களுடைய பூஜை, புனஸ்காரங்களுடன் இணைவதால் அதற்கு அபரிமிதமான பலன்கள் கிட்டுகின்றன.

எனவே உங்களுடைய விடுமுறை நாட்களையோ அல்லது உங்களுக்கு வசதியான சில நாட்களையோ ஒவ்வொரு மாதத்திலும் குறித்துக் கொண்டு குறிப்பாக ஏகாதசி, சதுர்த்தி, ரோஹிணி இந்நாட்களிலேனும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீராடுகின்ற நற்பழக்கத்தைக் கொண்டிடுக!

கோமுக தீர்த்தம் கோடி பலன் தரும்!

ஒவ்வொருவருடைய இல்லத்திலும் எப்போதும் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்கள் எப்போதும் இருந்திடல் வேண்டும். இதுவே தீர்த்தக் காப்பு! இதைத் தவிர இவற்றை விட மிகவும் புனிதமான இறை தீர்த்தம் ஒன்று உண்டு, அதுதான் “கோமுகத் தீர்த்தம்” ஆகும். கோமுக தீர்த்தம் என்றால் ஆலயங்களில் சன்னதிகளிலிருந்து அபிஷேக நீர் வெளி வருகின்ற நீர்த் தாரைப் பகுதியிலிருந்து பெறப்படுகின்ற அபிஷேக, ஆராதனை தீர்த்தம் ஆகும். இவ்வபிஷேக நீர்த் தாரையே கோமுகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோமுக நீர்த்தாரையில் தான் கோடானு கோடி தேவதைகள் உறைகின்றனர். இறைவனுடைய திருமேனியைத் தழுவி வருகின்ற அபிஷேக ஆராதனை தீர்த்தமும், அபிஷேகப் பொருட்களும் கலந்து வருவதால் உலகத்தில், ஏன், இந்தப் பிரபஞ்சத்திலேயே இதற்கு நிகரானப் பிரசாதப் பொருள் எங்கும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இது மிகுந்த மகத்துவத்தைத் தன்னுள் கொண்டுள்ளது.

கோடானு கோடி யுகங்களாக ஸ்ரீராமருடைய காலத்திற்கும் முந்தையதாக இருந்து வருகின்ற சிவலிங்க மூர்த்திகளின், பெருமாள் மூர்த்திகளை ஸ்ரீஅகஸ்தியர் போன்ற எத்தனையோ கோடி மகரிஷிகளும், யோகியர்களும் தம் திருக்கரங்களால் பூஜித்து அபிஷேகித்து வந்த இறைச் சிலைகளின் மீதும், அர்ச்சாவதார மூர்த்திகளின் மீதும் பட்டு வருகின்ற அபிஷேக நீரென்றால், ஆராதனைப் பொருட்கள் என்றால் அதனுடைய மகத்துவத்தை எப்படித் தான் எடுத்துரைப்பது! இறைவனுடைய திருமேனியைக் காண முடியவில்லையே என்று ஏங்குவோர்க்கு அத்திருமேனியில் பட்டு வருகின்ற பிரசாத தீர்த்தமே இறை தரிசனப் பலன்களைத் தந்தருளும் என்றால் கோமுக தீர்த்த மகத்துவத்தை என்னவென்று தான் சொல்வது! இந்தக் கோமுகத் தீர்த்தத்திற்குத்தான் எவ்வளவு மகிமை!

கங்கை, காவிரி, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி போன்ற பல்லாயிரக்கணக்கான நதி தேவதைகளே ஒன்று சேர்ந்து வந்து பூஜிக்கின்ற மூலமூர்த்திகளிடமிருந்து வருகின்ற அபிஷேக நீர் என்றால், எத்தனை ஆயிரம் நதிகளின், தீர்த்தங்களின் மகிமைகளைத் தன்னுள் கொண்டுள்ளது இந்தக் கோமுகத் தீர்த்தம்!

கோமுக நீரும் ஒரு இறைப் பிரசாதமே!

நீங்கள் கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஒரு சிறு பாத்திரத்தையோ அல்லது கண்ணாடி பாட்டிலையோ எடுத்துச் சென்று கோமுகத்தில் இருந்து வருகின்ற அபிஷேக தீர்த்தத்தை இறைப் பிரசாதமாக எடுத்து வாருங்கள். இதனை இல்லத்தில் வைத்திருந்து தினந்தோறும் இல்லம் முழுதும் தெளித்து வந்தாலே போதுமே எத்தனையோ தோஷங்கள் நீங்குகின்றனவே, காரியத் தடங்கல் கள் அகல்கின்றனவே, இலட்சுமி, கடாட்சத்திற்கான நல்வழிகள் பிறக்கின்றனவே, தரித்திர சக்திகள் போய் விடுகின்றனவே! கர்மங்களையுங் கோமுக தீர்த்தம்!

மாவிலைகளால் தோரணங்கள் கட்டித் தினமும் ஹோமம் செய்து ஹோமத்திற்கு உரிய கலசச் செம்பிலிருந்து நீரை மாவிலைகளால் இல்லம் எங்கும் தெளித்த நற்காலம் போய்விட்டது. இந்நிலையில் ஹோமமே செய்ய முடியாத அளவிற்கு வீட்டிலும், நாட்டிலும் பிரச்னைகள் நிறைந்திருக்கும்பொழுது, ஹோமத்தை நடத்துவதற்கான வழிமுறைகளைப் பலரும் அறியாது இருக்கையில், ஹோமம் என்றாலே மிகவும் செலவாகின்ற ஒரு திட்டம் என்று ஆகிவிட்ட நிலையில் ஹோமம் செய்கின்ற நற்பழக்கமும் மறைந்து விட்டதே! ஹோம் கலச தீர்த்த சக்தியைப் பெறமுடியாமற் போனதற்கு உரிய பிராயச்சித்தமாக தின கோமுக நீர் அமைந்துள்ளது!

ஹோமத்திற்கு, ஹோம சக்திக்கு ஈடான சக்தி எதுவும் இல்லைதான், ஆனால் ஹோமமே செய்ய முடியவில்லையே என்று ஏங்காது, நீங்கள் ஆலயத்திற்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு இறைப் பிரசாதமாகக் கிட்டுகின்ற கோமுக நீரை தினமும் இல்லத்திற்கு எடுத்து வந்து அவ்வப்போது இல்லம் முழுதும் தெளித்து வாருங்கள். இதனால் தீருகின்ற தோஷங்களினால், இல்லம் புனிதம் பெற்று ஹோம தேவதைகளே தாமே முன் வந்து உங்கள் இல்லங்களில் ஹோமங்கள் நிறைய நடைபெறுகின்ற அளவிற்குத் தங்களுடைய ஆசிகளை அளித்துச் செல்கின்றனர்! உங்கள் இல்லத்தில் தீர்த்த தேவதைகள் பிரசன்னமாக கோமுக தீர்த்தமே வழிவகுக்கின்றது.

Enter the Angels!

உங்களுடைய வீட்டின் எட்டுத் திக்குகளிலும் அஷ்டதிக்கு தேவதைகள் உறைந்தால்தான் வீட்டில் நல்ல இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும், நற்செய்திகள் தேடி வரும், ஆனால் ஒட்டடையும், அழுக்கும் நிறைந்திருந்தால் உங்களுடைய இல்லத்தில் நல்தேவதைகள் எவ்வாறு நுழைவார்கள் ? துர்சக்திகளும் துர்தேவதைகளும்தான் உங்கள் இல்லத்தை ஆக்கிரமிக்கும். மேலும் ஒட்டடையானது பல எதிர்வினைச் சக்திகளுக்கும் (Negative Forces) தீவினைப் படிவுகளுக்கும்தான் இடம் அளிக்கின்றது. எனவே எட்டுத் திக்குகளுக்கும் உரித்தான தேவமூர்த்திகள், தேவாதி தேவதைகள் வந்தாலும்கூட அவர்களுடைய ஒளிமயமான சூட்சும சரீரங்கள் உறைவதற்குத் தக்க இடம் இங்கில்லை என்று திரும்பிச் சென்று விடுவார்களே!

தோஷ நிவர்த்தியாக உங்கள் இல்லத்தில் கோமுக நீரைத் தெளிக்கின்ற போது இதனுடைய புனிதத்துவத்தை மேலும் மேம்படுத்த வேண்டுமானால் சிறிது கங்கை, காவிரி போன்ற புனித நீருடன் கோமுக தீர்த்தத்தையும் கலந்து பஞ்சகவ்யம் எனப்படும் ஓர் அற்புதமான கலியுக தெய்வீக மருந்து தீர்த்தத்தையும் அதில் சேர்த்து வாருங்கள், பஞ்ச கவ்யம் என்றால் பசுஞ்சாணி, பசும்பால், பசுநெய், பசும்தயிர், பசுவின் மூத்திரம் (இது மிகச் சிறந்த கிருமி நாசினி என்று விஞ்ஞானப் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது) ஐந்தும் சேர்வது! அலுவலகங்கள், கடைகள் போன்ற இடங்களிலெல்லாம், மாவிலைகளைக் கொண்டு இவ்வரிய தீர்த்தத்தைத் தெளித்து வந்தால் பலவிதமான தோஷங்களுக்கும், கண் திருஷ்டி, பொறாமை, பகைமைகளுக்கும் மிக எளிமையான முறையில் தீர்வைக் கண்டிடலாம்.

தீவினை போக்கும் கோமுக தீர்த்தம்

கோமுக தீர்த்தம் என்றால் மூல ஸ்தான சிவ மூர்த்தி அல்லது பெருமாள் மூர்த்திகளின் சன்னதிகளில் பெறப்படுவது மட்டும் அல்ல. ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தி, நவகிரஹங்கள், முருகப் பெருமான், பிள்ளையார் என எந்த இறைச் சன்னதிகளிலிருந்தும் நீங்கள் கோமுக தீர்த்தத்தைப் பெற்றிடலாம், மூல மூர்த்திகளிடமிருந்து பெறுகின்ற கோமுக தீர்த்தத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. எனவே இதற்கெனவே கோமுகத் தீர்த்தத்தை வைத்திருப்பதற்காகவே ஒரு விசேஷமான வெள்ளிப் பாத்திரத்தையோ அல்லது அவரவர் வசதிக்கேற்ப மண் கலயமோ, புதிய கண்ணாடி பாட்டிலையோ வைத்திருத்தல் நல்லது. அதனுடைய சக்தி குறைவதற்கு முன்னதாகவே உடனடியாகவே இல்லம் முழுதும் மாவிலைகளைக் கொண்டு அல்லது தர்ப்பையால் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது தெளித்துப் பிறகு இல்லம் எங்கும் நிரவிடுக!

திருச்சி அருகே திருமழபாடி, திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் சிவாலயங்களில் நான்கு நந்திகளுக்கு இடையே அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த ரிஷபாயன கோமுகம் உள்ளது. நந்தி லோகங்களுடன் தொடர்புள்ள மிகுந்த தெய்வீக சக்தி நிறைந்த கோமுகம்! திருமழபாடி கோமுக தீர்த்தம், பிரிந்த தம்பதியினரை இணையச் செய்கின்ற நற்பலன்களைத் தரும். ரிஷிவந்திய கோமுக பூஜை, சந்தான பிராப்தியைத் தரும், இக்கோமுகங்களை நன்றாக நீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு தூபமிட்டு வலம் வந்து வணங்கிடுக! இதுவும் பெறற்கரிய திருப்பணியே! நல்ல பூஜையும் கூட!

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

கோமுக தீர்த்தத்தை உங்களுடைய வாகனங்கள், அலுவலகங்கள், கார்ஷெட், நிலம், பாக்டரி என அனைத்து இடங்களிலும் இட்டு வருக! தீவினைகளையும், தோஷங்களையும், சாபங்களையும் நாசம் செய்யும், அற்புதமான இறை தீர்த்தப் பிரசாதம் இது!

இன்னும் சொல்லப் போனால் உங்கள் இல்லத்தில் தீர்த்தப் பிரசாதத்திற்கென விசேஷமான சுரைக் குடுவையை வைத்திருங்கள். இதில் பலவிதமான கோயில் தீர்த்தங்கள், புனிதமான கடல் தீர்த்தங்கள், கோமுகத் தீர்த்தம், பஞ்ச கவ்வியம் போன்ற முக்கியமான இறை தீர்த்தப் பிரசாதமும் கலந்திருக்கட்டும், கோமுக தீர்த்த பூஜையும் எளிய தெய்வீக மயமான தோஷ நிவர்த்தி தரும் வழிபாடுதானே இதில் உங்களுக்கு என்ன செலவாகப் போகிறது? இதனை எடுத்துரைப்பதற்கு ஒரு சற்குரு இல்லையாதலின் இதனை அறியாது நீங்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றீர்கள்! எனவே இனியேனும் இல்லந்தோறும் இந்தக் கோமுகத் தீர்த்தப் பிரசாதமானது நிறைந்திருக்கட்டும்.

தெய்வீகப் பசு

தினமும் ஒரு பசுவைத் தொட்டு வணங்குகின்ற ஒரு வைராக்கியத்தை மேற்கொண்டு இதனை உங்கள் வாழ்நாள் முழுதும் செய்து வாருங்கள், ஏனென்றால் கோடிக் கணக்கில் தேவதைகள் மட்டுமின்றி தெய்வ மூர்த்திகளும் உறைகின்ற ஒரு பசுவின் திருமேனியைத் தொடுவது என்றால் இறைவனின் திருமேனியைத் தீண்டுவதற்கு உரித்தான ஒரு நல் வழியை யோக்யதாம்சத்தை நமக்குத் தந்தருள்கின்றது. இவ்வாறு தினமும் கோ பூஜை செய்து வருகின்றவர்கள் தான் அடுத்த பிறவியிலே மூலஸ்தானமூர்த்திகளை பூஜிக்கின்ற கைங்கரியத்தை இறைப் பரிசாகப் பெறுகின்றார்கள், ஆனால் இறைவனுடைய திருவிளையாடல் என்னவென்றால், இறை மூர்த்திகளின் அருகிலேயே இருந்து பூஜை செய்கின்ற பாக்கியத்தைப் பெற்றாலும் கூட நாமும் வறுமையில் இருக்கின்றோமே, நம்மால் சுகபோகமான வாழ்க்கையைப் பெற முடியவில்லையே என்ற ஏக்கங்கள் தான் நிறைந்திருக்கும். இதுதான் மாயையின் திருவிளையாடல்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பால பருவ குருகுல வாச அனுபூதிகள்

பெரியவர் சிறுவனுக்குப் பல இமய யோகிகளைத் தரிசனம் செய்து வைத்திருக்கின்றார். அவர்களை வேறு எந்த லோகங்களிலும் காண இயலாது! கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத்திற்கு நேரான பாதையொன்றுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் இது சிறப்பாக விளங்கியது. இப்போது மூடப்பட்டுவிட்டது.

சித்தர்களுக்குரிய சிறப்பான யாத்திரைப் பாதையிது! வழி நெடுக இன்றும் காணக் கிடைக்காத யோக ரூபங்களில் தவம் பொலியப் பிரகாசிக்கும் பல யோகியரைத் தரிசித்திடலாம். பொதியமலை, இமயமலை யோகியர் என்றாலே அவர்களுக்குத் தெய்வீகத்தில் தனிச் சிறப்பிடம் உண்டு. அவர்களை வேறு எந்த லோகங்களிலும் காண முடியாது, பல ஆண்டுகளுக்கு முன் நடையாத்திரையாகவும் மனோவழிப் பயணமாகவும் செல்கையில் சிறுவனுக்கு அத்தகைய யோகிகளின் முன்னிலையில்தான் பெரியவர் பல அரிய ஸ்ரீ காயத்ரீ தபஸ் முத்திரா விதானங்களைப் பயிலச் செய்தார்.

ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபமானது தற்போது அதனுடைய முழுமையான முறைகளில் ஜபிக்கப் படுவதில்லை, அது கடினமானதும் கூட! ஏனெனில், இம்மந்திரத்தின் 18 அட்சரங்களுக்கும் உரிய தேவதைகள், ரிஷிகள், சந்தஸ் எனப்படும் பாட இலக்கணம், குணம், பீஜம் என அனைத்தையும் (ஒரு மூலிகைக்குரித்தான கட்டு மந்திரங்களைப் போல்) துதித்து நிறைவாக ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதுதலே சிறப்பானது. ஆனால் இதனை அனைவருமே செய்திட முடியுமா ? தற்காலத்தில் ஒரு சிலரைத் தவிர வேத வித்துகள் கூட இந்த பரிபூர்ண ஸ்ரீ சமஷ்டி காயத்ரி மந்திரத்தை முறையாக ஒதுவது கிடையாது!

எனவே இதற்கு சித்புருஷர்கள் அருள்கின்ற ஜபயோக ஸ்ரீ காயத்ரீ தபஸ் முறைகள் தாம் கலியுகத்தில் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் பரிபூர்ண அனுகிரஹங்களை யோக, முத்திரா, ஆசன முறைகள் மூலம் நமக்குத் தருகின்றன.

காயத்ரீ நதி அன்பில்

சிறுவன் இவற்றைத்தாம் கேதார்நாத் - பத்ரிநாத் நேர் மலைப் பாதையில் இமயமலையிற் பெற்று திருச்சி மாந்துறை அருகே அபூர்வமாக வடக்கு நோக்கி ஓடுகின்ற ஸ்ரீ காயத்ரி நதியில் இம் முத்திரைகளை மீண்டும் ஆச்ரயித்து, பெரியவரின் அனுகிரகத்தால் குருவருளால் பல யோக சித்திகளைப் பெற்றான்! வடக்கு நோக்கி ஓடுகின்ற நதி தீரத்தில் செய்யப்படுகின்ற ஹோமம், பூஜை, ஜபம், தவம், யோகங்களுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. இன்றும் இந்த காயத்ரீ நதிதான் லால்குடி அன்பில் அருகே காவிரியில் சேர்கின்றது. நம்முடைய கோத்ராதிபதிகளாக விளங்குகின்ற 64 மஹரிஷிகளும் அப்போது வளமையுடன் பொங்கும், அக்காலத்தில் புனலாக இருந்த ஸ்ரீ காயத்ரீ நதி தீரத்தத்திற்கு ஓடோடி வருவார்கள் ! ஆனால் தற்போது இதன் பெயரும் மாறி, சீரற்ற நிலையிலும் வைக்கப்பட்டு விட்டது!

இந்த ஸ்ரீ காயத்ரீ தபஸ் முத்திரைப் பயிற்சிகளின் அரும்பலனாகத்தான் சிறுவனுக்கு ஆஸ்ட்ரல் பயணம் எனப்படும் மனோவழிப் பயணத்திற்கான கற்பக சித்தி கிட்டியது. ஒவ்வொரு யோகம் பயில்வதற்குமான அரிய, தெய்வீகத்வம் பொங்குகின்ற சிறப்பான இடங்கள் உண்டு.

காணுதற்கரிய செஞ்சிமலைத் தொடர்குகைகள் அஸ்வத யோகத்திற்கும் (ராஜாதேசிங்கு இதிற் சிறந்தவன்), கொல்லிமலை ஜலபந்தன யோகத்திற்கும், அய்யர்மலை சிவயகிரி யோகத்திற்கும் பர்வதமலை பிரம்ம யோகத்திற்கும் பெயர் பெற்றவை, இவ்வாறாக, பெரியவர் கற்றுக் கொடுத்த யோகப் பயிற்சிகள்  எத்தனை எத்தனையோ..!

.... இவ்வறாகத்தான்.... ராஜஸ்தான் பகுதியில் நிறைய தெய்வீக ரகசியங்கள் நிறைந்த கந்தக, சுண்ணாம்பு சக்திப் பாறைகளும், பிருத்வி சக்திகள் நிறைந்த மணற் சரகங்களும் உள்ளன. சில அற்புதமான வேர் மூலிகைகளும் இங்குதான் கிடைக்கும். சில இடங்களில் நாம் OZONE என்று சொல்வதைப் போல பரிசுத்தமான காற்று மண்டலப் பகுதியும் இங்கு உண்டு. இத்தகைய யோக சக்தி நிறைந்த தலத்திற்குத்தான் பெரியவர், சிறுவனை மனோ வழிப் பயணமாக இட்டுச் சென்றார், பிரபஞ்சத்தின் மிக அற்புதமான சித்தயோகி ஒருவரிடம் சில அபூர்வமான யோக சித்திகளைப் பெற்று உணர்த்தினார். பரிசுத்தமான காற்று மண்டலமாக விளங்குகின்ற இப்பகுதியில் ஆறு மணிநேரம் சுவாச பயிற்சி செய்தால் மற்ற சாதாரண இடங்களில் பத்து வருட காலத்தில் பெருகின்ற பரிசுத்தமான காற்றை இங்கு ஆறு மணி நேரத்திலேயே பெற்றிடலாம். இத்தகைய புனிதமான பகுதிகள் தற்போது ஆஸ்திரேலியாவிலும் மேரு மலையான ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் தானுள்ளது.

குருகுல வாசத்தில்தான், அதுவும் சித்புருஷரிடம் கிட்டுகின்ற குருகுலவாசத்தில் தான் வேத, மந்திர, யந்திர,தந்திர, யோக, பிராணாயாம முறைகளில் அற்புதமான இறைவழி முறைகளைப் பெற்றிடலாம்.

இன்றைக்கும் ராஜஸ்தானில் குறிப்பிட்டமரங்களிலிருந்து பெறப்படுகின்ற குங்கிலியமாகிய சாம்பிராணிக்கு இருதயத்திற்கு வலுவூட்டும் தூப சக்தியுண்டு. இதனையும் சிறுவனானவன் பிராணாயாம யோக சித்தி பயிற்சிகளாகப் பெற்றான்.

ஆஸ்ட்ரல் பயணத்தில், அந்த சித்தயோகி வாழும் இடத்திற்குச் சென்ற சிறுவனுக்குப் பலவிதமான யோக சித்த மந்திரங்களை உபதேசங்களாக பெரியவரின் முன்னிலையில் அளித்தவர் யார் தெரியுமா ?! அவர்தான்...!

திருப்பட்டூர் பிரம்ம மூர்த்தி

தலையெழுத்தை மாற்றும் தகைசான்ற ஸ்ரீ பிரம்ம மூர்த்தி!

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மாவிற்குத் தனி சன்னிதி காணீர்!

திருச்சி பெரம்பலூர் சாலையில் பாடாலூர் அருகேயுள்ள திருப்பட்டூரில் ஸ்ரீ பிரம்ம மூர்த்தியானவர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலித்துக் கொண் டிருக்கின்றார். ஸ்ரீ பிரம்மமூர்த்தி தான் பெற்ற சாபத்தின் காரணமாகப் பூலோகத்தில் எவ்விதக் கோயிலும் இடம் பெறவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தம்முடைய சாபத்திற்கு அவர் ஆதி சிவனிடம் தக்க பிராயச்சித்தத்தைப் பெற்று இன்று அனைத்துச் சிவாலயங்களிலும் கோஷ்ட மூர்த்தியாக கோமுகத்திற்கு மேற்புறம் அமர்ந்து அருள்பாலிக்கின்றதை கண்கூடாக அறிவீர்கள்! தஞ்சாவூர் அருகே கண்டியூரில் தனிச் சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ பிரம்ம மூர்த்தி, திருச்சி அருகே திருப்பட்டூரிலும் பிரம்மாந்திர பிரம்ம மூர்த்தியாக, சிவலிங்க மூர்த்தியான ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரைப் பிரதிஷ்டைச் செய்தவராக அருள்பாலிக்கின்றார்.

வீட்டில் பைத்தியம் பிடித்தல், மன நோயாளிகள், பிள்ளைகள் இழப்பு, கணவன்/மனைவியின் துர்மரணம், வியாபார நஷ்டம், சொத்து இழப்பு, மன வியாதிகள், வறுமை, திருட்டு போதல் என்று தினமும் பலவிதமான மன வேதனை களுடன் நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்ற அளவில் பலவிதமான இன்னல்களுக்கு இடையே வாழ்கின்றவர்கள் அடிக்கடி திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்ம மூர்த்தியைத் தரிசனம் செய்து அவருக்கு தாமே அரைத்த சந்தன, மஞ்சள் காப்பிட்டுத் தர்ப்பையால் ஆன கிரீடத்தை அணிவித்து தம்முடைய பிறந்த நட்சத்திர தினங்களிலும், புனர்பூசம், திருவாதிரை, சதயம் திங்கள், வியாழக் கிழமை போன்ற நாட்களில் திருப்பட்டூர் ஸ்ரீ, பிரம்ம மூர்த்திக்கு108 புளியோதரை உருண்டைகளைப் படைத்து வருதல் வேண்டும்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி திருப்பட்டூர்

நான்கு, நான்கு உருண்டைகளாக இந்த நான்முகனுக்கு 27 வரிசைகளில் ஒரு வாழை இலையில் 108  உருண்டைகளை வைத்துப் படைத்திடுக! இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணை ஆகிய ஐந்தும் கலந்த பஞ்சதீப 36 அகல் விளக்குகளை ஏற்றி, வணங்கி அன்ன உருண்டைகளைப் பிரசாதமாக ஏழைகளுக்கு அளித்து வந்திடில் ஸ்ரீ பிரம்ம மூர்த்தியே அவருக்கு உரித்தானத் தலையெழுத்தை மாற்றி எழுதக் கூடிய நல்பாக்கியத்தை விதியிருப்பின் விதி கூட்டி அருள்வார். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைத் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த ஆனால் பலரும் அறியாத ஸ்ரீ பிரம்ம மூர்த்தி!

ரசமணியின் தெய்வீகம்

ரசமணியின் தெய்வீக ரகசியங்கள்

ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி வழிபட்ட 108 சிவலிங்கங்களிலுள்ள ரசமணி சக்திகள் அவரது தேகத்தில் ஐக்கியமாயின. இதன் காரணமாகவும், பகுதான்ய வருடத்தின் மண்டல விரத பூஜா பலன்கள் காரணமாகவும் அமுத புஷ்ப மூலிகை தரிசனமாகக் கிட்டியதோடு ரசமணிக் கோளங்களைக் கட்டும் வித்தையையும் அவர் தெய்வீக சக்தியாகப் பெற்றாரல்லவா!

ஸ்ரீ அருணாசலப் பெருமானின் திருவருளால் கிட்டிய ரசமணி மூலிகை சக்தியை ஸ்வாமிக்கே அர்பணிக்க விழைந்த ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி சிவபெருமானின் 64 அவதார மூர்த்திகளைக் குறிக்கும் வண்ணம், 64 இரசமணிக் கோளங்களை இறையருளால் உருவாக்கி அவற்றில் அமுத புஷ்ப மூலிகைகளின் சக்தியையும் செலுத்தி தம் தவசக்தியால் பூசுர பாறைகளின் மேல் வைத்துப் பூஜித்து திசைக்கு எட்டு லிங்கங்களாக அஷ்டதிக்கெட்டு கோள் இரசமணி லிங்கங்களாகப் பிரதிஷ்டை செய்தார். அவற்றின் இரசமணிக் கோளங்களின் படுகையில் தாம் நாம் இன்று கிரிவலம் வருகின்றோம் என்பது மறந்து விடலாகாது. அதாவது இன்று கிரிவல அடியார்கள் வலம் வருகின்ற பாதை முழுதும் இரசமணிக் கோளங்களின் சக்திப் படுகையாக, தவ ஒளிப் பாதையாக அமைந்து பலவிதமான கர்மங்களைக் களைந்து நல்ல பிரார்த்தனைகளைப் பலிதமுறச் செய்கின்றன.

ரசமணியிலுமா வித்தை !

இன்றைக்கு ரசமணிகளை முறையாகச் செய்யாது எதையெதையோ ரசமணிகளாக ஏமாற்றி விற்போரும் உண்டு! ரசமணி சித்தி என்பது வெறும் மூலிகைக் கட்டினால் மட்டும் வருவது அன்று ! வெறும் பாதரசப் படிவுகளல்ல குண்டுகளல்ல அவை ஆழ்ந்த தெய்வ பக்தியும், நிறைந்த குருவருளும் இதற்கு வேண்டும், ரசமணி சித்தி செய்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லாது, இதனை இறைச் சேவையாகப் புரிகின்றவரிடமே ரசமணிகளைப் பெறவேண்டுமே தவிர எவரிடமாவது இரசமணியை வாங்கி ஏமாந்து விடாதீர்கள். மேலும் ரசமணிகள் அனைத்துமே முதலில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரின்பாதங்களில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். ஸ்ரீ அருணாசல லிங்க மூர்த்தியின் பாதார விந்தங்களில் படிந்த ரசமணிகளுக்குத்தான் ரசமணி சக்தி கூடுமே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று விலைபேசி எந்த ரசமணியையும் எவரிடமும் வாங்காதீர்கள்!

உண்மையாக ரசமணி சித்தி பெற்றவர்கள் தெய்வீக இறைப்பணிக்கு உண்மையாகத் தம்மை தெய்வீக பணியில் ஈடுபடுத்தியோருக்கு செய்து கொடுப்பார்களே தவிர, ஏதோ கழுத்தில் மலையாக மாட்டிக் கொண்டு வந்து செல்வதற்கு மட்டும் தரமாட்டார்கள். ஏனென்றால் முதன் முதலாக 64 மூத்த இரசமணிக் கோளங்களைப் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி இன்று உலகெங்கும் எத்தனையோ ஆழப் புதையலாகப் பல திருத்தலங்களிலும், பல்வேறு இடங்களிலும் இவற்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அவையெல்லாம் தெய்வீக இரகசியங்களாகவே இன்றும் விளங்குகின்றன. ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி இவ்விதம் ரசமணிகளைப் பதித்த இடங்களில் தாம் இன்று பொன்னும், மணியும், வைரமும், முத்தும், பவளமும் கொழிக்கின்றன. கனிவளம் ஏற்படுவதும் இதனால்தான்!

திருந்திட நல்வாய்ப்பு!

சரியான முறையில் ரசமணிகளைச் செய்யாது இதில் பணம், கோர்த்து கர்மங்களைச் சேர்த்து கொண்டோருக்கு தன் வாழ்வில் ஓரளவு பரிகாரமாக ஒரேயொரு முறையாக, வருகின்ற பகுதான்ய வருட கார்த்திகை தீபப் பெளர்ணமியன்று திருஅண்ணாமலையாரை வலம் வந்து தன் குற்றங்கட்கு வருந்தி மனதார வேண்டி பிராயசித்தம் வேண்டி ஸ்ரீஅருணாசலேஸ்வரரைப் பிரார்த்திக்க வேண்டும்.

மாலையுடன் மலை வலம்!

அறிந்தோ அறியாமலோ பலரும் இத்தகைய அரை குறையான ரசமணிகளைப் பெற்றிருக்கலாமன்றோ! அவர்கள் அவற்றைத் தம் கரங்களில் தாங்கி, இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அவற்றிற்கு ரசமணி சித்தியை தார்மீகமாக, குருவருளால் நன்முறையில் ஊட்டி பூஜையறையில் வைத்து நன்முறையில் பூஜித்து உரிய இறைப் பணிகளை செய்து நல்வாழ்வு அடைந்திட வேண்டும். வரும் கார்த்திகை மாதப் பெளர்ணமி தினத்தில் கிரிவலம் வரவிரும்பும் அடியார்கள் ருத்ராட்சம், ஸ்படிகம், இரசமணி, துளசி, வில்வ, தாமரை மாலைகளை ஒரு சந்தனப் பெட்டியிலோ அல்லது வாழை இலை/தாமரை இலை/மஞ்சள் துணியில் வைத்து, கீழே விழுந்து விடாமல் நன்கு கட்டி, திருக்கரங்களில் நன்கு மூடி கிரிவலம் வந்தால் ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி குழிப் புதையலாகப் பிரதிஷ்டை செய்த 64 இரசமணிக் கோளங்களின் தெய்வீக சக்தியும் இவற்றில் கூடி இறை சக்தியை மேம்படுத்தும். இயன்றவரை சுயநலப் பிரார்த்தனைகளுக்கு இல்லாமல் தியாக மனப்பான்மையுடன் மக்களின் நன்மைக்காகப் பூஜை/பிரார்த்தனை செய்திடுக!

மேலும் நம் இல்லத்தில் உள்ள பலவிதமான மாலைகளில் பலவித தோஷங்கள் சேர்ந்திருக்கக் கூடும் அல்லவா! அசுத்தமான உடலோடு, அநாகரீகச் செயலோடு பூஜை மாலைகளை எடுத்தலாலும், சுற்றுப் புறச் சூழலாலும் பலவித தோஷங்கள் படிவதுண்டு. ஒவ்வொரு திங்களன்றும் ருத்திராட்ச மாலைகளை வில்வ தீர்த்தத்தால் முறையாகத் தூய்மை செய்தல் வேண்டும். சாளக்கிராமங்களையும், அதனதன் வகைகளைப் பொறுத்து புதன் சனிக்கிழமைகளில், துளசி/வில்வ தீர்த்தங்களால் தூய்மை செய்திட வேண்டும். இதற்கென வழிமுறைகள் உண்டு. ஆனால் இவற்றை அறிய ஒரு சற்குரு வேண்டுமே என் செய்வது?

எனவே மேற்கண்ட சாளகிராம மூர்த்திகளையும், ருத்ராட்ச, துளஸி, ஸ்படிக, ரசமணி மாலைகளையும் தூய்மை செய்ய வாழ்நாளில் கிட்டுகின்ற ஒரேயொரு பெரும்பாக்கியமாக பகுதான்ய ஆண்டில் மட்டும் கிட்டும் அரிய வாய்ப்பாக, இவற்றை சந்தனப் பெட்டியிலோ, மஞ்சள் துணியிலோ வைத்து பத்திரமாகத் தாங்கியவாறு கார்த்திகைப் பெளர்ணமி தினத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் அவற்றிலுள்ள தோஷங்கள் எல்லாம் நீங்கி, ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியின் பரிபூரண ஆசியும், ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷி, சித்புருஷ மஹரிஷிகளின் குருவருளாலும், திருஅண்ணாமலையினைச் சுற்றும் பூமியில் அமைந்துள்ள 64 இரசமணி கோளலிங்க மணிகளின் பூசுர தெய்வீக சக்தியாலும் அவற்றின் தோஷங்கள் நீங்கி, அவற்றில் மஹரிஷிகளின் பூஜா சக்தியும் நிறையும். இதன் பிறகு இவற்றை முறையாக அணிந்து/ பூஜையறையில் வைத்து வழிபாடுகளைத் தொடர அதியற்புத கார்ய சித்திகள் கை கூடும்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி
திருக்கண்டியூர்

அறிவீர் உபதேச நியதிகளை! தவிர்ப்பீர் அதர்ம வழிகளை!

எம்முடைய அக்டோபர், நவம்பர், டிசம்பர் 191998 (இவ்விதழ்) ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழ்களில் வெளி வந்துள்ள அரிய ரசமணி தெய்வீக விளக்கங்கள் யாவும் ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் பாரம்பர்யத்தில் வந்தவரால் வாக் தத்துவ ரீதியாக சற்குருவின் அருட்கடாட்சத்தால் குருவாக்யங்களாகப் பெறப்பட்டவையாதலின் இவையாவும் வாக்கால் மட்டுமே மக்களுக்கான இறைப்பணிக்காகவே பிரசாரம் செய்யப்பட வேண்டிய திருவருள் கூடியவை!

குரு சிஷ்ய பரிவர்த்தனையாக அறியப்பட வேண்டிய இந்த அரிய ரசமணி மூலிகா ரகசிய தாத்பர்யங்கள் யாவும் குருவாக்யங்களாகவே ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் பரிணமிக்கின்றன. குரு-சிஷ்ய சம்பிரதாயமாகவே இவை அறிந்து கடைபிடிக்கப்பட வேண்டுமாதலின், இந்த ரசமணி மூலிகை பந்தன விஷயங்களை மறு பிரதி எடுத்தல், காப்பியடித்தல், இவ்விஷயங்களை கிரஹித்துத் தம் பாணியில் எழுதுதல் போன்ற பத்திரிகை தர்மத்திற்கு விரோதமான செயல்களால் மூலிகா சாபங்கள் தாம் விளையும் என்பதோடு குரு கட்டளை மீறியதாகவும் அமைகின்றன என்பதையும் உணர்தல் வேண்டும்,

பலருக்கும் இதனை எடுத்துரைத்துத் தெய்வீகப் பிரச்சாரம் செய்தலும் இவ்விதழ்களைப் பிறருக்கும் பெற்றுத் தந்து குருவாக்கியங்களாக மிளிரும் தெய்வீக வழிமுறைகளை உணர்த்துதலும்தான் மிகச் சிறந்த, பெறுதற்கரிய தெய்வீகத் திருப்பணிகளுள் ஒன்றாக அமைகின்றது.

பவ கரண நேர சுத்த சக்தியைப் பற்றி அறிவீர்களா?

திதி, நட்சத்திரம் போன்று கரணம், யோகநேரங்களும் உண்டு! யோக, கரண நேரங்கள் கிரஹ சஞ்சாரங்களுடன் தொடர்பு உள்ளவை! பவகரண நேரம் சில விசேஷமான பூஜைகளுக்கும்,நோய் நிவாரண மருந்து உட்கொள்ளவும் ஏற்புடையது!

பஞ்சாங்கம் என்பது மிகவும் புனிதமான கால தேவதா நூல். நம்முடைய வாழ்க்கையானது குறிப்பிட்ட பல ஆண்டுகளுக்கு உட்பட்டதாக விதிப்படி வரையறுக்கப்பட்டுள்ளது அல்லவா! கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என ஐந்து (பஞ்ச) அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு முடிவில் இதுவே பஞ்சாங்கமாக ஆயிற்று. இந்த ஐந்தில் கிழமை, தேதி, நட்சத்திரம் ஆகிய மூன்றைப் பற்றியே நாம் ஓரளவு அறிந்துள்ளோம். யோகம், கரணத்தை மறந்து விட்டோம்!

திருமணம், மனைகோள் விழா, கிரஹ பிரவேசம், பூப்பு நீராட்டு விழா போன்ற பல சுபதினங்களில் இந்த ஐந்தையும் கருத்தில் கொண்டுதான் சுப நேரம் கணிக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் யோகம், கரணம் என்ற இரண்டையுமே விட்டு விட்டுத்தான், பெரும்பாலானோர் தவறாக முகூர்த்த தினத்தைக் கணிக்கின்றனர்.

“நல்ல முகூர்த்த நேரம் பார்த்துதானே திருமணம் செய்து வைத்தேன்! ஏன் இத்தகைய பிரச்சனைகள்”, என்று பலரும் வருந்துவதற்குக் காரணமே இந்த ஐந்து கால அங்கங்களை மொத்தமாகச் சேர்த்து முகூர்த்த தினத்தைக் கணிக்காமல் நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவற்றை மட்டும் வைத்துக் கணிப்பதுதான்.

பக்தியுள்ளவரும், உண்மையானவரும், ஜோதிடத்தை விற்பனைப் பொருளாக ஆக்காமல் அதை மக்கள் சேவையாக, இலவச சேவையாக, இறைப்பணியாகச் செய்து வருகின்ற ஒரு சில உத்தம ஜோதிடர்கள் இன்றைக்கும் இந்த ஐந்தையும் கருத்தில் கொண்டுதான் முகூர்த்த நேரத்தைக் கணிக்கின்றார்கள். ஏழு கிழமைகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், பதினாறு திதிகளைத் தவிர இருபத்தி ஏழு யோகங்களும், பதினோரு கரணங்களும் இருக்கின்றன. பொதுவாக விவசாயத் துறைக்கு மட்டும் தான் கரண ஜோதிடம் என்று கருதப்படுகிறது. ஆனால் அனைத்து சுபதினங்களுக்கும் கரணத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

27 ஸ்ரீயோககால மூர்த்தி தேவதா பூஜை

1. ஓம் விஷ்கம்ப யோக மூர்த்தியே போற்றி
2. ஓம் ப்ரீதி யோக மூர்த்தியே போற்றி
3. ஓம் ஆயுஷ்மான் யோக மூர்த்தியேபோற்றி
4. ஓம் சௌபாக்ய யோக மூர்த்தியேபோற்றி
5. ஓம் சோபன யோக மூர்த்தியே போற்றி,
6. ஓம் அதிகண்ட யோக மூர்த்தியே போற்றி
7. ஓம் சுகர்ம யோக மூர்த்தியே போற்றி
8. ஓம் திருதி யோக மூர்த்தியே போற்றி
9. ஓம் சூல யோக மூர்த்தியே போற்றி
10. ஓம் கண்ட யோக மூர்த்தியே போற்றி
11. ஓம் விருத்தி யோக மூர்த்தியே போற்றி
12. ஓம் துருவ யோக மூர்த்தியே போற்றி
13. ஓம் வ்யாகாதம் யோக மூர்த்தியேபோற்றி
14. ஓம் ஹர்ஷண யோக மூர்த்தியே போற்றி
15. ஓம் வஜ்ர யோக மூர்த்தியே போற்றி
16. ஓம் சித்தி யோக மூர்த்தியே போற்றி
17. ஓம் வ்யதீபாத யோக மூர்த்தியே போற்றி
18. ஓம் வரீயான் யோக மூர்த்தியே போற்றி
19. ஓம் பரிக யோக மூர்த்தியே போற்றி
20. ஓம் சிவ யோக மூர்த்தியே போற்றி
21. ஓம் சித்த யோக மூர்த்தியே போற்றி
22. ஓம் சாத்திய யோக மூர்த்தியே போற்றி
23. ஓம் சுப யோக மூர்த்தியே போற்றி
24. ஓம் சுப்பிர யோக மூர்த்தியே போற்றி
25. ஓம் பிராம்ய யோக மூர்த்தியே போற்றி
26. ஓம் ஐந்திர யோக மூர்த்தியே போற்றி
27. ஓம் வைதிருதி யோக மூர்த்தியே போற்றி

மேற் கூறிய 27 யோக மூர்த்திகளைத் தினந்தோறும் துதித்து வழிபடுதல் மிகவும் எளிமையான யோக மூர்த்தி பூஜை முறையாகும். இப்பூஜைக்கு நாம் செலவிடும் நேரமோ சில நிமிடங்களே! ஆனால் கிடைக்கும் பலன்களோ அபரிமிதம்! யோக தேவதை வழிபாட்டைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவரின் மற்றோர் அம்சமாய் விளங்கும் பதினோரு கரண தேவதைகளையும் வணங்கி வழிபட வேண்டும்.

ஸ்ரீகரண மூர்த்தி தேவதா பூஜை

1. ஓம் பவ கரண மூர்த்தியே போற்றி
2. ஓம் பாலவ கரண மூர்த்தியே போற்றி
3. ஓம் கௌலவ கரண மூர்த்தியே போற்றி
4. ஓம் தைதுல கரண மூர்த்தியே போற்றி
5. ஓம் கரசை கரண மூர்த்தியே போற்றி
6. ஓம் வணிசை கரண மூர்த்தியே போற்றி
7. ஓம் பத்திரை கரண மூர்த்தியே போற்றி
8. ஓம் சகுனி கரண மூர்த்தியே போற்றி
9. ஓம் சதுஷ்பாத கரண மூர்த்தியே போற்றி
10. ஓம் நாகவ கரண மூர்த்தியே போற்றி
11. ஓம் கிம்ஸ்துக்கினம் கரண மூர்த்தியே போற்றி

இவ்வாறாக தினந்தோறும்

16 திதிகளையும்
27 நட்சத்திரங்களைத் துதித்தும்
7 கிழமைகளை வழிபட்டும்
27 யோகங்களைப் பூஜித்தும்
11 கரணங்களை வணங்கியும்

இறுதியில் பஞ்சாங்க பரிபூர்ண பூஜையாக குறிப்பாக தினமும் சந்திர ஹோரை நேரத்தில் ஸ்ரீ கால பைரவாய நம: (போற்றி) என்று துதித்தும் வழிபட்டு வர இதுவே மிகச் சிறந்த கால தேவதா பூஜையாக அமைகின்றது. இதற்கு 5 நிமிடங்கள் கூட ஆகாது! அறுபது, எழுபது, எண்பது என தாராளமாக ஆயுட்காலத்தைப் பெற்றுத் தந்திருக்கும் கால தேவதா மூர்த்திகட்குத் தினந்தோறும் ஒரு ஐந்து நிமிடத்தை ஒதுக்குவது எளிமையானதுதானே!

கால தேவதா பூஜை , பஞ்சாங்க பூஜை

நம்முடைய வாழ்நாளானது இறை நியதியாக இத்தனை கோடி சுவாசங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுவாச பந்தன இலக்கணங்களை நாம் அறியாமையினால்தான் இத்தனை ஆண்டுகள் என்று நமக்குப் புரியும்படி நாமாக வாழ்க்கையை ஆண்டுக் கணக்கில் வைத்துள்ளோம். ஆனால் நமக்கு உடலைத் தந்து அந்த உடல் வாழ்வதற்கான ஒரு காலப்பகுப்பையும் தந்து, நமக்கு இனிமையான வாழ்வையும் இறைவன் அளித்திருக்கும்போது எந்தக் கால தேவதையின் ஆட்சி பீடத்தில் நாம் வாழ்கின்றோமோ அந்த காலதேவதா மூர்த்திக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

என்றைக்கேனும் இந்த நாள், கிழமை, நட்சத்திர, யோக, கரண தேவதா மூர்த்திகளை நாம் வழிபட்டிருக்கிறோமா அல்லது இவர்களுக்கெல்லாம் மூலமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீகால பைரவரையாவது நாம் போற்றித் துதித்திருக்கின்றோமா? கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம், எங்கோ தெற்கே பார்த்துக் கொண்டு, ஒரு மூலையில் இருளில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீகால பைரவருக்கு ஒரு சிறிய வணக்கத்தைச் செலுத்தி விட்டு, சமயத்தில் அது கூட இல்லாமல், வேக வேகமாக வெளிவந்து விடுகின்றோம். இதுதானா, எந்தப் பொன்னான காலத்தில் வாழ்கின்றோமோ அந்தக் காலத்திற்கு உரிய தேவமூர்த்திக்கு நாம் செய்கின்ற நன்றி வழிபாடு ? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

அக்காலத்தில் ஜோதிடர்கள் அனைவரும் காலையில் சூரிய நமஸ்காரம், மதிய உச்சிக் கால அபிஜித் முகூர்த்தத்திற்கான வழிபாடு, பிரளய கால பைரவர் பூஜை, சந்திர தரிசனம், பெளர்ணமி பூஜை, விடியற் காலையில் வானத்தில் சுக்கிர, குரு கிரஹ தரிசனம் மற்றும் அந்தந்த ருதுக் காலங்களில் கிட்டுகின்ற பலவகையான கிரஹங்களின் தரிசனங்கள், தினந்தோறும் இரவில் கால பைரவருக்குப் புனுகு இட்டு, முந்திரிப் பருப்பு, மாலை சாற்றி காலதேவதா வழிபாட்டைப் பூர்த்தி செய்தல் இவ்வாறாக, பலவகையான நவகிரஹ வழிபாடுகளையும், காலதேவதா மூர்த்தி பூஜைகளையும் மேற்கொண்டமையால் தான் தீர்க்க தரிசனத்துடன் எதிர் காலத்தை உரைக்கும் திண்ணியத்தையும், மன உறுதியையும் பெற்றிருந்தார்கள். அவர்கள் இதனை ஒரு தெய்வீகக் கலையாகப் பராமரித்தமையால்தான் எவ்வித ஆசையும் கொள்ளாமல் ஜோதிடத்திற்கு ஒரு பைசா கூட வசூலிக்காமல் இதனைப் பரம்பொருள் தனக்களித்த அனுக்கிரகமாகவே பக்தி பூர்வமாக உணர்ந்து நல் வாழ்க்கை வாழ்ந்தனர். இவ்வாறு ஜோதிடக் கலையை தெய்வீகக் கலையாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற உண்மையான ஜோதிடர்கள் இன்றும் உண்டு.

பஞ்சாங்கம் பூஜையறைப் பொருளே!

ஒவ்வொருவரும் பூஜையறையில் ஒரு பஞ்சாங்கத்தை வைத்திருந்து தினந்தோறும் அந்தந்த தினத்திற்குரிய கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்து தேவதாமூர்த்திகளின் பெயர்களை ஓதி வழிபட்டு, ஸ்ரீகால பைரவ தரிசனத்தையும் தினந்தோறும் பெறுதலே சிறப்புடையதாகும். குறிப்பாக, ஜோதிடர்கள் இதனை நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

பதினோரு வகையான கரணங்களுள் ஒன்றுதான் பவ கரணமாகும். சுப கரணங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக தானியங்களை விதைத்தல், நாற்று நடுதல், பயிரிடுதல், களையெடுத்தல் போன்றவற்றுக்காகவும் பவ கரணம் மிகவும் சிறப்பானதாக விளங்குகிறது. பவகரணத்தில் செய்யப்படும் உழவுத் தொழில்களுக்குப் பன்மடங்காகப் பலன்கள் பெருகும், விளைச்சலும் நன்கு விருத்தியாகும். அனுஷ நட்சத்திர, பஞ்சமி திதி போன்று சுபமான நேரங்களுள் இதுவும் ஒன்றாகும்,

வானத்தில் சூரியனும் சந்திரனும் வெவ்வேறு பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன அல்லவா? சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள மத்தியப் புள்ளிக்கு சந்த்ர பாஸ்கரம் என்று பெயர்! இதுதான் கரண தேவதையின் உறை விடமாகும். திதி என்பது ஒரு கால அளவீடாக இருந்தாலும் உண்மையில் அது சூரிய, சந்திர கிரஹங்களுக்கிடையே உள்ள தூரத்தைக் குறிக்கின்றது. கரணம் என்பது சூரிய, சந்திர கிரஹ நிலைகளுக்கு இடையே உள்ள மத்தியப் பகுதியாக அமைந்து, திதியில் பாதியாகவும் அமைகின்றது. .

திதி, கரண மஹிமையை விளக்கப் புகுந்தோமேயானால் அது விரிந்து விடும்! ஒவ்வொரு திதியும் கரணமும் மிகுந்த சக்தி வாய்ந்த நேரமாக விளங்குகின்ற அமிர்த கால பகுதியைக் குறிக்கின்ற ஜோதிட ரகசியங்களும் உண்டு. கரணமென்பது திதியினுடைய பாதியைக் குறிப்பதால் அது தொடங்குகின்ற நேரத்தில் திதியின் சக்தியும், சூர்ய, சந்திர, அந்தந்த கிரஹ சக்தியும் சேர்ந்து அதன் சக்தியைப் பன்மடங்காகப் பெருக்குகின்றன.

பவகரண நோய் நிவாரண சக்தி

பவகரணத்தில் மருத்துவ குண சக்திபெருகுகின்றது! காரணம், பல மூலிகைகள் மொட்டுகளிலிருந்து மலர்வதும், அவை தங்களுடைய தெய்வீகச் சக்தி கிரணங்களை வெளியிடுகின்ற நேரமும் பவகரணமாகும். பொதுவாக, தெய்வீக மருத்துவ குணங்களைத் தரவல்ல தேவாதி, தெய்வ மூர்த்திகளாக விளங்குகின்ற அஸ்வினி தேவர்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கின்ற யோக நிலையே பவ கரணமாகும்,

தேய்பிறையில், செவ்வாய்க் கிழமையில் கூடுகின்ற பவ கரணத்தில் புது மருந்துகளை, உட்கொள்ளத் தொடங்கினால் வியாதி, நிவாரணம் துரிதமாகும்.

மனிதன் இப்புவியில் வாழ்வாங்கு வாழ்வதற்காகத்தான் இத்தகைய வழி முறைகளையும், பூஜை முறைகளையும் பெரியவர்கள் தந்துள்ளனர் என்பதை நாம் உணர்ந்தால் அதுவே, நல் வாழ்க்கையின் முதற்படியாக அமைந்துவிடும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

தேய்பிறையில் வருகின்ற பவகரணத்தில் அறுவை சிகிச்சை செய்தல், மருந்துகளை உட்கொள்வதால் நல்ல / நோய் நிவாரணத்திற்கு வழி வகுக்கும். ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்திக்கான சகஸ்ரநாம் துதி மற்றும் பூஜைகளை பவகரண நேரத்தில் கடைபிடித்தால் கடுமையான நோய்களுக்கான நிவாரணம் கிட்டும், பவ கரணத்தில் ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்து வந்தாலோ மனக் கிலேசங்களும், அமைதியின்மையும் குறைந்து மனநோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. நெடுநாட்களாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானவர்களுக்காக அவர்களோ, அவர்கள் சார்பாக குடும்பத்தினரோ, நண்பர்களோ, உறவினர்களோ பவ கரண நேரத்தில் ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதால் தேவையில்லாத செலவீனங்கள் குறைந்து துரிதமாக நோய் நிவாரணமாகி நல்ல நிலையில் இல்லத்திற்குத் திரும்பிவருவதற்கான நல்வழிகள் கிட்டும். இதற்குரிய பவ கரண, ஸ்ரீதன்வந்த்ரீ ஹோம் வழிபாடுகளும் உண்டு.!

கடுமையான தோல் வியாதிகள், T.B. மற்றும் இருதய நோய்கள் உள்ளோர் பவ கரண நேரத்தில் “இந்திராக்ஷி  கவசம்” என்னும் அற்புதமான மந்திரத்தை ஓதி, தேய்பிறை பவகரண நேரத்தில் ஏழைகளுக்குப் பட்டு வஸ்திரங்களையும் புதுத் துணிகளையும் தானமாக அளித்து வருவதால் நெடுங்காலமாக இருக்கும் நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டுகின்றது. எவ்வாறு நட்சத்திரம் மற்றும் திதி நேரங்களை நாம் அறிந்து கொள்கிறோமோ அதேபோலத் தான் பவகரண நேரத்தையும் பஞ்சாங்கத்தின் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ பவ ஒளஷதீஸ்வரர்

திருத்துறைப்பூண்டியில் அருள் பாலிக்கின்ற ஸ்ரீபவ ஒளஷதீஸ்வரர் சுவாமிக்கு பவகரண நேரத்தில் செம்பருத்திப் பூவினால் அர்ச்சனை செய்து கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, பிரண்டை போன்ற மூலிகைகள் கலந்த சாம்பார் சாதம், காய்கறி கலவைச் சாதம் போன்றவற்றைப் படைத்து அன்னதானமாக அளித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

பொதுவாக ஸ்ரீபவ ஒளஷதீஸ்வர சுவாமிக்கு பவ கரண நேரத்தில் செய்கின்ற அர்ச்சனை, ஆராதனைகள், மூலிகைத் தைல அபிஷேகங்கள், நைவேத்யப் படைப்புகள், மூலிகை வகை (கருவேப்பிலை, கொத்த மல்லி,புதினா, பிரண்டை போன்ற துவையல்/ பொடி சாதம்) உணவைத் தானமாக அளித்தல் போன்றவற்றிற்கு மகத்தான பலன்கள் உண்டு.

மஹானுக்கும் அருள்பாலிக்கும் பவகரண நேரம்!

ஸ்ரீ அப்பைய தீட்சிதர் சிவ பக்தியில் சிறந்த பெரும் மகானாவார். மிகவும் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற ஸ்ரீ அப்பைய தீட்சதர் மிக முக்கியமான தெய்வீக நற்பணிகளை ஆற்றும் போது தன்னுடைய வயிற்று வலியை ஒரு சிறு மரக் கட்டைக்கு மாற்றி விட்டு, தன்னுடைய நற்காரியங்களை முடித்துவிட்டு மீண்டும் அவ்வயிற்று வலியைத் தன்னுடலில் ஏற்றுக் கொள்வார். அதுவரையில் அவ்வயிற்று வலிக்குரித்தான வேதனைகள், துடிதுடிப்புகள் எல்லாம் அக்கட்டையில் ஏறி அது ஆடிக் கொண்டிருக்கும்!

ஒரு சிறு மரக்கட்டைக்குத் தன்னுடைய கடுமையான நோயை மாற்றும் தெய்வீக சக்தியுள்ளவர், அதனைத் தீர்க்கின்ற சித்தியையும் பெற்றிருப்பாரல்லவா! ஆனால் இதில் தான் மகான்களின் மகத்துவத்தையே நாம் அறிகின்றோம். எக்காரணம் கொண்டும் இயற்கை நியதிகளுக்கு மாறாக அவர்கள் விதியை மாற்றச் செல்லுவதில்லை. தங்களுடைய சித்திகளையும் தெய்வீக சக்திகளையும் தங்களுடைய சுயநலத்திற்காக அவர்கள் ஒருபோதும் பயன்படுத்திக் கொள்வதுமில்லை!

ரோக பந்தனம் என்ற இந்த அரிய சித்தியை ஸ்ரீ அப்பைய தீட்சதர் பெறுவதற்குக் காரணம் அவர் பவ கரண நேரத்தில் பல அற்புதமான மந்திரங்களை ஓதி, சில அபூர்வமான கானங்களையும் இறைவன் மேல் பாடி பரமானந்தம் அடைந்தமைதான்! இந்த பவ கரண சித்தியைப் பெறுவதற்காக அவர் அத்தகைய அரிய மந்திரங்களை ஓதவில்லை ! ஆனால் அவற்றைத் தக்க பவ கரண காலத்தில், தக்க பருவத்தில் ஓதிய காரணத்தால் அந்த தெய்வீக சித்தியானது அவரிடத்தில் தானாகவே இறையருளால் வந்து சேர்ந்தது. இதுவே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்பாகும். மஹான்கள் எள்ளளவு சித்திகளைக் கூட அடைய விரும்புவதில்லை! ஆனால் அவர்களுடைய தபோபலன்களின் காரணமாக சித்திகள் தாமாகவே அவர்களிடம் விளையாடும்!

பல அரிய யோக நிலைகளை, ஆசனங்களை பவ கரண நேரத்தில் பயில்வதால் யோக சக்திகள் நன்கு நிலைபெறும். இவ்வாறாக பவகரண மஹிமைகள் நிறைய உண்டு!

இதுவுமா கர்மவினை ?

இப்படியுமா கர்மவினை சேர்கிறது!

வெறுமனே ஒரு வேலையுமின்றித்தெருக்களில் நடந்து சென்றால் யாது பயன்?. இதனால் கர்மமே சேரும்! சும்மா நடந்து நேரத்தை வீணடிப்பது தீய வினைகளைச் சாரும்.
வரம் வேண்டிப் பெற்ற மனிதப் பிறவியை சாலையில் வெட்டியாக நடந்து கழிக்காதீர்கள்! வீட்டிலேயே அமர்ந்து சிறு சிறு ஆசனங்கள் போட்டு ஸ்ரீகாயத்திரி தபஸ் மூலம் மந்திர சக்தியைப் பெறுங்கள்! பெண்களும் இதனைப் பெறலாம்!.

சிலர் பொழுதுபோகவில்லையென்று சட்டையையும் செருப்பையும் மாட்டிக் கொண்டு ரோடின் இருபுறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு காரியமும் இல்லாமல் வெறுமனே நடந்து சென்று வருவார்கள் ! நடக்கையிலோ, பிரயாணம் செய்கையிலோ எப்போதும், ஓம்கார ஒலிப் பாராயணம், ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதுதல் என்றவாறாக மந்திரமோதும் நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் சென்றவிடமெங்கும் சீரான மந்திர ஒலிக் கதிர்களைப் பரப்பிய புண்ணியமாவது வந்து சேரும். ஆனால் இவ்வாறு இல்லாமல் வெறுமனே நடந்து சென்று எவருக்கும் பைசா பிரயோஜனமின்றி வெட்டியாகத் திரும்பி வருவதால் பெறற்கரிய மானுடப் பிறவியில் பொன்னான நேரத்தை வீணாக்கியமைக்காகக் காலதேவதைகளின் சாபங்கள் தாம் கிட்டும்.

இதனைத் தான் சித்த புருஷர்கள் ஒவ்வொருவரும் உண்மையாக வாழ்ந்த நேரத்தைச் சுயசோதனையாகக் கணக்கிடச் சொல்கின்றனர், அதாவது தெய்வச் சிந்தனையில், பிறருடைய நல்வாழ்விற்கான சமுதாயப் பணிகளில், சுயநலமற்ற தியாகமயமான காரியங்களில் உத்தம இறைத் திருப்பணிகளில் செலவிடுகின்ற நேரமே உண்மையாக வாழ்ந்த நேரம் என்று மேலுலகங்களில் கணக்கிடப்படுகின்றது.

பூலோகத்தில் 60, 70 வருடங்கள் வாழ்ந்து மடிகின்ற பொழுது, உயிர் பிரிந்தபின் நிகழும் மேலுலக பிறவித் தீர்ப்புக் குழுமத்தில் (day of Judgement) “இவன் 70 வருட மானுட வாழ்வில் உண்மையாக வாழ்ந்த நேரம் 7 நிமிடங்கள்! ஏனைய வாழ்க்கை நேரங்களை வெறுமனே கழித்து வீணாக்கியதாக கால தேவதைகள் தீர்ப்பெழுதிட அவன் கணக்கில் 69 வருடம் 63 நிமிடங்களுக்கு இன்னொரு பிறவி பாக்கி என்ற சாபத்தையும் பெற்று ..... இப்படித்தான் கோடானுகோடி ஜென்மங்களுக்கு மனித குலம் ஆளாகின்றது.

பவகரணம் பற்றிய விளக்கக் கட்டுரையில் உள்ள நாள், நட்சத்திர, திதி, யோக, கரண காலதேவதா மூர்த்திகளுக்கான பஞ்சாங்க பூஜையை தினந்தோறும் முறையாகச் செய்து செவ்வாய், சனிக்கிழமைகளில் சித்த, அமிர்த யோக நேரங்களில் ஸ்ரீகால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை சாற்றி, அதனைப் பிரசாதமாக ஏழைகளுக்கு அளித்து வர, காலத்தை வீணடித்ததற்கான சாபங்களுக்கு ஓரளவு நிவர்த்தியும் கிட்டுவதோடு, கேவலமான எண்ணங்களுடன் அருவருக்கத் தக்க அல்லது சுயநலநினைவுகளுடன் தகாத முறைகளுடன் மரணத்தை எதிர்நோக்காது நன்முறையில் இப்பிறவி முடிவுறும்.

நவகிரஹ மூர்த்திகளை அவமரியாதை செய்யாதீர்கள்!

“சனி அஞ்சுல இருக்கான், பன்னெண்டுல ராகு இருக்கான், எட்டுல குருபார்வை சரியில்லை, பாபி கிரஹம் சூர்யன் பாத்தாலே ஆகாது!” என்று ஏகவசனத்தில் நவகிரஹ மூர்த்திகளை ஏசி, பேசி, வசை பாடி மாபெருந் தெய்வக் குற்றங்களுக்கு ஆளாகாதீர்கள்! ஜாதகக் கட்டம் என்பது குறித்த கிரஹ சஞ்சார நிலைகளின் போது ஏற்படுகின்ற பிறப்பு கணித சட்டமே தவிர, பிறந்த நேரத்தில் தாமாக கிரஹ மூர்த்திகள் அவ்வாறு சேர்வதாக எண்ணாதீர்கள்! பல ஜோதிடர்கள் கூட இவ்வாறு நவகிரஹ மூர்த்திகளை ஏகவசனத்தில் பேசுவது வியப்பிற்குரியதாகும்!

நவகிரஹ மூர்த்திகள், பரம் பொருளாம் சர்வேஸ்வரனின் அம்சமே! நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப அவற்றிற்குரிய பலாபலன்களை, சாட்சியாக நின்று நமக்கு அளிப்பவர்களே நவகிரஹ மூர்த்திகள்! இம்மூர்த்திகளின் கருணை கடாட்சமின்றி நாம் ஒரு விநாடி கூட வாழ இயலாது! இந்நிலையில், “பாபிகளான சூரியன், ராகு, கேது செவ்வாய், சனி கிரஹங்கள் தாம் படாதபாடு படுத்துகின்றன”, என்றும் பலர் அறியாமையால் சொல்வதுண்டு. நமக்கு தினமும் ஒளி தந்து, பகல் வெளிச்சம் கொடுத்து அனைத்துத் தாவரங்களின் வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கும் சூரிய பகவானா பாபி கிரஹம்? சர்வேஸ்வரனின் அம்சங்களாக அமைந்து நமக்குப் பேரருள்பாலிக்கின்ற நவகிரஹங்களையா பாபி கிரஹங்கள் என்று கூறுவது?

ஆனால் புனிதமான ஜோதிடம் என்பது கலைவாணி நமக்குத் தந்த அற்புதமான ஞானம். முக்காலங்களை உணர்த்தும் தெய்வீகக் கண்ணாடி! சுப, பாப கிரஹப் பகுப்புகளானவை, வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் நன்கு உணர்வதற்காக கிரஹ சஞ்சார நிலைகளைக் கொண்டு கணிக்கின்ற , ஜோதிடம் அறிவின் பாடங்களாகவே, நமக்கு நன்கு புரிவதற்காகவே சில கிரஹப் பிரிவுகள் அளிக்கப் படுள்ளனவே தவிர, பாபி கிரஹம் என்று ஏசுவதற்காக அல்ல!

உதாரணமாக முகூர்த்த நேரக் கணிப்பில் எட்டாமிடத்தில் குரு இருத்தலாகாது, சனி, செவ்வாய், ராகு, கேதுவின் பார்வை கூடாது என்று நியதியின் பின்னணியில் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்கள் உள்ளன. “காலக் கணிப்பு காலனை வெல்லும்”, என்பது பழமொழி. எல்லா நேரங்களும் சுபமாக அமைந்து விடுவதில்லை ! ஆயிரங் காலத்துப் பயிராக விளங்கும் திருமணம், கிரஹபிரவேசம் போன்ற புனிதமான நற்காரியங்களை நன்கு தீர ஆலோசித்து நிறைவேற்றிட வேண்டும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என கண்டதும் காதல், அடுத்த முகூர்த்தத்தில் அவசரத் திருமணம், என்றில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்தையும் நல்லது, கெட்டது எனப் பகுத்து நல்லறிவுடன் ஆராய்ந்து செயல்படும் பொருட்டுத்தான் புனிதமான ஜாதகக் கணிப்பு முறைகளை நம் பெரியோர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.

ஜோதிடம் ஒரு Business அல்ல!

புனிதமான ஜோதிடத்தை வியாபாரப் பொருளாக்கக் கூடாது. ஹோமங்கள், வேத பாராயணங்கள் ஆலய கோபுர/சில்பத் திருப்பணிகள் போன்றவற்றை நடத்தித் தருவதற்குக் கட்டணங்களைப் பெற்றிடில் எவ்வாறு சாபங்கள் சேருமோ, அதே போல மிகவும் பவித்ரமான, காலதேவதா, நவகிரஹ மூர்த்திகளின் அருளாட்சியைத் தந்திடும். அதியற்புதமான தெய்வீகமான ஜோதிடக் கலையிலும் ஜாதகத்தை கணிப்பதற்கு, பொருத்தங்கள் பார்ப்பதற்கு, நல்ல நேரங்களைக் குறிப்பதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலித்திடில் இதுவும் சாபமுடையதே!

தான தர்மம் போல ஜோதிடத்தை ஒரு பெறற்கரிய இறைச் சேவையாகப் புரிதலே சிறப்புடையது. நடனம், இசை, ஓவியம், ஜோதிடம் போன்ற இறைவன் கொடுத்துள்ள கலையம்சங்களை மஹேஸன் சேவையாக, மக்களுக்கு இலவசமாக அர்ப்பணித்தால்தான் தீர்க தரிசன சக்தி தானாகவே பெருகும். ஒவ்வொரு கேள்விக்கும் இவ்வளவு ரூபாய் என்று விலை பேசி புனிதமான ஜாதகக் கலையை இழிவு படுத்திடில் சாபங்கள் சேர்வதோடு, பலித சக்தியும் மிகவும் குறைந்து விடும். இக்குறை பாடுகளினால் தான் இன்றைக்குப் பெரும்பாலான ஜோதிடக் கணிப்புகள் பொய்த்து விடுகின்ற பரிதாபகரமான சூழ்நிலையைக் காண்கின்றோம்.

தினமும் அர்த்த சாம பூஜையில் கால பைரவருக்குப் புனுகு இட்டு முந்திரிப் பருப்பு மாலையும் சார்த்தி, புதன்கிழமை, புத ஹோரை நேரங்களில் புத பகவானுக்குப் பச்சைப் பட்டு வஸ்திரம் சார்த்தி, நவமி தோறும் ஸ்ரீ சரஸ்வதிக்குக் கதம்ப மாலையும் வெண்பட்டும் சார்த்தி இவற்றை ஏழைகட்கு இறைப் பிரசாதமாக அளித்து வந்திடில், ஜோதிடக் கலையை நல்லதொரு இறைப்பணியாக இலவச சமுதாயச் சேவையாகப் புரிந்திடச் சங்கல்பம் செய்து பூஜித்து வர தீர்க தரிசன சக்தி தானாகவே விருத்தி அடையும்.

வீணாக, வேலை வெட்டியின்றி சாலையில், தெருவில் நடந்து கண்டவற்றைப் பார்த்து, மன சஞ்சலங்களுக்கு, பாவங்களுக்கு ஆளாகி விடாதீர்கள்! எனவே வெறுமனே “வாக்கிங்” போய் விட்டுத் தேவையில்லாத கர்மங்களைச் சேர்த்து “காலத்தை வீணடித்த”  சாபத்தைப் பெறாமல், கோபுர தரிசனம், ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து விட்டு வந்தால் வெறுங் கால் நடையானது கால் (பைரவரின்) நடையாக இறைப் பணியாக மாறுமல்லவா!

ஸ்ரீஐயப்ப விரத மகிமை

பம்பை நதியில் பித்ருக்கள் எப்போதும் வாசம் செய்கின்றனர்! ஸ்ரீ ஐயப்ப சுவாமி தினமும் புனித நீராடி மேன்மேலும் புனிதப் படுத்துகின்ற புண்ணிய நதியே பம்பா நதி! பம்பை நதியில் மூதாதையர்களாகிய நம்முடைய பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து பித்ருக்கள் ஆசியுடன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கையில் தான் சாஸ்தாவின் பரிபூரண அனுகிரஹம் கிட்டும்!

கடந்த பல இதழ்களாக ஸ்ரீ ஐயப்ப விரதத்தில், இந்த காலத்தில் நடைமுறையில் நிலவி வருகின்ற குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்கின்ற வழிமுறைகளையும் நாம் அளித்து வருகின்றோம் அல்லவா? இதற்குக் காரணம் என்னவெனில் விரத நாயக மூர்த்தியாகப் போற்றப்படுகின்ற ஸ்ரீ ஐயப்ப மூர்த்தியின் பரிபூரண அனுகிரஹத்தைப் பெற வேண்டுமானால் விரத நிலைகளை எவ்வித பங்கமுமின்றி முழுமையாகக் கடைபிடித்திட வேண்டும் என்பதால்தான்!

நினைத்தால் மாலை போட்டுக் கொள்வது, மண்டல நாட்களை விடுத்து ஒரு வாரம், பத்து நாட்கள், இருபது திதிகள் என அவரவர் வசதிக்கேற்ப மாலை போட்டுக் கொள்வது, இல்லறவாசிகளும் காவியை அணிந்து கொள்வது போன்ற தவறான அணுகுமுறைகள் பெருகிக் கிடக்கின்றன,

எதற்காக ஒரு விரதத்தை மேற்கொள்கின்றோம்? நம்முடைய தினசரி பூஜைகள் குறைந்து விட்டமையால்தான். நாம் வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றோம். இதற்கு ஓரளவு பிராயச்சித்தமாகத் தான் ஸ்ரீ ஐயப்ப சுவாமி விரதம், ஸ்ரீசந்தோஷி மாதா விரதம் போன்ற அபூர்வமான தெய்வ விரத வழிபாடுகளைக் கடைபிடித்து நாம் செய்யாமல் விட்ட பலவகை பூஜைகளுக்கான நிவர்த்தியை நாம் தேடிக் கொள்கிறோம். இவ்வாறு விடுபட்டுப் போன பூஜைகளுக்கான ஒரு பிராயச்சித்தமாக ஒரு பெரும் விரதத்தை மேற்கொண்டு அந்த விரதத்திலேயே மீண்டும் பலவித பங்கங்கள் வரும்படி நடந்து கொண்டோமேயானால் குறைகள் பெரும் குற்றமாக அல்லவோ ஆகிவிடுகின்றது. இதனை நன்கு சிந்தித்துப் பார்த்து பக்த கோடிகள் தக்க முறையில் ஸ்ரீ ஐயப்ப விரதத்தைக் கடைபிடித்து சாஸ்தாவின் பரிபூரண அருளைப் பெற்றிட வேண்டுகின்றோம்.

பம்பை நதியின் மஹிமையைப் பல புராணங் களாக விரித்துச் சொல்லும் அளவிற்கு அது தன்னிடையே ஒரு தெய்வீக மகத்துவத்தைக் கொண்டுள்ளது. பித்ருக்கள் எப்போதுமே வாசம் செய்கின்ற திருத்தலங்கள் மிகச் சிலவே. ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், திருவிடைமருதூர் கோயில் திருக்குளம், வாரணாசி, கங்கை நதி தீரம், பத்ரிநாத்தில் பிரம்ஹ கபால பாறை, கும்பகோணம் சக்கரப் படித்துறை, வேதாரண்யம் தீர்த்தம், திருவாரூர் அருகே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தர்ப்பணம் செய்த திலதைப்பதி எனப்படும் கோயில் பத்து, திருஅண்ணாமலை, ராமநாதபுரம் அருகே நவபாஷாணம் (தேவிபட்டினம்) போன்ற திருத்தலங்களுடன் பம்பை மஹாநதியும் பித்ருக்கள் நித்யவாசம் செய்கின்ற முக்கியமான இறைத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

பம்பை நதி இவ்வகையில் தனி மகத்துவம் பெறுவதற்குக் காரணமென்ன? ஸ்ரீ ஐயப்ப சுவாமியே தினமும் நீராடுகின்ற மஹா புண்ணிய நதியல்லவா! மேலும் எத்தனையோ அரிய மூலிகைகள் கலந்த புனிதமான தெய்வத் தன்மையையும் தன்னுள் கொண்டுள்ளதே பம்பை நதி தீரமாகும்! பம்பை நதியின் இருபுறக் கரை மணல் மேடுகளை நிர்மாணித்தவர்களே பித்ரு தேவர்கள்தாம். இது மட்டுமா? பசு, யானை, புலி, எருமை, ஆடு எனப் பலவிதமான விலங்கினங்கள் தங்களுடைய தாய்ப் பால் தனை பூமாதேவிக்கு அர்ப்பணித்து புண்ணியநதியில் கரைத்த மகத்துவத்தையும் தன்னுள் கொண்டதல்லவா பம்பை நதி!

கோடிக் கணக்கான வனதேவதைகள் உறைகின்ற காடுகள் பல உண்டு. இப்பூவுலகில் இந்த வனதேவதைகளின் அருளால் தான் நமக்கு மழை பொழிவுகள் ஏற்படுகின்றன, தாவர வளம் உண்டாகின்றது. நிழல் கிட்டுகின்றது. மேலும் பசுமையான நல்லெண்ணங்களையும் உருவாகின்றது. வனதேவதைகளே தம்முடைய ஸ்பரிசத்தால் தெய்வீக சக்தியை ஊட்டுகின்ற தன்மையைக் கொண்டதும் பம்பை நதியே!

இது மட்டுமா? பித்ரு லோகங்களில் வசிக்கின்ற கோடானு கோடி வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்கள் எல்லோரும் பூலோகத்திற்கு தினம் தோறும் வந்து செல்கின்ற இறைத்தலங்களுள் பம்பை நதியும் ஒன்று! இங்குதான் அவர்கள் தங்களுடைய புனித நீராடலை மேற்கொண்டு எத்தனையோ வகையான பிரயாசித்தங்களைத் தம் சந்ததியினருக்காக மேற்கொள்கின்றனர்! இதனால் தான் பம்பை நதிக் கரையில் தர்ப்பணம் செய்வதென்பது மிகவும் அரிய பாக்கியமாக இ(எ)ன்றும் விளங்குகின்றது. அனைவருக்கும் எளிதில் கிடைப்பதல்லவே இந்த பம்பை நதித் தீரத் தர்ப்பணம்!

ஆனால் தற்போது விரதம் பூண்டு சபரிமலை செல்வோர் பம்பை நதியில் நீராடுவதோடு நிறுத்து விடுகின்றார்களே தவிர இங்கே பித்ரு தர்ப்பணத்தைச் சரிவரச் செய்வதில்லை, பம்பையில் பித்ரு தர்ப்பணம் செய்வதற்கே பலவிதமான யோக்யதாம்சங்களுமுண்டு. எவ்வாறு ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதற்கு நாம் பல விரத நெறிகளைக் கடைபிடிக்கின்றோமோ, அதே போல பம்பை நதி தீரத்தில் தர்ப்பணம் செய்வதற்கான சில வழிமுறைகளும், விரத முறைகளுமுண்டு. இதனை குருவாய் மொழியாகக் கேட்டு பரிபூர்ணமாகக் கடைபிடித்தால் இதனால் நிச்சயமாக நம்முடைய பித்ருக்களுக்கு அரிய பல இறை நிலைகள் கிட்டுகின்றன.

நாம் ஒரு ஜன்மம் எடுத்துவிட்டோம், இந்த மனிதப் பிறவியில் நாம் செய்கின்ற சில நற் காரியங்களால் மேலும் பல தெய்வீக நிலைகள் நம் பித்ருக்களுக்கு கிட்டுமேயானால் அதைவிடப் பெரும் பாக்யம் நமக்கு என்ன இருக்கின்றது! நம்மை நாம் கடைத்தேற்ற முடியுமோ, இல்லையோ நம்முடைய பித்ருக்களாவது பல உத்தம இறை நிலைகளை அடைவதற்காக வழிபாடுகளைக் கடைபிடிக்கலாமல்லவா? இதற்காகத் தானே இந்த மனிதப் பிறவி எடுத்தோம்! நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நாம் செய்யும் பூஜைகளால் அற்புதமான தெய்வீக நிலைகளை அடைவார்களேயானால் அதைவிட மேலான பிறவிப் பயன் நமக்கு வேறென்ன இருக்க முடியும். இதற்காகவே நாம் வாழ்ந்திடலாமே!

பம்பையின் தெய்வீக மூலிகா சக்தி

பம்பை நதி நீரானது தன்னுள் பல ஆயிரம்ஆண்டுகளாக இருந்துவரும் பல அரிய மூலிகைச் சக்திகளைக் கொண்டுள்ளது. புலி, சிங்கம் கரடி போன்றவை மனிதர்களையே கொன்று தின்கின்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் கூட அவற்றிடம் உள்ள பல அரிய தெய்வீக சக்திகள் கூட நம்மிடையே இல்லை. புலி, சிங்கம், கரடி, யானை இவைகளுக்குக் கூட சில தியான நிலைகளுண்டு. யானையினுடைய தெய்வீகத் தன்மையை நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கி வந்துள்ளோம்.

நமக்குக் கிடைக்காத பல மூலிகைகளையெல்லாம் தினமும் டன் கணக்கில் உண்கின்ற யானையின் உடலில் எத்தகைய மூலிகா சக்தி நிறைந்திருக்கும் என்று நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்..கரடி, சிங்கம், புலி கூட தாங்கள் உண்கின்ற விலங்குகளின் உடலில் உள்ள விஷத் தன்மைகள் தங்களைத் தாக்காமல் இருப்பதற்காக சில அரிய மூலிகைகளை மென்று தின்கின்றன.

பூனை, நாய் போன்றவை அருகம்புல்லையோ மற்றும் சில அரிய மூலிகைகளையோ கடித்து மென்று தின்பதை நாம் கண் கூடாகக் காண்கின்றோமல்லவா? எனவே விலங்கினங்கள் கூட மூலிகைகளின் தெய்வீக சக்தியை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதனை அறிந்த மனிதனோ மிகச் சிறந்த மூலிகையான கருவேப்பிலையையோ, புதினாக் கீரையையோ, சாப்பிடும் பொழுது எடுத்து எறிந்து விடுகின்றான்.

மூலிகைகளை உணவோடு சேர்த்து உண்பதுதான் முறையே தவிர அவற்றை தூக்கியெறிந்தால் சாபங்கள் தான் ஏற்படும். வெறும் சாபங்கள், சாபங்கள் என்று பயமுறுத்துகிறோம் என்று எண்ணாதீர்கள். எந்த ஒரு நல்ல பொருளையும் நன்முறையில் பயன்படுத்துவதற்காகத்தான் இந்த மனித வாழ்வு! இப்படி இருக்கும் பொழுது கிடைத்த ஒரு நல்ல பொருளைத் தூக்கியெறிவது என்றால் விரயமாக்குவது என்றால் நிச்சயமாக சாபம்தானே!

பம்பை நதி மிகவும் சக்திவாய்ந்த மூலிகா பந்தனங்களைத் தன்னுள் கொண்டதோடு அல்லாமல் “க்ஷீராம்ருதம்” எனப்படும் அற்புதமான பால் சக்தியையும் தன்னுள் கொண்டுள்ளது. மணிகண்டனாக ஸ்ரீ ஐயப்ப சுவாமி கொணர்ந்த புலிப் பாலில் உள்ள தெய்வீக சக்தி என்ன? தற்போது ஒற்றைத் தலைவலி என்று சொல்கின்றோமே, இவ்வாறு கபாலத்தில் ஏற்படுகின்ற பலவிதமான கொடிய நோய்களுக்கு மாமருந்தாக விளங்குவதே புலிப்பாலாகும். ஆனால் புலிப்பாலைக் கொண்டு வர முடியுமா? இதுதானே விஞ்ஞானமயமான கேள்வி!

எப்போதுமே தங்கம், வைரம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை ஆண்டவன் சற்றுத் தள்ளியே பூமியினுள் புதைத்து வைத்திருக்கின்றான். இல்லையெனில் மனிதன் பேராசை கொண்டு இல்லத்திலே அனைத்தையும் குவித்து வைத்துக் கொள்வான். இன்றைக்கு யானையின் தந்தத்தில் உள்ள தெய்வீக யோக சக்தியையும், மஹிமையையும் உணர்ந்து கொள்ளாமல் அதனைக் கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர், வீட்டின் மேஜையின் மேல் உள்ள அலங்காரப் பொருட்களாகவும் மாற்றி எத்தனை யானைகளை வீழ்த்திப் பெரும் பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றார்கள்!

இது போலத்தான் புலிப்பாலின் மஹிமையை இந்த மனித குலம் உணரத் தொடங்கினால் நாளைக்கே உலகெங்கும் உள்ள புலிகளை வீழ்த்தி புலிப் பாலை எடுத்து சுயநலத்திற்காக வீட்டில் வைத்து விடுவார்கள்! அதனால் தான் எதையுமே தெய்வீக ரகசியமாக வைத்து நன்முறையில் போற்றி வந்தார்கள் நம் பெரியோர்கள். ஆமாம், புலிப் பால், யானைப் பால் போன்ற விலங்குகளின் க்ஷீர அமிர்த சக்தி நம் மனித குலத்திற்குத் தேவையென்றால் என்ன செய்வது? எப்படி அதனைப் பெறுவது? மனித குலத்தைத் தவிர அனைத்து விலங்கினங்களும் புழு பூச்சிகளும் தாவர இனங்களும் இதனை நன்குணர்ந்து இவ்வரிய சக்தியைப் பம்பை நதி மூலமாகப் பெறுகின்றன.

தர்ப்பண முறையிலே “க்ஷீர தர்ப்பணம்” என்று ஓர் அற்புதமான தர்ப்பண பூஜையுண்டு. இதனைக் குறித்த தினத்தில் செய்வதால் பல அற்புதமான பலாபலன்களைப் பெறலாம். க்ஷீர தர்ப்பணம் எனப்படும் விசேஷமான தர்ப்பண முறையில் நீருக்குப் பதிலாகப் பால் தாரையாக அளிக்கப்படுகிறது. இதனைக் குறித்த சில விசேஷ தினங்களில் செய்தால் தான் க்ஷீர தர்ப்பணத்தின் பரிபூரணமான பலன்களைப் பெறமுடியும்.

பம்பை நதி ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் அவதாரத்திற்கு முன்னரே ஏற்பட்டதென்றால் இதன் புனிதத்தை எவ்வாறு வர்ணிக்க முடியும், தன்னுடைய தாயின் தீராத் தலைவலி தீருவதற்காகப் புலிப் பாலைக் கொணர்ந்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி அப்புலிப்பாலைக் கொண்டு என்ன செய்தார் ? இது பற்றிச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் நன்கு விளக்குகின்றன. தன் அன்னையானவள், தன்னை அரசப் பட்டத்திலிருந்து விலக்குவதற்காகவே எவரும் பூலோகத்தில் செய்திடாத புது விந்தையாக புலிப் பாலைக் கொண்டு வரச் செய்து ஸ்ரீ ஐயப்பனின் சகாப்தத்தை முடித்துவிடலாம் என எண்ணினாள். ஆனால் இதன் பிறகு நடந்ததை நாம் அறிவோம்.

இறை மூர்த்திகளுடைய வாகனங்களாய் அமைந்த சிம்மம், புலி, யானை, சேவல், மயில், நந்தி, காமதேனு, மூஷிகம் போன்றவை அனைத்தும் அரும் தவம் புரிந்த மகரிஷிகளின் ரூபங்களே! எனவேதான் இறைவன் இவற்றைத் தம் வாகனங்களாகக் கொண்டுள்ளான். ஸ்ரீ ஐயப்ப மூர்த்தி புலிப்பாலுடன், பசும்பால், பஞ்சகவ்யம் போன்றவற்றைச் சேர்த்து மஹரிஷிகளின் மந்திர பூஜையுடன் பம்பை நதி தீரப் பகுதியில் தெளித்து அதற்கு  க்ஷீராம்ருத சக்தியைத் தந்தார். இதனால் பம்பை நதியில் நீராடுவோரின் தேகத்திற்கு நோய் தீண்டாச் சக்தியும், தோஷங்கள் அண்டாத வல்லமையும் கிட்டும். இவ்வாறாக பம்பை நீராடல் மூலம் நாம் புலிப்பாலின் தெய்வீக சக்தியைப் பெறலாம்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமியே பம்பை நதி தீரத்தில் தர்ப்பணம் அளித்தார் என்றால் கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதல்லவா? மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானே தனது மூதாதையர்களுக்குப் பித்ரு தர்ப்பணம் அளிக்கின்ற நிகழ்ச்சியைப் படித்திருக்கின்றோம், ஏன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே தம் தந்தையாகிய தசரதருக்கு திருத்துறைப்பூண்டி பேரளம் அருகே உள்ள திலதைப்பதி எனப்படும் கோயில்பத்து திருத்தலத்திலே தர்ப்பணம் அளித்திட்டாரே!

எனவேதான் வருடம்தோறும், தன்னுடைய தாயோ, தந்தையோ இறந்த திதியில் திவசம் அளிக்கின்றவர்கள் மாதம் தோறும் அந்த குறிப்பிட்ட திதியிலே திலதைப்பதி திருத்தலத்திலே, தர்ப்பணம் அளித்து இயன்றால் மாத திவசமும், தான தருமமும் குறிப்பாக, தங்கள் மூதாதையர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை அன்னதானமாகச் செய்வார்களேயானால் அது மிகச்சிறந்த பித்ருதோஷ நிவர்த்தியாக அமைகின்றது. இதனால் விடுபட்டுப் போன பல திவச திதிகளுக்கும், சிராத்த திதிகளில் முறையான மந்திரங்களை ஓதி ஹோமங்களைச் செய்யாமைக்குமான பிராயச் சித்தங்களையும் இதன் மூலம் பெற்றிடலாம், சந்ததி தழைக்க உதவும் பூஜை!

பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்வதற்கான சில யோக்யதாம்சங்கள் உண்டு என்று கூறினோமல்லவா! அவை யாவையோ? பித்ருக்கள் எப்போதும் வாசம் செய்கின்ற இறைத் தலங்களில் ஒன்றாக பம்பை நதி பரிணமிப்பதால் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்கான வழிபாட்டு அனுசரிப்பு முறையை நம் பெரியவர்கள் அளித்துள்ளார்கள்.

வாரம் தோறும் ஏதேனும் ஒரு நாளில் பச்சைக் காய்கனிகளை மட்டும் உண்டு, துளசி நீரை அருந்தி சாகம்பரிய விரதம் என்றும் ஓர் அற்புத விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இது மிகவும் எளிமையானதுதான். இது நல்ல ஆரோக்யத்தை அளிப்பது மட்டுமல்லாமல் பச்சைக் காய்கறிகளில் உள்ள சில மூலிகை சக்திகளை தெய்வீக சக்திகளாக நமக்கு அளிக்கின்றது. சாகாம்ருத சாகம்பரிய விரதமானது தேவலோகத்தில் இன்றும் பல மஹரிஷிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, அக்காலத்தில் பல பர்ணசாலைகளில் இந்த சாகம்பரிய விரதம் மிகவும் சிறப்பான விரத முறையாகப் போற்றப்பட்டதுடன் பல புண்ணிய நதி தீரங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளு முன்னர் இவ்விரதத்தைக் கடைபிடிப்பதும் வழக்கமாக இருந்தது, எனவே பம்பை நதியில் முதன் முதலாக பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் முதலில் இந்த எளிய சாகம்பரிய விரதத்தைக் கடைபிடித்திடல் வேண்டும்.

இன்றைக்கும் பல இடங்களில் திவசத்தை நடத்தித் தருவதற்கான தான தருமப் பொருட்களில் வாழைக்காய், பச்சரிசி, புடலங்காய் அல்லது நெல் போன்ற பச்சைப் பொருட்களை தானமாக அளிப்பதைப் பார்த்திருப்பீர்கள், அரிசியும் நெல்லும் கூட பச்சைத் தாவரமாக அமைவதால் பித்ரு தர்ப்பண நாட்களிலும் அமாவாசை தினங்களிலும் இவற்றைத் தானமாக அளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

புடலங்காயின் பித்ரு சக்தி தன்மையைப் பற்றி ஒரு விசேஷமான கட்டுரையில் அளித்திருந்தோம், பச்சைக் காய்கறிகளில் பித்ரு தெய்வீக சக்தி மிகுந்து காணப்படுகிறது. காரணம் என்னவெனில் பித்ருக்கள் தங்களுடைய பூலோக பூஜைக்காக பிரம்ம முகூர்த்த நேரத்தையும், அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சிக் காலப் பொழுதையும் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதுவே பல, தாவரங்களின் மொட்டு காயாகும் நேரமாகும். எனவேதான் சில வகையான பித்ரு தர்ப்பணங்களை அளிப்பதற்கு பிரம்ம முகூர்த்த நேரமும்,  உச்சி கால நேரமும் சிறப்புடையதாக இன்றும் விளங்குகின்றது.

ஸ்ரீ ஐயப்ப சுவாமி பம்பை நதிக் கரையிலே தம் மூதாதையர்களுக்கு மட்டுமல்லாமல் தேவாதி தெய்வ மூர்த்திகளுக்கும் பித்ரு தர்ப்பணம் அளித்து பல மகரிஷிகளுக்கும், யோகியருக்கும் நல்வழி காட்டினார். இதற்கு “க்ஷீராம்ருத தர்ப்பணம்” என்று பெயர். மேற்கண்ட வகையில் சாகாம்பரிய விரதத்தை ஒரு வருட காலத்திற்குப் பூண்டோரே க்ஷீராம்ருத தர்ப்பண பூஜையைக் கடைபிடிப்பதற்கான தகுதியைப் பெறுகின்றனர். இது படிப்பதற்குச் சற்று கடினம்போல் தோன்றினாலும் மிக எளிமையான முறையிலே இந்த ஒரு வருட கால விரதத்தைக் கடைபிடித்துவிடலாம். இதனால் கிட்டுகின்ற கோடானுகோடி பலன்களைப் பார்க்கின்ற போது இவ்வெளிய விரதத்தை மேற்கொள்வது சுலபம் தானே!

ஏனென்றால் அறிந்தோ அறியாமலோ இத்தனை ஆண்டுகளாக நம்முடைய இருபத்தி நாலு தலை முறைகளுக்கு உரித்தான மூதாதையர்கள் அனைவர்க்கும் நாம் தர்ப்பணம் அளிக்கவில்லை, அமாவாசை தோறும் அளிக்கின்ற தர்ப்பணம் கூட முறையான மந்திரங்களுடன் தான தருமங்களுடன் அமையாமையினால் அதுவும் அரைகுறையான பலன்களைத்தான் தருகின்றது. மேலும் இருபத்தி நாலு தலைமுறைகளுக்கு அர்க்யமும் தர்ப்பணமும் அளிக்கின்ற தர்ப்பண முறையானது மாறி பன்னிரெண்டு தலைமுறைகளுக்காக தற்போது விளங்கி இது ஆறு தலைமுறைகளுக்கு உரித்தானதாகப் பல இடங்களில் குறைந்து விட்டது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

எனவே இவ்வாறு விட்டுப் போன பல தர்ப்பண முறைகளுக்கும் பரிஹாரமாக முறையாக மந்திரங்களை ஓதி பித்ரு ஹோமங்களை செய்யாமைக்குமான பிராயச்சித்தமாக பம்பை நதிக் கரையிலே செய்யப்படுகின்ற க்ஷீராம்ருத தர்ப்பணமே நல்ல பிராயச்சித்தமாக அமைகின்றது.

பம்பை நதியில் நீராடுகின்ற முறையைநாம் அறிய வேண்டும். நதியைப் பார்த்தவுடனேயே கை கால்களை கழுவிக் கொண்டு சிரசில் நீரை தெளித்துக் கொண்டு அவசர கோலத்தில் பம்பை நதியில் நீராடக் கூடாது. பம்பை நதியைக் கண்டவுடன் கையெடுத்து கும்பிட்டு வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்திடல் வேண்டும். ஏனென்றால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் புனிதமான திருவடிகள் பட்ட நதிப் படுகையல்லவா!

ஸ்ரீ ஐயப்ப சுவாமி பித்ரு தர்ப்பணமும் அர்க்யமும் அளித்த தினமே அமாவாசையும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்த திருநாளாகும். எனவே மேற்கண்ட ஒரு வருட கால சாகம்பர்ய விரதத்தைப் பூர்த்தி செய்தவர்கள் அமாவாசையும் திருவோண நட்சத்திரமும் சேர்கின்ற நாள் வரை காத்திருந்து அந்நாளில் பம்பை நதிக்குப் புனித யாத்திரை சென்று அங்கு க்ஷீராமிர்த தர்ப்பணத்தைச் செய்திடல் வேண்டும்.

க்ஷீரம் என்றால் பால் என்று பொருள்! அமிர்தம் என்றால் தேன்! எனவே க்ஷீராம்ருத தர்ப்பணப் பூஜையென்றால் தேன் கலந்த பாலைக் கொண்டு பித்ருக்களுக்கு அர்க்யமும், தர்ப்பணமும் அளித்தல் என்பது பொருளாகும். முதலில் பம்பை நதியை வணங்கியவுடன் அரசு, ஆல், வேம்பு, பலா போன்ற ஹோம சமித்து மரக் குச்சிகளால் நீரைத் தொட்டு சிரசிலும் உடலிலும் தெளித்துக் கொள்ள வேண்டும் அல்லது அரசு ஆல் இலைகளினால் தொன்னை செய்து அதில் நீரை முகர்ந்து தலையிலும் உடற்பகுதிகளிலும் “ஸ்ரீ ஐயப்பன் திருவடி சுமந்த பம்பை நதியே போற்றி !” என்று ஓதியவாறே புனித நீரை உடலில் தெளித்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு நீரில் இறங்கி நீராடுதல் வேண்டும்! இவ்வாறாகத்தான் பம்பை நதியில் நீராடிய பின்னரே க்ஷீராம்ருத தர்ப்பண பூஜை துவங்குகிறது.
பம்பை நதிக்குச் செல்லும் போதே சுத்தமான பசும்பாலையும் தேனையும் எடுத்துச் செல்தல் நலமாகும். பம்பை நதிக் கரையிலே தர்ப்பைச் சட்டத்தை விரித்து அதன் மேல் தேன் கலந்த பால் ஊற்றி பிறகு எள்கொண்டு வழக்கமான முறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்திட வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு வருட காலம் எவர் சாகம்பரிய விரதம் மேற்கொண்டு வருகிறாரோ அவருக்குத் தான் பம்பையில் க்ஷீராம்ருதத் தர்ப்பணத்தைச் செய்கின்ற யோக்யதாம்ஸ பாக்யம் பரிபூரணமாக அமைகின்றது. ஏனோதானோ என்று இதனைச் செய்தல் கூடாது!
இந்த நதிக்கரையில் வெறும் தர்ப்பணம் செய்வதைவிட அதற்குரித்தான சாகம்பரிய விரதத்தை மேற்கொண்டு தர்ப்பண பூஜையை நிறைவு செய்வதுதான், நன்மை பயக்கும். இதிலும் அமாவாசையுடன் திருவோணம் நட்சத்திரம் சேர்கின்ற திருநாளே பம்பை நதிக் கரையில் தர்ப்பணம் அளிப்பதற்கான மிகவும் விசேஷமான தினமென சித்புருஷர்கள் அருள்கின்றனர்.
பொதுவாக நம்முடைய இருபத்திநான்கு தலைமுறைகளில் ஆண் வர்கத்தைச் சேர்ந்த பித்ருக்களுக்கு திருவோணம் சேர்கின்ற அமாவாசை தினமே சிறப்புடையதாகும். இதேபோல உத்திராட நட்சத்திரம், அமாவாசை சேர்கின்ற நாளே பெண் வர்கத்தினருக்கு உரித்தான பித்ருக்களுக்கான க்ஷீராம்ருத தர்ப்பணம் அளிக்கின்ற விசேஷ தினமாகும். இவ்விரண்டு நாட்களிலும் ஒருவன் தன் வாழ்நாளில் பம்பை நதிக்கரையில் க்ஷீர அமிர்த பித்ரு தர்ப்பணம் செய்கின்ற பாக்யத்தைப் பெற்றுவிட்டால் உண்மையாகவே இது வாழ்நாளில் கிடைக்கின்ற மிகப் பெரிய பாக்கியமாகும்.

இத்தகைய தெய்வத்திரு நிகழ்ச்சியானது பம்பை நதிக்கு மட்டுமே உரித்தானதாகையால் பம்பை நதியின் மகத்துவமும் உன்னதமும் பெருகுகின்றது.

பௌர்ணமி கிரிவல மகிமை

பகுதான்ய கார்த்திகை மாத பௌர்ணமி மகிமை

திருஅண்ணாமலையில் ஒவ்வொரு மாதப் பௌர்ணமி திதியிலும், சந்திர ஒளியில் மலர்கின்ற அபூர்வமான மூலிகைகள் எத்தனையோ உண்டு. அந்தந்த திதி, நட்சத்திர கால மாறுபாடுகளுக்கு ஏற்பவும் மகரிஷிகளின் மூலிகா பூஜை முறைகளுக்கு உரியனவாகவும் இந்த ருதுக் காலத்தில் எந்த மூலிகை புஷ்பிக்கின்றதோஅந்த திதியில்தான் அந்த ருதுக் காலத்தில்தான் குறித்த மஹரிஷிகள் அருணாசலத்திற்கு வந்து கிரிவலம்தனை நிறைவேற்றி விசேஷமான மூலிகா புஷ்ப பூஜையையும் நிறைவு செய்கின்றனர்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் தோன்றுகின்ற சந்திர கிரணங்களின் தாத்பர்யங்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்குகின்றன. ஒவ்வொரு விதமான கர்ம வினைகளையும் நோய்களையும், துன்பங்களையும் தீர்ப்பவை! இவை ஒவ்வொரு ஆண்டிற்கும், மாதப் பௌர்ணமிகளிலும் மாறுபடும்.
நடப்பு பகுதான்ய ஆண்டின் புரட்டாசி ,ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வர்ஷ, சரத் ருதுவிற்கான மூலிகைகள் தோன்றுகின்றன. இவற்றுள் மிகவும் முக்கியமானது அமுதபுஷ்ப மூலிகையாகும்.

ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியும் அவரது பத்னியாம் ஸ்ரீபகுளா தேவியும் தம் கோடானுகோடி சிஷ்யர்களுடன் சூட்சும ரூபத்திலும் வெவ்வேறு வடிவங்களிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற திருநாளே பெளர்ணமி தினமாகும். (2.12.1998)

திருஅண்ணாமலையை எந்த நேரத்திலும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதே! ஏனென்றால் பரம்பொருளே மலை வடிவில் அனைத்து ஜீவன்களுக்கும் தரிசனம் தருகின்ற முறையிலே தன்னையே மலை வடிவத்தில் ஆக்கிக் கொண்டுள்ள அற்புதமான திருத்தலம் ஆயிற்றே. இப்பூவுலகிற்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரஹங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் கோடானு கோடி லோகங்களுக்கும் ஆன்மீகமையமாக (Universal Spirtual Centre) திருஅண்ணாமலை விளங்குகின்றது. அருணாசல பூமியான திருஅண்ணாமலையில் தான், பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குகின்ற திருஅருணாசல பூமியில் தான், எண்ணற்ற சித்தர்களும் மகான்களும் யோகியர்களும் எப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே இத்திருத்தலத்தில் எந்நாளும் எப்போதும் கிரிவலம் வந்திடலாம்!
சித்தர்கள் நிறைந்த பூமியாக விளங்குகின்ற திருஅண்ணாமலையில்தான், உலகத்தில் உள்ள சகல ஜீவன்களின், எல்லா நாடுகளின் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தெய்வீகத் தீர்வு அமைந்துள்ளது. இதனைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து அதன்படி நடந்து கொண்டால் இப்பூலோக, சமுதாய வாழ்க்கையும் தெய்வீக அமைதிப் பூங்காவாக விளங்கும் என்பதில் ஐயமில்லையே!.

வருகின்ற கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று அருட்பெரும் சித்புருஷர்களுள் ஒருவராம் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியும் அவர்தம் பத்னியாம் ஸ்ரீபகுளாதேவியும் தம் சிஷ்யர்களுடன் சூட்சும ரூபத்திலும் பல்வேறு வடிவங்களிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர். காரணம், பகுதான்ய ஆண்டில் தான் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மிகவும் விரும்பிப் பூஜிக்கின்ற அமுத புஷ்ப மூலிகையானது சந்திர கிரணங்களிலே பரிமளித்து தன்னுடைய அருட் கிரணங்களை பூலோகத்திற்கு வழங்குகின்றது.

கடந்த இரண்டு இதழ்களாகவே இந்த அமுத புஷ்ப மூலிகைகளின் அருட்தன்மைகளைப் பற்றி விளக்கி வருகின்றோம் அல்லவா! மீண்டும் தொடர்வோம்! பரிபூர்ணமான பூசுர தெய்வ சக்திகள் நிறைந்த அமுத புஷ்ப மூலிகைகளைத் தரிசனம் செய்வதும் பூஜை செய்வதும் எல்லோருக்கும் கிடைக்கின்ற பாக்கியம் அல்லவே! பல கோடி சூரியர்களுடைய ஒளியைப் பெற்றுள்ள, அண்ணாமலையிலுள்ள, பூசுர பாறைகளின் மேல் தோன்றுகின்ற அமுத புஷ்ப மூலிகையானது எத்தகைய ஒளிப் பிரவாகத்தைக் கொண்டிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால்தான் அதன் மகத்தான தெய்வீக சக்தி புரிய வரும்! அதோடு, இதனை முறையாக பூஜிக்கின்ற தெய்வீகத் தன்மையைப் பெற வேண்டுமானால் எத்தனை கோடி யுகங்களில் கூடும் தவசக்தியை நாம் பெற்றிருக்க வேண் டும் என்பதும் புலனாகும்.

இவ்வகையில் பூலோகத்தில் கோடி கோடியாம் மகரிஷிகளுக்கும் சற்குருவாக விளங்குகின்ற ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியானவர் அமுத புஷ்ப மூலிகையைக் கொண்டு பகுதான்ய கார்த்திகைப் பெளர்ணமியில் மிகவும் அரியதான ஜோதி வழிபாட்டை மேற்கொள்கின்றார், ஏனென்றால் அமுத புஷ்ப மூலிகை வெளியிடுகின்ற ஒளிக் கிரணமானது பூலோகத்தில் கிடைப்பதில்லை. ஏனைய லோகங்கள் அனைத்திலும் எப்போதும் கிடைப்பதில்லை. இம்மூலிகை எழுப்பும் சாந்தமய ஒளிக்கதிர்கள் குளுமையானவை! இது பலவிதமான வகைகளில் நமக்கு உதவி புரிகின்றது. ..

அக்னியோ ஆயிரமாயிரம்!

சமையலுக்கான நெருப்பு, ஊதுபத்தியில் ஏற்படுகின்ற தீச்சுடர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பலவிதமான எண்ணெய்களால் ஏற்றப்படும் தீபச் சுடர், (ஒவ்வொரு வகைக்கும் உரித்தான தீபமும் , மாறுபடுதல் உண்டு), கற்பூரத்தில் நாம் காணுகின்ற தீபம், விறகு அடுப்பில் தோன்றுகின்ற அக்னி, சந்திர ஒளி,சூரிய ஒளி, நட்சத்திர ஒளி, குப்பைக் கூளங்களை எரிக்கின்ற போது ஏற்படுகின்ற அக்னி, விதவிதமான ஹோம குண்டங்களில் ஏற்படுகின்ற அக்னி வகைகள், ஹோம சமித்துக் குச்சியில் ஏற்படுகின்ற அக்னி, பசுஞ்சாண விரட்டியில் உண்டாகும் அக்னி - இவ்வாறாக நெருப்பினில் எத்தனையோ வகைகள் உண்டு. மின்னல் ஒளி கூட ஒருவகை அக்னியே!.

இவ்வனைத்து வகைகளான அக்னிக்கும் மூலாதார ஜோதி ரூபமாக விளங்குபவரே திருஅண்ணாமலையாராவார்! இதனால்தான் பஞ்ச பூதத் தலங்களில் இது அக்னித் தலமாக நிறைவுடன் போற்றப்பட்டு வருகின்றது.

அருணாசல கிரிவலப் பாதையில் அற்புத ரசமணிக் கதிர்கள்! தேவாதி தேவர்களாயினும் சரி, அமுத புஷ்ப மூலிகைகளில் தோன்றுகின்ற அக்னியை தரிசிப்பதற்கே மகத்தான தபோ சக்திகளைக் கொண்டிருக்க வேண்டும். அமுத புஷ்ப மூலிகையின் ஒளி சக்தியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஒரு சிலரே! நாரதருடைய அனுக்கிரஹத்தால் இதனை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற பிரகலாதன் இவ்வக்னி சக்தியின் தன்மையால் தான் ஸ்ரீ நரசிம்மருடைய உக்ரகத் தன்மையைத் தாங்கி அவரை முதன் முதலாக தரிசிக்கும் தெய்வீக சக்தியைப் பெற்றதோடு அல்லாமல், அவருடைய திருக்கரங்களாலேயே. அரவணைக்கப் பெற்று சுவாமியின் திருமேனியில் அமர்கின்ற பாக்கியத்தையும் பெற்றிட்டார்!

ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியானவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் அருட்கட்டளையாக, ஸ்ரீ அகஸ்தியர் மூலமாக, 108 லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து அவற்றை வழிபடுகின்ற விசேஷமான பூஜை முறைகளை அறிந்ததும் இத்திருஅண்ணாமலைத் திருத்தலத்தில்தான்! இவ்வாறாக 108 லிங்கங்களின் பூஜைகளை நிறைவு செய்ததும் அவற்றின் பூஜா பலன்களைப் பரிபூர்ணமடையச் செய்வதற்காக, ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியானவர் ஸ்ரீ அருணாசல க்ஷேத்திரத்தை கிரிவலம் வந்த பகுதான்ய ஆண்டின் போது அமுத புஷ்ப மூலிகையையும் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். அஃதோடு ரசமணி சக்தியின் பரிபூரணமும் இதன் அனுக்கிரஹத்தால்தான் அவருக்கு கிட்டியது.

இவ்வாறாக 108 லிங்க பூஜா வழிபாட்டின் பலனாக முதன் முதலில் 64 விதமான ரசமணிக் கோளங்களை ஸ்தாபித்த ஸ்ரீ மார்கண்டேயர், இறை ஆணையால் திருஅண்ணாமலையின் எட்டுத் திக்குகளிலும் இந்த 64 விதமான ரசமணிக் கோளங்களை பூமியின் அடியிலே பதித்து எட்டு திக்கு லிங்க பூஜைகளையும் தேவாதி தேவ மூர்த்திகளின் முன்னிலையில் சிறப்பான முறையில் நடத்தினார், ஒவ்வொரு திக்கிற்கும் எட்டு ரசமணி கோளங்களாக அஷ்டாஷ்ட கோண வடிவில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமையால் எத்தனை கோடி யுகங்கள் ஆனாலும் இந்த ரசமணிகளின் தெய்வீக சக்தியானது. குன்றாமல், குறையாமல் அன்றும், இன்றும், என்றும் ரசமணி ஜோதியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும்.

இதனால்தான் இன்றைக்கும் அருணாசலத்தை கிரிவலம் வரும்போது, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியினால் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள இந்த 64 விதமான ரசமணிக் கோளங்களின், பிருதிவ்யாக்னி ரசலிங்க மணிகளின் ஒளிக் கதிர்கள் எப்போதும் வீசிக் கொண்டிருப்பதாலும், இதனுடைய பலாபலன்களினாலும், ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியின் தபோ சக்தியாலும் கிரிவலம் வருகின்ற அடியார்களின் பலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வுகள் கிட்டுகின்றன. இவை அரிய ரசமணிகள் மாத்திரம் அல்ல, பலவித கர்ம வினைகளையும் பஸ்மம் செய்யக் கூடிய கார்ய சித்தியைத் தரவல்ல அபூர்வ ஜோதியைத் தன்னுள் கொண்டுள்ளதும் ஆகும்.

அவ்வப்போது ஆலய கும்பாபிஷேகங்களினால் தெய்வீகத்வம் மீண்டும் நிறைவடைவதுபோல 60 தமிழ் வருடங்களில் பகுதான்ய வருடந்தோறும் தோன்றும் அமுத புஷ்ப மூலியின் அக்னி சக்தியால் ரசமணிக் கோளங்கள் இறையாக்கம் பெறுகின்றன. அருணாசல க்ஷேத்திரத்திற்கு வருகின்ற மகான்களும் யோகியரும், சித்தபுருஷர்களும் இந்த 64 விதமான ரசமணிக் கோளங்களை அவ்வப்போது முறையாக பூஜித்து அதன் தெய்வீகத் தன்மையை எட்டுத் திக்குகளிலும் ஆங்காங்கே உள்ள மலை தரிசனப் பலன்களாகப் பதித்துச் செல்வதால் தான், கிரிவலம் முழுதும் நாம் காணும் பலவிதமான மலை தரிசனங்களுக்கு மஹரிஷிகள் இட்ட பெயர்களே நிலைத்து நின்று அவர்கள் அருள்கின்ற பலன்களையும் நமக்குத் தருகின்றன. எனவே தான் மலைவலம் வரும்போது அடிக்கடி அண்ணாமலையை தரிசனம் செய்து வந்தால் அந்த தரிசனப் பலன்கள் தாமாகவே நமக்கு வந்து சேருமல்லவா!

அசுர, துர்குண, எதிர்வினை சக்திகளால் ஏற்பட்ட பலவிதமான சிரமங்களுக்கு இடையிலும், ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி முதன் முதலாக இந்த 64 விதமான ரசமணிக் கோளங்களைக் கட்டி முடித்தபோது அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டது என்ன தெரியுமா ? “இந்த 64 ரசமணி கோள பிருத்வியாக்னி மணிகளும் அனைத்து யுகங்களிலும் என்றென்றும் பூலோகத்தில் அருணாசல திருத்தலத்தில் எல்லா ஜீவன்களுக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி அருள் பாலிக்கவேண்டும்”, என்பதே ஆகும்.

அப்போது ஸ்ரீ அருணாசல ஈசன், “மார்கண்டேயா! நீ சிரஞ்சீவித்வம் பெற்றதுபோல் உன்னுடைய ரசமணிக் கோளங்களும் சிரஞ்சீவித்வம் பெற்று எத்தனையோ கோடி யுகங்களுக்கும் அதனுடைய தெய்வீக சக்திகள் அனைத்து ஜீவன்களுக்கும் நீ விரும்பியது போல் சென்றடைய வேண்டுமானால் நீ இந்த ரசமணி வித்தையை மற்றொரு சிரஞ்சீவிக்கு உபதேசித்தால்தான் அது நிறைவு பெறும்.” என்று திரு ஆணையிட்டு அருள்பாலித்தார்!

என்னே இறைவனின் திருவிளையாடல்!

அந்த இன்னொரு சஞ்சீவி யார் ? அவருக்கு எவ்வாறு எடுத்துரைப்பது? யார் அந்த சிரஞ்சீவி ?

“ரசமணி சித்தியை அறிய வேண்டுமானால் அதற்குரிய தெய்வீகத் தகுதிகள், நிறைந்து இருக்க வேண்டும். இதற்கென கோடானு கோடி யுகங்கள் தவம் பூண்டிருக்க வேண்டுமே! இதனை முழுவதுமாக கடைபிடிக்கின்றவர்கள் யார் இருக்கின்றார்கள் ?” என்று ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியானவர் ஆத்ம விசாரம் செய்து பிரபஞ்சத்தை வலம் வந்து கொண்டிருந்த பொழுதுதான் ஸ்ரீஅகஸ்தியருடைய தரிசனம் கிட்டி அவருடைய ஆக்ஞையின் பேரில் அந்த சிரஞ்சீவி யாரென்று அறிய ஸ்ரீ ராமசந்த்ர லோகத்தை நோக்கி விரைந்தார்!

தினந்தோறும் வைகுண்டத்திற்கும் கைலாசத்திற்கும் சென்று ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, ஸ்ரீபரமேஸ்வர மூர்த்திகளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களில் ஒருவரே ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியாவார்! சிவ, வைணவ பேதமில்லா ஹரிஹர நேசர்! மார்கழியில் தினந்தோறும் வைகுண்டத்திற்கும், பூலோக வைகுண்டமாக விளங்கும் பல திருத்தலங்களுக்கும், சிவ பூஜைக்காக, பூலோகத்தில், பாரத தேசத்தில், குறிப்பாக, தமிழ்நாட்டில் தாம் பிரதிஷ்டை செய்துள்ள பலவிதமான லிங்க மூர்த்திகளுக்கும் நித்திய பூஜை செய்கின்ற ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியானவர், தம்முள் ஒரு ஏக்கத்தைக் கொண்டிருந்தார்!

என்ன ஏக்கமோ ? தெய்வாவதார மூர்த்திக்கும் கூட பற்று/ ஏக்கம் உண்டா என்ன?

ஸ்ரீ சீதா தேவியின் பூஜைக்காக பலவிதமான லிங்க மூர்த்திகளை அவர் கொண்டு வந்த பொழுது, தேவியின் பூஜை நேரத்திற்குள் அவற்றைக் கொணர முடியாமற் போனதல்லவா! “சிவபூஜைக்குக் காலம் தாழ்த்தி வந்து விட்டோமே!” என்ற உள்ளுணர்வு அவருக்கு ஏற்பட்டது. தம்முடைய வாலால் பல லிங்கங்களைக் கொணர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப் பெருக்கினால் அவ்வாறு செய்திருப்பினும், அதற்குப் பிராயசித்தம் தேடியும் இந்த லிங்க மூர்த்திகளுக்கு மேலும் பல பஞ்சபூத சக்திகளை அளிக்க எண்ணியும் அதற்கான தபோ, பூஜை முறைகளை அறிவதற்கான தக்க தருணத்தையும் எதிர்நோக்கியிருந்தார். அவருக்காக சில விசேஷமான பூஜை முறைகளை உபதேசித்திட ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியே நேரில் வந்தமை குறித்து அவர் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தார்!.

ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனேயே ஸ்ரீ மார்கண்டேய மகரிஷிக்கு, தமக்கு ஸ்ரீ அருணாசல ஈசன் அளித்த ரசமணி சித்தியைப் பெறக் கூடிய சிரஞ்சீவி ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திதான் என்பதை மனதாரத் தெளிந்து உணர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியுடன் திருஅருணாசல க்ஷேத்திரத்திற்கு வந்து அவருடன் கிரிப் பிரதட்சிணம் செய்து அங்குள்ள ஒரு பாறையின் மேல் அமர்வித்து அவருக்கு ரசமணி சித்தியை உபதேசித்தார். ஆனால் உபதேசிக்கும் குரு ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி ஆயிற்றே எனவே ஸ்ரீ ஆஞ்சநேயர் தம்முடைய ஆதி விஸ்வரூபக் கோலத்திலேயே, விண்ணளாவ எழும்பிடினும் அத்திருக்கோலத்திலேயே அவர் முன் மண்டியிட்டு ரசமணி வித்தையை அறிந்தார்.

அனுமத் ஜெயந்திக்கு முந்தைய பௌர்ணமி திதியில்தான் பகுதான்ய ஆண்டில் இத்திரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நன்னாளில்தான் அமுத புஷ்ப மூலிகையானது, ஜோதி புஷ்பமாய் மலர்ந்திட கார்த்திகை மாத பௌர்ணமியின் போது அந்த யுகத்தின் பகுதான்ய ஆண்டில் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியும், ஸ்ரீ பகுளாதேவியும் முன் வீற்றிருக்க, அவருடைய கோடானு கோடி சிஷ்யர்களின் முன்னிலையிலே ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி, ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ரசமணி சித்திகளை உபதேசித்தார்.

தாம் ஒரு தெய்வ அவதார மூர்த்தி ஆயினும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அதனைச் சற்றும் வெளிக் காட்டாது எளிமையாகத் தன்னை ஒரு சாதாரண பிரஜையாகக் கருதிக் கொண்டுதான் ரசமணி சித்தி மகிமைகளை ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடமிருந்து உபதேசமாகப் பெற்றார்.

என்னே பணிவன்பு, தன்னடக்கம்! தம்முடைய பரம்பொருள் மூர்த்தியான ஸ்ரீராமரே ஸ்ரீ அகத்திய பெருமானிடமிருந்து ஸ்ரீ ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உபதேசமாகப் பெற்றமையால் தனக்கும் ஒரு மந்திரத்தை உபதேசமாகப் பெறுகின்ற நல்பாக்கியம் கிட்டுவதை எண்ணி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிட ரசமணி மந்திரங்களை, மூலிகா பந்தன முறைகளை உபதேசமாகப் பெற்றார் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி ! இன்றும் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள பல ஊர்களில், 30, 40 அடி உயரத்திற்கும் மேலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தியின் சுதை/சிலா ரூபங்களாகக் கலியுக நியதியாக அரும்பாவனையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு ஆனந்தித்திடலாம். இறை ரீதியாக இவ்வாறு அனைத்தும் தானாகவே. காரண காரியங்களுடன் அமைந்து விடுகின்றன.

ஸ்ரீ காகபுஜண்டர் ஆசியால் நாம் பெறும் பாக்யம்! திரேதா யுகத்திற்கும் முந்தையதாக விளங்குகின்ற அமுத புஷ்ப மூலிகையானது தபோபலம் நிறைந்த பல யோகியர்க்கும் மகரிஷிகளுக்கும் மட்டுமே தரிசனம் தருவதாகவே நெடுங்காலமாக அமைந்தது!

கலியுகத்தில் பலவிதமான துன்பங்களால் அவதிப்படுகின்ற ஜீவன்களைக் கடைதேற்றுவதற்காகவே ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியே, பலவிதமான விசேஷ பூஜை முறைகளினால் பகுதான்ய ஆண்டின் கார்த்திகை மாதப் பெளர்ணமி தினங்களில் அமுத புஷ்ப மூலிகைகளின் கிரணங்கள் தோன்றி கிரிவலம் வருகின்ற அடியார்களுக்கு அதனுடைய பலன்கள் யாவும் கிட்டுமாறு தெய்வத் திருப்பணியைச் செய்துள்ளார்.

மேலும் இந்த கார்த்திகைப் பெளர்ணமி தினத தில் கிரிவலம் வருகின்ற அடியார்களுடன் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, அவர் தம் பத்னிதேவி மற்றும் சிஷ்ய கோடிகளுடன் இணைந்து கிரிவலம் வருகின்ற பாக்கியம் கிட்டுவதுடன் சற்குருவின் அருள் பிரகாசிப்போர்க்கு மஹரிஷி தம்பதியரின் தரிசனம் ஒளி ரூபத்திலோ, சூட்சும ரூபத்திலோ, பல வடிவங்களிலோ கிட்டும் பாக்கியமும் கை கூடும். இது மட்டுமல்லாது அவருடைய அற்புத தவத்தினால் அமுத புஷ்ப மூலிகைகளின் ஒளிக் கிரணங்களும் நம்  தேகத்தில் சேர்ந்து இதுவே பலவிதமான கர்ம வினைகளுக்கும், தீர்வாக அமைவதோடு எத்தனையோ துன்பங்களுக்கும் பிராயசித்தத்தையும் நல்குகின்றது.

இது மட்டுமல்லாது ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியே ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடமிருந்து ரசமணி சித்திகளின் தத்துவத்தை உபதேசமாகப் பெற்ற தினமாகவும் அமைவதால் இன்றைய தினம் பல கோடி மகரிஷிகளும், ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியினால் திருஅண்ணாமலையின் எட்டுத் திக்குகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 64 விதமான ரசமணிக் கோளங்களை பூஜிப்பதால் பெருகுகின்ற அதி அற்புதமான தெய்வீக சக்திகளும் கூடிக் கிட்டுகின்றன.

இதனால்தான் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியானவர் தெய்வத் திருவருளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 64 விதமான ரசமணி லிங்க மணிகளின் மகிமையால்தான், திருஅண்ணாமலையிலுள்ள அனைத்து நிலங்களும் என்றுமே இறைவனுக்கே உரித்தானவை என்ற இறை நியதியும் உண்டு. கால ரீதியாக இவற்றைப் பலரும் இன்று நிலபுல சொத்தாக அடைந்திருப்பினும் அவற்றை இறுதியில் இறைவனுக்கே அர்ப்பணம் அல்லது, நில, புல வீட்டு உடைமைகளில் நிறைய அருணாசல இறைப் பணிகளையாவது கிரிவல அடியார்களுக்கு சேவை புரிவதாக முழுமையாக ஆற்றிட வேண்டும். இங்கு பூமியை சுயநலத்திற்காக ஆழமாகத் தோண்டுதல் கூடாது. அண்ணாமலைத் திருமேனியில் உள்ள ஒவ்வொரு கல்லும் சுயம்புலிங்க மூர்த்தியாக விளங்குவதால் இதனை எவரும் எடுத்துச் செல்லுதலும் கூடாது. இன்னும் பல நியதிகள் உண்டு! திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தின் புனிதத் தன்மையும் இவ்வாறாகவே போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் நூற்றுக் கணக்கான மக்கள் மட்டும் கிரிவலமாக வந்த நிலை மாறி, இன்று மாதந்தோறும் இலட்சக் கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்றதாக இறைப் பாங்கு அமைந்திருப்பது என்றால் உலகத்திற்கே, ஏன் இப்பிரபஞ்சத்திற்கே தெய்வீக மையமாக எதிர்காலத்தில் அனைவரும் உய்த்துணரும் வண்ணம் தெய்வீகப் பிரகாசத்துடன் பரிமளிக்க இருக்கின்ற திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தின் மகிமையை தீர்க தரிசனமாக உணர்ந்திடுக!

இதனால் தான் இன்றைக்கும் ஸ்ரீ நந்தீஸ்வர மூர்த்தியானவர் ஸ்ரீ அருணாசல புராணமாக அருணாசலத்தின் தெய்வீகத் தன்மைகளை விளக்கிக் கொண்டு இருக்க அன்றும் இன்றும், என்றும் ஸ்ரீஅகஸ்திய மாமுனி அதனைப் பல கோடி கிரந்தங்களாகப் படைத்து வருகின்றார். இவைதாம் இன்று சித்புருஷர்களின் கிரந்தங்களாகப் பரிணமித்து பல சற்குருமார்களின் குருவாய் மொழிகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்தப் பரமானந்தப் பொழிவிற்கு எல்லையே கிடையாது. சித்புருஷர்களுடைய அறநெறிகள்தான் எந்த நாட்டிற்கும், எந்த லோகத்திற்கும், எந்த யுகத்திற்கும், என்றென்றும் நல்ல தீர்வை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

அமெரிக்காவும், எகிப்தும், சிலியும் ஆஸ்திரேலியாவும், பாரதமும், நைஜீரியாவும், பிரான்ஸும், மேற்கு இந்தியத் தீவுகளும் - எந்த நாடு ஆயினும் சரி, சூரிய கிரகமும், நட்சத்திர மண்டலமும் கேது கிரகமும் போன்று கோடிக்கணக்கான, கிரஹங்களில், லோகங்களில் வசிக்கின்ற ஜீவன்களுக்கும், திரேதா யுகமோ, துவாபர யுகமோ, கலியுகமோ எந்த யுகத்திலும் ஏற்படுகின்ற அனைத்து விதமான துன்பங்களுக்கும் தெய்வீக ரீதியான பரிஹாரத்தைத் தரக் கூடியதாக, எப்போதும் சிரஞ்சீவித் தன்மை உடையவையாக இருப்பவையே சித்புருஷர்களின் அறநெறிகளாகும். இதனை உணர்த்துவதே ஒவ்வொரு மாத திருஅண்ணாமலை கிரிவலத்தின் தாத்பர்யமாகும்.

சித்தர்களின் உறைவிடமாக விளங்குகின்ற திருஅண்ணாமலைதான் பிரபஞ்சத்திற்கே தெய்வீக மையம் என்பது நம் தெய்வத் திருநாட்டிற்குரிய சிறப்பான இறையிலக்கணமாம்! புனித பாரதத்தில், தெய்வத் திருத்தமிழ்நாட்டில் நாம் பிறந்திட்டு தேவர்களுக்கும் கிட்டாத அமுதபுஷ்ப மூலியின் சக்தியுடன் அருணாசல கிரிவல பாக்யத்தைப் பெறுவது என்பது இறைப் பெருங் கருணையால்தானே!

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

கடந்த பல இதழ்களாக ஸ்ரீ சரபேஸ்வரர் அவதாரம் பற்றிய விளக்கங்களாக சித் புருஷர்கள் அருள்கின்ற வகையிலே அளித்து வந்துள்ளோம்.

பிரதோஷ வழிபாட்டிற்கும் ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டிற்கும் உள்ள முக்கியமான தொடர்பை நாம் நன்கு அறிவோமல்லவா! பிரதோஷ காலத்தில்தான் ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீஉக்ர பிரத்யங்கிரா, ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளின் அவதாரங்கள் தோன்றின! எவ்வாறு பிரதோஷ காலங்களில் சிவாலயங்களில் பிரதோஷ உற்சவ வழிபாடு மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றதோ, இதே போல இன்றைக்கும் சில பெருமாள் தலங்களிலும் பிரதோஷ கால ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கான விசேஷ வழிபாடுகள் நடைபெற்றுத்தான் வருகின்றன. (ஸ்ரீரங்கம் அருகே ஸ்ரீகாட்டு அழகிய நரசிம்மர் ஆலயம்)

மனிதர்களிடையே எத்தனையோ துர்குணங்கள் உள்ளன. குடிப்பழக்கம், புகைப் பழக்கம், முறையற்ற காமச் செயல்கள், தீய வழக்கங்கள், தீய எண்ணங்கள், பொய்மை பேசுதல், லஞ்ச லாவண்யங்கள், வியாபாரத்தில் ஏமாற்றுதல் போன்ற பெரும் பாவங்களின் விளைவுகள் அனைத்துமே அழிய வேண்டுமானால் பிரதோஷ கால ஸ்ரீ சரபேஸ்வர, ஸ்ரீ பிரத்யங்கிரா, ஸ்ரீ நரசிம்ஹ வழிபாடுகள்தாம் இதற்குரிய பெரும்பாலான பிராயச் சித்தங்களை நல்குகின்றன. காரணம், பிரதோஷ காலம் தான் இப்பாவங்களை பஸ்மம் செய்யக் கூடிய நீலகண்ட அக்னி சக்தியைப் பெற்றுள்ளது. பிறவித் தீவினைகள் களையப்பட வேண்டுமானால் ஒன்று, அதற்குரிய விளைவுகளை ஒருவர் நன்றாக அனுபவித்து ஆகவேண்டும் அல்லது சற்குருவானவர், அவற்றைத் தம்முள் ஏற்றுத் தம்மை அண்டியவரை அத்தகைய துன்பங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் அல்லது பிரதோஷ கால பூஜை, தீர்த்த கண்டி விளக்கு பூஜை போன்ற விசேஷமான பூஜைகளின் மற்றும் தான தர்மங்களின் மூலம்தான் குருவருளால் அவற்றை நீக்கிட வேண்டும்.

ராகு கால ஸ்ரீ சரபேஸ்வரர் பூஜை

ஞாயிற்றுக் கிழமை வருகின்ற பிரதோஷ காலமானது மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுவதற்குக் காரணம் என்னவெனில் ஞாயிற்றின் பிரதோஷ நேரத்தில் தான் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் தோன்றியது மட்டுமல்லாது ஸ்ரீ சரபேஸ்வரரின் திருஅவதாரத் தோன்றலும் இப்புனிதமான நேரத்தில்தான் நிகழ்ந்ததாகும். ராகுகாலத்தில் செய்யப்படுகின்ற சில தெய்வ வழிபாடுகளுக்குப் பன்மடங்கு பலன்களுண்டு என்று நாமறிவோம் அல்லவா! இது காரணமாகத் தான் செவ்வாய்க் கிழமை ராகுகாலத்தில் ஸ்ரீ துர்க்கை பூஜையானது இன்றைக்கும் லட்சக் கணக்கான மக்களால் கடைபிடிக்கப்படுகின்றது.

இதேபோல ஞாயிற்றுக் கிழமைகளில் அமைகின்ற நித்ய பிரதோஷ நேரமானது அன்றைய ராகு கால நேரத்துடன் இணைவதால் ஞாயிறு ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடானது மேன்மையுடையதாக அமைகின்றது. பூஜை நேரங்களில் ஹோரை வழிபாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஹோரையென்பது ஒவ்வொரு கிரஹத்திற்கும் உரித்தான சிறப்பான நேரமாகும். காலையில் சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள இருபத்து நாலு மணி நேரங்களுக்கும் ஏழு கிரஹங்களும் குறிப்பிட்ட வரிசையிலே அந்தந்த நேரத்திலே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனைத்தான் சூரிய ஹோரை, சந்திர ஹோரை, புதன் ஹோரை என்று குறிப்பிடுகின்றோமல்லவா!

ஞாயிற்றுக் கிழமைகளில் அமைகின்ற பிரதோஷ நேரத்தில் சந்திர ஹோரைநேரமும் சனி ஹோரை நேரமும் கூடுவதால் இதற்கென்று சில குறித்த சித்த வழிபாடுகளுமுண்டு. பொதுவாக நித்ய பிரதோஷ நேரத்தை மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை எனக் கொண்டால் ஞாயிற்றுக் கிழமையன்று நாலரை மணி முதல் ஐந்து மணி வரை சந்திர ஹோரையும் ஐந்து மணி முதல் ஆறு மணி வரை சனி ஹோரையும் அமைகின்றது! சூரிய உதய நேரத்திற்கேற்ப ஹோரை நேரங்கள் அமைகின்றன. சந்திர ஹோரை பூஜை ஞாயிற்றுக் கிழமைக்குரித்தான பிரதோஷ நேரத்தில் சந்திர ஹோரையும், சனிஹோரையும் இணைவதாக நாம் கண்டோமல்லவா?
எனவே சந்திர ஹோரைக்குரித்தான நேரமான 4.30 to 5 மணி வரை, சுத்தமான பசும் பாலால் அபிஷேகம் செய்து வெண்ணை உருண்டைகளால் அர்ச்சித்தல், சந்திர பகவானுக்குப் ப்ரீதியான முழுமையான அரிசி மணிகளைக் கொண்டு நன்றாகச் சந்தனக் காப்பிட்டு அதன் மேல் அரிசி மணிகளைப் பதித்து அலங்காரம் செய்தல், வசதியுள்ளோர் முத்து மணிகளால் அபிஷேக, அலங்கார, அர்ச்சனைகள் செய்தல், வெண் பட்டு வஸ்திரம் சாற்றி வழிபடுதல், சந்திர மௌளீஸ்வர அர்ச்சனைத் துதிகள் - இவ்வாறாக ஸ்ரீ சரபேஸ்வரருக்குப் பூஜை செய்திடுக! சந்திரனுக்குரிய நிறமாகிய வெள்ளை நிற உணவுகளைப் படைத்து (தேங்காய் சாதம் etc.) ஏழைகட்கு விநியோகித்தல் வேண்டும். இதனால் குடும்பத்தில், மருமகள், மாமியாருக்கிடையிலுள்ள மனஸ்தாபங்கள் தீர்ந்து சுமுகநிலை ஏற்படும்; மேலும் பல சமயங்களில் சொந்தப் பிள்ளைகள், பெண்களுக்கிடையில் கூட பல வித மனோபேதங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அவற்றை நீக்கவும் ஞாயிற்றுக ்கிழமைக்குரித்தான இராகு கால சந்திர ஹோரை நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரின் பூஜை பெரிதும் உதவுகின்றது.

பலவித கெட்ட வழக்கங்களால் மன அமைதியின்றி, மன உளைச்சல்களால் அவதியுறுவோர் பலரும் உண்டு. அவர்களுக்கும் இப்பூஜையானது நற்குணத்தையும் நல்அமைதியையும் தரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுக்கு அஞ்சி ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்போர்க்கு இப்பூஜையினால் மேலதிகாரிகளின் அரக்கத்தனம் தணிந்து அலுவலகத்திலும் நல்ல அமைதி ஏற்படும்.

ஞாயிறு ராகு கால சனிஹோரை பூஜை. சனி ஹோரை பூஜை மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

சனி ஹோரையும் இராகு காலமும் இணைகின்ற ஞாயிறுக் கிழமைக்குரித்தான ஸ்ரீ சரபேஸ்வர பூஜையில், ஸ்ரீ சரபேஸ்வரருக்குக் கருப்பு நிற வஸ்திரங்களைச் சாற்றி, எள் கலந்த உணவினை (எள் உருண்டை, எள் சாதம்) படைத்து அன்னதானம் செய்திடல் வேண்டும். இந்த சனி ஹோரை நேரத்தில் ஊனமுற்றோருக்கு உரிய உதவிகளைச் செய்தலால் பூஜா பலன்கள் பன்மடங்கு ஆகின்றன. இந்நேரத்தில் சுவாமிக்கு உளுந்து, நல்லெண்ணெயால் செய்த உணவு வகைகளையும், பழங்களையும் படைத்து கருநீல (or) கருப்பு நிற வஸ்திரங்களைச் சாற்றி, சந்தனத்தில் புனுகு கலந்த அபிஷேகம் அல்லது காப்பிட வேண்டும். நாகலிங்க புஷ்ப பூஜையே சனி ஹோரைக்கு மிகவும் சிறப்புடையதாகும்.

பகைமை நீங்கிட :

இந்த சனி ஹோரைப் பூஜையினால் பல காலமாகக் கோர்ட்டில் இருந்து வரும் சொத்து உறவு முறை வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு கிட்டும். அதிலும், உறவினர்களாலும், அடுத்த வீட்டுக்காரர்களின் தொந்தரவினாலும் பாதிக்கப்பட்டுள்ள பலவிதமான கட்டிட வேலைகளிலுள்ள இன்னல்கள் நீங்கி வேலை தொடர இப்பூஜை மிகவும் உதவும்.

தடங்கல்கள் நீங்கிட :

பொய்ப் பிரசாரத்தினாலும், வதந்திகளாலும் பல குடும்பங்களில் திருமண உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது விவாகரதத்து அளவிற்குக் கூட விரிந்து சென்று விடும். இத்தகைய நிலைக்கு ஆட்பட்டோர் ஞாயிறு. ராகு காலத்தில் சனி ஹோரை சேருகின்ற மாலை 5 to 6 வரையான காலநேரத்தில் மேற்கண்ட பூஜைகளைச் செய்து வந்தால் வதந்திகளால் ஏற்பட்ட மனப் பகைமை, உணர்ச்சிக் கொந்தளிப்புகள் நீங்கி நன்முறையில் உறவு தொடரும். மொட்டைப் பெட்டிஷன், பொய்த் தகவல்களினால் சில அலுவலர்களின் மனமும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இப்பூஜைகளைச் செய்து வருவதால், தவறான வதந்திகளால் ஏற்பட்ட இடர்கள் நீங்கி அலுவலக வாழ்க்கை நன்முறையில் தொடரும்..

ஞாயிற்றுக் கிழமையில் இராகு காலத்தில் செய்கின்ற பூஜையில், தூணில் உறைகின்ற ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியே மிகச் சிறப்பான பலன்களை அள்ளித் தருபவர் அன்றோ ! ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கு எதிரில் உள்ள தூணில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியும் இருந்திடில் இதனால் பூஜாபலன்கள் பல்கிப் பெருகுகின்றன. ஏனென்றால் பிரதோஷ பூஜையானது ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தது என்று முன்பே கண்டுள்ளோம் அல்லவா? எனவே ஒரே சமயத்தில் ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கும், ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கும் பூஜை செய்வது விசேஷமானதாயிற்றே! இவ்வாறு சரபேஸ்வர பூஜையின் மஹிமையையும் பலாபலன்களையும் பல அத்யாயங்களாக விவரித்திடலாம்!

ஆரோக்கிய விரதம்

நல்ஆரோக்யத்தைத் தருவதற்கான விசேஷ தினங்களும் தெய்வ மூர்த்திகளும் உண்டு. ஆரோக்கிய விரத நாள் பூஜையானது சுக தேவதைகளின் பரிபூர்ண ஆசியைத் தரவல்லதாகும். சூரியக் கதிர்களில் உஷ்ணிக் சந்த ரேகைகள் ஒளிரும் நாளே ஆரோக்கிய விரத நாள். வாலகில்லிய மஹரிஷிகள் ஆயுர்வேத மந்திரங்களை ஓதும் அற்புத நாளிது!

வரும் 20.12.1998 ஆரோக்கிய விரதப் பண்டிகை தினமாக அமைகிறது. உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு வறுமையை விட மிகவும் கொ(க)டுமையான பிரச்னை என்னவென்றால் நோய்கள் தாம்!. ஒரு சிறு நோய்த் தொந்திரவு கூட இல்லாத மனிதனே இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு நோய் நொடிகள் எல்லாம் வீட்டுக்கு வீடு நிரம்பிக் கிடக்கின்றன!

நோய் வருவதின் தாத்பர்யம் என்ன? கர்மவினைகள் சேராத ஜீவனே இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு புழு, பூச்சி முதல் விலங்குகள், மனிதர்கள் வரை அனைத்துமே, அனைவருமே கர்ம வினைகளின் பால் பட்டுத் தான் பூலோகத்தில் பிறப்பெடுத்து வந்துள்ளனர். பலவிதமான கர்மவினை களுக்கும் ஒரு தீர்வாகத்தான், விடையாகத்தான், வழிபாட்டு முறைகளும், தியான, யோக வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தத் தீவினை எந்த நோயைத் தரும், உறவுப் பிரச்னையை அளிக்கும், திருமணத் தடங்கலாகும். எவ்விதமான பரிஹாரம் எதெதற்கு என்பதை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளைத்தான் நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே சற்குருவின் பரிபாலனம் கலங்கரை விளக்கமாக உதவுகின்றது.

அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !

எனவே நம் வாழ்க்கையில் நாம் ஒரு சற்குருவைப் பெற்று விட்டோமேயானால் அவரே அனைத்துத் தீவினைகளுக்கும் பரிஹாரங்களைத் தந்தருள்வதோடு மட்டும் அல்லாது நோய்கள் மற்றும் பணக்கஷ்டங்கள் போன்றவை ஏற்படுவதற்குமான காரண, காரியங்களையும் சூட்சுமமாக உணர்வித்து நம்முடைய கர்மவினைகளை நாமே அனுபவிப்பதே துன்பங்களைக் களையும் வழி என்பதையும் உணர்த்துகின்றார். எனவே இடர்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவற்றை நம்முடைய தீவினைகளின் பிரதிபலனாக ஏற்று அனுபவித்துத் தெய்வீக ரீதியான தக்க நிவாரணத்தைத் தேடிக் கொள்வதேயாகும். இதனை, மனித உருவில் நம்மைப் போல் வாழ்ந்து, ஊட்டி உணர்த்துபவரே சற்குரு! அவரே பாவங்களைத் தீர்த்தருளும் பண்டரிபுரத்தானின் பரம சீடன்! இம்மை, மறுமையை வென்று நல்ல வீடுபேற்றைத் தருகின்ற இறைத் தூதர்! வைகுண்டத்தை உணர்த்தும் சிவஞான யோகி! கைலாயப் பேற்றைத் தரும் ஆதி சிவனின் அடிமை!

பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தோமேயானால் நாள்தோறும் விதவிதமான பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் குறித்திருப்பார்கள், “என்ன இது, இவ்வளவு பண்டிகைகளைக் குறித்திருக்கின்றார்களே! இதனைக் கொண்டாடுவதற்கே நம் வாழ்க்கை முழுவதும் ஆகிவிடும் போலிருக்கின்றதே!”என்று கூட எண்ணத் தோன்றும். இதற்காகத் தான் அக்காலத்தில் ஆலயங்களில் சகல ஜீவன்களின் நல்வாழ்விற்காக மிகச் சிறந்த பணியாகத் தினந்தோறும் விசேஷ தினங்களை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடி வந்தார்கள், இன்றைக்கும், பொங்கல் பண்டிகைகளும் நவராத்திரிப் பண்டிகையின் விசேஷ பூஜைகளும், பிரதோஷம், விஷ்ணுபதி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களிலும் கூட ஆலயங்களில் பலவிதமான சிறப்பான வழிபாடுகளை மக்களின் நல்வாழ்விற்காகக் கொண்டாடி வருகின்றனர் அல்லவா!

ஆரோக்யமும் ஐஸ்வர்யங்களுள் ஒன்றே! இதே போலத்தான்ஆரோக்கிய விரதம் என்று ஒன்றும் நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மகத்துவத்தைப் பலரும் அறியாது இருக்கின்றனர். மனிதனுக்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கியம்தானே! ஆரோக்கியத்தைத் தருவதற்குக் கூட ஒரு விரதம் உண்டா என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா! நிச்சயமாக உண்டு, ஏனென்றால் லட்சுமி கடாட்சங்களுள் நல்ல ஆரோக்யமும் ஒன்றுதான். ஆம். உண்மையிலேயே ஒவ்வொரு ஜீவனுக்கும் நல்ல ஆரோக்கியத்தையே ஐஸ்வர்ய கடாட்சமாகத் தந்தருள்கின்ற சிறப்பான விரதமே ஆரோக்கிய விரதம் ஆகும். .

சுமங்கலித்துவம், தீர்க்கமான ஆயுள், ஐஸ்வர்ய கடாட்சம் போன்ற பலவிதமான நன்மைகளையும் பெற வேண்டும் என்றால் ஆரோக்கியமான் தேகம்தானே இதற்கு அடிப்படையாக அமைகின்றது. ஆரோக்கிய விரதத்தை நன்கு முறையாக அனுஷ்டித்து அரிய தபோபலன்களைப் பெற்ற மகரிஷிகளும் உண்டு.

மஹரிஷிகளா தம் உடல் நலத்திற்காக ஆரோக்ய விரதத்தை மேற்கொள்கின்றனர் ?

ஸ்ரீ துர்வாச மகரிஷி, ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி போன்ற அனைத்து மகரிஷிகளும் தங்களுடைய பர்ணசாலைகளில் தாமும் தம்முடைய சிஷ்யர்களுடன் சேர்ந்து ஆரோக்கிய விரதத்தை அனுஷ்டித்து அதன் தபோ பலன்களை, விரத சக்திகளை மக்களுக்கு அர்ப்பணித்து உள்ளார்களே தவிர, தமக்காக அல்ல!

இந்த ஆரோக்கிய விரதத்தன்று சித்புருஷர்களும், மகரிஷிகளும் அருளியுள்ள படி விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு இந்த விசேஷ தினத்தின் தெய்வீக மருத்துவ சக்திகள் மட்டும் அல்லாது யுகங்கள் தோறும் ஜீவன்களின் நலனுக்காக ஆரோக்கிய விரதத்தை நன்முறையில் கடைபிடித்து வரும் மகரிஷிகளின் அனுக்கிரகமும் அவர்களுடைய ஆரோக்கிய விரத பலன்களும் வந்து சேர்கின்றன! இரட்டிப்புப் பலன்கள் அல்லவா! எனவே இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய விரதநாள் அன்று விடியற்காலையிலேயே முடிந்தால் பிரம்ம முகூர்த்தத்திலேயே நீராடல் வேண்டும். காலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை சூரிய உதயத்திற்கு முந்தைய நேரம் இதற்கு மிகவும் சிறப்பானதாகும். ஏனென்றால் மகரிஷிகளின் அதியற்புதமான பிரம்ம முகூர்த்த பூஜைகள் துவங்குகின்ற நேரமாதலின் இந்நேரத்தில் ஸ்ரீ அகமர்ஷண மந்திரத்தை ஓதி நீராடுதல் வேண்டும். குளிர்ந்த நீரில் நீராடுவதே சிறப்புடையது. ஆரோக்கியம் இல்லாதவர்கள் வெந்நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கங்கை, காவிரி மற்றும் புண்ணிய நதி தீர்த்தங்களை நீரில் சேர்த்து நீராடுவதே புனிதமானதாகும். முதல் நாளே நன்கு துவைத்து உலர்த்தப்பட்ட பருத்தி ஆடைகளை அணிந்து நெற்றிக்குத் திருநீறோ, மஞ்சளோ, சந்தனமோ, குங்குமமோ இட்டு ஒரு மரப்பலகையில், கம்பளி/பருத்தித் துணியின் மீது அமர்ந்து முதலில் சிறிது அருகம்புல் அல்லது துளசித் தீர்த்தத்தை அருந்திட வேண்டும். ஒரு மண் பாத்திரத்திலோ, சுரைக் குடுவை/மரக் குடுவையிலோ அருகம்புல் மற்றும் துளசி இலைகளை நீரில் போட்டு வைத்திருந்து ஓர் இரவு முழுவதும் நீரில் ஊறுவதால் மூலிகைகளின் அஹமர்ஷண சக்தி அதில் நன்கு சேரும்.

மூன்று தர்ப்பைகளை துளசி/அருகம்புல் தீர்த்தத்தில் வைத்து ஸ்ரீ அகமர்ஷண மந்திரத்தை ஜெபித்து நீரை உட்கொள்ள வேண் டும். முதலில் கங்கை, காவிரி போன்ற புனித நீரில் ஸ்ரீஅகமர்ஷண மந்திரத்தைத் துதித்து நீராடினோம் அல்லவா! இது உடலின் வெளித் தூய்மைக்காக ஏற்பட்டதாகும். உடலின் உட்தூய்மைக்காக, மனத் தூய்மைக்காகத்தான் இந்த இரண்டாவது மன நீராடலாக, மூலிகை பானம் அமைகின்றது. இந்த உடல், மனத் தூய்மைக்குப் பின்னர் உங்கள் தினசரி பூஜை களை நிறைவேற்றுங்கள். தினசரி பூஜைகளை முறையாக நிறைவேற்ற இயலாதோர் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படும் தினசரி நித்ய கர்ம நிவாரண விதிகளை நிறைவேற்றி வருவீர்களேயானால் இதுவே மிகச் சிறந்த தினசரி பூஜையாகவும் அமைகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆரோக்யமளிக்கும் அவதார மூர்த்திகள்! ஆரோக்கிய விரதமாகிய இன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லருள் புரிகின்ற ஸ்ரீ அஸ்வினி தேவர்கள், ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்தி, ஸ்ரீருணஹர மூர்த்தி, ஸ்ரீ ஜுரஹரேசுவரர், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி, ஸ்ரீ ஆரோக்யமாதா, ஸ்ரீ பவஒளஷதீஸ்வரர் போன்ற தெய்வ மூர்த்திகளின் துதிகளை இன்று நாள் முழுவதும் இடைவிடாது ஓதி வருதல் வேண்டும்.

ஸ்ரீஆரோக்கிய மாதா
பூண்டி திருத்தலம்

கலியுக வேதமந்திர சாரமான ஸ்ரீ காயத்ரீ மந்திர தியானமும் சிறப்புடையதாகும். இன்றைய ஆரோக்கிய விரதநாளில் அருகம்புல் துளசி கலந்த நீரினை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல் வேண்டும். குறிப்பாக செவ்வாய் பகவான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லருள் புரிவதால் இன்றைய தினத்தின் செவ்வாய் ஹோரை நேரங்களில் செவ்வாய் பகவானுக்கு உரித்தான துதிகளையும், அபிஷேக ஆராதனைகளையும் செய்தல் புனிதமானதாகும். (பகல் 12-1, இரவு 7-8).

ஏனைய நாட்களில் உங்கள் நட்சத்திரம், பிறந்த நாளுக்குரிய நவரத்தின/கல் மோதிரம் அணிந்தாலும் இன்று முழுதும் செவ்வாய் பகவானுக்கு உரித்தான சிவப்பு நிறக் கல்லால் ஆன மோதிரத்தைக் கூடுதலாகவோ தனித்தோ அணிதலும் விசேஷமானதாகும்.

இன்றைக்கு கிரிவலம் வருவோர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து திருஅண்ணாமலை, சென்னை திருக்கச்சூர், திருச்சி மலைக்கோட்டை, திருச்சி குளித்தலை அருகே உள்ள ஸ்ரீஐயர்மலை, திருப்பரங்குன்றம், பழனி போன்ற மலைத்தலங்களில் ஸ்ரீ அகமர்ஷண ஸுக்தம், ஸ்ரீ காயத்ரீ மந்திரம் போன்றவற்றை ஓதியவாறே கிரிவலம் வருதல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. ஏனென்றால் ஆரோக்கிய விரதமான இந்நாளில்தான் ஆரோக்கியத்திற்கு உரித்தான நற்கதிர்களை ஒளிக் கதிர்களாக வெளிவிடுகின்ற மூலிகைகள் பிறப்பெடுக்கின்றன! பொதுவாக ஆட்டுக்கால் கிழங்கு, கணைக் கால் மூலிகை, இருவாட்டி போன்ற பல மூலிகைகளை, தக்க மந்திரங்களை ஜபித்து எடுத்து நம்முடைய ஆரோக்கியத்திற்கு உரித்தான லேகியம், கஷாயம் போன்றவற்றைச் செய்ய, அல்லது மருந்துகளை உட்கொள்ள இதுவே ஏற்ற தினமாகும்: இம்மூலிகைகளுக்குக் காப்பு மந்திரங்களை ஓதியே அவற்றிற்குரிய தக்க தேவதா பூஜைகளைச் செய்துதான் மூலிகைகளைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் தற்போது மூலிகை பூஜை முறைகளை அறிந்தோர் ஒரு சிலரே. எனவே யாவரும் இம்மூலிகைகளின் பலன்களைப் பெற வேண்டுமெனில் இம்மூலிகைகள் தானாகவே ஆரோக்கிய கதிர்களை வெளிவிடுகின்ற இந்நன்னாளில் கிரிவலம், ஹோமம் போன்ற பூஜைகளைச் செய்வோமேயானால் இம்மூலிகைகளின் ஆரோக்கியக் கதிர்கள் இயற்கையாகவே நமக்குக் கிட்டுகின்றன அல்லவா! எனவே அரிய பல தெய்வீக இரகசியங்கள் நிறைந்த மூலிகைகள் பல கட்டு மந்திரங்களைத் தன்னுள் கொண்டிருந்தாலும் அவை தாமாகவே வெளிவருகின்ற சில குறித்த தெய்வீக நாட்களை நாம் அறிந்து கொண்டோமோயானால், இந்நாட்களில் கிரிவலம் வந்து மூலிகை கிரண சக்திளைப் பெற்று நிறைந்த பலாபலன்களை நாம் ஒன்றாகப் பெற்றிடலாம் அல்லவா!

சுருளி மலையில் பல தெய்வீக மூலிகைகள் கிட்டுகின்றன. தக்க குருவின் வழி காட்டுதல் இன்றி, மூலிகா தேவதா மந்திரங்களை ஓதாது இங்கு இம்மூலிகைகளைப் பறித்தல் கூடாது. ஆனால் ஆரோக்கிய விரத நாள், செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரங்களில் மூலிகைச் செடிகளை வணங்கி வழிபட்டு, அவற்றைப் பணத்திற்காக அல்லாது நன்முறையில் இயற்கை வைத்தியத் துறைக்கு ஏற்ப கஷாயம், லேகியம் செய்து நோயாளிகளுக்கு இலவசமாகத் தருகின்ற நற்பணியை இறைப் பணியாகச் செய்து வந்தால் நோய் குணமாக்கும் மருத்துவ சக்தி பெருகுவதோடு தீர்க்க தரிசனமும் கிட்டும்.

மூலிகைகளை வைத்து ஒரு போதும் வியாபாரம் செய்தல் கூடாது. இப்படிச் செய்திடினும் அதனால் கிட்டுகின்ற செல்வம் யாவும் இறைப்பணிகளுக்கே அர்ப்பணிக்கப் படுதல் வேண்டும். தக்க குருவின் வழிகாட்டுதலின்றி மூலிகை வைத்தியத்தில் ஈடுபடக் கூடாது.

ஆரோக்கிய விரத நாளன்று தெய்வீகக் கிரணங்கள் பரிணமிக்கின்ற புனிதமான அமிர்த நேரங்களும் உண்டு. இன்று அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சி நேரத்தில் (12.00 மணி) கலியுகத்தின் பிந்து தர்ப்பண அமிர்தமாக விளங்குகின்ற தேனில் மூன்று இஞ்சித் துண்டுகளை உறைய விட்டு செவ்வாய் பகவானுக்குப் படைத்து இதனை அருகம்புல் சாற்றுடன் சேர்ந்து அருந்திடல் வேண்டும். அபிஜித் முகூர்த்தத்தில் இந்த பிந்து தர்ப்பண அமிர்தத்திற்கு மிகுந்த தெய்வீக சக்தி உண்டு.

சந்த்ர மூலிகா மஹிமை

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மூலிகைகளுக்கும் அமுத சக்தியைத் தருவது சந்திர ஒளியாகும், சந்திர ஒளிக் கிரணங்களில்தான் பெரும்பாலான மூலிகைத் தாவரங்கள் உற்பத்தியாகி, பூத்து, காய்த்து, கனிந்து மகத்தான ஒளஷத சக்திகளைப் பெற்று விளங்குகின்றன. எனவேதான் ஆரோக்கிய விரத பூஜைகளிலும், நோய் நிவாரணத்திற்கான வழிபாடுகளில் சந்திர வழிபாடு, மிகவும் சிறப்புடையதாக விளங்குகின்றது. இன்று மாலையில் சந்திர தரிசனத்தைப் பெற்று வானத்தில் சந்திர பகவானுக்கு நேரிடையாகவே தேன் கலந்த பசும்பாலை ஒரு மர/வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துப் படைத்து உடனேயே சந்திர சாட்சியாக குடும்பத்தோடு இதனைச் சிறிது அருந்திட வேண்டும். இதற்குச் சந்திர பிந்தாமிர்தம் என்று பெயர்.

சந்திரனுடைய பதினாறு முழுக் கலைகளில் ஒன்றான ஒளஷத வீர்யக் கதிர்கள் முழுப் பரிமாணம் பெறும் நாளாக ஆரோக்கிய விரத நாள் விளங்குகின்றது.

சுருங்கக் கூறின், ஆரோக்ய விரத நெறிகளாக இந்நன்னாளில் விடியற்காலையில் மஞ்சள்/மற்றும் புனித நதி நீரில் நீராடி சூரிய உதய நேரத்தில் காலையில் காவிரி, கங்கை போன்ற புனித நதி நீரில் ஊறிய அருகம்புல், துளசி தீர்த்தத்தையும், அபிஜித் முகூர்த்தமாகிய பகல் உச்சிக் காலத்தில் (12.00 மணி) தேன் கலந்த மூலிகைச் சாற்றையும், மாலையில் சந்திர தரிசனத்தின் போது சந்திரா பிந்தாமிர்தம் எனப்படும் பால், தேன், துளசி, அருகம்புல் சாறு நீரையும் சிறிது பிரசாதமாக அருந்துதல் வேண்டும். காலையிலும், மாலையிலும் தர்ப்பைப் பாயிலோ அல்லது மரப்பலகையிலோ அமர்ந்து ஸ்ரீ காயத்ரீ மந்திரம் மற்றும் மேலே கூறப்பட்டுள்ள, ஆரோக்கியத்தை நல்குகின்ற தெய்வமூர்த்திகளின் துதிகளைப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு 9.00 மணிக்கு ஆரோக்கிய விரதத்தின் நிறைவாக ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்திகளின் துதிகளை ஓதி, ஸ்ரீ தன்வந்த்ரீ காயத்ரீ மந்திரத்தையும் துதித்துச் சிறிது தேன் கலந்த அருகம்புல் துளசிச் சாறினை அருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

வசதியுள்ளவர்கள் ஆரோக்கிய விரத நாளான இன்று உங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து அதில் பொன்னாங்கண்ணி, கருவேப்பிலை, புதினா, வில்வம், துளசி, அருகம்புல், போன்ற மூலிகைகளைச் சிறிது சேர்த்து ஏழைகளுக்கு அன்னதானமாக இடுதல் வேண்டும். உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இனிப்பு பண்டங்களைத் தயாரித்து ஏழைகளுக்கு அளிப்பார்களேயானால் அந்த இனிப்பான உணவைக் கண்டு அவர்கள் அடைகின்ற பரமானந்தத்தில் தான் உங்களுக்கு ஏற்பட் டுள்ள சர்க்கரை நோயின் கடுமை தணியும்.

பலவிதமான நோய்கள் காரணமாக உங்கள் உடம்பு எதை ஏற்றுக் கொள்ளாதோ, அதனை நன்கு உண்ணக்கூடிய ஏழைகளுக்கு அந்த உணவுப்பொருளையே அன்னதானமாக இடும்பொழுதுதான் எந்த உணவுப்பொருளை உங்களால் ஏற்க முடியவில்லை என்று உங்கள் மனம் உள்ளூர ஏங்குகின்றதோ அந்த ஏக்கத்திற்குப் பரிஹாரமும் குறித்த நோய்க்குரித்தான நிவாரணமும் உங்களைத் தேடி வரும். இதுவே நோய் நிவாரண விதிகளுள் முக்கியமானதாகும், ஆனால் கலியுகத்தில் யார் இதனைப் பின்பற்றுகின்றார்கள் ? காரணம், தக்க குருவைப் பெறாமைதான்!

ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
வைத்தீஸ்வரன்கோயில்

ஆரோக்கிய விரத நாளான இன்று பிரண்டைத் துவையல் செய்து அதனை உணவில் சேர்த்து அன்னதானமாக இடுதல் முக்கியமானதாகும். ஏனென்றால் பிரண்டை என்பது தேவலோகத்து மூலிகையாகும். துளசி, அருகம்புல், வில்வம் போன்ற சில மூலிகைப் பொருட்கள்தான் பூலோகத்திலும், தேவலோகம் மற்றும் விண்ணுலக லோகங்களிலும் காணக் கிடைக்கின்றன. ஏன் தேவாதி தேவர்கள் கூட தூர் எனப்படும் அருகம்புல்லைத் தேடி தூர்வா ஸூக்தப் பூஜைக்காகப் பூலோகத்திற்குத்தானே ஓடோடி வருகின்றனர். இவ்வாறாக ஜாதி, மத பேதமின்றி யாவரும் அனுஷ்டிக்கக் கூடிய மிகச் சிறப்பான விரத நாளே ஆரோக்கிய விரத நாளாகும். ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய ஸ்ரீஜுரஹரேசுவரர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவராதலின் இன்று அவருக்கு சந்தனக் காப்பிடுவது சிறப்பானது.

காலையில் மர பலகையில் அமர்ந்து தியானித்து ஸ்ரீ சூரிய பகவானை வானத்தில் தரிசித்திட வேண்டும். வெறும் கண்களால் சூரியனைப் பார்த்தல் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு உரிய சில விசேஷமான கை விரல் முத்திரைகளும் உண்டு. உங்களுடைய விரல்களை, பாசாங்குலி முத்திரையாக அமைத்துக் கொண்டு இம்முறையில் தான் நீங்கள் சூரியக் கதிர்களைத் தரிசித்திட வேண்டும். தயவு செய்து வெறும் கண்களால் சூரியனைப் பார்த்திடல் வேண்டாம்.

எந்த சூரிய பகவானானவர் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடானு கோடி ஜீவன்களுக்கும்,மனிதர்களுக்கும், தேவர்களுக்கும், விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் சூரிய ஒளிச் சக்தியைத் தந்து அருள் பாலிக்கின்றாரோ அந்த சூரியபகவானைத் தரிசிக்காது ஆரோக்கிய விரதம் எவ்வாறு பரிபூரணமடையும் ? மேலும் சூரியனை வெளிச்சம் தருகின்ற ஒரு கோளமாகவே இதுவரை நாம் கருதி வந்துள்ளோமே தவிர உலகத்திலுள்ள அனைத்திற்கும் ஆரோக்கியமளிக்கும் தெய்வ மூர்த்திகளில் ஒன்றாக சூரிய பகவானைத் தரிசித்திருக்கின்றோமா?

ஸ்ரீ ராமரே, ஸ்ரீ அகஸ்திய மகரிஷியிடம் இருந்து ஸ்ரீஆதித்ய ஹிருதயம் என்னும் சூரிய ஸ்தோத்திரத்தை உபதேசமாகப் பெற்று ஓதிப் பரமானந்தம் அடைந்தார் என்றால் சூரிய வழிபாடும் அதனை ஓர் மகரிஷியிடமிருந்து உபதேசமாகப் பெற்று ஓதுவதும் எத்தகைய சிறப்புடையது என்று உணர்வீர்களாக!

இதற்காகத் தான் அக்காலத்தில் சந்தியா வந்தன வழிபாடு என்ற காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் செய்யப்படுகின்ற சூரிய, காயத்ரீ வழிபாடுகளை நம் முன்னோர்கள் விதித்தனர். ஆனால் இன்று இதனை யார் முறையாகச் செய்கின்றார்கள்? தினமும் சூரிய நமஸ்காரத்தை முறையாகச் செய்து இளநீர்க் குழம்பு எனப்படும் ஆயுர்வேத சிறப்பு மூலிகை மருந்தினைக் கண்களில் இரண்டு துளிகள் விட்டு முறையாக நேத்திர பூஜை செய்து வருவதனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கருடனுக்கு நிகரான கண் பார்வையைச் சிறப்பாகப் பேணுகின்ற ஒரு ஆரோக்கிய விரத முறையும் உண்டே !

ஆரோக்கிய விரத நாளான இன்று உங்கள் வசதிக்கு ஏற்ப அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அன்னதான தர்மங்களைச் செய்து வாருங்கள். கீழ்க்கண்ட தலங்களில் ஆரோக்கிய விரதத்தைப் பூண்டு இயன்ற அளவு உழவாரத் திருப்பணிகளுடன் இந்த நாளைப் பயன்படுத்துவீர்களானால் அது மிகச். சிறந்த ஆரோக்கிய விரத நாளாக அமைகின்றது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

ஸ்ரீதளீஸ்வரர் சிவாலயம் திருப்பத்தூர்

கேரளாவில் திருச்சூர் அருகேயுள்ள நெல்லுவாய்புரம் என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீஆதிமூல தன்வந்த்ரீ மூர்த்திக்கான ஆலயம், மாயூரம் அருகே ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில், சென்னை - பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் ஆலயம், ஸ்ரீ வேளாங்கண்ணி மாதா ஆலயம், திருத்துறைப் பூண்டியில் உள்ள ஸ்ரீ பவஒளஷதீஸ்வரர் ஆலயம், நவபாஷாணத்தினாலான பழனி ஸ்ரீமுருகன் கோயில், ஸ்ரீ கற்பக விநாயகர் என்று திருநாமம் பூண்டுள்ள விநாயக மூர்த்தி ஆலயங்கள், திருஅண்ணாமலை கிரிவலம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், கொல்லிமலை ஸ்ரீஅறப்பளீஸ்வரர் ஆலயம், சென்னை ராயபுரம் கல்மண்டபம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், சென்னை பாடி ஈஸ்வரன் ஆலயத்தில் ஸ்ரீஜகதாம்பிகை etc.

ஆரோக்கிய விரத நாளான இன்று, ஆயிரக் கணக்கான மூலிகைகளின் சக்தி நிறைந்து வரும் கொல்லி மலை நீர்வீழ்ச்சி, மாயூரம் அருகேயுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஸ்ரீசித்தாமிர்தத் தீர்த்தக் குளம், சென்னை பொன்னேரி அருகே சின்னக் காவாணத்திலுள்ள சிவாலயத்தில் ஸ்தல விருட்சமான அபூர்வமான அழிஞ்சில் மரத்தை 108 முறை அடிப் பிரதட்சணம் செய்தல், ஓங்காரப் பிரணவமே ஸ்தல விருட்சமாக, கொன்றை மரமாக விளங்குகின்ற காரைக்குடி, மதுரை சாலையிலுள்ள திருப்பத்தூர் ஸ்ரீ தளீஸ்வரர் சிவாலயம், பூமியின் அடியில் கோடிக் கணக்கான சிலலிங்கங்கள் பரிணமிக்கின்ற கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம், கயைத் தலத்தின் அனைத்து மகிமைகளையும் தன்னுள் கொண்டுள்ள திருச்சி லால்குடி அருகே உள்ள பூவாளூர் சிவாலயம் போன்ற முக்கியமான ஆலயங்களில் பாதங்களில்/ விரல்களில் மருதாணி இட்டு இன்று 108 முறையேனும் அடிப்பிரதட்சணம் செய்தல் நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

டிசம்பர் 1998 - விசேஷ தினங்கள்

1.12.1998 பரணி தீபம்
2.12.1998 அண்ணாமலையார் தீபம்
2.12.1998 புதன் இரவு 12-28 முதல் 3.12.1998 இரவு 8.49 வரை பெளர்ணமி திதி அமைகிறது.
2.12.1998 திருஅண்ணாமலை பெளர்ணமி கிரிவல நாள்.'
16.12.1998 மார்கழி மாத பூஜை ஆரம்பம், ஹேமந்த ருதுக் கால, தர்ப்பண நாள் - மாதப் பிறப்பு
29.12.1998 ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
1.1.1999 ஆருத்ரா அபிஷேகம் - சந்திர தரிசனம்

ஆயில்யத்தை வெறுக்காதீர்கள்

ஒரு மனிதன் கலியுகத்தில் தன் வாழ்நாளில் இன்ன விதமாகத்தான் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்தல் என்ற வரம்பின்றி, தன் மனம் போன போக்கில் வாழ்ந்து, தேவையற்ற எத்தனையோ தீய கர்மவினைகளை வளர்த்துக் கொள்கின்றான். எந்த பெறற்கரிய தெய்வீகமான மனிதப் பிறவியை எடுத்தோமோ, இதன் மூலம் பிறப்பிறப்பற்ற உன்னத நிலையை அடைவதை விடுத்து அனைத்துவித லௌகீகமான, சுயநல சேவையில் உழன்றுவரும் மனிதன் அருவருக்கத் தக்க கேவலமான தீய செயல்களில் தன் மனதைச் செலுத்தி வாழ்க்கையையும், ஆன்மீக நன்னிலையையும் நாசம் செய்து கொள்கின்றான். இதில் ஒன்றுதான் ஆயில்யம், பூராடம் போன்ற நட்சத்திரங்களை ஒதுக்கும் தகாத செயலாகும். இது முற்றிலும் தவறானது. இதில் பெரியோர்களான தாய், தந்தையர்களும் சேர்ந்து இந்த நட்சத்திரப் பெண்களை அறவே வெறுக்கின்றனர் என்பது கேட்பதற்கே மிகவும் வேதனைக்குரியதாயுள்ளது. சந்திரனின் பத்னி தேவியரில் ஆயில்ய நட்சத்திர தேவியும், பூராட நட்சத்திர தேவியும் சிறப்பான பெரும் இடங்களை வகிக்கின்றனர்.

ஆயில்ய நட்சத்திரத்தையோ, பூராட நட்சத்திரத்தையோ ஒதுக்கும்போது தேவாதி தேவ, நட்சத்திர தெய்வ மூர்த்திகளையே ஒதுக்குகின்றோம் என்பதை நன்கு உணருங்கள். கடுமையான தோஷங்களும், தேவையற்ற சாபங்களுமே இதனால் ஏற்படும். ஜாதக ரீதியாக திருமணப் பொருத்தங்கள் பார்த்து நிறைவேற்றுவது என்பது சிறப்புடையது. ஆனால் ஜாதகத்தைக் கணித்தல் என்ற பெயரால் தன்னுடைய அரைகுறை கணிப்பால் நூற்றுக் கணக்கான பெண்களை நிராகரித்து விடுகிறார்கள். குறித்த சில நட்சத்திரங்களின் இணைப்பு திருமண சம்பந்தத்திற்கு ஏற்பதில்லை என்பது ஜாதக ரீதியாக உண்மையே! ஆனால் ஜோதிடத்தில், ஆயில்யமோ பூராடமோ எந்த நட்சத்திரத்திற்கும் பொருந்தாது என்று சொல்லப்படவில்லை. ஏனென்றால், ஆயில்யமானது, அஸ்வினி, மிருகசீரிஷம், மகம், பூரம், ஹஸ்தம், சுவாதி அனுஷம் போன்ற நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி ஏனைய பல நட்சத்திரத்தினருக்கும் மிகவும் சிறப்புடையதாயுள்ளது.

இதேபோல பூராடமும், அஸ்வினி, கிருத்திகை, திருவாதிரை, மிருகசீரிஷம், புனர்பூசம் மகம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் போன்ற பல நட்சத்திரங்களுக்கும் பொருந்தும் என்பது ஜோதிட ரீதியாகவே உள்ளது. எனவே ஆயில்யம், பூராடம் நட்சத்திரம் என்பதற்காக மட்டும், அந்த நட்சத்திரப் பெண்களை எக்காரணங் கொண்டும் தள்ளாதீர்கள்! இந்தநட்சத்திரத்திற்காக ஒரு திருமண சம்பந்தமே ஒதுக்கப்படுமாயின் நிச்சயமாக இவ்வாறு வெறுத்து ஒதுக்கியோருக்குப் பலவித சாபங்கள் உண்டாகும்.

இதற்காகத்தான் அக்காலத்தில் சற்குருவை நாடி அனைத்துப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள். ஆயில்யமோ, பூராடமோ சற்குருவானவர் எந்த நல்வாக்கை அளித்தாலும் அதனை அப்படியே ஏற்றுக் கடைபிடிக்கின்ற ஒரு தெய்வீகத் தன்மை நம்முடைய குடும்பங்களில் நிலவி வந்தது.

பரிஹாரம் : பலவித காரணங்களால் இதுவரை ஆயில்ய, பூராட நட்சத்திரங்களை திருமண சம்பந்தத்திற்காக ஒதுக்கினோர் ஓரளவேனும் பிராயச்சிதம் பெற வேண்டுமல்லாவா? சென்னை திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூரிலுள்ள நட்சத்திர லிங்கங்களில் ஆயில்ய, பூராட நட்சத்திரலிங்க மூர்த்திகட்கு ஆயில்ய, பூராட நட்சத்திர நாட்களில்

ஆயில்ய நட்சத்திர மூர்த்திக்கு செம்பருத்தி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மூன்றும் கலந்த எண்ணைக் காப்பிட்டு, பஞ்ச தீப எண்ணை ஊற்றி தாமரைத் திரிகளால் 108அகல்விளக்குகள் ஏற்றி தன் தவற்றை யுணர்ந்து மன்னித்தருள வேண்டி மனப்பூர்வமாக சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். உங்களுடைய நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் சரி, ஏனைய 26 நட்சத்திர மூர்த்திகளுக்குரித்தான நல்லாசிகளும் உங்கள் காரண காரியங்களுக்குத் தேவையே. ஏனென்றால் நீங்கள், மூல நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் உங்கள் கிரஹப் பிரவேசம், திருமணங்கள், சீமந்தம், உபநயனம், அலுவலகத்தில் Promotion கிட்டி வேலையில் சேர வேண்டிய நேரம் இவ்வாறு பலவித விசேஷங்களுக்கும் நல்ல நட்சத்திரங்களைத் தானே தேடி ஓடிட வேண்டியுள்ளது. அப்படியானால் அனைத்து நட்சத்திரங்களின் அருள் இருந்தால்தானே உங்கள் வாழ்க்கை செம்மையாக இருக்கும்.

பூராட நட்சத்திர அனுக்கிரஹத்தால் பலவித காரண காரியங்கள் நடைபெற வேண்டியுள்ளன, உதாரணமாக பூராட நட்சத்திர தேவதா மூர்த்தியின் ஆசியால்தான் பலவித நோய்களினின்று விடுபட, பலவித கோயில் தீர்த்த நீராடல்களை மேற்கொள்ள இயலும்.

பூராட நட்சத்திர லிங்கத்திற்கு வெண் பட்டு சார்த்தி பூஜித்து அதனை தானமாக அளித்திடுக! மாடு, கோழி, நாய், பசு முதலானவற்றை வாங்குவதற்கும் பூராட நட்சத்திரம் சிறப்பானதாகும். இது மட்டுமின்றி, பசும்பால் அபிஷேகத்திற்கு மிகச் சிறப்பான நாள் பூராட நட்சத்திரமாகும். ஆயில்ய நட்சத்திர லிங்க தேவதா மூர்த்தியின் அனுக்ரஹத்தை நீங்கள் பெற்றால் தான் உங்கள் வாழ்வில் பல நற்காரியங்கள் நடைபெறும். நவக்கிரக பூஜைகள் அனைத்திற்கும் உரித்தானது ஆயில்ய நட்சத்திரமாகும். ஏனெனில் சூரியகிரகம் முதல் கேது கிரகம் வரை 9 நவக்கிரக மூர்த்திகளும் ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடக்கின்ற அபிஷேக, ஆராதனைகளையே மிக உவப்புடன் ஏற்கின்றனர் என்பது அனைவரும் அறியாத தெய்வீக ரகசியமாகும், மேலும் நவக்கிரஹ சாந்தி ஹோமமானது ஆயில்ய நட்சத்திரத்தில் செய்யப்பட்டால்தான்அதன் பரிபூர்ண பலன்களை பெற இயலும். பார்த்தீர்களா ஆயில்ய நட்சத்திரம் எத்தகைய தெய்வீகத் தன்னமயைத் தன்னுள் கொண்டுள்ளது என்பதை!

எனவே, ஆயில்யம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரித்தானவள் என்ற ஒரே காரணத்திற்காக கன்னிப் பெண்களை வெறுத்து ஒதுக்குவீர்களாயின் இவ்விரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் மூலம் நடைபெறவிருக்கின்ற நல்ல காரியங்கள் எல்லாம் பலவித தோஷத்தாலும், சாபத்தாலும் நிறைவேறாமல் போகும். குறிப்பாகச் சொல்லப் போனால் ஆயில்ய நட்சத்திரத்திற்காக ஒரு பெண்ணை ஒதுக்கியிருப்பாராயின் அவர் தம் வாழ்வில் நவக்கிரஹ சாந்தி பெற இயலாது. இக்குடும்பங்கள் பலவித துன்பங்களில் உழலும்.
மேலும் இந் நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் தமக்கு நன்முறையில் திருமணம் நிறைவேறுமா என்று ஏங்குகின்றனர் அல்லவா! ஆயில்ய பெண்கள் புன்னை மரம் ஸ்தல விருட்சமாக உள்ள கோயில்களில் தக்க இறைப்பணிகளையும், அபிஷேக ஆராதனைகள் செய்து வருதலாலும், பூராட நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் வஞ்சிமரம் ஸ்தல விருட்சமாக உள்ள இடங்களில் , இறைத் திருப்பணிகளையும் அபிஷேக ஆராதனைகளையும் செய்து வருவார்களாயின் நன்முறையில் திருமணம் நிறைவேறும்.

ஸ்ரீகௌடீ அம்மன்

பிரிந்த குடும்பம் ஒன்று சேர காசியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகெளடீ அம்மன்! உங்களுடைய பிறந்த நட்சத்திரம் தெரியாவிடில் சோழி தேவ ஜோதிட ரீதியாக ஸ்ரீ கெளடீ அம்மனின் சந்நிதியில் அதனை அறிந்திடுங்கள்!

காசித் திருத்தலத்திற்கு உரிய அம்பிகையே ஸ்ரீ கெளடீ அம்மனாகிய ஸ்ரீ சோழியம்மன்! கெளடீ என்றால் சோழி என்று பொருள். ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு பரிபூர்ண தரிசன முறையுண்டு, இதை முறையாகக் கடைபிடித்தால்தான் தலதரிசன பலன்கள் முழுமையாகக் கிட்டும். காசியில் அனைத்து கட்டங்களிலும் நீராடி அங்குள்ள 108க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தரிசித்திடினும், காசி நகருக்குரியவளாக விளங்கும், ஸ்ரீகௌடீ அம்மனை தரிசித்தால் தான் காசி யாத்திரை நன்கு பரிபூர்ணம் பெறும். காசிக்குச் சென்று ஸ்ரீ கெளடீ அம்மனைத் துதிக்காமல் வந்திடில் மீண்டும் அங்கு சென்று ஆரம்பத்திலிருந்து கங்கை ஸ்நானம், ஆலயங்களின் தரிசனம் என்று மறுபடியும் தொடங்கி நிறைவாக ஸ்ரீ கெளடீ அம்மனை தரிசித்தாக வேண்டும்!

சித்தர்கள் மிகவும் போற்றுகின்ற அம்பிகையே ஸ்ரீ கெளடீ அம்மனாகிய ஸ்ரீசோழி அம்மன்! ஐந்து சோழிகளை வைத்து கணிக்கப்படுகின்ற சோழி ஆருடம் சக்தி வாய்ந்ததாகும். ஒவ்வொரு சோழிக்குள்ளும் நிறைய ஆத்ம ரகசியங்கள் பதிந்துள்ளன.

பிறவிச் செவிடர்களாக இருப்போரும் மந்திர உபதேசங்களைப் பெற்று உய்வடைவதற்காக, ஸ்ரீ கெளடீ அம்மனின் சந்நதியில் ஐந்து சோழிகளை வைத்து உபதேசிக்க அல்லது அறிய வேண்டிய மந்திரங்களை சோழிகளில் ஓதி அம்பாளின் பாதார விந்தங்களில் சமர்ப்பித்துக் காது கேளாதோரிடம் அளித்திட ஸ்ரீசோழி அம்மனே மந்திர உபதேசம் தந்ததாக ஆகும், இதற்குரிய நாள், நட்சத்திரங்களும் உண்டு.

இது மட்டுமல்லாது தங்களுடைய பிறந்த நட்சத்திரம் யாதென அறியாதோர், 27 சோழிகளை ஒரு மஞ்சள் துணியில் வைத்து விரதமிருந்து காசிக்கு எடுத்துச் சென்று , ஸ்ரீ சோழி அம்மனின் திருவடிகளில் சோழிகளைச் சமர்ப்பித்து 27 முறை அடிப்பிரதட்சிணம் வரவேண்டும். பின் மஞ்சள் துணியைக் குலுக்கி, பிரித்து சோழிகளைத் தரையில் விட்டு எத்தனை சோழிகள் திறந்து கிடக்கின்றனவோ அந்த எண்ணிக்கைக்குரிய நட்சத்திரத்தையே தமது நட்சத்திரமாக ஏற்கின்ற கெளடீ பஞ்சாங்க சாஸ்திரமும் உண்டு.

பொதுவாக சற்குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற விரும்புவோர்க்கு ஸ்ரீ கெளடீ அம்மனின் அனுகிரஹம் பெரிதும் துணை புரிகின்றது. சோழி என்பதை சித்தர்களின் பரிபாஷையில் “மூடு மந்திரம்” என்பர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் குறிப்பிட்ட சில பீஜாட்சரங்கள் உண்டு. நன்கு சித்தி பெற்றவர்களே, தியாக மனப்பான்மை உடையவர்களாக மக்களுக்குச் சேவை புரியும் உள்ளங் கொண்டவர்கள் தாம், மந்திர சித்தியடைந்தவர்கள் தாம் மூல பீஜாட்சர மந்திரங்களை நேரிடையாக ஒதிடலாம். ஏனையோர்க்கு உப மந்திரங்களுடன், சுலோகங்களுடன், பல துதிகளுடன் பின்னப்பட்டதாகவே பீஜாட்சர பதங்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு எங்கோ துதிகளின் நடுவே இலை மறை காயாக பீஜாட்சரம் பதிந்துள்ள தோத்திரத்திற்கே “சோழி மந்திரம்” (மூடுமந்திரம்) என்று பெயர். பொதுவாக சற்குருமார்கள் இவ்வகையில் தான் மந்திரத்தை உபதேசிப்பர், நேரிடையாக பீஜாட்சரத்தையறிய பல கடுமையான தவ, விரத, மௌன, யோக நியதிகளுண்டு.

இன்றும் தாம் உபதேசமாகப் பெற்ற, நெடுங்காலமாகக் குடும்பங்களில் ஓதப்பட்டு வருகின்ற, பிரார்த்தனையாக ஒரு வருடம் / மண்டலமென துதிக்கப்பட்டு வருகின்ற மந்திரங்களை/துதிகளை 5/12/21/30 சோழிகளில் ஓதி அவற்றை ஸ்ரீ கௌடீ அம்மனிடம் அர்ப்பணிக்கும் வழக்கம் இன்றுமுண்டு. இதனால் மந்திர சித்தி கிட்டுவதோடு நல்ல பிரார்த்தனைகளும் நிறைவேறும். பொதுவாக ஸ்ரீ கெளடீ அம்மனுக்கு நேர்த்தி வைத்து பெளர்ணமி, அமாவாசையுடன் கூடும் வெள்ளிக் கிழமை, அமிர்தயோக நாட்களில் ஸ்ரீ கெளடீ அம்மனுக்கு, பச்சைப் பட்டு வஸ்திரம் சார்த்தி, பட்டுத் துணிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் சொத்து, பகைமை, வாய்ச் சண்டை, பொறாமை காரணமாகப் பிரிந்தவர்களும், கணவன், மனைவியரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான நல்வழியும் கிட்டும். மிகவும் சக்தி வாய்ந்த அம்பிகை! கலியுகத்தில் பிரத்யட்சமாக அருள்பாலிக்கின்ற கருணாம்பிகையே ஸ்ரீ கெளடீ அம்மனாகிய சோழி அம்மன்.

ஸ்ரீஇடியாப்ப சித்தர்

அருள் வழி காண திருஅண்ணாமலையை நாடு! ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள்

சித்புருஷர்களின் தலைமை நாயகராக விளங்கும் ஸ்ரீ அகஸ்தியர் மஹரிஷியின் பாரம்பரியத்தில் தோன்றியவரும், நவநாத சித்தர்கள், மலப் புழுச் சித்தர், ஸ்ரீ கொங்கண சித்தர், ஸ்ரீ சதாதபஸ் சித்தர், ஸ்ரீஅஸ்தீக சித்தர், ஸ்ரீதடிதூக்கி ஸ்வாமி சித்தர், ஸ்ரீ அரிக்கேன் விளக்குச் சித்தர் போன்ற அற்புதமான சித்தர்களின் வழிவந்து அவர்களின் அரும்பெரும் குருவருட் கடாட்சத்தைப் பெற்றவரும், இறைப்பெரும் கருணையால் ஈச பட்டம் தாங்கி என்றும் வாழும் ஏகாந்த ஜோதி சித்தராய் நான்கு யுகங்களிலும் தோன்றி அனைத்து கோடி லோகங்களில் உள்ள ஜீவன்களுக்கு நல்வழி காட்டி அருள்புரியும் சித்புருஷர்களில் ஒருவரே ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளாவார்.

ஆதி மூல அகஸ்திய மஹா பிரபுவே பலகோடி யுகங்களிலும் கோடானு கோடி அகஸ்தியர்களாகப் பரிணமிக்கின்றார். வாக் தத்துவ பீடாதிபதியாய்த் தோன்றியும் தோன்றாமலும், மறைந்தும் மறையாமலும், உருக்கொண்டும் உருவின்றியும் குருவருளை வேண்டுவோர்க்கு அருள் மழையென நல்வரம் நல்குபவரே ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளாவார். அநாதியாய், எவ்விதப் பெயருமின்றி ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பிரபஞ்சமெங்கும் சர்வேஸ்வரனின் தூதராய் வலம் வருகின்ற சித்புருஷர்கள், மக்களின் மனதில் தங்குவதற்காகக் காரணப் பெயரைச் சூடுகின்றார்கள்,

நாற்றமடிக்கும் மலத்தினூடே அமர்ந்து மாந்தர்களின் மும்மலத்தை நீக்கும்படி எப்போதும் தன் திருமேனியிலிருந்து இனிய நறுமண செவ்விறைக் கதிர்களைப் பரப்புகின்ற மலப்புழுச் சித்தர் போல,
குப்பை கூளங்களின் இடையே எப்போதும் அமர்ந்தவாறு அவர்தம் திருக்கரங்களால் எந்தப் பிரசாதப் பொருளை அளித்தாலும் நறுமணம் கமழும் வண்ணம் நல்வரம் கூட்டும் குப்பைச் சித்தர் போல,
எது நுனி, எது முடிவு என்று அறிய முடியாத இடியாப்பத்தைப் போல முடிவும் முதலும் இல்லா, தோற்றமும் மறைவும்.காணாத, பிறப்பு இறப்பு இல்லாது என்றும் வாழ்கின்ற ஏகாந்த பரஞ்ஜோதியே ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள்

இவ்வற்புதச் சித்தரின் அருமைச் சிஷ்யரான ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளே இன்று கலியுகத்தில் நம்மிடையே உலாவரும் ஒளிமிகு சற்குருநாதராய் குருவருட் கடாட்சம் பொங்கித் திளைத்திட அருள் வழிகாட்டும் சித்புருஷர்!

இன்ப துன்பங்களினிடையே ஆட்பட்டு, உழன்று, சிக்கித் தவிக்கும் மாந்தர்களுக்கு முக்தியைக் காட்டும் மோட்ச தீபமாய், மோட்சத்தை அளிக்கும் முக்திச் சுடராய், இல்லறமே இறைவனைக் காட்டும் நல்லறமென, தாமே இல்லற வாழ்க்கையைப் பூண்டு சித்புருஷர்களின் எளிய அருள்வழி முறைகளை ஜாதி, மத, இன, குலபேதமின்றி மட்டுமல்லாது ஆண், பெண் விலங்குகள், தாவரம், புழு பூண்டுகளென எவ்வித வெளித் தோற்ற வேறுபாடும் இன்றி அனைத்துமே உள்ளத்துள் ஒளிச் சுடராய்த் துலங்கும் ஆத்ம ஜோதிப் பரிமாணங்களென உணர்த்த வந்த உத்தம யோகி!

நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், தேவமொழி, தமிழ் வேத, மந்திர, யந்திர, தாத்பர்யங்களை, பலன்களை எளிய பூஜைகள், தான தருமங்கள் மூலம் சித்புருஷர்கள் அருள்கின்ற வழியிலே யாவர்க்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் எடுத்துரைத்து வரும் கர்மயோகி!

பிறவி, வாழ்க்கை, மரணம் ஆகியவற்றின் தெய்வீக ரகசியங்களைப் பாமரரும் உணருமாறு விண்டுரைக்கும் ஞானயோகி!

ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் அருட் பணிகள்

திருஅண்ணாமலையிலே தன் சற்குருநாதராம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சுவாமிகளின் குருகட்டளையாக ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நிர்மாணித்து வருபவர். இளம் பிராயத்திலிருந்தே தம் குருநாதருடனும் அவர் தம் சற்குருநாதர் தன் திருவுடலை மறைத்து நின்ற பிறகு, கடந்த பல ஆண்டுகளாக, தம் சிஷ்யர்களுடனும் திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபம் தோறும், ஆங்கே கிரிவலம் வரும் மக்களுக்கு அன்னதான கைங்கர்யத்தையே மகத்தான பிரம்ம உற்சவமாக நடத்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் அடிமையாக நமக்கு நல்வழி காட்டுபவர்!

சர்வேஸ்வரனுக்கே சகலத்தையும் சமர்ப்பிப்பதே சத்யமான சரணாகதி என்பதனை, “எதுவும் என்னுடையதல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா, அருணாசலா”, என்று சித்த குரு வேத ஸுக்தம் ஓதி பரம்பொருளின் பரமார்த்த அடிமையாக, ஸ்ரீ அப்பர் சுவாமிகள் வகுத்த வழியிலே, தம் குருநாதரின் அருளாணையாக இன்றைக்கும் நூற்றுக் கணக்கான இறைத் தலங்களில் தாமே முன் நின்று உழவாரத் திருப்பணிகளை நடத்தி, எண்ணற்ற குடும்பங்களுக்கு அருள் வழிகாட்டி,

ஏழைகளுக்கான இலவச மருத்துவ உதவி, பொன் மாங்கல்ய தானம், தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகளுக்குரிய மங்களப் பொருட்கள் மற்றும் உணவு, ஆடை தானங்கள், யாவருமாய் பாமரருமே பங்கேற்கும் வண்ணம் பல அரிய ஹோம வழிபாடுகளை நிகழ்த்துதல்,

இன்று தமிழகமெங்கும் பாலபருவ மாதாந்திர ஆன்மீக இதழாய் பவனி வரும் ஸ்ரீ அகஸ்திய விஜயம் மாத இதழ் மற்றும் பிரதோஷ மஹிமை, பூக்கள் தரும் புனிதங்கள், ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமை, திருச்சி மலைக்கோட்டை மஹிமை, எளிய தர்ப்பண முறைகள், ஸ்ரீ ஐயர்மலை மஹிமை, ஸ்ரீ ராகுகால துர்க்கை பூஜை மஹிமை, திருஅண்ணாமலை மஹிமை போன்ற சித்புருஷர்களின் தெய்வீக ரகசியங்களைத் தாங்கி வரும் ஆன்மீக நூல்களை வெளியிடுதல்;

ஏழை எளியோர்க்கும் பித்ரு தர்ப்பண பூஜைகளின் மஹிமைகளை உணர்த்தி கடைபிடிக்கச் செய்தல் போன்ற பல விதமான சமுதாய இறைப்பணிகளை, இறையடியார்களின் குழுவாக்கி சத்சங்கமாக, “யாம் பெற்ற தெய்வீக இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உத்தம தியாக மனப்பான்மையுடன் திருப்பணிகளாற்றி இறையருளால் இன்று நம்மிடையே உறைந்து அறநெறியை உய்வித்து வருகின்றார்கள்.

பல ஆண்டுகளாக வாடகைச் சத்திரங்களில் நடைபெற்று வந்த ஆஸ்ரமத்தின் கார்த்திகை மாத தீப அன்னதான பிரம்ம உற்சவமானது தற்போது ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆஸ்ரமத்திலேயே, ஆஸ்ரம் கட்டிடப் பணிகள் முடிவு பெறாத நிலையிலும் மிகுந்த சிரமங்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. மாதம்தோறும் பெளர்ணமி தினத்தில் கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்குப் பெளர்ணமி அன்னப் பிரசாத விநியோகம் ஸ்ரீ அருணாசலப் பெருமானின் திருவருளால் நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே, ஆஸ்ரம் கட்டுமானப் பணிகள், ஏழைகளுக்கான மருத்துவ உதவி, ஸ்ரீ அகஸ்திய விஜயம் மாதாந்திர இதழ், ஆன்மீக நூல்கள் வெளியீடு மற்றும் பல நற்காரியங்களுக்கு இடையே மாதாந்திர பெளர்ணமி அன்னதான கைங்கர்யத்தையும் பல பொருளாதார இன்னல்களுக்கு இடையேயும் நடத்தி வருகிறோம்.

கார்த்திகை தீப அன்னதான மஹோத்ஸவம் - 1998 அன்னதானக் கைங்கர்ய விண்ணப்பம்!

ஆஸ்ரமத்தின் ராஜ கோபுரம் மற்றும் ஏனைய கட்டுமானப் பணிகள், பெளர்ணமி அன்னதானம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், வருகின்ற பகுதான்ய வருட கார்த்திகை தீபத்தின்போது ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளால், தம் குரு ஆணையாகத் தொடர்ந்து நடத்த இருக்கின்ற அன்னதான மஹோத்ஸவத்திற்கும் ஆஸ்ரம ராஜகோபுரத் திருப்பணிக்கும் தங்களால் இயன்ற பொருளுதவியையும் சரீர ஒத்துழைப்பையும் நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரபஞ்சத்திற்கே தெய்வீக மையமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையானது (Universal spiritual Centre) சர்வேஸ்வரனுடைய இறைத் திருமேனியே! பல ஆலயங்களில் சுயம்பு மூர்த்திகளாக அருள்பாலிக்கின்ற ஈஸ்வரன், பூவுலகில் மிகப் பெரிய சுயம்பு மூர்த்தியாக திருஅண்ணாமலையா(ரா)க மலைரூபத்தில் அருள்பாலிக்கின்றான். இங்கு அருணாசல மலையை ஒரு முறை கிரிவலம் வந்தால் விநாயகரைப் போல சர்வேஸ்வரனையே, இறைப் பரம்பொருளையே வலம் வந்த பாக்கியத்தைப் பெற்றுத் தருகின்றது.

கைலாயத்தில் உறைகின்ற எம்பெருமானே ஜீவன்களைக் கடைத்தேற்ற விரும்பி, தாமே மலையுருவம் கொண்டு இங்கு உறைவதால்தான் இதுவே சித்புருஷர்களும், மகரிஷிகளும், ஞானியர்களும், யோகியரும், முமூட்சுக்களும், கந்தர்வர்களும் என்றும் எப்போதும் வலம் வருகின்ற புண்ணிய பூமியாகும். இன்று நாம் மலையில் காண்கின்ற கற்கள், மண் துகள், தாவரங்கள், பாறைகளெல்லாம் சுயம்பிரகாச லிங்க மூர்த்திகளும் அதியற்புத மூலிகைகளும் ஆகும்.

மனிதர்கள் மட்டுமா திருஅண்ணாமலையை இறைவனை நாடுகின்றனர்? ஏகஜோதியாம், ஒன்றாம் இறைப் பரம்பொருளான வைகுண்ட, திருக்கயிலாயத்தில் பரஞ்சோதியாய்ப் பரிமளிக்கின்ற ஈஸ்வரனை, ஸ்தூல ரூபத்தில், மலை வடிவில் கண்டு தரிசித்து ஆனந்தித்திட ரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கோடானு கோடி தேவாதி தேவதைகளும் ஓடோடி வருவது திருஅண்ணாமலைத் திருத்தலத்திற்குத்தான்!

சித்புருஷர்களும், மஹரிஷிகளும், உத்தம இறை நிலைகளை அடைந்த இறைத் தூதுவர்களும் எப்போதும் இங்கு பிரசன்னமாயிருப்பதால் இத்திருத்தலத்தில் இவர்களின் சாட்சியாக நடைபெறுகின்ற ஒவ்வொரு நற்காரியத்திற்கும் அவர்களுடைய பரிபூரண ஆசிகள் உண்டு! எனவேதான் திருஅண்ணாமலையில் செய்கின்ற அன்னதானம், ஆடைதானம் என அனைத்து விதமான தான தருமங்களுக்கு, தேவ சாட்சியினால் ஆயிரமாயிரம் மடங்கு பலன்களுண்டு.

எல்லா யுகங்களிலும் அனைத்து உயிரினங்களுக்கும் ஜீவன்களுக்கும் முக்தியைத் தருவதற்கான எளிய வழிமுறையைக் காட்டுபவர்களே சித்புருஷர்கள். எப்போதும் சித்தர்களின் சஞ்சாரம் நிறைந்ததாக விளங்குகின்ற அருணாசல திவ்ய பூமியில் அன்னதானம் செய்கின்ற பாக்கியம் அனைவருக்கும் எளிதில் கிட்டிடாது. அதிலும், மும்மூர்த்திகள் மட்டுமின்றி அனைத்து தேவாதி தேவர்களும் இறைவனை ஜோதி ரூபத்திலும், விஸ்வ ரூபத்திலும், ம(லை)றை வடிவ ஸ்தூல ரூபத்திலும் தரிசனம் பெறுகின்ற கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது எங்கள் ஆஸ்ரம் சார்பில் நடைபெறுகின்ற அன்னதானத்திற்கு, இறைஅடியார்களே சற்குருவின் தலைமையில் சரீர சேவைதனை உளமாறப் புரிந்து ஆற்றும் ஆண்டவன் சேவைக்குத் தங்களுடைய பொருளுதவியைத் தந்து எங்கிருப்பினும் அருணாசலத் திருத்தொண்டிற்கு நம் பங்கு உண்டு என்ற பரமானந்தத்துடன் இறைப் பணியாற்றிட வேண்டுகின்றோம்.

1998 - ஆஸ்ரமத்தின் பகுதான்ய வருட கார்த்திகை தீப அன்னதான பிரம்ம உற்சவப் பெருநாட்கள் : நவம்பர் -30, டிசம்பர் 1,2,3.

ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
- திருஅண்ணாமலை
“எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா! அருணாசலா!”
சித்தகுருவேத ஸுக்த மாமந்திரம்

அமிர்த தாரைகள்

புது வீட்டுப் பூஜை!

புது வீட்டிற்கு மாறிச் செல்லும் போது எதிர்பார்க்கும் அளவிற்கு மகிழ்ச்சியுடனும், பிரச்னைகள் இன்றியும் வாழ்வதற்குச் செய்ய வேண்டிய அற்புதப் பரிகாரம் ஒன்று உண்டு! இமய மலைத் தொடரில் உள்ள மானசரோவர் தீர்த்தத்தைத் தருவித்து அதை ஒரு சுரைக் குடுவையிலோ, பலா மரக் குடுவையிலோ, அல்லது ஏழு முகங்கள் கொண்ட தீர்த்த கண்டியிலோ இட்டு, புது வீட்டில் தொடர்ந்து கலச தீப பூஜை செய்து மாவிலைகளால் இல்லம் முழுதும் தெளித்து வருதல் வேண்டும். ஆனால் பூஜை செய்யும் நேரத்தில் மட்டுமே மேலே குறிப்பிட்ட பாத்திரத்தில் இட்டு, பூஜை செய்த பின்னர் அப்புனித நீரை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி பத்திரப்படுத்தவும். ஏனென்றால் மரம் அல்லது மண்ணாலான (தீர்த்த கண்டி) பாத்திரங்கள் மானசரோவர் நீரையே உறிஞ்சிவிடும். புது வீட்டிற்குக் குடிபுகுவோரும், தாம் இருக்கின்ற வீட்டிலேயே எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளித்து நல்வழி பெற வேண்டுவோருக்கும் இப்பூஜை நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக, திருவாதிரை நட்சத்திரத்தன்று இப்பூஜையை முறையாகச் செய்து வந்தார்களேயானால் வீட்டில் உறைகின்ற துஷ்ட சக்திகளும், தோஷங்களும் நீங்கி, சுகமான வாழ்வைப் பெறுவர்.

பிள்ளைச் செல்வத்திற்கு.....

இந்தக் கலிகாலத்தில் பலருக்குக் குழந்தைகள் பிறந்து இறந்திருப்பார்கள்! சில குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து இறப்பது சகஜமாக இருக்கிறது. இதற்குரிய நிவர்த்திதனை ஆன்மீகத்தில் தான் பெரியவர்கள் நல்வழியாகச் சொல்லியிருக்கின்றார்கள், விஞ்ஞானத்தில் அல்ல! வெள்ளியாலான பூணூலையும், தங்கப் பூணூலையும் கும்பகோணம் ஸ்ரீ யக்ஞோபவீதேஸ்வரருக்கு அணிவித்து தேவாரம், திருவாசகம் ஓதுவோர்க்கு அல்லது ரிக்கு, யஜுர், சாம அதர்வண வேதங்கள் பயின்று ஒரு பைசா கூட வாங்காது இலவசமாக வேதம் மற்றும் தமிழ் மறைகளைச் சொல்லித் தருகின்ற பெரியவர்களுக்கு வஸ்திர தானத்துடன் வெள்ளி, தங்கப் பூணூலையும் வைத்து தானமாக, அளித்திடுவதால் நல்ல பரிகாரம் கிட்டும். குருட்டு நாட்கள் அல்லாத முழு நாட்கள் எனப்படும் சில குறித்த நட்சத்திர தினங்களில் இத்தான தர்மத்தைச் செய்து வருவது விசேஷமானதாகும்.

வட்டி , அசல் பெற...

வட்டித் தொழில் செய்கின்றவர்கள் ஞாயிற்றுக் கிழமைதோறும் ஸ்ரீ காலபைரவருக்கு வடை மாலை அணிவித்து, கரும்புச் சாறு அபிஷேகம், ஆராதனையுடன் வெண் பொங்கலை அன்னதானம் செய்து வந்திடில் அவர்களிடம் கடன் வாங்கும் நபர்கள் முறையாக அசலையும், வட்டியையும் கட்டக் கூடியவர்களாகவே வந்து சேர்வர். துவாதசி, அனுஷமும் கூடும் ஞாயிறு இப்பூஜைக்கு மிகவும் சிறப்புடையதாம். ஆனால் நியாயமான முறையில் வட்டியைப் பெற்றால்தால் தான் இது பலிதமாகும். அநியாயமான வட்டி வசூலித்தால் வேதனைகளே சூழும். கம்பெனிகளில் டெபாஸிட் செய்து விட்டு அவதியுறுவோரும் இதனைத் தவறாமல், செய்து வர தக்க நல்வழி கிட்டும்.

ஸ்ரீ அஹமர்ஷண மந்திரம்

நீராடும்போது ஓதப்பட வேண்டியதாகிய மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ அஹமர்ஷண சூக்த மந்திரங்கள், ஒளவையாரின் விநாயகர் அகவல் அளவில் உள்ளது. எனவே ஸ்ரீ அஹமர்ஷண சூக்த மந்திரங்களுள் முக்கியமானவற்றுள் ஒன்றை அளிக்கின்றோம். இதை ஓதியவாறே நீராடுவதால் ஜாதி, மத, இன, குல, தாவர, விலங்கின, ஆண், பெண், மானுடர், தேவர் என்ற பேதமின்றி அனைத்து ஜீவன்களிலும் உறைகின்ற பிரம்மம் ஒன்றே, அதுவே இறைப் பரம்பொருள் என்ற ஞானம் விருத்தியாகும். முறையற்ற காம உணர்வுகள் நீங்கும்.
ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா ||
(ஸ்வாஹா என்பதை ஸ்வாஹாஹா என்று ஹோம ஆஹுதி மந்திரம்போல் “ஹா”வை நீட்டி உச்சரிக்க வேண்டும்)

தமிழில் அஹமர்ஷண மந்திரம்

ஐம்பூதாக்னி யதுவும் யாமே யாமில் பிரம்மம் யாகம் பிரம்மம்
ஐயுருவாக்னி யதுவும் யாமே யாமில் ஓமம் யாமே யக்னி
யாமில் யாவும் யாவையும் யாமேயாமா யக்னி யானோம் ஜோதி
யாமறிவாவது யாவும் யாமேயாமே யாக்கம் யாமே யக்னி
யாமறியாதது யாவும் யாமேயாக்கை யழியும் யாகத் தீயுள்
யாமில் யாமாய் யாமும் உளமேயாமும் பிரம்மம் யாமாய் பிரம்மம்
யாமே பிரம்மம்! யாமுள் பிரம்மம் யாமே பிரம்மம் யாவும் யாமே

யாமில் யாமே யாமா யானோம்!

இறைசாட்சியாய்..

கடனாகப் பணத்தை வாங்கிக் கொண்டு அனுபவித்து விட்டுக் கொடுத்தவர் வந்து கேட்கும்போது இல்லையென்று யார் சொன்னாலும் அவர்களை எரிச்சாவுடையார் சாட்சியாகப் பணம் வாங்வில்லையென்று எந்த சிவன் கோயிலிலும் சத்தியம் செய்யச் சொன்னால் போதும், பணத்தை ஏமாற்றியவரைத் தக்கவாறு சிவன் தண்டித்துவிடுவார்! எரிச்சாவுடையார் சந்நிதி எங்குள்ளது? தேடிக்கண்டுபிடியுங்கள்!

அறுவை சிகிச்சை நன்கு நடைபெற ...

சில நோய்கள் மருந்தினால் குணமாவதுண்டு, மந்திரத்தால் குணமாகின்ற நோய்களுண்டு, ஆசிர்வாதத்தால் குணமாகின்ற நோய்களும் உண்டு. ஆனால் எந்த நோய், யாருக்கு, எவ்வாறு எப்போது குணமாகும் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். தேய்பிறை, பவ கரண, உத்திராட நாளில் மருந்து உண்ணத் தொடங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை செய்தல் நலம் பயக்கும்.

பம்பை தீர்த்தம் ஒரு மாமருந்தே!

ஸ்ரீ ஐயப்ப சுவாமி தினமும் புனித நீராடுகின்ற நதி, பித்ரு தேவர்களே தினமும் கூடி அவர்களும் தர்ப்பண அர்க்யம் அளிக்கின்ற நதி, பல்லாயிரக் கணக்கான யுகங்களாக இருந்து வரும் கந்தகப் பாறைகளின் அரிய மருத்துவ குணங்களைத் தாங்கி வரும் நீர், ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்கின்ற ஸ்ரீகருட நமஸ்கார மூலி (இலைகள் கருடன் இறக்கைகளை விரித்து அலகால் வணங்குவது போலிருக்கும்), அட்சர ஜீவித மூலி -= மூலிகைகளின் சக்திகளைப் பெற்றுள்ள நீர், பசுஞ் சாணம், யானைச் சாணம், புலிப்பால், நத்தைச் சுவட்டு சுண்ணாம்பு பஸ்ம சக்தி, பெறற்கரிய கந்தக சக்தி, கூர்ம ஆமல கூட்டு பஸ்மசக்தி இவ்வாறாக எத்தனையோ தெய்வீக அற்புதங்களைத் தன்னுள் கொண்டுள்ள பம்பை நதியைக் கண்டதும் மனிதன் முதலில் செய்வதென்ன? நேரே மல ஜலங்கழுவதுதான்!

தயவு செய்து அறியாமையால் செய்கின்ற இந்த பெருங்குற்றத்தைத் தவிர்த்து பம்பை நதியில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை முதலில் அறிந்து கொள்ளுங்கள்! இதனை முடித்த பின்னர்தான் அதுவும் ஒரு தனி குடுவையில்/வாளியில் நீரை எடுத்துத் தனித்துச் சென்று சுத்திகரித்திடுக! நதியில் நேரடியாக கை, கால்களை, கழிப்பு/காமஉறுப்பு/ அவயங்களைக் கழுவுதல் கூடாது.

நித்ய கர்ம நிவாரணம்

1.12.1998 – கோயிற் குளங்களில் மீன்களுக்கு பொரி, உணவிடுதல் – கிடைக்க வேண்டிய புகழ் . நற்பெயர்/ பரிசு கிட்டும்.

2.12.1998 – நன்றி உணர்வுடன் வாழ்வோர்க்கு, வஸ்திர தானம் உதவிகள்  சொத்து ஊர்ஜிதமாகும்.

3.12.1998 – சிறப்பான பிரதமை திதி – புதிய துணி வியாபாரம் தொடங்குதற்கு துணிமணிகள் வாங்குவதற்கு விசேஷமான நாள் – புதுத் துணி தானம்.

4.12.1998 – மழை நீரை தீர்த்த கண்டியில் / வெள்ளிப் பாத்திரத்தில் / மர, மண் கலயத்தில் வைத்து அத்ரி, பிருகு, குத்ஸர், வஸிஷ்டர், காஸ்யபர், ஆங்கிரஸர், கௌதமர் – 7 மஹரிஷிகளின் நாமங்களைத் துதித்து பூஜை – செல்வ விருத்தி.

5.12.1998 – திருஅண்ணாமலை, பழனி, மலைக்கோட்டை , அய்யர்மலை போன்ற மலைத் தலங்களில் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தவாறே சர்க்கரை கலந்த ரவைதனை எறும்பிற்கு இடுதல் – சகோதரிகளின் திருமணத்திற்கு நல்வழி கிட்டும்.

6.12.1998 – ஏழை சமையற்காரர்களுக்குப் பாத்திரங்கள் உதவி – குழந்தைகள் நன்கு படித்திடுவர்.

7.12.1998 – அர்த்தசாம (இரவு) பூஜைக்கு நிறைய பசும்பால் அளித்து பால் பிரசாத தானம் – தீயவர்களின் தொடர்பு நீங்கும் – நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

8.12.1998 – சுவாமிக்கு நல்லெண்ணெய் + தேங்காய் எண்ணெய் தைலக் காப்பு – தொழிலில் / குடும்பத்தில் மந்த நிலை தீரும்.

9.12.1998 – கருடனுக்கு உணவு அளித்தல் – உயர் பதவிக்கு நல்வழி பிறக்கும்.

10.12.1998 – மதிப்பிற்குரிய சலவைத் தொழிலாளர்கள் அன்புடன் பேணுகின்ற கழுதையாகிய நல் ஜீவனுக்கு நீராட்ட/ வயிறார உணவளிக்க உதவுதல் – வாய்ப் பேச்சினால் வரும் வம்புகள் / தகராறுகள் தீரும்.

11.12.1998 – நெடுங்காலமாக வயிற்று பேதியால், வயிற்றில் உணவு சற்றும் தங்காது வாடுவோர ்- இன்று குறைந்தது 1000பேருக்கு உணவளித்து (1000 உணவுப் பொட்டலங்கள்) இயன்ற ஆடைகளையும் அளித்திட நற்பரிகார வழி கிட்டும்.

12.12.1998 – வெள்ளைப் பன்றிக்கு உணவிடுதல் – நில சம்பந்தமான பிரச்சனைக்கு நிவர்த்தி.

13.12.1998 – வீடுகட்ட , கோயிலுக்குத் தேவையானோர்க்கு சவுக்குக் கம்பு அளித்தல் – ஒற்றைத் தலைவலிக்குப் பரிஹாரம்.

14.12.1998 – வெற்றிலைக் கொடி பயிரிடுவோர்க்கு / உழவுப் பணியாளர்க்கு உதவிகள் – மாங்கல்யச் சரடு (தாலி) தொலைந்தமைக்குப் பரிஹாரம்.

15.12.1998 – வசதியற்ற / நிராதரவான கணவனை நிராகரித்துப் பிறருடன் வாழ்கின்றோர் மனந்திருந்தி, கணவனுடன் இணைந்து வாழ்வதற்குரித்தான சிறப்புடைய நாள்.

16.12.1998 – ஊனமுற்றவரைத் தியாக மனப்பான்மையுடன் திருமணம் புரிந்தோர்க்கு – மருத்துவ உதவி, குடும்பம் நடத்தத் தேவையான பொருட்கள் அளித்தல் – பொய் சொன்னமைக்கு, பொய் சாட்சியம் அளித்தமைக்கு பரிஹாரம் கிட்டும்.

17.12.1998 – மூத்த சகோதரியை மணந்து நிராகரித்து இளைய சகோதரியுடன் வாழ்பவர்கள் மனந் திருந்தி தன் மனைவியுடன் வாழ்வைத் தொடர்வதற்கான சிறப்பான நாள் – அதிகார நந்திக்கு ஜவ்வாதுத் தைலம் சார்த்தி ஏழைகட்குக் காலணிகள் தானம்.

18.12.1998 – இன்று “ராம” நாம ஜபம் – ஒரு லட்சம் முறையேனும் உரு ஏற்றுக! ராமன், ராமச்சந்திரன் போன்ற ராம நாமப் பெயருடைய பெரியோர்க்குப் பாத பூஜை – அலுவலகத் துன்பங்களுக்குத் தீர்வு.

19.12.1998 – ஏழைகளுக்கு நன்முறையில் இலவசமாக யுனானி மருத்துவம் செய்கின்ற பெரியவரின் பூஜைக்கு நல்ல வாசனை திரவியமளித்துப் பாத பூஜை – தீய கனவுகளின் தீய சக்திகள் அகலும்.

20.12.1998 – ஆரோக்கிய விரதம் – ஏழைகளுக்கு வைத்ய உதவி செய்திட மிகவும் முக்கியமான நாள்.

21.12.1998 – திரிதியைத் திதி முழுதும் உள்ள விசேஷமான நாள் – யானைக்கு வயிறார உணவளித்திடுக – வேலை பளு, வியாபார நஷ்டங்கள் தணியும்.

22.12.1998 – அய்யர்மலை, மலைக் கோட்டை, திருஅண்ணாமலை போன்ற இடங்களில் கிரிவலம் – குறைந்தது 1000 பேருக்கு அன்னதானமிட கடன் வாங்கி ஏமாற்றியோர் மனந்திருந்திவர ஓரளவு பணம் மீட்பு கிட்டும்.

23.12.1998 – குட்டைக் காளைகளுடன் ரேக்ளா வண்டி வைத்திருப்போர்க்கு மரியாதை செய்தல் / உதவிபுரிதல் – அவசர கால காரியங்களில் உள்ள தடங்கல்கள் நீங்கும்.

24.12.1998 – குறைந்தது 108 நாகங்கள் உள்ள மரத்தைச் சுற்றி அடிப்பிரதட்சிணம் – தீராப் பழி தீரும்.

25.12.1998 – கண்ணாடி பொம்மை செய்வோர்க்கு உதவி – சுவற்றில் கண்ணாடிகள் பதித்து அதனால் பாதிக்கப்பட்டோரின் (குத்துதல், கிழிதல்) சாபங்கள் நீங்கும்.

26.12.1998 – பல வருடங்களாகத் தொடர்ந்து நன்முறையில் தெய்வீக சேவைபுரியும் குருமகா சந்நிதான பீடாதிபதிக்குப் பாத பூஜை – உயர் பதவி, பிரமோஷன் கிட்டும்.

27.12.1998 – குதிரையை நன்முறையில் வளர்த்து அது இறந்தவுடன் குதிரைக்குச் சமாதி கட்டிய இடத்தில் கொள்தானம், குதிரைக்காரருக்கு பாதபூஜை, மரியாதை செய்தல் – இல்லத்தில் செல்வம் செழிக்கும்.

28.12.1998 – சாம்ப தசமி – சிவனுக்கு தர்பை கிரீடம் செய்து பூஜை – பித்ருக்களின் ஆசி கிட்டும்.

29.12.1998 – சந்திர பகவானுக்கு வெள்ளை ஆடைகள் சார்த்தி வணங்கி வஸ்திர தானம் – மனக் குழப்பம் தீரும்..

30.12.1998 – ஜீராவுடன் (ரசகுல்லா, குலோப் ஜாமூன் etc,) கூடிய இனிப்பு தானம் – இன்று தொட்ட பொருள் துலங்கும்.

31.12.1998 – மலர்களிலிருந்து விழுகின்ற மழைத் துளிகளைச் சேகரித்து அதனை வைத்துச் சந்தனம் அரைத்து வள்ளி / தெய்வானை சமேத முருகனுக்குச் சந்தனக் காப்பு – கணவனின் ஆசி கிட்டும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam