அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஏத்தாப்பூர் சூரிய பூஜை

ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப மூர்த்தி சிவாலயம்
சேலம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் உள்ள சிவாலயத்தில், பஞ்சாங்கத்தில் உள்ளபடி மாசி மாதம் 1 முதல் 7 வரை (12.2.1997 to  18.2.1997) மூலவரின் மேல் காலையில் சூரிய கிரணங்கள் படிகின்றன. இக்கிரணங்களைத் தரிசிப்போருக்கும், சூரியோதயக் கதிர்கள் லிங்கத்தின் மேல் படிகின்ற சமயத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்வோருக்கும், தீபங்களை ஏற்றி வழிபடுவோருக்கும், மஞ்சள்/பொன்னிற உணவு (சர்க்கரைப் பொங்கல்/எலுமிச்சை சாதம் etc) ஆடை வகைகளைத் தானம் செய்வோருக்கும் பல்வகையான அரிய பலன்கள் கிட்டுகின்றன.
1. மூதாதையர்களுடைய நிலபுலன்களைச் சீரமைத்தல் மற்றும் மராமத்து செய்தல்.
2. தரிசு நிலங்கள், பாழடைந்த வீடுகள், கட்டிடங்களைச் சீர் செய்தல்.
3. ஆவி நடமாட்டம் உள்ள இடங்களைப் புனரமைத்தல்
4. நெடுங்காலமாக விளக்கேற்றப்படாத இடங்களை வழிபாட்டுப் பூஜைகளால் புனிதப்படுத்துதல். 
5. மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வோர் ஒன்று சேர்தல்.
6. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருதல்
மேற்கண்டவற்றிற்காகக் கண்டிப்பாக ஏத்தாப்பூரில் மாசி மாதத்தில்  லிங்கத்தில் படும் சூரிய கிரணங்களைத் தரிசித்து மேற்கண்ட காரியங்களைச் செய்திட அனைத்தும் சுபமாக முடியும். இதற்குரித்தான புராண சம்பவத்தை நாம் அறிய வேண்டுமல்லவா! உத்தம மஹரிஷியான கௌதமர், கல்லாகும்படி அகலிகைக்குச் சாபமிட்டாரல்லவா! கௌதமர் தம் மனைவியைச் சந்தேகித்ததாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் இது மிகவும் தவறானதாகும். ஏக பத்தினி விரதரான ஸ்ரீராமச்சந்திரரின் திருப்பாதம் பட்டு மீண்டும் உருவம் எடுக்கும்படி சாப நிவர்த்தியைக் கௌதமர் அளித்தாரென்றால், அகலிகை உத்தம பத்தினி தெய்வமாக விளங்குவதால் தான் ஸ்ரீராமரின் திருப்பாதங்கள் மிதிபடும் பாக்கியத்தைப் பெற முடியும் என்பதை அவர் அறியாதவரா என்ன?
இதற்குப் புராண பின்னணி உண்டு. ஒரு முறை இந்திரனுக்குரிய ஹோம பூஜையை நிகழ்த்திய போது, கௌதமர் அதி அற்புதமான அமிர்த நேரம் ஒன்றைக் குறித்துக் கொடுத்து, பல கோடி யுகங்களுக்கு ஒரு முறை வருகின்ற அவ்வரிய அமிர்த நேரத்தினை சுயநலமின்றி இறைப் பணிகளுக்கு மட்டும் அப்புனித நேரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுரை கூறினார். குறித்த அமிர்த நேரம் வந்ததும் இந்திரனுடைய மனம் மாறி, தானே எப்போதும் இந்திர பதவியிலிருந்திட வேண்டுமென்று எண்ணிவிட்டான்.  இதனைத் தீர்க்க தரிசனமாக அறிந்த கௌதமர் ஓர் அழகிய மலரைப் படைத்து  இந்திரனின் மனைவியை அதில் லயித்திருக்கும்படி செய்திடவே, அமிர்த நேரத்திற்குள் அவளால் ஹோமத்திற்கு வர இயலாமல் போயிற்று. இதனால் மனைவியின் அனுமதியின்றி சங்கல்பம் செய்ய இயலாததால் இந்திரனால் அப்புனிதமான நேரத்தில் ஹோமத்தைத் தொடங்க இயலவில்லை.
இந்திரன் சினம் கொண்டு கௌதமருடன் வாக்குவாதம் செய்தான். ஆனால் தெய்வபக்தி நிறைந்த இந்திரனின் மனைவி கௌதமருக்காகப் பரிந்து பேசி, இந்திரனின் சுயநலத்தை வெறுத்து, “நாதா! தங்களுடைய சுயநல எண்ணத்திற்குப் பிராயச்சித்தமாக நான் தங்களை விட்டுப் பிரிகின்றேன். மகரிஷி அளித்த பொன்னான அமிர்த நேரம் வீணாகிவிட்டது. எனவே எத்தனையோ கோடி யுகங்களுக்குப் பிறகு எப்போது அந்த அமிர்தமான முகூர்த்த நேரம் வருகின்றதோ அப்போதுதான் நான் உங்களுடன் இணைய முடியும்”, என்று கூறி தவம் புரியச் சென்று விட்டாள். இந்திரனின் சினம் மேலும் பெருகியது. “கௌதமரே! எவ்வாறு தங்களால் நான் மனைவியைப் பிரிந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோ, அதே போல் தங்களுக்கும் என்னால் தாங்கள் மனைவியை விட்டு பிரிந்து வாழ்கின்ற நிலை வருவதாக!” என்று மஹரிஷிக்கே சாபமளித்து விட்டான். கௌதம மகரிஷியின் தபோபலனுக்கு முன் இந்திரன் எம்மாத்திரம்!

எனினும், “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்பது போல அமிர்த நேரத்தைத் ‘தகாத’ ஒருவருக்கு அளித்ததற்காக இச்சாபத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் கௌதமர். இவ்வாறு முந்தைய புராண நிகழ்ச்சியின் தொடர்பாக ஏற்பட்டதே அகலிகை சாபம்! எனவே பஞ்சகன்யா ஸ்திரீகளில் ஒருவராகப் பிரகாசிக்கும் அகல்யாதேவி கௌதமர் அளித்த சாபத்தை மனமுவந்து ஏற்றனள். மனைவியைப் பிரிந்த கௌதமர் பிரபஞ்சமெங்கும் ஷேத்ராடனம் செய்து வந்தார். மனைவி அருகில் இல்லாமையால் அவரால் எவ்வித பூஜை, ஹோமங்களை நிகழ்த்த இயலவில்லை. திருஅண்ணாமலை, மேருமலை, இமாலயம் போன்ற இடங்களில் ஆசிரமம் அமைத்து பல அரிய இறைப் பணிகளைச் செய்து வந்தார். தன் வாழ்க்கையையே ஒரு படிப்பிணையாகக் கொண்டு, பெண்களுக்கான சிறப்புகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து, பெண்களுக்குரித்தான தீப பூஜை, வேதமந்திரங்கள், ஹோமங்கள் போன்றவற்றையும் யாங்கனும் பரப்பி வந்தார். இவ்வாறாக அவர் புனித யாத்திரை செய்து வருகையில் ஓரிடத்தில் ஸ்ரீஅம்பிகையே காட்சி தந்தாள். அவ்விடமே ‘ஏத்தாப்பூர்’ ஆகும். “கௌதமரே! நான் என் நாதனாகிய சிவபெருமானின் வார்த்தைகளை மீறி தட்சயாகத்திற்குச் சென்றமையால் சிவபெருமானை விட்டுப் பிரிந்து வாழ நேர்ந்தது. அப்போது இங்கு உறையும் ஸ்ரீசாம்பமூர்த்தி ஈஸ்வரனின் மேல் தோயும் சூரிய கிரணங்களை மாசி மாதத்தில் தரிசித்தேன். அதன் பலனால் சிவபெருமானுடன் மீண்டும் இணையும் பாக்கியம் பெற்றேன் தாங்களும் இத்தரிசனம் பெற்று அகலிகையுடன் சேர்ந்து வாழ்வீர்களாக! எதிர்காலத்தில் கணவனை விட்டுப் பிரிந்தும் மனைவியை விட்டுப் பிரிந்தும் வாழ்பவர்கள் பெருகுவர். அவர்கள் என்னைப் போலும் தங்களைப் போலும் மாசி மாதம் இங்கு (ஏத்தாப்பூர்) சாம்பஈஸ்வர மூர்த்தி லிங்கத்தின் மேல் படியும் சூரிய கிரணங்கங்களை ஆராதனைகள் செய்து, தீபங்களை ஏற்றி உரிய தானதர்மங்களுடன் வழிபாட்டில் கணவன் மனைவியர் ஒன்று சேரும் பாக்கியம் கிட்டும். இதனை வரும் யுக மானுடர்களுக்கு எடுத்துரைக்கும் இறைப்பணியைச் செய்து புகழ் பெறுவீர்களாக” என்று கூறி அருள்பாலித்தனள். ஸ்ரீஅம்பிகைக்கும், ஸ்ரீகௌதமருக்கும் அருள்புரிந்த ஸ்ரீசாம்ப ஈஸ்வர மூர்த்தி லிங்கமெனில் என்னே அதன் மஹிமை! எனவே மாசி மாதத்தில் ஏத்தாப்பூரில் உள்ள சிவலிங்கத்தில் படியும் சூரிய கிரணங்களைத் தம்பதி சகிதமாக தரிசித்து மேற்கண்ட முறையில் வழிபாடு செய்து பிரிவற்ற, அன்பு நிறைந்த வாழ்க்கையைப் பெறுவீர்களாக! வாழ்க்கையில் பிரிந்தோரே! இதனை கடைபிடித்து இவ்வழிபாடு மூலம் ஒன்று சேருவீர்களாக.


நவசாளரம் வழி சூரிய பூஜை
ஐயர்மலை

ஸ்ரீஇரத்தினகிரி ஈசர்
ஐயர்மலை

பாஸ்கர ஸ்பரிச லிங்க பூஜை – லிங்கத்தின் மேல் படியும் சூரிய கிரணங்கள்
லிங்கம் என்பது பரம்பொருளாம் இறைவனின் ஆதிமூல ஸ்தூல வடிவமாகும். இதன் பிறகே ஏனைய ஸ்தூலரூப தெய்வமூர்த்தி வடிவுகள் ஏற்பட்டன. இறைவனால் படைக்கப்பட்ட புனிதமான ஆதி மனிதர்கள் பாவ, புண்ணியத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் ஏக இறைச் சிந்தனையில் லயித்து வாழ்ந்தனர். மாயை காரணமாக, கர்மங்களும், இதனால் கர்மவினைப் பயன்களும், இதன் பயனாய்ப் பாவ, புண்யங்களும், இதன் விளைவாய்ப் பிறப்பு, இறப்புகளும் பெருகுகின்றன அல்லவா! மனிதனுக்கு முன்னரேயே தாவர, புழு, பூச்சி ஜன்மங்கள் தொடங்கிவிட்டன. மனித சிருஷ்டி பின்னர் ஏற்பட்டதே! சிருஷ்டியில் ஏற்பட்ட புனிதமான ஆதிமனிதர்கள் ஏகமான இறைச் சிந்தனையிலிருந்து சற்றே வழுவியபோது ஏற்பட்டதே லிங்க ரூப வழிபாடு! பிறப்பற்ற நிலையில், இறைவனைப் பரஞ்சோதியாய்க் காணுமுன், அத்தகைய உத்தம நிலையில், இறைவன் லிங்க ரூபத்தில் தான் காட்சி தருகின்றான். லிங்கம் என்பது சிவபெருமானை மட்டும் குறிப்பதன்று, அவரே சர்வேஸ்வரன் , நாராயணன், மஹாவிஷ்ணு – அனைத்தும் அவரே!
மாயா லீலைகள்
மாயையின் பெருக்கத்தால் புனிதமான ஆதிமனிதனின் ஏக இறை தியான நிலை குறைவுபட, கர்மவினைகளும் பெருகி நல்லொழுக்கம் குறைதல், தீவினைப் பெருக்கம் போன்றவையே விளைவுகளாக ஏற்பட்டன. அவ்வப்போது அவன் லிங்க ரூபத்தைக் காணுபோது தான் அவனுக்குச் சுயரூபமான புனித உள்ளத்தின் மஹிமை தோன்றியது. அவ்வாறு புனிதத்தைத் தர வல்ல ரூபங்களுக்கு... மேலும் மேலும் அவன் வடிவுகளை அளித்திட, அவைதாம் ஆலயங்களில் தேவமூர்த்திகளாகவும் ஆயின. மாயையில் சிக்கிச் சுழலும் ஜீவன்களைக் கடைத்தேற்ற வந்த இறைத் தூதுவர்கள் தாம் மஹரிஷிகளும், யோகிகளும், ஞானியருமாவர்! இவர்கள் தாம் மனிதனுக்கு உத்தம நிலையைக் கூட்டித்தரும் கோயில்களில், மலைகள், விருட்சங்கள் போன்றவற்றில் தங்கள் தவப்பலன்களை நிலைநிறுத்தி அவற்றைத் தெய்வீக உணர்வைத் தரும் உத்தமத் தலங்களாக மாற்றுகின்றனர். நாமறிந்த கிருத, திரேதா, துவாபர, கலியுகங்கள் மனிதனுடைய வெவ்வேறு ஆன்மீக நிலைகளையே குறிக்கின்றன. உருவமற்ற இறைவன், ஜீவன்கள் தம்மை அறிந்து தெளிந்து முக்கியடைவதற்காகப் பல யுகங்களிலும் பல வடிவங்களை ஏற்கின்றான்! ஆனால் இந்த நான்கு யுகங்களிலும் “லிங்க ரூபம்” மட்டும் அதே ரூபத்தில் தான் எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்ந்து வருகின்றது. கோடிக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் லிங்க மஹிமை யை விவரிக்க இந்தக் கலியுகம் போதாது!
அமிர்தம் உண்டா(ல்) ?
இத்தகைய சிறப்பு வாய்ந்த லிங்கத்தின் மேல், சில கோயில்களில், குறித்த தினங்களில், காலையில் சூரிய கிரணங்கள் படிகின்றன என்பது பலர் அறியாத தெய்வத் திருவிளையாடலாகும். உலகத்தின் பெரும்பான்மையான ஜீவன்கள் சூரிய ஒளியால் சக்தி பெறுகின்றன என்பது நாமறிந்ததே! சூரிய ஒளியின்றேல் உலக வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும்! சூரிய ஒளியையே சந்திரன் பெற்றுக் குளிர் கிரணங்களை வீசுவதாக விஞ்ஞானம் பகிர்கின்றது. இதற்கு ஆன்மீக ரீதியான விடை என்ன தெரியுமா? பாற்கடலில் அமிர்தம் வருவதற்கு முன், ஸ்ரீஜேஷ்டா தேவி, ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீசந்திர பகவான் அதில் தோன்றினரல்லவா! அதன் பின்னர் இரு அரக்கர்கள் தேவர்களின் ரூபத்தில் அவர்களோடு அமர்ந்து அமிர்தம் உண்ண முயற்சித்திட, சூர்ய, சந்திரர்கள் அவர்களை அடையாளம் காட்டிடவே, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மோஹினி அவதாரத்தால் அவ்வரக்கர்களின் தேகங்கள் துண்டாக்கப்பட்டு, அமிர்த ஸ்பர்சம் பட்டதினால் ராகு, கேதுவாகினர் என்பதும் நாமறிந்த புராணமே! ராகுவும், கேதுவும், “நாங்கள் அதிதிகளாய் அமர்ந்தோம்.... பூரணமாக எமக்கு அன்னமாகிய அமிர்தம் கிடைக்காமற் செய்தமையால், இவ்வமிர்த பலன்கள் சூர்ய, சந்திரனுக்குக் கிட்டாமற் போவதாக!” என்று சபித்து விட்டனர்.

பத்னிகளுடன் சூரிய பகவான்
ஐயர்மலை

பத்னிகளுடன் சந்திர பகவான்
ஐயர்மலை

அதிதிகளின் சாபமாயிற்றே! அந்த யுகங்களில் அனைவரும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பர். ஆதலின் சூர்ய, சந்திரர்கள் இச்சாபத்தின் விளைவுகளை எவ்வித எதிர்ப்புமின்றிப்  பரிபூரணமாக ஏற்றனர். இதனால் சூர்ய, சந்திரர்கள் அமிர்தம் பெற்ற போதும் அதன் பலன்கள் அவர்களுக்குக் கிட்டாமற் போயின! அமிர்தம் உண்ட ஆணவத்தால் பல தேவர்கள் சூர்ய, சந்திரர்களை இகழ்ந்தனர்! சூர்ய, சந்திரர்கள் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட, சர்வேஸ்வரனும், “எதுவும் எம் விருப்பமின்றி நடப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா? சூர்யா! நீ ஸ்வர்ச்சலாம்பா தேவியை மணந்த போது, உன்னுடைய உஷ்ணத்தைத் தாங்காது அவள் பிரிந்து எங்கெங்கோ அலைந்து தவம் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது! அவளுக்குரிய தேவதாமூர்த்தி நிலையை நீ அளிக்கத் தவறியதால் உன்னை மணந்து அவளுக்குக் கிட்ட வேண்டிய அமிர்தமயமான தெய்வ நிலை பல யுகங்கள் கிட்டாமற் போய்விட்டது! அதன், பலனாகத் தான் அமிர்தமுண்டும், அமிர்தத்தின் பயன்கள் உன்னைச் சாரவில்லை!  சந்திரனோ, பாற்கடலில் ஸ்ரீஜேஷ்டா தேவி, ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவதரித்தும், அவ்விருவரும் ‘இறைவன் விரும்பினால் அமிர்தத்தை அளிப்பான்’ என்று காத்திருக்க, உன்னோடு சேர்ந்து முன்யோசனையின்றி அமிர்தம் உண்ண அமர்ந்து விட்டான். இது முறையா?” என்று எடுத்துரைத்திட, சூர்ய, சந்திரர்கள் தலைகுனிந்து நின்றனர்.  “எம் கைலாய வாயிலில் இருவரும் நின்று, வருகின்ற அனைவரையும் வரவேற்று உபசரித்து அமிர்தமயமான வார்த்தகளைக் கூறி நல்லருள் பெறுவீர்களாக! அதிதியால் வந்த சாபத்திற்கு ‘அதிதி வந்தனமே பரிஹாரம்’ என்றும் சர்வேஸ்வரன் அருளுரை அளித்திட்டதோடன்றி....
“உங்களுடைய அமிர்த அம்சங்களின் பலன்கள் உங்களுக்குத்தான் பயன்படாது என்று ராகுவும் கேதுவும் சாபமிட்டார்களே தவிர, உங்களிடம் நிறைந்திருக்கும் அப்பலன்களை சகல கோடி லோகங்களிலுமுள்ள சகல ஜீவராசிகளுக்கும் அளித்து தெய்வீகப் பெருவாழ்வு அடைந்திடலாமே! பெறற்கரிய பாக்யமல்லவா இது!” என்றும் திருவாய் மலர்ந்தருளிடவும், சூர்ய, சந்திரர்கள் மெய் சிலிர்த்து நின்றனர். பின்பு இறைவனின் திருஅருள் ஆணையின்படி திருக்கயிலாய வாயிலிலேயே எத்தனையோ கோடி யுகங்கள் நின்று, “அதிதி உபசாரம்” செய்து பலருக்கும் ஆனந்தமளித்தனர். இதனால் தான் இன்றைக்கும் பெரும்பான்மையான சிவாலயங்களில் கோபுரமருகிலோ, நுழைவாயிலிலோ இருபுறமும் சூர்ய, சந்திரர்கள் நின்று நம்மை “அதிதியாக” உபசரித்து வரவேற்கின்றனர்! அவர்களுடைய அடக்கத்தையும், பொறுமையையும், கருணையையும் போற்றிய மஹேஸ்வரன், அவர்களுக்கு “அமிர்தகடேஸ்வரராய்” லிங்க ரூபத்தில் காட்சி தந்து அருள்பாலித்தான். “நீங்களிருவரும் அமிர்தம் உண்ட பலன்களையாமே ஏற்கின்றோம். நீங்களிருவரும் பிரபஞ்சத்தில் அனைத்து லோகங்களிலும் வானில் பிரகாசித்து அமிர்த சக்தியை, உயிர்சக்தியாய் பிற உயிரினங்களுக்கு அளிப்பீர்களாக! சந்திரா! உன்னை எம்முடைய சிரசில் தக்க சமயத்தில் சூடி, யாங்கணும் குளுமையான அமிர்த கிரணங்களைப் பரப்புமாறு ஆக்ஞையிடுவோம்! சூர்யா ! அக்னி வர்கத்தைச் சேர்ந்தவன் நீ! எனவே எம்முடைய லிங்க ரூபத்தை ஸ்பர்சிக்குமாறு சில தலங்களை உனக்கு அளிக்கின்றோம். அங்கு உன்னுடைய கிரணங்கள் எம்முடைய லிங்க ரூபத்தில் பட்டுப் பிரகாசிக்கையில் அவை அமிர்த கிரணங்களாக உன்னை அடையும்! இதனால் உன்னிடமிருக்கும் அமிர்த சக்தி பன்மடங்காகப் பெருகி, அனைத்து லோகங்களிலும், குறிப்பாக பூலோகத்தில் ஜீவ சக்தியாய் வர்ஷிக்கும். உன் மூலம் அந்தக் குறித்த நாட்களில் பல தெய்வ/தேவதா மூர்த்திகளும், சித்புருஷர்களும், ஞானியரும், மஹான்களும் சிறப்படைவர். இந்த பாக்யத்தை விட வேறென்ன வேண்டும்!” என்று ஸ்ரீஅமிர்தகடேஸ்வரராய் அருள் மழையை அமிர்தமாய்ப் பொழிந்தார். இவ்வாறாக... ஸ்ரீசூர்ய பகவானுடைய ஒளிக் கதிர்கள் சில சிவாலயங்களில், குறித்த சில நாட்களில், லிங்க மூர்த்தியின் மேல் படும்.

மாசி 1முதல் 7வரை  -  (12.2.1997 முதல் 18.2.1997 வரை)

ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப மூர்த்தி சிவாலயம்.

மாசி 17 முதல் 21 வரை – (28.2.1997 முதல் 4.3.1997 வரை)

சென்னை – குன்றத்தூர் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம்.

மாசி21 முதல் 25வரை – (4.3.1997 முதல் 8.3.1997 வரை)

சென்னை – பூவிருந்தவல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி ஆலயம்.

பாஸ்கர ஸ்பர்ச பூஜை
மேற்கண்ட மூன்று தலங்களின் “பாஸ்கர ஸ்பர்ச பூஜை” மஹாத்மியத்தைக் காணலாமா! ஸ்ரீசூர்ய நாராயண சுவாமியே நேரில் வந்து சிவலிங்கத்தைத் தம் திருக்கரங்களால் பூஜிக்கின்ற நாட்களிவை! குருவருள் பூண்டோர்க்கு இத்தினங்களில் ஸ்ரீசூர்ய பகவானின் தரிசனம்.  மனித ரூபத்திலோ, வேறு ரூபங்களிலோ நிச்சயமாகக் கிட்டும்.
குன்றத்தூர் (சென்னை) ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம் – அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவரலாற்றை உலகறியச் செய்து, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று சர்வேஸ்வரனாலேயே “முதலடி” எடுத்துக் கொடுக்கப்பட்டு “நாயன்மார்களின் புராணங்களைப்” பாடும் பாக்யம் பெற்ற உத்தம மஹரிஷி சேக்கிழார் பெருமான் சீரமைத்த சிவாலயமிது! இங்கு ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மேற்குறித்த நாட்களில் ஸ்ரீநாகேஸ்வர லிங்க மூர்த்தியின் திருமேனியில் காலையில் சூர்ய கிரணங்கள் படிகின்றன. பெறற்கரிய தரிசனமிது! ஸ்ரீசூர்ய பகவானே, சர்வேஸ்வரனை ஸ்தூல சூட்சும ரூபத்தில் நேரடியாக வந்து பூஜிக்கின்ற நாட்களிவை! வரும் 28.2.1997 முதல் 4.3.1997 வரை “சூர்ய பூஜை” தினங்கள் இத்திருத்தலத்தில் அமைகின்றன. இவ்வரிய தரிசனங்களைப் பெற்று அனைவரும் பயனடைய வேண்டுகிறோம்.
.......பாற்கடலில் , அமிர்தத்தைக் கடைந்தெடுக்க, தேவர்களும், அசுரர்களும் வாசுகி நாகத்தைக் கயிறாகக் கொண்டார்களல்லவா! அமிர்தத்தைக் கண்டதும் அனைவரும் அதன்பின் ஓட இங்கோ வாசுகி நாகம், உடல் இளைத்து வதங்கிக் கிடந்தது! “புஸ்... புஸ்” என்று மூச்சிரைக்க வாசுகியின் வாயிலிருந்து நுரையும், நீரும் வந்து கொட்டின. வலியால் துடிதுடித்தது வாசுகி நாகம்! ஸ்ரீநாராயண மூர்த்தி எழுந்தருளினார். “வாசுகி! அமிர்தத்தைப் பெற நீ செய்த தியாகமோ அளப்பரியது! பிறருடைய நல்வாழ்விற்காக உடலையும், உயிரையும் துறக்கச் சித்தமாயுள்ளாய்! இதுவும் ஒருவிதத் தவமேயாகும்! பாற்கடலில் அமிர்தம் வருவதோடு இப்புனிதப் புராணம் முடிந்திடவில்லை. உன்னைப் போன்ற பிறருடைய நல்வாழ்விற்காகத் தியாகம் புரிகின்றவர்களுடைய வரலாற்றுடன் அது பரிபூர்ணம்டையும்.” என்று அருளி அதற்குப் பின் நடக்கவிருக்கின்றவற்றை எடுத்துரைத்தார். பாற்கடலில் விஷம் தோன்றி அதனைச் சிவன் உண்ட விளக்கங்களை நாம் நன்கறிவோமன்றோ! பாற்கடலைக் கடைந்தமையால் அதில் வாழ்ந்த எத்தனையோ ஜீவ அணுக்கள் சிதைந்தன! அதில் வசித்த நாகங்கள் மாண்டன! ஏன், அமிர்தம் மீண்டபின், உடற்களைப்பினாலும், மிகுந்த ரணங்களாலும் வாசுகி நாகத்தின் தேகத்திலிருந்த விஷமும் பாற்கடலில் சேர்ந்து விட்டது. இவ்வாறாக அபரிமிதமாக விஷம் சேர்ந்தமையால் பாற்கடலே பாதிக்கப்பட்டது.
நாகேஸ்வர அவதாரம்
...........ஆனால் அனைத்தும் இறைவனின் விருப்பப் படியன்றோ நிகழ்கின்றன! பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது மரித்த ஜீவன்களையே அற்புத நாகங்களாக மாற்றி, பாற்கடல் விஷத்தன்மையை அவற்றுக்கு இயற்கையாகவே அளித்து, கோடிக்கணக்கான நாகங்களைத் தம் திருமேனியில் அணிந்து கொண்டு ஸ்ரீநாகேஸ்வரராக சிவபெருமான் அவதார தரிசனம் தந்தார். வாசுகியைக் கயிறாகக் கட்டி கடைந்தமையால் பாற்கடலில் வசித்த கோடிக்கணக்கான ஜீவராசிகள் சிதைந்தன என்று முன்னர் கூறினோ மல்லவா? சிவ சிவா! அவ்வாறு எழுதுவதே தவறு. கோடிக்கணக்கான தேவர்கள் அமிர்தம் பெற தம் உயிர்களைத் தியாகம் செய்த அந்த ஜீவராசிகளைத் தம் திருமேனியில் தாங்கி ஈசன் அவற்றுக்கு முக்தி அளித்தாரன்றோ! ஆனால் வாசுகியின் நிலையென்ன? முதலில் வாசுகி பெற்ற தெய்வ தரிசனத்தைக் காண்போமா! சர்வேஸ்வரனே ஸ்ரீநாகேஸ்வரனாக வாசுகியின் முன்னர் காட்சியளித்து, “வாசுகி! உன் பெருமையை நீயும் அறியாய், உலகத்தாரும் அறியார். பிறருடைய நல்வாழ்விற்காக நீ செய்த தியாகத்தை அனைவரும் அறிய வேண்டிய  தருணம் வந்துள்ளது.”
“மேரு மலையைச் சுற்றி பின்னி நின்ற உன்னை அசுரர்களும், தேவர்களும் பிடித்து இழுத்தபோது, நீ பட்ட வேதனைகள் எத்தனை யெத்தனை! ஆனால் மேரு மலையைத் தாங்கி நின்ற கூர்ம மூர்த்தியாம் ஸ்ரீநாராயணனின் ஸ்பர்ஸம் பட்டதால் நீ ஏற்கனவே மோக்ஷமடைந்தாய்.” இதனைக் கேட்டதும் முப்பத்து முக்கோடி தேவரும். தெய்வாதி தேவர்களும் பூமாரிப் பெய்து வாசுகியைப் போற்றினர். ஸ்ரீநாரதர் ப்ரசன்னமாகி, “ஸ்ரீமந்நாராயணனால் மோட்ச கதி பெற்ற வாசுகி, சிவபெருமானின் தரிசனத்தால் முக்தியும் பெற்று விட்டனள். இவ்வரிய பாக்கியத்தைப் பெற்றவர் வேறு எவரும் இல்லையே” என்று கூறி வாசுகியின் பெருமையை அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
மோட்சமும் முக்தியும் – இரண்டுமே ஒன்றெனினும் சர்க்கரைப் பொங்கலின் இனிப்புக்கும், பால் பாயசத்தின் இனிப்புக்கும் வேறுபாடு உண்டல்லவா! இவ்விரண்டிற்குமான பலவிதமான விளக்கங்கள் உண்டு. எளிமையாகப் புரியவேண்டுமெனில் ஸ்ரீபரமாசார்யாள், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீகுருநமச்சிவாய சுவாமிகள் போன்ற மஹான்களும், ஞானியரும் முக்தியையும், மோட்சத்தையும் அடைந்த உத்தம நிலையில்தான் மீண்டும் நம்மைக் கரையேற்றுவதற்காகப் பிறப்பெடுத்தனர். அதெப்படி, முக்தியையும் மோட்சத்தையும் பெற்றுவிட்டால் மீண்டும் பிறப்புண்டா? நம்முடைய, ஜனன, மரண நிலைகளை நாமே நம்முடைய கர்ம வினைகளால் நிர்ணயித்துக் கொள்கின்றோம். ஆனால் முக்தி/மோட்சம் அடைந்தவர்கள் சர்வேஸ்வரனின் பாதாரவிந்தங்களில் சரணடைவதால் எல்லாம் வல்ல இறைவனே அச்சரணாகதி தத்துவத்தை ஏற்று பிறருடைய நல்வாழ்விற்காக ஞானியரையும், யோகியரையும், மஹான்களையும் மீண்டும் மீண்டும் பூவுலகிற்கு அனுப்புகின்றான்.
சிவபெருமான் வாசுகியிடம், “பாற்கடலில் திரண்ட அமிர்தம் ஸ்ரீவராஹ மூர்த்தியின் திருமேனியில் பட்ட பின்னர், உன்னையும் தீண்டி புனிதப்படுத்தியமையால் உன்னிடத்தில் அமிர்த குணங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். நீ சங்கர நாராயண அனுபூதிகளைப் பெற்றவளாய்ப் பரிணமிக்கின்றாய். எம்முடைய தேஹத்தில் எத்தனையோ கோடிக் கணக்கான நாகங்களை ஏற்றுள்ளோம். உன்னுடைய தியாகத்திற்காக உனக்குச் சிறப்பிடம் தந்து பாற்கடலில் உருவான ஆலகால விஷத்தையாம் ஏற்றுள்ள எம்முடைய கண்டப் பகுதியில் நீ உறையும் பேற்றையும் பெறுகின்றாய், உன்னுடைய தியாக வாழ்வு தொடர்வதற்காக யாம் நாகேஸ்வரனாக எழுந்தருளியுள்ள தலங்களில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தி சூர்யநாராயண சுவாமியாகத் தம்முடைய கிரணங்களால் எம்மை ஸ்பர்சிக்கின்ற நாட்களில் அருள் பெறுவாயாக! பாற்கடலில் அமுதத்தில் திளைத்தமையால் நீ பெற்ற அமுத சக்திகளைப் பாஸ்கர ஸ்பரிச பூஜை தினங்களில் எம்முடைய லிங்கத் திருமேனியில் பட்டு பிரதிபலிக்கும் கிரணங்களில் நீ பெற்றுள்ள அமிர்த சக்தியையும் சேர்த்து அனைத்து ஜீவன்களையும் மேன்மைக்காகச் சமர்ப்பணம் செய்வாயாக” என்றும் அருளாணையிட்டார். விஷக்கடி, பாம்பு பயம், பாம்பு மேலே விழுவதால் ஏற்படும் தோஷங்கள், நாக தோஷங்கள், நல்ல பாம்பை அடித்ததால் ஏற்படும் சாபங்கள் போன்றவற்றைத் தீர்க்க வல்லதே சென்னை – குன்றத்தூர் –ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் 28.2.1997 முதல் 4.3.1997 வரை லிங்கத்தின் மேல்படுகின்ற சூர்ய கிரணங்களைத் தரிசிப்பதினால் கிட்டுகின்ற பலன்களாம்.
பலன்கள்
1. அகல் தீபங்கள் விசேஷமானதாகும்.
2. பஞ்ச தீபம் (தேங்காயெண்ணெய் + நல்லெண்ணெய் + இலுப்பையெண்ணெய் + விளக்கெண்ணெய் + வேப்பெண்ணெய்) விளக்கேற்றுதல் மிகவும் சிறப்புடையது.
3. மேற்கண்ட தீபங்களை ஏற்றுவதால், லிங்கத்தின் மேல் பட்டு பிரதிபலிக்கின்ற தெய்வ சக்தி வாய்ந்த கிரணங்களின் சக்தி தீபஜோதி மூலமாக நம்மை அடைவதோடன்றி அனைத்து மக்களுக்கும் வாயு மூலமாகக் கிட்டுகின்றது.
4. பிறருக்குத் தீங்கிழைத்தல், பில்லி சூன்யம் வைத்தல், கடிந்து பேசுதல், விஷம் போன்ற வார்த்தைகளால் குத்திப் பேசுதல் – போன்ற தவறுகளை அறிந்தோ அறியாமலோ செய்திருப்பின் அதற்குப் பிராயச்சித்தமாக மேற்கண்ட தினங்களில் பலருக்கும் அகல் தீபங்களையும், எண்ணெயையும் (கடலை எண்ணெய் கூடாது) இலவசமாக அளித்து, குன்றத்தூர் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் தீபமேற்றுவதற்குரிய சேவையை முறையாகச் செய்திடில் தக்க பரிஹாரமாக அமையும்.
5. சில வீடுகளில், தோட்டங்களில் நாக நடமாட்டங்கள் அதிகமாக இருக்கும். இதனால் பீதியுறுவோரும் உண்டு. சிலருக்குப் பாம்புமேல் விழுந்து, அதனால் ஏற்படும் பயம் கனவில் மட்டுமின்றி எப்போதும் அச்சமான மனோநிலையைத் தந்து கொண்டிருக்கும். இவர்கள் மேற்கண்ட தினங்களில் நாகதீபங்கள் ஏற்றி லிங்கத்தின் மேல்படும் சூர்ய கிரணங்களைத் தரிசித்திடில்  அத்தகைய பீதிகள் நீங்கும். நாக தீபம் என்பது நாக வடிவில் உள்ள தீபம் ஆகும்.
6. நாகராஜன், வாசுகி, நாகரத்தினம் – போன்ற பெயருடையவர்கள் மேற்கண்ட பூஜையைச் செய்திடில் வாசுகி தேவமூர்த்தி/ ஆதிசேஷனின் விசேஷ அனுக்கிரஹங்கள் கிட்டும்.
சென்னை பூவிருந்தவல்லி ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி ஆலயம்
ஒரு காலத்தில் பாணலிங்கங்கள் நிறைந்திருந்த அற்புதமான தலம் இது. தற்பொழுதோ ஓரிரண்டு பாண லிங்கங்களே காட்சியளிக்கின்றன. இன்றைக்கும் இக்கோயிலைச் சுற்றி பூமியின் அடியில் எண்ணற்ற பாண லிங்கங்கள் உள்ளன. எனவே இக்கோயிலில் அடிபிரதட்சணம் செய்வது மிகவும் விசேஷமாகும். பாணலிங்கங்களின் ஆகர்ஷண சக்தி அங்கப்பிரதட்சணத்தில் தான் எளிதில் உடலில் சேர்கின்றன. எனவே ஸ்ரீஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்தபோது பாணலிங்கங்கள் பதிந்த இப்புனித பூமியில் தம் கால்கள் படலாகாது என்பதற்காக அங்கப்ரதட்சணம் செய்தவாறே கோயிலினுள் பிரவேசித்தார்.
ஸ்ரீஆதிசங்கரரே தரிசனம் செய்த மூர்த்தியெனில் எத்தகைய தொன்மை வாய்ந்தது இத்திருத்தலம்! இங்கு அவரே தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்த மூன்று அற்புத சக்தி வாய்ந்த தெய்வீகச் சக்கரங்களைக் கண்டு தரிசித்துப் பயன் பெறுவீர்களாக! இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றைப் பற்றி “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் முன்பே விவரித்துள்ளோம். கர்லாகட்டைச் சித்தர் என்ற அற்புத சித்புருஷர் பல கோடி யுகங்கள் அமர்ந்து பல கோடி ஏழை மக்களுக்கு ஓர் அற்புத குளிகை மூலம் மருத்துவ உதவி அளித்து வந்தார். ‘ஜீவசம்ரக்ஷக குளிகை’ என அழைக்கப்படும் அக்குளிகையானது இந்திர மருத்துவ தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களின் தபோபலனால் உருவாக்கப்பெற்றதாகும். பிரபஞ்சமெங்கும் உள்ள நோய் நொடிகளைத் தீர்க்க வல்லவர்களே அஸ்வினி தேவர்களாவர். இக்கோயில் தூணில் கர்லாக்கட்டைச் சித்தர் இன்றைக்கும் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார். எவரேனும் வியாதி என்று வந்து நின்றால் கர்லாக்கட்டையை எடுத்து இரு கைகளாலும் மேலே தூக்கி வேகமாகச் சுழற்றுவார். இதுவே கர்மவினைகளை விரட்டும் பாணியாகும். ஆனால் இவர் கர்லாக்கட்டையைக் கீழே வைப்பதே கிடையாது. வைத்தாலோ அதன் வெப்பம் தாங்காது பூமி வெடித்துவிடும் என எச்சரிக்கை செய்வார்.
கர்மவினைகளைக் களைவது மட்டுமின்றி நோய்ப்பிணி தீர்க்கும் உத்தம புருஷராகவும் திகழ்ந்தார். ஜீவசம்ரக்ஷக குளிகையை அஸ்வினி தேவர்களிடமிருந்து பெற்றாரல்லவா! அதனை இத்திருக்கோயிலில் பாதுகாப்பாக வைத்திருந்து, அதன் மூலம் மக்களின் நோய்களைத் தீர்த்தும் வந்தார். எத்தனையோ கோடி யுகங்களுக்கு அக்குளிகையைப் பயன்படுத்தியும் அதன் எடையோ, பரிமாணமோ ஒரு சிறிதும் குறையவில்லை காரணம் என்ன தெரியுமா? ஸ்ரீவைத்யநாத ஸ்வாமி ஸ்வயம்பு லிங்கத்தின் மேல் வருடம்தோறும் மாசி மாதத்தில் குறித்த தினங்களில், காலையில் சூரியனின் கிரணங்கள் லிங்க மூர்த்தியின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும். இவ்வாறாகக் குறித்த தினங்களில் தான் கர்லாகட்டைச் சித்தர் சுயம்பு லிங்கத்தின் மேல் ஜீவசம்ரக்ஷக குளிகையை வைத்துப் பூஜிப்பார். இக்கோயில் தூணில் ஜீவசமாதி பெற்று உறையும் கர்லாக்கட்டைச் சித்தர் மேற்கண்ட மாசி மாத தினங்களில் சூட்சும ரூபத்தில் லிங்க வழிபாட்டை மேற்கொள்கின்றார். எனவே வரும் 4.3.1997 to 8.3.1997  தினங்களில் காலையில் சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் பட்டு பிரதிபலிப்பதைத் தரிசனம் செய்தோர்க்கு தொலையாத கர்மங்கள் தொலைந்து நல்ல பிராயச்சித்தத்தைத் தரும்.
நேர்த்திக் கடன் செய்து கொண்டு நிறைவேற்றாதவர்களுக்குத் தக்க பிராயச்சித்தம் வழங்குவது பூவிருந்தவல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி ஆலயம் ஆகும். இங்கு நடுமண்டபத்தில் நந்தீஸ்வரருக்கு மேலுள்ள நவக்ரஹ நவசக்ர மண்டலத்தில் உள்ள நவக்ரஹ மூர்த்தி/தேவதா மூர்த்திகள் நேர்த்திக் கடன்களுக்கான தோஷங்களை ஏற்று நிவர்த்தியளிக்கின்றார்கள். இங்கு எள்சாதம் தனை தானமளித்து நவக்ரஹ நவசக்ர மண்டலாதி தேவர்களை தரிசித்து, நெடுங்காலமாகக் காத்துக் கிடக்கும் நேர்த்திக் கடன்களை உடனடியாக நிறைவேற்றிட ஆவன செய்தல் வேண்டும். இந்நவசக்ர தேவமூர்த்திகள், லிங்கத்தின் மேல்பட்டு பிரதிபலிக்கும் மாசிமாத சூர்ய கிரணங்களைத் தம்முள் ஏற்று இங்கு அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்வோர்க்கு அருள்பாலிக்கின்றனர்.
இது அங்காரகத் தலமாக விளங்குவதால் செவ்வாயன்று அங்கப்பிரதட்சிணமும், அடிப்பிரதட்சிணமும் செய்வது மிகவும் விசேஷமானதாகும். பொதுவாக, மாயூரம் அருகிலுள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலைப் போலவே நோய்களுக்கு நிவாரணம் தரும் அற்புதத் தலம் இது! இக்கோயிலில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகையின் எதிரில் உள்ள நுழைவாயில் அருகே தூணில் ஸ்ரீஆஞ்சநேயர் தரிசனம் தருகின்றார். இத்தூணின் பின்புறத்தில் ஸ்ரீஅவதூதுரோக நிவர்த்தீஸ்வரர் என்ற சித்புருஷர் ஜீவசமாதி பூண்டு என்றும் அருள்புரிகின்றார். நோய் வரும் முன்னே நோயிலிருந்து நம்மைக் காக்கும் அற்புத சித்புருஷர் இவர். இவருக்கு கங்கை , காவிரி நீரால் அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி ஏழைகளுக்கு, குறிப்பாக தொழுநோய், புற்றுநோய் போன்று கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்க்கு உணவு, உடை, டாணிக்குகள் , மருந்துகள் அளித்து வந்தால் எத்தகைய கடுமையான நோயும் தணியும்.
திதி, நக்ஷத்திரம் போல 27 விதமான யோகங்கள், யோக நேரங்கள் உண்டு. இதில் வைதிருதி யோக நேரத்தில் இவருக்கும் மூலவர் ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து பூண்டு, இஞ்சி, மஞ்சள், மிளகு, ஜீரகம், பிரண்டைக் கொடி, கலந்த ரசம், சாம்பார் சாதம் தனை அன்னதானமாக இட்டு வந்தால் எத்தகைய கடுமையான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். பிரண்டைக் கொடியானது பித்ருலோகத்திலிருந்து வந்த எள் போன்று பித்ரு லோகத் தாவரமாதலின் பித்ருக்கள் சாபத்தினால் ஏற்படும் நோய்களுக்கு இது தக்க பரிகாரம் ஆகும். பொதுவாக அமாவாசை மட்டுமின்றி தினம் தோறும் காலையில் வசுக்கள் எனப்படும் வசு, பித்ரு தேவர்களின் சக்தி மிகுந்து இருப்பதால் காலையில் பிரண்டைக் கொடியை ..... வசு, பித்ரு தேவேப்யோ நம: (அல்லது) வசு பித்ரு தேவர்களே போற்றி! என்று துதித்து வணங்கியே பிரண்டைக் கொடியைப் பயன் படுத்துதல் வேண்டும்.

மகா சிவராத்திரி

மஹா சிவராத்திரி (7.3.1997)            
மஹா சிவராத்திரிக்குப் பல விளக்கங்கள் உண்டு. திருஅண்ணாமலையில் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மூர்த்திகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் அவர்களுக்கு ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தியாக ஈசன் காட்சி அளித்த தினமே மஹா சிவராத்திரி என்ற வழக்கும் உண்டு.. தீபாவளியன்று நரகாசுர வதம் நிகழ்ந்ததோடு மட்டுமல்லாது அந்த ஐப்பசி சதுர்த்தசி திதியில் பல விசேஷமான புராண நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. குந்திதேவி தீபங்களை ஏற்றி ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டு ஓர் அரிய தீப விளக்குப் பூஜையை உலகிற்கு அளித்ததும் தீபாவளியான ஐப்பசி சதுர்த்தசியில் தான். பரம்பொருளின் தரிசனம் வேண்டி ஸ்ரீலக்ஷ்மி தேவி ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை விட்டுப் பிரிந்து தவம் செய்யச் சென்றுவிட, சகல லோகங்களிலும் ஐஸ்வர்ய சம்பத்துக்கள் குறைந்து வறுமை தாண்டவமாடியது, ஸ்ரீநாராயண மூர்த்தி ஸ்ரீலக்ஷ்மி இருக்குமிடத்திற்குச் சென்று தேவியின் தவத்தினால் விளைந்த பலன்களை எடுத்துரைக்க ஸ்ரீலக்ஷ்மிதேவி மீண்டும் ஐஸ்வர்ய கடாட்சத்தை சகல லோகங்களுக்கும் அளித்த நாளே தீபாவளியான ஐப்பசி சதுர்த்தசி ஆகும். இவ்வாறாக தீபாவளி தினத்தில் பல விசேஷமான புராண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. காலப்போக்கில் ஸ்ரீகிருஷ்ணனின் நரகாசுர வதமே எளிமையாகப் புரியும் வண்ணம் முக்யத்துவம் பெற்றுவிட்டது!.
இதேபோல் மஹாசிவராத்ரி எனப்படும் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் பல அரிய புராண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சிவபுராணத்தில் மட்டுமின்றி பல்வேறு புராணங்களிலுமுள்ள பல புராண நிகழ்ச்சிகள் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் நிகழ்ந்துள்ளன. பல மகரிஷிகளின் அரும்பெரும் தலங்களும் மாசிமாத சிவராத்ரியில் நிறைவு பெற்று அவர்கள் தாம் பெற்ற தெய்வீகத் தரிசனப் பலன்களைச் சகல ஜீவ ராசிகளுக்கும் அளித்துள்ளனர். சிவ பெருமானின் ஒவ்வொரு அவதாரத்திலும் அந்தந்த அவதார மூர்த்தியின் தெய்வ நாயகியாக ஆகும் பேற்றைப் பெற ஸ்ரீபார்வதி தேவி பலவிதமான தவங்களை சிவராத்திரியில் மேற்கொண்டனள். நாமறிந்தது சிவபெருமானின் 64 மூர்த்தங்கள் மட்டுமே. இவையன்றி நாமறியாத பல அவதாரங்களும் உண்டு. ஆதிசிவனின் பல அவதாரங்களும் சிவராத்திரி தினத்தன்று ஏற்பட்டுள்ளன.
மாதந்தோறும் அமாவாசைக்கு முன் வருகின்ற கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி திதிக்கு ‘மாத சிவராத்ரி’ என்று பெயர். மாசி மாதத்தில் வருகின்ற மாத சிவராத்ரியில் மேற்சொன்னபடி பலவிதமான சிவலீலைகளும், அற்புதங்களும், அவதாரத் தோற்றங்களும், அம்பிகையின் தவங்களும் நடைபெற்றுள்ளமையால் மாசி மாத சிவராத்ரி மஹாசிவராத்ரியாகக் கொண்டாடப்படுகின்றது.
எத்தனை எத்தனை சிவராத்திரிகள்!
கிருத, திரேதா, துவாபர, கலி என்ற நான்கு வகை யுகங்கள் உண்டு. இவை இதே வரிசையில் மாறி, மாறி நிகழ்ந்து வருகின்றன. கிருத யுகத்தில் ஆதிசிவன், ஸ்ரீமந்நாராயண மூர்த்தி போன்ற ஆதி மூர்த்திகளின் வழிபாடு பிராபல்யம் பெற்றிருந்தது. திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரமும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணாவதாரமும் நிகழ்ந்துள்ளன. இவற்றிற்கு இடையே ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய தசாவதாரங்கள் மட்டுமின்றி 24 வெவ்வேறு விஷ்ணு அவதாரங்களும், சிவபெருமானுடைய 64 அவதாரங்களும் மற்றும் நாமறியாத எண்ணற்ற அவதாரங்களும் நிகழ்ந்துள்ளன. கல்கி அவதாரம் கலியுகத்திற்குரியது. ஆனால் நடந்து கொண்டிருப்பதோ 28வது கலியுகம். அதாவது இதுவரையில் 27 கலியுகங்கள்  வந்து சென்று விட்டன. இவையெல்லாம் நமக்குப் படிப்பதற்கோ, கேட்பதற்கோ மலைப்பாக இருக்கும். ஆன்மீக நம்பிக்கை கூட சற்றுத் தளர்ச்சியடையும். ஆனால் நம் குறுகிய விஞ்ஞான அறிவிற்கு எட்டாத விஷயங்கள் கோடி கோடியாய் உள்ளன என்பதை அறிந்து கொண்டால் போதும், நாம் நிறைய ஆத்மவிசாரம் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மூளையை முடுக்குவீர்!
வெறும் பொழுதுபோக்காக T.V, சினிமா, நாவல் என்று பொழுதைப் போக்காமல்,
1. இந்த உலகம் எவ்வாறு பிறந்தது?
2. கடவுள் ஏன் உலகைப் படைத்தார்?
3. வானத்தில் இலட்சக்கணக்கான நக்ஷத்திரங்கள் தெரிகின்றனவே! அவற்றில் என்ன நடக்கின்றன?
4. தினமும் சூர்யனும், சந்திரனும் வந்து போவதன் பயன் என்ன? இதனால் நாம் காண்பது என்ன?
என்றவாறாக ஆத்ம விசார வினாக்களை உங்களுக்குள் எழுப்பிக் கொண்டு இறைச்சிந்தனையில் லயித்திருங்கள். பிறகு பாருங்கள்! உங்கள் மூளை எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை! நம் மூளையில் கோடிக்கணக்கான நுண்ணிய பகுதிகள் (Cells) உள்ளன.. இவற்றில் நம் வாழ்நாளில் கிட்டத்தட்ட 20, 30 செல்களை மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம்., ஜீனியஸ் எனப்படுவர் அதிகபட்சம் 50 செல்களை மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். ஆனால் முக்காலமும் உணர்ந்த சித்புருஷர்களும், ஞானிகளும் லட்சக்கணக்கான செல்களை உபயோகித்து சர்வ ஞானத்தையும் பெற்றுப் பிரகாசிக்கின்றனர். ஆத்ம விசாரம் மூலமாகத்தான் நாம் நம் மூளையை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் அறிவிற்கெட்டாத பல ஆன்மீக விஷயங்களையும் உணர்ந்து அறிவதற்கு உரிய மூளைச் செல்களை ஆன்மீக முறையில்தான் பயன்படுத்த முடியும். விஞ்ஞானத்திற்கெட்டாத ஆன்மீக விஷயம் இது. 27 கலியுகங்கள் முடிந்து விட்டன என்றால் கிட்டத்தட்ட 100 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் தழைக்கின்ற ஆன்மீகச் செல்வத்தை உய்த்துணர ஆத்மவிசாரமே உதவிபுரியும். சற்குருவைப் பெற்றால் அவரே அவ்வப்போது ஆத்ம விசாரத்தைப் பெருக்கி மனிதனுடைய மூளையைப் பரிபூரணமாகப் பலன்பெறும்படி செய்கின்றார்.
சிவராத்ரி விளக்கமானது எத்தகைய ஆழ்ந்த ஆத்ம விசாரத்தைத் தூண்டி விடுகின்றது என்பதை உணர்ந்து விட்டீர்கள் அல்லவா! நீங்கள் இதைப் படிக்கின்ற பொழுது இதுவரையில் உங்கள் வாழ்க்கையில் எப்போதுமே பயன்படுத்திடாத உங்களுடைய மூளையின் புதிய செல்கள் தற்போது ஆன்மீகப் பணிக்காகப் பணிபுரியத் தயாராக உள்ளன என்பது நிதர்சனமான உண்மை! எனவே, எத்தனையோ லட்சம் யுகங்களில், எத்தனையோ கோடி ஆண்டுகளில் கோடிக்கணக்கான மாத சிவராத்ரிகள் மட்டுமன்றி எவ்வளவு மஹாசிவராத்திரி விசேஷ தினங்கள் வந்து சென்றிருக்கும்! அவற்றில் எவ்வளவு புராண நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கும் என்பதை உணர்கின்ற போது மஹாசிவராத்ரியானது பலவிதமான விசேஷ புராண நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ள தெய்வீகத் திருநாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஅகஸ்தியரும் மஹா சிவராத்ரியும் :- ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்னும் புனித மந்திரத்தை உபதேசிக்கும் பாக்கியம் பெற்றவரே நம் அகஸ்திய மாமுனி என்பதை ராமாயணம் மூலமாக நாம் அறிவோம். ஸ்ரீமஹா விஷ்ணுவின் புனிதமான அவதாரங்களில் ஒன்றே ஸ்ரீஹயக்ரீவ அவதாரம் ஆகும். இன்று நாம் போற்றி மகிழும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத் துதியை ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளிடமிருந்தே முதன் முதலாக நேரடியாகக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்களே ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், அவர்தம் உத்தம தேவியாம் ஸ்ரீலோபாமுத்ரா தேவியும் ஆவர். ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, ஸ்ரீகாயத்ரி தேவி உள்ளிட்ட பல தெய்வாவதாரங்களின் பல்வேறு வைபவங்களில் ஸ்ரீஅகஸ்திய மாமுனி சிறப்பிடம் பெறுவதை நாம் பல புராணங்களில் கண்டும், கேட்டும், மகிழ்ந்திருக்கின்றோம். ஸ்ரீஅகஸ்தியருக்கு ஸ்ரீபார்வதி, ஸ்ரீபரமேஸ்வர திருமணக் கோலக் காட்சி பல இடங்களில் கிட்டியுள்ளது. சிவபெருமானின் பல்வேறு அவதார மூர்த்தங்களிலும் சிவபத்தினியாகும் பேற்றை பெற ஸ்ரீபார்வதிதேவி விதவிதமான தவங்களை, மேற்கொண்டு பேறு பெற்ற அந்தந்தத் திருமணக் காட்சிகள் பல இடங்களில் மஹாசிவராத்திரியன்று ஸ்ரீஅகஸ்தியருக்குக் கிட்டியுள்ளது.
இன்றும் ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீலோபாமுத்திரையுடன் தினந்தோறும் கைலாசம், வைகுண்டம், அருணாசல க்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலையில் நித்ய கிரிவலம் போன்ற வழிபாடுகளை முடித்துக் கொண்டு பல கோடி லோகங்களிலும் சஞ்சரித்துத் தம் வாசஸ்தலமாகிய பொதிய மலையினை வந்தடைகின்றார். ஆனால் மஹா சிவராத்திரியன்று பொதிய மலையிலேயே அவருக்கு ஆதிசிவனின் அனைத்து அவதார தரிசனங்களும் கிட்டுகின்றன. இன்றைக்கும் மஹாசிவராத்திரியன்று மக்களோடு மக்களாய், மனிதரூபத்தில் திருஅண்ணாமலையைப் பலமுறை கிரிவலம் வருவதில் ஸ்ரீஅகஸ்திய மாமுனி ஆனந்தம் அடைகின்றார். எனவே, மஹா சிவராத்திரியன்று ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீலோபாமுத்திரையின் மானிடரூபத் திருப்பாதங்கள் படிந்த புனிதப்பாதையில் நாமும் கிரிவலம் வர என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்! அரக்கர்களின் கொடுமையினாலும், தீய சக்திகளின் ஆதிக்கத்தாலும், அப்போதும் இப்போதும் பல லோகங்களில் இருள் சூழ்வதுண்டு. கொடிய சக்திகளையும், அரக்க குணங்களையும் சம்ஹரிக்க அந்த இருளில் இருந்து ஜோதியாய் உதித்த பல சிவ அவதாரங்கள் உண்டு. அத்தகைய சிவ அவதாரங்களின் தெய்வ நாயகியாக ஆகும் பேற்றைப் பெற பல யுகங்களில் உமையவளே இரவு முழுவதும் பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டாள். இவற்றின் தவப்பலனாய் ஸ்ரீபார்வதி தேவி ஸ்ரீஆதிசிவனின் அவதார ரூபத்தின் திருக்கரம் பற்றிய நாளும் மஹாசிவராத்ரியாகும்.
பாற்கடலில், அமிர்தம் உருவான திருநாளாகவும், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாகப் பொத்திட உலகமே இருண்டிட, ஒளி வேண்டி இருளில் அம்பிகையே சிவனைப் பூஜித்த நாளாகவும், பல பிரம்ம ரிஷிகள் சிவதரிசனம் பெற்றுக் கைவல்ய முக்தியடைந்த தினமாகவும், ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளிய தினமாகவும், இவ்வாறாகப்  பலவகை புராண நிகழ்ச்சிகளை ஒட்டி மஹா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. லிங்கஸ்வரூபமானது நம் நாட்டின் சில பகுதிகளில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உற்பவித்த தினமாகவும் மஹா சிவராத்திரியைக் கொண்டாடுகின்றனர். பூலோகத்தில் மட்டுமல்லாது பிரம்ம,சூர்ய, இந்திர , மற்றும் கோடானுகோடி லோகங்களிலும் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களும் சிவமஹாபுராணமும் பலலோகங்களிலும் நிகழ்ந்த சிவாற்புதங்களையும் சிவ லீலைகளையும் சிறப்புடன் விளக்குகின்றன.
பிரம்ம லோகத்தில்...
பூலோகத்தை மட்டுமே எண்ணி வாழ்கின்ற கலியுக மனிதன், ஆத்ம விசாரத்தில் நன்கு ஈடுபட்டு இறைநெறியில் குருவருளால் திளைப்பானாயின், பிரம்ம லோகம், சத்யலோகம், இந்திர லோகம், தேவலோகம், குருமண்டலம், நட்சத்திர மண்டலம், நவக்கிரஹ லோகங்கள், பித்ரு லோகங்கள், சூர்ய, சந்திர லோகங்கள் என எண்ணற்ற லோகங்களிருப்பதை உணர்ந்திடுவான். பிரம்ம லோகத்தில் மஹாசிவராத்திரிதனை எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? பிரம்ம தேவர்களாக இருப்பினும், இறைவனை ஸ்தூல ரூபத்தில் கண்டிட அனைவரும் திருஅண்ணாமலைக்கும் காளஹஸ்திக்கும் மற்றும் பல சிவஸ்தலங்களுக்கும் ஓடோடி வருகின்றனர். முப்பத்து கோடி முக்கோடி தேவர்களும் மஹாசிவராத்திரியில் ஏதேனும் பூலோக ஜீவ உருவம் பூண்டு இன்றும் அருணாசலமலையைச் சுற்றி வருகின்றனர்! 100 கோடி ஜீவன்களில் ஆண்டுதோறும் உத்தமநிலையடைந்த பத்து ஜீவன்களை பிரம்ம லோகத்தின் முதல் நுழைவு வாயிலான உதயப்ரவேசத்திற்குள் அழைத்துச் சென்று அவர்கட்கு மேலும் பல சோதனைகள் தரப்படுகின்றன. அதில் தகுதிபெறும் உத்தம நிலையுடையோர் அடுத்த நுழைவாயிலான சாந்தப்ரவேசத்திற்குச் சென்றிட அங்கும் சோதனைகள் தொடரும். இறுதியில் தகுதிபெறுவோர்க்குத்தான் “பிரம்மகாருண்யப்ரவேசம்” அளிக்கப்பட்டு அதிலும் சிறப்புறுவோர்க்கு பிரம்ம தரிசனம் கிட்டி “ஸத்ய பூர்ணானந்த குருவாக” அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரம்மோபதேசம் செய்யப்பட்டு சிவராத்திரியன்று “சற்குருவாக” பூலோகத்திற்கு அனுப்பப்படுகின்றார். அவ்வாறு தெய்வீகத் தேர்வு செய்யப்படுகின்ற “ஸத்ய பூர்ணானந்த குரு” பூலோகத்தில் மஹா சிவராத்திரியன்று எவ்வுருவும் எடுத்து மக்களோடு மக்களாய் தன் மஹிமையைக் காட்டாது வாழ்ந்து தன்னைச் சரணடைவோர்க்கு நற்கதி அளிப்பார்.
எனவேதான் “சற்குருவை” தேடுவோர்க்கு மஹாசிவராத்திரியின் அருணாசல கிரிவலம் இன்றியமையாததாகின்றது. அன்று தானே “ஸத்ய பூர்ணானந்த சற்குரு” பூலோகம் ஏகுகின்றார்! அவருடைய தலையான பணிகளுள் ஒன்றே பூலோக ஜீவன்களுக்கு அவரவருக்குரித்தான சற்குருவைப் பெற்றுத் தருவதாகும். ஆனால் உத்தம சற்குருவைப் பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்கிறீர்களா என்பதை நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பாருங்கள். தகுதியில்லையே என்று கவலைப்படுதல் வேண்டாம். அதுவரையில் ஓர் ஆன்மீக வழிகாட்டியாக நின்று சற்குரு பலர் மூலமாக, பலவழிகளில் உங்களுக்கு நல்வழி காட்டுவார்! ஆன்மீக வழிகாட்டிக்கும், சற்குருவிற்கும் வித்யாசம் உண்டா? நம்பிக்கையப் பொறுத்தமைவதே இது! சற்குருவே ஆன்மீக வழிகாட்டியாகத்தான் நம் கண்களுக்குத் தென்படுவார், பரிபூர்ண நம்பிக்கை ஏற்படும் வரையில்!
ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில், ஆன்மீக வழிகாட்டியாக, சற்குருவின் அருள் மொழிகளாக, எத்தனையெத்தனை நல்வழி முறைகளை அளிக்கின்றோம்! “இவ்வாறு செய், அவ்வாறு நடந்து கொள்” என்று எவ்வளவோ அறவழி முறைகள்! ஆனால் அனைத்தையுமா செய்கின்றீர்கள்! “நேரமில்லை வசதியில்லை, இது நம்மால் முடியாது” என்று எவ்வளவு ஒதுக்கல்! தள்ளுபடிகள்! அதாவது ஆன்மீக வழிகாட்டி கைகாட்டுகின்ற பாதையில் அச்சமயங்களில் நீங்கள் செல்லவில்லை, அப்படித்தானே பொருளாகின்றது! நன்கு ஆத்ம விசாரம் செய்திடுக! ஆன்மீக வழிகாட்டியிடம் சரணடைந்து சற்குருவைக் காண்க! எனவே பிரம்ம லோகத்தில் சத்ய பூர்ணானந்த குருவைத் தேர்வு செய்து பூலோகத்திற்கு அனுப்புகின்ற கோலாகல நாளாகவும் மஹாசிவராத்திரி அமைகின்றது. மஹா சிவராத்திரியன்று பிரம்மலோகத்தில் நிகழ்கின்ற வைபவங்களுள் இதுவும் ஒன்று! பிரம்ம லோகத்தில் மஹாசிவராத்திரியன்று நிகழும் அற்புத வைபவங்களுள் ஒன்றாக “பூர்ணானந்த சற்குருவின்” பூலோக எழுச்சியினைக் கண்டோமல்லவா! அடுத்து சூர்யலோகத்தில் மஹாசிவராத்திரி.......
சூர்ய லோகத்தில்...
சற்குருமார்கள் பூமியில் மட்டுமின்றி ஒவ்வொரு லோகத்திலும் பரிணமிக்கின்றனர். சூர்ய லோகத்திலும் சூரிய ஆண்டுதோறும் 1000 கோடி ஜீவன்களுக்குள் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து சூர்ய லோகத்தில் ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமி உறையும் லோகத்திற்கு அனுப்பப்படுகின்றனர். 1000 கோடி ஜீவன்களில் புல், பூண்டு உட்பட மனிதர்கள் வரை அனைத்து ஜீவன்களும் உண்டு. கரடி, யானை, மயில், கழுகு, சிலந்தி, எறும்பு உட்பட பல ஜீவன்கள் பூஜித்து முக்தியடைந்த சிவத்தலங்கள் உண்டு. சூர்ய லோகத்தில் சிவராத்திரியன்று “சாயாஸ்வரூப முக்தி” நிலைபெறுவோர் பல லோகங்களில் சூர்யனாகப் பிரகாசிக்கின்றனர், மைத்ரேயி, யாக்ஞவல்கியர், கார்க்கினி போன்றோர் சூர்யநாராயண ஸ்வாமியின் திருலோகத்தில் உத்தமநிலை பெற்று நமக்கு இன்றும் அருள்பாலிக்கும் அருட்பெரும் மஹரிஷிகளாவர்.
நாமறிந்த சூரியன் ஒன்றே.... நாமறிந்த ஒரே பூலோகம் இதுவே! ஆனால் எண்ணற்ற சூர்ய, சந்திர பூலோகங்கள் உண்டு! எண்ணுவதற்கு விந்தையாக தோன்றும்! ஆனால் விஞ்ஞானப் பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்ட, சூரியனைவிடப் பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களைக் காண்கின்றோமே அவற்றைப் பற்றி என்றேனும் நாம் ஆத்ம விசாரம் செய்திருக்கின்றோமா! தசரதர் சனீஸ்வரரைக் கண்டிட எத்தனையோ லோகங்களைக் கடந்து சென்றதாகக் காண்கிறோம்! எத்தனை நாள் தான் நாம் குறுகிய மன அறிவிற்குள் வாழ்வது! தான தர்மங்களும், தியானமும்  எல்லாவற்றிற்கும் மேலாக குருபக்தியும் தான் நம்மை தெய்வீகப் பாதையில் இட்டுச் செல்லும், நம் அறிவை விலாசப் படுத்தும்.
எனவே மஹா சிவராத்திரியன்று தான் சூர்ய லோகத்திலிருந்தும் சூர்ய மண்டல சற்குருமார்கள் பூலோகம் மட்டுமன்றி ஏனைய லோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர். குருபக்தியைப் போற்றும் ஸ்ரீகாயத்ரீ மந்திரமும், ஸ்ரீகாயத்ரீ தேவியும் உறைவது ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியின் திருமண்டலத்தில் தானே! அம்பிகை, சர்வேஸ்வரனின் திருக்கண்களைப் பொத்திட, சர்வலோகங்களும் இருளில் ஆழ்ந்தன அல்லவா! இதனால் வருத்தமுற்ற அம்பிகை, இருளில் சர்வேஸ்வரனைத் தேடிட, தான் கைவைத்த இடமெல்லாம் சிவலிங்கங்களாக இருப்பது கண்டு ஆச்சரியமடைந்தனள். இதுவும் இறைவனின் திருவிளையாடல்தானே! இது நிகழ்ந்ததும் மஹாசிவராத்திரியில் தான்! அப்போது இறைவனின் திருவருளால் ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியின் மண்டலத்திலிருந்து வெளிப்போந்த மஹரிஷிகளும் ஞானியரும் தம் ஆத்ம ஒளியை, சர்வேஸ்வரனின் அருளாணையின் படி அளித்திட அம்பிகையே வியக்கும் வண்ணம் இருண்டிருந்த சகல லோகங்களும் அந்த ஒளிப்பிரகாசத்தில் ஜ்வலித்தன! இவ்வாறாக மஹாசிவராத்திரி நிறைவுறும் விடியற்காலையில் உண்டாகும் அம்பிகை கண்ட சூர்ய ஒளிக் கிரணங்களுக்கு “ஆத்மப் பிரகாச ஜோதி” என்று பெயர்.
ஆத்ம ப்ரகாச ஜோதி
மேற்கண்ட புராண நிகழ்ச்சியின் எதிரொலியாகவே சிவராத்திரியின் நிறைவில் காலையில் உருவாகும் “ஆத்மஜோதிப்” பிரகாச சூர்ய உதயத்தில , சூர்ய ஜோதிமண்டல மஹான்களின், யோகியரின், ஞானியரின் ஆத்மப் பிரகாசமும் கூடி வருவதால் இச்சூர்ய தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். ஆனால் சிவராத்திரிதனை, இரவு முழுதும் விரதம், பூஜை, ஹோமம் மற்றும் தானதர்மங்களோடு முறையாக, சற்குருவின் ஆசியோடு, கடைபிடிப்போர்க்கு மட்டுமே இவ்வாத்ம ஜோதி சூர்யப் பிரகாசம் பரிபூர்ணமான பலன்களைத் தரும். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியே இரவு முழுதும் ஈசனை பூஜித்து “சர்வாத்ம ஜோதியை” ஆத்ம ஒளிப்பிரவாகத்தை தரிசித்திட்டாளெனில் என்னே மஹாசிவராத்திரியின் மஹிமை!
ஹிரிஹர பேதம் நீங்கிட...
நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் “சிவ-விஷ்ணு” பேதமின்றி பக்தியில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளோம். ஆழ்வார்களின், நாயன்மார்களின் உத்தம தெய்வீக நிலைகளில் இறைவன் அவர்களை ஆட்கொண்டு, அவர்கள் விரும்பிய வண்ணம் காட்சிதந்தான். இறைவன் “தாமே வந்து தடுத்தாட்கொள்கின்ற தெய்வீக நிலை” அடையும் வரை உருவ வழிபாடு கொண்டு சிவ, விஷ்ணு பேதமின்றி ஜாதி, மத பேதமின்றி “இறைவன் ஒருவனே, அவனே அனைத்து ரூபங்களிலும் காட்சி தருகின்றான்” என்பதை உணர்தல் வேண்டும். இதுகாறும் அறிந்தோ அறியாமலோ சிவ விஷ்ணு பேதம் காட்டி வாழ்ந்தோர், இதற்குப் பிராயச்சித்தமாக திருமால், சிவனை வழிபடும் செங்கல்பட்டு அருகில் திருமால்பேறு என்னும் தலத்தில் மஹா சிவராத்திரியினை முறையாகக் கொண்டாடிடில் நல்வழிகிட்டும்.
இந்திர லோகத்தில்.....
“மஹா சிவராத்திரியில் பிரம்ம, சூர்ய  லோகங்களில் நிகழ்பவை பற்றி அறிய படிப்பதற்கு ஆனந்தமாக இருக்கின்றது! ஆனால் லௌகீகமாக, எங்களுடைய நியாயமான, முறையான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமே!” – என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றதே!
வைகுண்ட  ஏகாதசி, மஹாசிவராத்திரி, விஷ்ணுபதிப் புண்யகாலம், பிரதோஷம் போன்றவை பூலோகத்திற்கு மட்டும் உரித்தானவையல்ல், ஏனைய பல லோகங்களிலும் கடைபிடிக்கப்படுகின்ற தெய்வீகப் பண்டிகைகள் என்பதை உணர்த்தவே இங்கு சித்புருஷர்களின் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திர லோகம் பற்றிய விளக்கம் யாதெனில்..... தேவர்களின் தலைவனான இந்திர தேவன் மஹாசிவராத்திரியன்று தன் “வஜ்ராயுதத்திற்கு” ஆத்மபூஜை செய்கின்றான்! அதாவது இந்திர லோகத்திற்குரிய இந்திர ஆண்டில், மஹாசிவராத்திரியன்று இந்திரன், தன் தெய்வீக ஆட்சியைப் பல மஹரிஷிகளின் முன்னிலையில் நடுநிலைமையாக “சுயவிமர்சனம்” செய்து கொள்கின்றான். இந்திரலோக ஆட்சி, பூலோகம் போன்றதல்ல! அங்கு சூது, வாது, பொய், கபடம், அசத்தியத்திற்கு இடமே இல்லை! வஜ்ராயுத பூஜையானது வஜ்ராயுதத்தில் சிலவித கிரணங்களையும், ரேகைகளையும், வர்ணங்களையும், ஒளியையும் காட்டும்! இவற்றைக் கொண்டு மஹரிஷிகள் இந்திரனுடைய நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி, நல்வழி முறைகளையும் எடுத்துரைப்பர்.  அதாவது இந்திரனைப் போல், மஹாசிவராத்திரியன்று நம் குணம், ஒழுக்கம் கடமை, போன்றவற்றில் நம் நிறைகுறைகளை நாமே அறிந்து நம்மை மேன்மைப் படுத்திக் கொள்ளும் உத்தமநாளான மஹாசிவராத்திரியின் சிறப்புப் பூஜையில்....
“ஸ்ரீஅம்பிகையும் சிவனை பூஜிப்பதால், நாமும் பராசக்தியின் சர்வேஸ்வரப் பூஜையில் பங்கு பெற்றவர்களாகிறோம்”. இதனால் கிட்டுவது ஓர் அபூர்வ “இந்திர வைராக்ய சித்தி” அதவாது மஹாசிவராத்திரியன்று ஏதேனும் ஒரு நல்ல வைராக்கியத்தை ஏற்றுக் கொண்டால் அதை நன்முறையில் நிறைவேற்றுகின்ற “வஜ்ர சக்தியை” தெய்வபலம் நிறைந்த “ஆத்ம சக்தியை” இந்திர பகவானே அளிக்கின்றார்! எனவே சிகரெட், மது, சீட்டு, ரேஸ், புகையிலை, மூக்குப் பொடி போன்ற தீய ஒழுக்கங்களை நீக்குவதற்கு “வைராக்யம்” மேற்கொண்டிடச் சிறந்த நாள்! “தன்னைத் தானே உணர்விக்கும்” தகைமை கொண்ட நன்னாள்! இதுவே மஹாசிவராத்திரி! இவ்வாறாக எத்தனையோ லோகங்களில் பல்வகை சிறப்பம்சங்களுடன் வெவ்வேறு புராண சம்பவங்களைத் தன்னுள் கொண்டுள்ள மஹாசிவராத்திரியை முறையாகக் கொண்டாடி பெறுதற்கரிய பலன்களைப் பெற்றுச் சாந்தமான, பக்தி நெறி தழைக்கும் சீரிய வாழ்வைப் பெறுவீர்களாக!..

குருசொல் ஆக்கம்

குருசொல் ஆக்கம் – அட்டைப்பட விளக்கம்
“மொழியைக் கடக்கும் பெரும்புகாதான் வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் கூரத் தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமானுசம் புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கியாதும் வருத்தமன்றே” – இராமானுஜ நூற்றந்தாதி
ஸ்ரீபாத புண்ணிய தீர்த்தர் என்னும் மகான் ஒரு காலத்தில் தமிழகம் எங்கும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு மக்களுக்குக் குருவின் மேன்மையைப் பற்றி போதித்து வந்தார். இவர் மாசிமாதம் மட்டுமே வாய்திறந்து பேசுவார். ஏனைய மாதங்கள் மௌனத்தையே மேற்கொண்டு தம் தபோபலத்தை விருத்தி செய்து கொண்டு வந்தார். இவருடைய உத்தம சீடர்களுள் ஒருவர் தான் ஸ்ரீகதலிபாத அடியார் இவரோ மாசி மாதம் மட்டும் குருஆணைப்படி மௌன விரதத்தை மேற்கொள்வார். ஏனைய மாதங்களில் குருவின் ஆக்ஞைப்படி நற்பணிகளைச் செய்து வந்ததோடன்றி குருசொல்தனை ஆக்கப்பூர்வமாகச் செயலிலும் வடித்து வந்தார். குருவான ஸ்ரீபாதபுண்ணிய தீர்த்தர் பேசுவதோ மாசியில் மட்டுமே, ஆனால் அவர்தம் சீடரான கதலிபாத அடியாரோ குரு பேசுகின்ற மாசிமாதத்தில் மௌன விரதம் இருப்பார்! சற்றே எண்ணிப்பாருங்கள்! குருசிஷ்ய சம்பாஷணை எப்படி நடந்திருக்க முடியும்? இதுவே இறைவனின் கூத்து!
குருசொல்தனை மாசி தவிர ஏனைய மாதங்களில் மானசீகமாக உணர்ந்து அதனைச் சற்றும் வழுவாமல் கடைபிடித்து இறையடியார்களுக்கு உணர்த்தியும் வந்து அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவரே ஸ்ரீகதலிபாத அடியார். ஸ்ரீபாதபுண்ணிய தீர்த்தரின் முக்கியமான இறைப்பணி யாதெனில் தமிழகம் எங்கும் பட்டி தொட்டியெல்லாம் அலைந்து கோசம்ரட்சணை எனப்படும் பசுக்களைப் பாதுகாத்து வளர்க்கின்ற அற்புதச் செயலைப் புரிந்து வந்தார்.
குரு – சிஷ்ய இலக்கணம்
எம்பெருமானாகிய ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மலைத் திருமேனியாக அமர்ந்திருக்கும் திருஅண்ணாமலையையும் ஸ்ரீபாதபுண்ய தீர்த்தர் மாசிமாதம் தோறும் கிரிவலம் வருவதுண்டு. எவ்வாறு தெரியுமா? அவருடைய சிஷ்யர்களை விட அவருடன் கிரிவலம் வருகின்ற பசுக்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும்! ஆங்காங்கே அமர்ந்து பசுக்களை நோக்கிக் கைகளை மட்டும் அசைத்து, அபிநயங்கள் காட்டி அவைகளுக்குத் தெய்வீகம் போதித்திடுவார். பசுக்களுடன் நிகழ்கின்ற இத்தகைய தெய்வீகமான உரையாடலை விண்ணவர்களும் வந்து அமர்ந்து கேட்டு மகிழ்வதுண்டு. ‘குரு சொல் ஆக்கம்’ எனில் குருவின் சொல்லை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்துதல் என்பது பொருளாகும். குருவின் உபதேசத்தை உள்ளத்தளவில் நிறுத்துவதைவிட உடனடியாகச் செயல் படுத்தினால்தான் குருவின் அருள் பரிபூரணமாகக் கிட்டும். குரு சிஷ்ய உறவு ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயல்பாடு ஆகும்போது தான் குரு சிஷ்ய பிணைப்பு மேன்மை பெறுகின்றது. அதாவது குருசிஷ்ய இணைப்பிற்குப் பின் கூட இறைவன் பலவிதமான சோதனைகளை அளித்து அப்பிணைப்பை நிரந்தரமாகப் பரிபூரணமடையச் செய்கின்றான். எனவே ‘சற்குரு கிட்டவில்லையே’ என்று ஏங்குவோரும் ‘இவர் நமக்குரிய சற்குருதானா?’ என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்போரும் கோ சம்ரட்சணை, அன்னதானம், பித்ரு தர்ப்பணம், ஆகிய மூன்று வகையான ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை நிறைவேற்றி வந்தாலே போதும், சற்குருவைக் கண் கூடாகக் கண்டிடலாம். ஆனால் எந்நிலையிலும் சோதனைகள் தொடரும். சோதனைகள் தாம் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தருபவை.
கதலிபாத அடியாரின் குருபக்தி
குரு பேசுகையில் சிஷ்யன் மௌனம் பூண்டும், குரு மௌனமாகிட சிஷ்யன் பேசுகின்றதுமான அற்புத வரலாறே ஸ்ரீபாத புண்ணிய தீர்த்தர் – ஸ்ரீகதலிபாத அடியாரின் உத்தம சரிதமாகும். குரு நினைக்கும் முன்னரே செயலாக்குகின்ற அற்புத தெய்வீக ஆற்றல் ஸ்ரீகதலிபாத அடியாருக்கு எப்படி வந்தது? அவருக்கு வேதமோ, பூஜை முறைகளோ, ஹோம வழிபாடோ எதுவும் தெரியாது. நடைமுறை வழக்கில் சொல்லப் போனால் சுத்தமான நாட்டுப்புறத்தாராக விளங்கிய ஸ்ரீகதலிபாத அடியார் குருவாகிய ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தரைக் கண்டதுமே ‘இவரே நம் வழிகாட்டி’ என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். குருவோ கதலிபாதரிடம் எதுவுமே பேசவில்லை. சைகை மூலமாக “இந்தப் பசுவைக் குளிப்பாட்டு”... ‘அந்தப் பசுவை நூறுமுறை சுற்றி வா,’ இந்த பசுமாட்டிற்கு வைத்தியம் செய்,. ‘அந்த கன்றுக் குட்டியைத் தோளில் சுமந்து வா’ இவைதாம் குருவின் ஆணைகள்! இதனையே ஆக்கப்பூர்வமாகச் செய்து வந்த ஸ்ரீகதலிபாத அடியார் தம் குருவின் ஆணைப்படியே குரு பேசுகின்ற மாசியில் தாம் மௌனியானார். குருமௌனத்தில் கழிக்கின்ற மாதங்களில் தாம் பேசலானார். வெறும் பசு வழிபாடு என்று எண்ணுகின்ற உத்தம கோ பூஜையே எத்தகைய உன்னதமான தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா!
வேதம் ஓதுவீர்.....
1. எனவே வேதத்தின் விளக்காய்ப் பிரகாசிக்கும் வரும் ‘ஈஸ்வர’ ஆண்டில் வடமொழ், தமிழ் மறைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
2. நாடெங்கும் வீடுதோறும் எப்போதும் குறைந்தது காலையிலும், மாலையிலுமாவது தேவார, திருவாசக, பெரியபுராண, ஆழ்வார் பாசுரங்கள் ஓதப்பட வேண்டும்.
3. அறிந்தோர் வடமொழி வேத மந்திரங்களை ஓதுதல் வேண்டும், தமிழ் மொழி, வடமொழி என்ற பேதம் தெய்வீகத்தில் கிடையாது. ஏனெனில் இவை சர்வேஸ்வரனின் திருக்கண்களாகும். உலகெங்கும் ஒரு யுகத்தில் விரவிக் கிடந்த வேதமானது நாளடைவில் மனிதக் கர்மபந்தங்களால் மறைந்து போகும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த மகரிஷிகளும், முனுபுங்கவர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தபுருஷர்களும் வேதங்களின் திரட்சியாக இறையருளால் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம் போன்றவற்றை நமக்கு அளித்துள்ளனர். இவற்றை முறையாக ஓதினாலே வேதம் ஓதிய பலன் எளிதில் கிட்டும்.
4 வடமொழியில் உள்ள சூக்தங்கள், ருத்ரம், சமகம் போன்றவற்றிற்கு ஈடான தமிழ் மந்திரங்கள் நிறைய உண்டு. இவற்றைத் தக்க சற்குருவிடம் கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும். உதாரணமாக வடமொழியில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ருத்ரத்திற்கு ஈடாக அப்பர் சுவாமிகள் உருத்திர மந்திரப் பதிகம் (ஸ்ரீருத்ர தாண்டவப்பதிகம்) அளித்துள்ளார்.
5. நாள் முழுதும் எப்போதும் வேத ஒலிதனை முழங்க வேண்டிய இடத்தில் கலியுக மனிதன் ஒரு நாளில் சில நிமிடங்கள் கூட தமிழ்மறை, வடமொழி மறைகளை ஓதுவதில்லை. குறைந்த பட்சம் வேத சப்தங்கள் ஒலிக்கின்ற கோயில்களுக்கேனும் சென்று குறைந்தது அரை மணி நேரமாவது அங்கு அமைதியாக இருப்பதும் கிடையாது. ஹோட்டலிலும், வேறு இடங்களிலும் காபி, டிபனுக்காக, பீடி, சிகரெட் பிடிப்பதற்காகப் பல மணி நேரங்களை வீணாக்குகின்ற மனிதன் கோயில் பக்கம் தலைகாட்டுவதே கிடையாது. இதற்காகவே வேதமந்திரம் ஓதுகின்ற பலனைத் தரவல்ல எளிய கோபூஜை முறையை நம் பெரியோர்கள் அளித்துள்ளனர். தினமும் ஒரு பசுவையேனும் நீராட்டி மஞ்சளிட்டு, குங்குமமிட்டு வாழைப்பழம், புல், கரும்பு, காய்கறிகள் போன்றவற்றை அளித்து வலம் வந்து வணங்கிட வேண்டும். சில நிமிடங்களே ஆகின்ற இந்த எளிய வழிபாட்டினைச் செய்து வந்திடில் வேதம் ஓதிய பலன் கிட்டுவதோடு பல தீவினைகளும் கழிந்து புண்ய சக்தியும் கூடி நல்லொழுக்கமும், இல்லறத்தில் அமைதியும் உருவாவதோடு சற்குருவின் தரிசனமும் கிட்டும். பலவகையான உத்தம பலன்களைத் தரவல்ல இவ்வரிய, எளிய கோபூஜைகளை அனைவரும் சிறப்பாகச் செய்து அற்புதமான பலன்களை அடைதல் வேண்டும்.
சத்சங்க கோபூஜை :- பலர் ஒன்று சேர்ந்து இதனை தினசரி பூஜையாக அமைத்துக் கொண்டால் நம் சமுதாயமே வன்முறைகள் இல்லாத அமைதிப் பூங்காவாக அமையும் அன்றோ!
6. நகரத்தில் உள்ளோர் கூட்டாக வாரம் ஒரு முறையேனும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பசுவினைக் கன்றுடன் அழைத்து வந்து கோ பூஜையைச் சிறப்பாகச் செய்து பயன் பெறலாம்.
7. சென்னை, திருச்சி, காஞ்சீபுரம், மதுரை போன்ற இடங்களில் பசுக்களைப் பராமரிக்கின்ற கோசாலை/பசு மடங்களுக்கு வாரமொரு முறை/மாதமொரு முறையேனும் சென்று எல்லோரும் ஒன்று கூடி சத்சங்கமாக இடத்தைச் சுத்தம் செய்து பசுக்களை நீராட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, சாம்பிராணித் தூபம் இட்டு, தவிடு, தீவனம், புண்ணாக்கு தீனியிட்டுப் பூஜிக்க வேண்டும்.
8. எளிய கோபூஜை மட்டுமே குருஆணையாக, குரு சொல் ஆக்கமாகச் செய்து வந்து மௌனியான குருவுடன் மனோரீதியாகப் (Telepathy) பேசும் தெய்வீக ஆற்றலைப் பெற்ற ஸ்ரீகதலிபாத அடியாரின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்நாளிலிருந்து கோ பூஜையின் மகிமையைப் புரிந்து கொண்டு நல்வாழ்க்கை வாழ்வோமாக!
குருசொல் ஆக்கம்
....... இதோ ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தர் தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றார்...... மஹா சிவராத்திரி தினம் அது... பெரும் பஞ்சத்தால் தமிழகமே அப்போது வறுமைக் கோலம் பூண்டு இருந்தது. ‘மஹான்களின் திருப்பார்வை பட்டும் பஞ்சம் ஏற்படுமா?’ என்ற கேள்வி ஏழலாம். எதுவும் காரண, காரியமின்றி நிகழ்வதில்லை! நாட்டில் சூது, வாது, பொய், புரட்டு, லஞ்சம் அதர்மம், வன்முறை பெருகுகையில் தான் அங்கு பஞ்சம், வறட்சி, வெள்ளம், பூகம்பம் உண்டாகின்றன. எனவே இது தீய சக்திகளைப் பெருக்கின்றவர்களுடைய பிழையே தவிர வேறு எவரையும் நிந்திக்கலாகாது! எனவே இத்தகைய சமயங்களில் இறைவனே தம் உத்தம அடியார்களை மகான்களாக, யோகிகளாக, அனுப்புகின்றான். எனவே அவர்களைச் சரணடைந்து, பஞ்சம், பட்டினி, வறுமைக்கான காரணங்களையறிந்து  “அனைத்தும் இறைவன் செயலே!” எனத் தெளிந்து அவர்களுடைய அறவழியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியுலகிற்குப் பஞ்சம், பட்டினி, வெள்ளத்தால் பல சேதங்கள்/ பலருக்குத் துன்பங்கள் ஏற்படுவன போலத் தோன்றிடினும் அவரவர் செய்த முன் ஜென்ம, நடப்பு ஜன்ம வினைகளுக்கேற்பவே பஞ்சம், வெள்ளம் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நன்கு புரிந்து கொண்டால் மனதில் வீணான குழப்பங்கள் உண்டாகாது. கொடிய பஞ்சம், வறுமை, வெள்ளத்தில் அனைத்து ஜீவன்களுமா அழிந்து விட்டன? இப்பெரிய விபத்துக்களையும் தாண்டிப் புத்துயிர் பெற்றுத் தழைக்கின்ற குடும்பங்கள் எத்தனை, எத்தனை? மேற்கண்ட சமுதாயத் துன்பங்கள் தீர, துயர்துடைப்பிற்காகத் தான தர்மங்கள், தியாகங்கள் செய்கின்றோர் எத்தனை, எத்தனை?
ஸ்ரீபாத புண்ணிய தீர்த்தரும் மூன்று நால் பட்டினி... மௌன ஞானியான அவரைத் தரிசனம் செய்ய வந்தோர் அவருக்கென அளித்திருந்த பழங்களைச் சிஷ்யர்கள், பட்டினியில் வாடிய ஏழைகளுக்கும், உடல்  காய்ந்திருந்த பசுக்களுக்கும் அளித்து விட்டனர். ..... அப்போது மிகவும் வயதான அன்பர் ஒருவர் வந்து....... “ஸ்வாமி! எனக்கு உடல் தள்ளாடுகிறது.. இன்றோ மஹா சிவராத்திரி! ஷண்முகனுக்குரிய செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து விட்டது. எனவே இந்த மூன்று செவ்வாழைப் பழங்களையும் சிவபூஜையில் சேர்த்து விடுங்கள்” என்று சொன்னார். அந்த அன்பர் அளித்திருந்த மூன்று செவ்வாழைப் பழங்களை மட்டும் தம் குருவிற்கென எடுத்து வைத்திருந்த கதலிபாத அடியார், சற்குருவினருகிலேயே இரண்டு, மூன்று நாட்களாகக் காத்துக் கிடந்தார். குரு எப்போது கண் விழிப்பாரோ அப்போது அவருக்கு அளித்திடுவோம் என்று (குரு) பக்தியினால் சிஷ்யன் கண் துஞ்சவில்லை!
குருவோ கண் திறக்கவில்லை... ...... அன்று மஹாசிவராத்ரி அல்லவா? ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தரின் 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோபூஜை சேவையையும், அதன் மஹிமையைப் பரப்பிய இறைப்பணிக்கும் அருள் புரிய விழைந்தாரோ சிவபெருமான்! இறைவனே ஒரு பைராகி வேடத்தில் அங்கு தோன்றி எதிரில் நின்று, “பவதி பிக்ஷாந் தேஹி” என்று குரல் கொடுத்திட,, ஸ்ரீபுண்ணியபாத தீர்த்தர் கண் மலர்ந்தார். சிஷ்யர்கள் திகைத்து நின்றனர். எவ்வித உணவுப் பண்டமும் அவர்களிடம் இல்லை. குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லை. கதலி பாத அடியார் தம் மடியைப் பிடித்தவாறே அருகில் வந்து நிற்க, ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தர், கதலிபாத அடியாரின் மடியைச் சுட்டிக் காட்டினார்.,, கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கிட, “குருவோ மூன்று நாட்களாகப் பட்டினி! மாசி முதல் நாளன்றே முடிய வேண்டியது (குருவின் மௌனம்) இன்னமும் முடியவில்லையே! பட்டினியின் காரணமாக உடல் தளர்ந்து பேச இயலாமல் பலவீனமாகி விட்டாரோ! செவ்வாழைப் பழங்களைக் கொடுத்த அன்பரோ “சிவபூஜைக்கு” என்று சொல்லியமையால் “சரி” என்று பெற்றுக் கொண்டு விட்டோமே!” நமக்கு இவர்தான் சற்குரு! இவரே சர்வேஸ்வரன் ! அனைத்தும் இவர்தாம் என்றல்லவோ நம்பிக்கை பூண்டுள்ளோம்! ஆனால் பழங்களைக் கொடுத்தவர்க்கு இதே விதமான நம்பிக்கை நம் குருநாதரிடம் உண்டென்று எவ்வாறு சொல்ல முடியும்! நாமோ குருநாதருக்குப் பழங்களை அளிக்கலாமென்று இருந்தோமே! இப்போது “பவதி பிக்ஷாந்தேஹி” என்று அதிதி ஒருவர் வந்து நிற்கின்றாரே” – என்ற எண்ணங்கள் வந்து அலைமோதிடினும் கதலிபாத அடியார் “குரு சொல்” ஆக்கத்திற்காக எதிர் நோக்கி நின்றிட,
குருநாதராம் ஸ்ரீபுண்ணிய பாதர் மௌனம் தெளிந்து, “சிவ ப்ரசாதம் கொடு” என்று மடியையும் வாசலில் நின்ற பைராகியையும் சுட்டிக் காட்டிட, கதலிபாதர் தம் மடியிலிருந்த மூன்று பழங்களையும் குருநாதரிடம் தந்திட, வானத்தில் மேகங்கள் திரண்டன, குருநாதரோ மூன்று பழங்களைப் பைராகிக்கு அளித்து வணங்கிட,, வானம் கறுத்தது, பைராகி ஒரு பழத்தை உண்டு திரும்பிட, அவர் பின்னால் ஒரு பசுவும் கன்றும் நின்று கொண்டிருந்தன, பைராகி அவ்விரண்டு பழங்களையும் அவற்றிற்கு அளித்தார். மழை பெய்யத் துவங்கியது. வருடக் கணக்காய் சரியான மழைப்பொழிவு இல்லாது பஞ்சத்தால் வாடிய பூமிக்கு வருண பகவான் பெருங்கருணை புரிந்து அரிய மழைப் பொழிவை அளித்தார்! மழையினூடே பைராகியும் , பசுவும் , கன்றும் மறைந்திட ஆங்கே... ஒரு ஜோதி தோன்றியது...
“சம்போ சங்கரா” என்று ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தரும், கதலிபாத அடியார் உள்ளிட்ட அனைத்துச் சீடர்களும் அப்பெருஞ்சோதியை, தனிப்பெருங்கருணையை  அருட்பெரும் சோதியாய்த் தரிசித்து வணங்கினர்
(உண்மையில் இதற்குப் பிறகே அச்சிடருக்குக் கதலிபாத அடியார் என்ற திருநாமம் கிட்டியது. இக்கதை விளக்கத்திற்காக நாம் இப்பெயரை முன்னரேயே தந்துவிட்டோம்...) எனவே இவ்வருட சிவராத்ரியைச் செவ்வாழைப்பழ நைவேத்யத்தை விரும்பி ஏற்கின்ற பகவானாகிய முருகப்பெருமானே, சிவனை பூஜித்தத் தலங்களிலும் (திருச்செந்தூர், விருத்தாசலம் etc..)  மகனே தந்தைக்குக் குருவாய் நின்ற திருத்தலத்திலும் (சுவாமிமலை) நிகழ்த்துதல் சிறப்புடையதாகும். திருஅண்ணாமலையில் கிரிவலத்தோடு  சிவராத்ரியைக் கொண்டாடும் மகத்துவத்தையும் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் பன்முறை விளக்கியுள்ளோம். ஸ்ரீபுண்ணிய பாத தீர்த்தர் – ஸ்ரீகதலிபாத அடியார் போன்று கூரத்தாழ்வாரும் தம் குருவாம் ஸ்ரீ ராமானுஜருக்குக் “குரு சொல் ஆக்கம்” கொண்டு அளப்பரிய குருசேவையையே இறைப்பணியாய்ப் புரிந்து வந்தார். இதனை விளக்கும் பாடலே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ளது. இதனைப் பன்முறை ஓதி மஹாசிவராத்ரி அன்று குருவின் மேன்மையை உய்த்து உணர வேண்டுகின்றோம்.

அமுத தாரைகள்

அமுத தாரைகள்
1. ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் சுருட்டப்பள்ளி – பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான், கூவத்தூர் ஆதிகேசவப் பெருமாள், திருவெறும்பூர் எறும்பீஸ்வரப் புற்றுலிங்கம், கதலி நரசிங்கப் பெருமாள், மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் (இசைக் கலைஞர்கள், பாடகர்களுக்கு உரிய சிவத்தலம்) – போன்ற அரிய இறைத்தலங்களைப் பற்றி சித்புருஷர்களின் திவ்யமான விளக்கங்களை அளித்து வருகின்றோம். ஆனால் இத்தலங்கள் எங்கிருக்கின்றன என்று கேட்டு நிறைய கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொருவரும் சிறிதேனும் முயற்சி எடுத்துப் புத்தகங்களைப் படித்தோ, பல இடங்களில் விசாரித்தோ இத்தலங்களைக் கண்டறிய வேண்டும். இவ்வாறு தெய்வ விஷயங்களில் நீங்கள் கழிக்கின்ற நேரமே நீங்கள் உண்மையாக வாழ்ந்த நேரமாகும். இவற்றைப் பற்றிப் பல இடங்களில் பலரிடம் விசாசிக்கையில், பலருக்கும் ஆத்ம விசாரத்திற்கான, தெய்வீக எண்ணங்களுக்கான நல்வாய்ப்பினை அளிப்பதால் மிகப் பெரிய இறைப்பணியாக ஆகின்றது. எனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளிக்கப்படுகின்ற தெய்வ மூர்த்தி, திருத்தலங்கள் பற்றி ஒவ்வொருவரும் மிகுந்த முயற்சி எடுத்து பிராயாசைப்பட்டு முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.
2. பல குடும்பங்களில் ஒரு குண்டு மணித் தங்க நகை வாங்க இயலாத படி வறுமை தாண்டவமாடுகின்றது. இருக்கின்ற ஓரிரண்டும் அடகுக் கடையில் நெடுங்காலமாய்த் தங்கியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நியாயமான வழிமுறையில் ஸ்வர்ண (தங்க) பாக்யத்தைப் பெற சதுர்த்தசி திதி தோறும் தம்பதி சமேதராய் இரட்டைப் பிள்ளையாரைத் தரிசித்து ஓட்டுக் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து ஏழைகளுக்குத் தானமளித்து வர வேண்டும்.
3. குழந்தைகளின் கல்வியறிவு விருத்தியடைய, அவர்கள் நன்கு படித்திட, பஞ்சமி திதி தோறும் இரட்டைப் பிள்ளையாருக்குப் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும். பஞ்சாமிர்தம் என்பது மலை வாழை, தேன், பேரீச்சம் பழம், வெல்லம், நெய், இவற்றோடு  அவரவர் வசதிக்கு ஏற்ப முந்திரி, திராக்ஷை, பாதாம்பருப்பு, சாரைப் பருப்பு, குங்குமப்பூ, ஏலக்காய் போன்றவற்றையும் சேர்த்திடலாம். காரணம் மேற்கண்ட பருப்பு வகைகளுக்கு வேத மந்திரங்களையும், தெய்வ சக்தியையும் கிரஹிக்கும் ஆற்றல் உண்டு.  தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள வேத மந்திரங்களை அறியாத ஏழைகளுக்குப் பஞ்சாமிர்தம் மூலமாக அபிஷேக ஆராதனைக்குரிய மந்திரங்கள், வேதத் துதிகள், விக்ரஹத்தின் தெய்வீக சக்திகளைக் கூட்டி அளித்திடில் இத்தான தர்ம பலனாய் நம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி மிகுந்து கல்வி அறிவு பெருகும்.
4. பெண்களுக்கு :- சதுர்த்தி திதியில் இரட்டைப் பிள்ளையாருக்குக் கார அரிசியிலான கொழுக்கட்டையை நிவேதனம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்திடில் கணவர்க்கு அலுவலகத்தில் உண்டாகும் பிரச்னைகள் தீரும்.
5. ரோகிணி நக்ஷத்திரத்தில் இரட்டைப் பிள்ளையாருக்குச் சந்தனக் காப்பு இட்டு வந்திடில் தீராக் கடன்கள் நியாயமான வழியில் தீரும். சந்தனத்தைக் கடைகளில் வாங்கிக் குழைக்கக் கூடாது. தம் கைகளாலேயே அரைத்துச் சார்த்த வேண்டும். சந்தனத்தை அரைக்க்கும் போது ‘ஆங்கீரஸ, அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப ரிஷிகளே போற்றி, சற்குருவே சரணம் என்று துதித்தவாறே அரைத்திடல் வேண்டும்.
6. சில குடும்பங்களில் கணவன் மனைவியரிடையே சுமுகமான உறவு இருந்தும் உண்மையான பரஸ்பர அன்பு ஏற்படுவதில்லை. தந்தை – மகன், தாய் – மகள், அண்ணன் – தங்கை என்றவாறாக எத்தனையோ உறவுகள் இருந்தும் சொத்துப் பிரித்தல், திருமணம், முதுமை, தனிக் குடும்பம் காரணமாக அவை அந்யோன்யமாக நீடித்திருப்பதில்லை. ஆனால் கணவன் மனைவி பிணைப்பு ஆயுட்காலம் முழுவதும் தொடரும். எனவே தாம்பத்ய வாழ்க்கையின் தத்துவமே இறையருளால் அன்பைப் பரிபூர்ணமாக உய்த்துணர்வதாகும். இத்தகைய உத்தம நிலையைப் பெற திருவோண நக்ஷத்திரத்தில் இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழச் சாறு அபிஷேகம் அல்லது மாம்பழம் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்துவர வேண்டும்.
7. திருவாதிரையில் இரட்டைப் பிள்ளையாருக்கு வில்வத்தால் தொடுக்கப்பட்ட வில்வ அங்கியைச் சார்த்துவதால் (வில்வ இலைகளால் கட்டப்பட்ட ஆடையை) ரகசியமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
8. பல குடும்பங்களில் மனைவியை நன்கு புரிந்து கொள்ளாமையால் ஏற்படும் சச்சரவுகள் அதிகமாக இருக்கின்றன. மனைவியோ தன்னை யாரும் உண்மையாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்கின்றாள். இத்தகைய சூழ்நிலையில் விசாக நக்ஷத்திரத்தன்று இரட்டைப் பிள்ளையாருக்கு மல்லிகைப் பூவாலான மேல் அங்கியை (பூப்பாவாடை, பூவால் செய்யப்பட்ட அங்கி) சார்த்தி வழிபட்டு வந்திடில் கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு ஏற்படும். தம்பதிகளாக இந்தப் பூஜையைச் செய்வது மிகவும் விசேஷமானதாகும். கணவன் செய்திடில் மனைவியை நன்கு புரிந்து கொள்கின்ற பக்குவமும், மனைவி செய்திடில் அவருடைய உள்ளுணர்வுகளை அறியும் பக்குவமும் எளிதில் கிட்டும். குடும்பத்தில் சாந்தம் நிலவும்.

9. பொதுவாகக் கடலைப் பருப்பிற்குப் பித்தத்தை அளிக்கும் குணம் உண்டு. ஆனால் கடலைமாவு கரும்புச் சாற்றுடன் சேரும் போது அதன் பித்த குணமானது சிலேத்தும குணத்தைப் பெற்று மந்திரங்களைக் கிரகிக்கும் சக்தியைப் பெறுகின்றது. இதனால் தான் திருமணங்களில் சீர்வரிசையில் பருப்புத் தேங்காய், லாட்டூகம் எனப்படும் குஞ்சாலாடு (லட்டு) போன்றவை இடம் பெற்று திருமணத்திற்குரிய மந்திரங்களின், ஹோமத்தின் சக்தியைப் பலருக்கும் சென்றடையும்படி செய்கின்றன. இத்தகைய பிரசாதங்களுக்கு “மாங்கல்ய ப்ராப்தி பிரசாதம்” என்று பெயர். இதைப் பெற்று உண்பவர் குடும்பங்களில் உள்ள திருமணத் தடங்கல்கள் நீங்கி திருமணம் கைகூடுவதுண்டு. சிந்து விநாயகருக்குப் பூந்திக் காப்பிட்டு வந்திடில் இனிய செய்திகள் வந்து நம்மை ஆனந்தப்படுத்தும். உதாரணமாக பெண் பார்த்தல், பதவி உயர்வுக்கான தேர்வுகள், சொத்து விஷயங்கள், கோர்ட் வழக்குகள் போன்றவற்றில் இனிய செய்தி வந்து மகிழ்ச்சியூட்டும்.

திருமங்கலம் திருத்தலம்

10. மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீசுந்தர விநாயகருக்குப் பால்கோவாவினால் காப்பிட்டு வணங்கி, பால்கோவாவைத் தானம் செய்திட இடமாற்றங்கள் நன்முறையில் அமையும்.
11. நர்த்தன விநாயகருக்குத் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோதுமை கூடிய இனிப்புப் பண்டத்தால் (கோதுமை அல்வா etc…) காப்பிட்டு வந்திடில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டுப் பதவியை இழந்தோர், வேலையிலிருந்து நீக்கப்பட்டோர் மீண்டும் முறையான வழியில் பதவியைப் பெறுவர்.
12. உணர்ச்சிவயப்படுகையில் பல தவறுகளைப் பலர் செய்துவண்டு! அதிகாரம், ஆணவம், பலம், செல்வம் காரணமாகப் பலர் உணர்ச்சி வயப்பட்டு, காமம், குரோதம், கோபத்திற்கு ஆளாகிப் பெரும் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமலிருக்கப் பவழத்தினாலான பிள்ளையாருக்குப் ‘பவழ விநாயகர்’ என்ற நாமம் பூண்ட கணபதிக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து அபிஷேகப் பாலை அருந்திச் சென்றிடில் செல்லும் காரியங்களில் உணர்ச்சி வசப்படாமலிருப்பர்.
13. ஹம்ஸ வாகன ரூபத்தில் பெருமாளை தரிசித்தால் திருமண் இட்டு பொய் சொன்ன பாவம் போகும், ஆனால் மீண்டும் பொய் சொல்லக் கூடாது. கருடன் ஹம்ஸ ரூபியாக அருள் பொழியும் இடம் ஆழ்வார் திருநகரி ஆகும்.
14. இரட்டைப் பிள்ளையார் :- பல கோயில்களில் இரட்டைப் பிள்ளையார்கள் இணைந்து அருள்பாலிப்பதைக் காணலாம். அன்னையான ஸ்ரீபார்வதி தேவி தன் மகன் ஸ்ரீவிநாயகருக்கு  மணமுடிக்க விரும்பி கடும் தவம் இருந்தனள். திருச்சி அருகே திருமங்கலத்தில் ஸ்ரீசாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீலோகநாயகி எனப்படும் ஸ்ரீமங்களாம்பிகை அனைத்து ஜீவன்கள் மட்டுமன்றி தேவதைகளுக்கும் தேவாதி தேவர்களுக்கும் திருமண பாக்யம் அளிக்கும் சக்தி உடையவள் ஆதலின் அம்பிகை அங்கு சென்று தவம் இருந்தனள். இப்பெரும் தவத்தின் பயனாய் சர்வேஸ்வரன் ஸ்ரீவிநாயகரைத் திருமணக் கோலத்தில் அதாவது மாப்பிள்ளைக் கோலத்தில் எழுந்தருளுமாறு பணித்தார். தம் மகனின் மாப்பிள்ளை அலங்காரத்தைக் கண்டு மனமகிழ்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இம்மாப்பிள்ளைக் கோலத்திலேயே அங்கு அர்ச்சாவதார மூர்த்தியாய் எழுந்தருளி அருள்பாலிக்குமாறு தன் மகனையே வேண்டினள். அவர்தான் மாப்பிள்ளை விநாயகர் – காண மிக அரிய மூர்த்தி! மகனைத் திருமணக் கோலத்தில் காணவேண்டும் என்று வேண்டி அம்பிகைத் தவம் இருந்தமையால் அவள் விருப்பத்திற்கேற்ப அக்கோலத்தையே மகனுக்குத் தந்து சிவபெருமான் அம்பிகையின் தவத்தை நிறைவு செய்தார். இதன் பிறகுதான் ஸ்ரீவல்லபை தேவியையும் சித்தி புத்தி தேவியரையும் ஸ்ரீவிநாயகர் மணம் புரிந்தார்.

ஸ்ரீவல்லப கணபதி திருப்புனவாசல்

முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகரை மணந்த ஸ்ரீவல்லபை தேவி சர்வ லோகங்களிலும் எவ்வித பூஜைக்கும் ஓம்கார நாதராகிய ஸ்ரீவினாயகரையே அனைவரும் முதலில் துதித்து வணங்குவதால் முழு முதற்கடவுளோடு சேர்ந்து தரிசனம் தருவதற்கான தகுதியைத் தான் பெறவில்லை என்று எண்ணியவளாய் யாங்கணும் ஸ்ரீகணபதியின் நிழலிலேயே தன்னைப் பதித்துக் கொண்டனள். ஸ்ரீவல்லபை தேவியின் அடக்கத்தை எண்ணி வியந்த தேவாதி தேவர்களும் ஸ்ரீவிநாயகரைத் தம்பதி சகிதமாகத் தரிசனம் தருமாறு வேண்டினர். ஸ்ரீவல்லபை தேவி அடக்கமாக ஸ்ரீவிநாயகரின் நிழலில் தெய்வீகப் பிரதிபிம்பமாய் ஜக்யமாகிவிட்டதால் ஸ்ரீவிநாயகராலேயே ஸ்ரீவல்லபயைத் தன்னிடமிருந்து தனித்துப் பிரிக்க இயலவில்லை, எனவே தன்னில் சாயாரூபத்தில் ஐக்யமாகிய ஸ்ரீவல்லபையை உலகிற்குக் காட்டும் வண்ணம் தன்னிடம் இருந்தே இன்னொரு மூர்த்தியை உருவாக்கினார். அதுவே இரட்டைப் பிள்ளையாராகும். எனவே இரட்டைப் பிள்ளையார் தரிசனம் என்பது ஸ்ரீகணபதியைத் தம்பதி சகிதமாக தரிசிக்கின்ற பலன்களைத் தருவதாகும். இதன் பின்னர் சித்தி புத்தி தேவியரையும் ஸ்ரீமஹாகணபதி மணந்திட்ட பின்னர் பரசுராமர் தம் தபோபலத்தால் சில விசேஷமான கணபதி ஹோமங்களின் மூலமாக ஸ்ரீவல்லப , ஸ்ரீசித்தி புத்தி தேவியர்களோடு கூடிய ஸ்ரீவிநாயக மூர்த்தங்களைப் பூலோகத்தில் பிரதிஷ்டை செய்தார். இதற்குரிய சக்தியை அவர் பெற்ற இடமே பரசுராமீஸ்வரம் எனப்படும் திருமங்கல சிவாலயமாகும். எனவே இரட்டைப் பிள்ளையார் தரிசனமானது, தம்பதிகளிடையே மனவடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, உண்மையான பரஸ்பர அன்பு முதலியவற்றைத் தந்து குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கு அருள் பாலிக்கின்றது சொல்லவும் பெரிதே அவர்தம் மஹிமை! எனினும் இரட்டைப் பிள்ளையார் தரிசன பலன்களை இவ்விதழில் ஓரளவு அளித்துள்ளோம்.

கோல சக்தி

கோலாகல (கோல) சக்தி கொள்வீர்! – சென்ற இதழ் தொடர்ச்சி
இவ்வாறாக... கோலத்தில் பதிந்திருக்கும் அருள் சக்தியை எவ்வாறு பெறுவது? சற்று உன்னித்துப் பார்த்தீர்களானால் கோல நெளிவு சுளிவுகள், கோடுகள் அனைத்தும் நல் கால்விரல் ரேகைகளை ஒத்திருக்கும். கோலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பெண்கள் கும்மியடித்துக் கோலாட்டம் ஆடிப்பாடிட....
1. கால் ரேகைகள் கோலத்தின் அருள் சக்தியை ஈர்த்து தேகத்திற்குச் செலுத்துகின்றன. எனவேதான் கோயிலில் அடிப்பிரதட்சிணம், திருஅண்ணாமலை, சபரிமலை, திருப்பதி போன்ற திருத்தலங்களில் செருப்பின்றி கிரிவலம், பாத யாத்திரை போன்றவை வலியுறுத்தப்படுகின்றன.
2. பறங்கிப் பழத்தின் மேல் உள்ள ஆர ரேகைகள், பறங்கிப் பூவில் உள்ள ரேகைகளுக்கும், நம் கால் ரேகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சில பில்லி சூன்யக் கழிப்புகளுக்குக் “கொடி மிதித்தல்” முறையில் சில பரிஹாரங்கள் உள்ளன. பறங்கிக் கொடி, பாகற்கொடி மிதித்தல் போன்ற ஆன்மீக வைத்ய ரகசியங்களைத் தக்க குரு மூலம் அறியவும். பறங்கிப்பூ ரேகைகளுக்குத் தெய்வ சக்தியைக் காற்றில்/ஆகாயத்தில் பரப்பும் விசேஷத் தன்மை உண்டு. எனவேதான் “OZONE” எனப்படும் “நல்விண் அடுக்கு” பூமியை ஒட்டி வரும் மார்கழி மாதத்தில் ஓஸோனின் நற்கதிர்களையும், கோலத்தின் யந்திர, மந்திர சக்திகளையும், காற்றில்/ ஆகாயத்தில் பரப்பும் “ஆன்மீகக் கருவியாக” கோலத்தின் நடுவே பறங்கிப் பூ வைக்கப்படுகின்றது.
3 நம்முடைய கால் ரேகைகள் மிகவும் அழுத்தம் வாய்ந்தவை! பசுஞ்சாணம், யானைச் சாணம் இரண்டுமே நம் கை, கால்களின் ரேகைகளுக்குச் சக்தியூட்ட வல்லவை! எனவேதான் “யானைச் சாணம் மிதித்தல்” ஒரு பெரும் பேறென நம் பெரியவர்கள் விதித்துள்ளனர்.
பசுஞ்சாணத்தின் சக்தி
ஒரு சாதாரண மனிதன் சில மூலிகைகளைப் பறிக்க வேண்டுமென்றால் அம்மூலிகைக்குரிய தேவதைகளை வணங்கி நட்சத்திரம், ஹோரை, கரணம் பார்த்து “கட்டு மந்திரம், விடுப்பு மந்திரம், பறிப்பு மந்திரம், எடுப்பு மந்திரம்” போன்றவற்றை ஓதி, துதித்தித்தான் மூலிகைகளைப் பறிக்க வேண்டும். ஆனால் இறைத்திருவிளையாடலாக யானை, பசுஞ்சாணமானது பல அரிய மூலிகை, இலை, தழைகளின் “கூட்டுக் குழம்பாகவே” கிட்டுகின்றதே. என்னே பாக்யம்! கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பறங்கிப்பூ எதற்காக, கோலத்தின் தெய்வீக சக்தியைக் காண்போர்க்கெல்லாம் அளிப்பதற்காக... இதுவல்லவோ மக்கள் தொண்டு மஹேஸன் தொண்டு! இது மட்டுமா! பசுஞ்சாண விரட்டியில் விரல்களை, ரேகைகளைப் பதித்துத் தட்டுவார்கள். இதிலும் வலவோட்டு விரட்டி, இடவோட்டு விரட்டி என்று பல வகைகள் உண்டு. குறித்த சில ஹோமங்களுக்கு இடவோட்டு விரட்டி (சுக்கிர விரல் பகுதி இடப்புறம் பசுஞ்சாணத்தில் பதிந்திருக்கும்) அபரிமிதமான பலன்களைத் தரும். இதுமட்டுமா, முதல் நாள் பசுஞ்சாணியின் மேல் அமர்ந்த பறங்கிப்பூவை, அச்சாணத்துடன் சேர்த்து விரட்டியாக மாற்றுங்கள். இத்தகைய பசுஞ்சாண விரட்டியை ஹோமத்தில் வைத்தால் கிட்டும் பலன்களை நாள் முழுதும் விவரித்திடலாம், தக்க சற்குருவை நாடித் தெளிந்திடில்!

ஆழ்வார் திருநகரி

கோல்(ல) சக்தி அறிவீர் :- கும்மியடிப்பது பற்றிய ஆன்மீக விளக்கங்கள் இடையில் எத்தனையோ தெளிவுகளைப் பெற்றுத் தந்து நம் தெய்வீக சிந்தனையைத் தூண்டியுள்ளது அல்லவா! கும்மியடிப்பதில் பல யோகாசனங்கள், தியானப் பயிற்சிகள் நிறைந்துள்ளன. கோலத்தைப் பார்த்தவாறே சுற்றிச் சுற்றிப் பாடி வருகையில் ஆழ்நிலை தியான உணர்வு கூடுகின்றது. தியானம் என்றால் ஆற, அமர்ந்து பயில்வது தானே! கும்மியாட்டம் எவ்வாறு தியானத்தின் பாற்படும்! ஆழ்நிலை தியானத்தில் நம்முடைய ஒன்பது விதமான (ஒவ்வொருவருக்கும் ஒன்பது வித உருவங்கள் உண்டு). மனோநிலைகளைச் சீர்படுத்துகிறோம். கண்கள் கோலத்தில் லயித்திருத்தல் – இது ஒரு மனோநிலை, கைகளைத் தட்டி, காலைகளை மாற்றி மாற்றி வைத்தல்  - இது ஒரு மனோநிலை, வாயினால் பாடுதல் – இது ஒரு மனோநிலை, இம்மூன்றுமே ஒன்றி வர, சமச்சீராக அமைந்து கும்மியாட்டம் ஆடுவது நிச்சயமாக மூன்று நிலைகள் சமன்படுகின்ற தியான நிலைதானே! பெண்கள் வேதமந்திரங்கள் அறியாத நிலையில், ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம் போன்ற வழிபாடுகளும் இல்லாத நிலையில்,
1. கோலத்தில் படியும் வேத பீஜாட்சர மந்திரங்களைப் பார்த்தவாறே கும்மியடித்து வருகையில் ஆண்கள் பெறுகின்ற வேதமந்திர உச்சாடன சக்தியைப் பெண்களும் பெறுகின்றார்கள்.
2. ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யத்தில் கால்களை உயரத் தூக்கி, நுனிக்கால்களில் நின்று, பூமியின் புவியீர்ப்பு ஆகர்ஷண சக்திக்கு மாறாக, கைகளை நெஞ்சுக்கு எதிரே உயர்த்தி, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உச்சரித்தவாறே நீரைப் பூமியில் விடுவது ஸ்ரீகாயத்ரீ அர்க்யமாகும். இவ்வாய்ப்பினைப் பெண்கள் பெறவில்லையாதலின், கும்மி/கோலாட்டத்தில் பெண்கள் கைகளை உயர்த்தி, குதிகாலில்/கால் விரல் நுனிகளில் சில விநாடிகள் நின்று ஆடுகையில், ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யத்திற்கான சக்தி பெண்களுக்குக் கிட்டுகிறது.
3. கோலாட்டத்தில் சில குறித்த மரவகைகளே விதிக்கப்பட்டுள்ளன. பலா, அத்தி போன்ற கட்டைகள் மிகவும் விசேஷமானவை. அதிலும் அத்தி மரம் மிக விரைவில் மந்திர சக்தியை ஈர்க்கும் அபூர்வ சக்தி பெற்றது. இதனால் தான் காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் திருக்குள நீரடியில் அத்திமரத்தாலான ஸ்ரீஅத்திகிரி வரதர் இன்றும் இருந்து அருள்பாலிக்கின்றார். ஹோமத்திற்கான நெய் ஆஹுதி – கரண்டி கூட அத்தி மரத்தில்தான் செதுக்கப்படுகிறது. எனவே அத்திமரத்தாலான கோலக்கட்டைகளைத் தட்டி ஆடும் கோலாட்டத்தில், அத்திமரக்கட்டை சப்தத்தினால் கோலத்தில் உள்ள பீஜாட்சர சக்திகள் ஆகாயத்தில் பரவுகின்றன.
கை, கால்களுக்கு மருதாணியிடுவதன் தெய்வீக மகத்துவத்தை “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ்களில் வலியுறுத்தி வருகின்றோம். ஏற்கனவே கூறியபடி, தீய சக்திகள் நகங்கள் மூலமாகத் தேகத்திற்குள் புகுவதால் மருதாணியிட்ட நகங்கள் தாம் நமக்கு ரட்சையாய் விளங்குகின்றன. சாதாரணமாக கைவிரல்களால் விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுவதற்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. மருதாணியிட்ட கரங்களால் பூஜிப்பது, ஹோம ஆஹுதி அளிப்பது பூத்தொடுப்பது, விபூதி/குங்குமம் இடுவது , ஆசிர்வதிப்பது, குழந்தைகளுக்குத் தலைவாரி பூச்சூட்டுவது போன்றவற்றால் புனிதத் தன்மை கூடுகின்றது. அத்திமரக் கோல்கள், மருதாணியிட்ட கைகள், முப்புரி ஜடை – இவை கூடுகையில் கோலாட்டத்தின் தெய்வானுக்ரஹங்கள் எளிதில் உடலில் சேர்கின்றன. கோல் தந்திர சூத்திர நாடிகளில் மேலும் பல அற்புதமான விளக்கங்களைக் காணலாம். வலது கரத்தில் ஆலமரக்கோல், இடது கரத்தில் அத்திக் கோல் கொண்டு ஆடிடில் கன்னிப் பெண்களுக்கு மங்களகரமான திருமண வாழ்வு விரைவில் கூடும். பச்சரிசி மாவுக் கோலமிட்டு அதன் மேல் முழுவாழையிலையில் உணவு வைத்துப் பசுவிற்கு இட்டால் தாய்க்குச் சேவை செய்யாத குறை தீரும். இவ்வாறாகக் கோலத்தின் மஹிமை சொல்லவும் பெரிதே!

வஞ்சுள மகா துவாதசி

பெண்கள் தங்களுடைய மனதிற்குள் பலவிதமான ரகசியங்களைப் பூட்டிவைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பெற்றோர்களிடமும், கணவனிடமும், பிள்ளைகளிடமும், பெண் பிள்ளைகளிடமும் ஒரு சிலவற்றையே கூற இயலும், மாமனார், மாமியார் பற்றிய விஷயங்களையோ, கணவனுடைய குறைபாடுகளையோ எவரிடம் சொல்ல இயலும் இறைவனைத் தவிர? கனவு ரகசியங்கள், மனோ ரகசியங்களை வெளியிடாவிடில் அவை மனநிலைகளைப் பாதிப்பதோடு உடல்நிலையையும் கெடுத்திடும். ஆனால் ரகசியங்களை வெளியிட்டாலோ அது பலரையும் பாதிப்பதோடு குடும்பத்தில் சூறாவளியையும் உருவாக்கி விடும். இந்நிலையில் என் செய்வது? மகரிஷிகளும் சித்தர்களும் மனிதனுடைய ஒவ்வொரு வாழ்க்கைத் துன்பத்திற்கும் பரிகாரம் காணவேண்டிப் பல பிறவிகள் எடுத்து பல வகையான துன்பங்களை அனுபவித்துச் சுக துக்கங்களைத் தாமே, அனுபவித்து பரீட்சித்து அவற்றிற்கான, பிராயச்சித்தங்களை நல்குகின்றனர். மனித வாழ்க்கையின் துன்பங்களைத் தாமே ஏற்பதென்றால் எத்தகைய தியாகமது?
ஆனால் நாமோ “என்ன மஹான் இவர்? இவருக்கே இத்தனை பிரச்சினைகளா?” என்று அங்கலாய்க்கின்றோம். பொறுமை, அடக்கம், பணிவு ஆகிய முத்தான மூன்று சத்வ குணங்களை இயற்கையாகப் பெற்றிருக்கும் பெண்கள் வாழ்க்கை ரகசியங்களை வெளிச் சொல்ல இயலாது. பெண்கள் இப்படி பரிதாபகரமான நிலையில் வாழவேண்டிய சூழ்நிலையைக் கண்டு வருத்தமுற்ற வஞ்சுள மகரிஷி இப்பிரச்னைக்குப் பிராயச்சித்தம் காண ஸ்ரீஅம்பிகையை நோக்கி கடுந்தவமிருந்தார். இமயமலைச் சாரலில் மஞ்சள் கிழங்குச் செடிகளுக்கிடையே தவமிருந்த இவருக்கு மஞ்சள்மாதாவான ஸ்ரீவஞ்சுள தேவி தரிசனம் தந்து வஞ்சுள ரிஷியே “தாங்கள் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு பல பெண் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அவர்கள் மூலமாகத் தங்களுடைய தவப்பலன்களைப் பெறுவீர்களாக! மறுஜென்மத்தில் ஸ்ரீலட்சுமி தேவியையே குழந்தையாகப் பெறும் பாக்கியத்தை அடைவீர்களாக” என்று அருளியதோடு ஓர் அரிய துவாதாச மஞ்சள் கிழங்கு பூஜையைக் கொடுத்து யாவருக்கும் எடுத்துரைக்குமாறு வேண்டினாள்.
துவாதச மஞ்சள் கிழங்கு பூஜை
ஸ்ரீவஞ்சுள மாதா ஸ்ரீவஞ்சுள மஹரிஷிக்கு அளித்த பூஜை முறையின்படி கன்னிப் பெண்களும், இல்லறப் பெண்களும் வஞ்சுள மஹா துவாதசியன்று செய்ய வேண்டிய பூஜையாவது......
1. வஞ்சுள மஹா த்வாதசியன்று துவாதசி திதி துவங்கும் நேரத்தில் (18.2.1997 காலை 6.10 மணி முதல்) கீழ்க்கண்ட பூஜையைத் தொடங்க வேண்டும். நீராடி, பருத்தி ஆடையை கச்ச/மடிசார் அவரவர் குலதர்மத்திற்கேற்ப அணிந்திட வேண்டும். நெற்றி முன்வகிடு, நெற்றி, கழுத்து ஆகிய மூன்று இடங்களில் மஞ்சள், குங்குமம் அணிந்திட வேண்டும். உடல் முழுதும் பாதம் வரை மஞ்சள் பூசி இன்று நீராடுவது புனிதத்தைத் தரும். தலை முடியை மூன்றாகப் பிரித்துப் பின்னி நார் அல்லது ரிப்பனிட்டு முடிதல் வேண்டும். (முடியை வெறுமனே பின்னுவதோ, வளையம் மாட்டுவதோ கூடாது) மஞ்சள் நிற வாசனைப் பூக்களைச் சூடுதல் வேண்டும். கை, கால் விரல்களில், பாதங்களில் மருதாணி இட்டிருப்பதும், கொலுசு, மெட்டிகளை அணிந்திருப்பதும் பூஜா பலன்களைப் பன்மடங்காக்கும். ஜாதி, சமய வேறுபாடின்றி 70 - 80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளிடம் 12 மஞ்சள் கிழங்குகளைப் பெற்று பூஜையில் வைத்திட வேண்டும். கோயில்களில் பல பெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்பூஜையைச் செய்திட பலன்கள் பன்மடங்காகும். நன்கு கழுவப்பெற்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கல்லில் அல்லது அம்மியில் 12 கிழங்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தேய்த்து அரைத்து 12 பெரிய மஞ்சள் உருண்டைகளைச் செய்தல் வேண்டும். ஒவ்வொருவரும் 12 கிழங்குகளைக் கொண்டு மஞ்சள் அரைத்தல் சிறப்புடையது. மஞ்சள் மாதாவான ஸ்ரீவஞ்சுள மாதாவைத் துதித்து, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்யலஹரி, திருவிளக்குப் பூஜைப் பாடல்கள், ஸ்ரீஅகஸ்தியரின் “ஸ்ரீமாதா ஜய ஓம் லலிதாம்பிகையே” போன்ற பாடல்களைத் துதித்தவாறே மஞ்சளை அரைக்க வேண்டும். இவ்வாறு அரைக்கப்பெற்ற 12 பெரிய மஞ்சள் உருண்டைகளை குலதெய்வத்திற்குக் காணிக்கையாக்கி கோவில்களில் உள்ள அம்பிகைக்கோ, வேப்ப மரத்திற்கோ சாற்றிட வேண்டும். ஸ்ரீஅம்பிகையையும், வேப்ப மரத்தையும் 7 முறை சுற்றி வந்து தங்களுடைய ரகசியத்தை மஞ்சள் மூலமாக ஏற்று அருள்புரியும்படி மஞ்சள் மாதாவை வேண்டிட வேண்டும். சப்த கன்னிகை எழுந்தருளியுள்ள இடங்களிலும், சென்னை செங்கற்பட்டு அருகில் உள்ள திருஇடைச்சுரம் சிவ ஆலயத்தின் மூலவருக்கு எதிரில் உள்ள அற்புத சக்தி வாய்ந்த வேப்ப மரத்திற்கும், மலை உச்சியில் எழுந்தருளி இருக்கும் திருச்சி ஐயர்மலை போன்ற திருத்தல வேப்பமரங்களுக்கும், பூமியின் மேல் கழுத்தளவு எழுந்தருளியிருக்கும். ஸ்ரீஅம்பிகையர்க்கும் (ஸ்ரீரேணுகாம்பா தேவி, ஸ்ரீகருமாரி அம்மன், ஸ்ரீபெரியபாளையத்தம்மன் etc…)  இப்பூஜையைச் செய்வது பரிபூர்ண பலனளிக்கும்.

பெண்களுடைய ரகசியங்கள் கழுத்தளவில் நிற்பதாலும், வேப்பமரம் பெண்களின் ரகசியத்தை ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதாலும் பெண்களின் ரகசியங்களைத் தம்முள் ஏற்று புனிதப்படுத்தும் மஞ்சள் மாதாவாகிய ஸ்ரீவஞ்சுள தேவி மஞ்சளில் உறைந்து அருள்பாலிப்பதாலும் இத்துவாதச மஞ்சள் பூஜை சிறப்புப் பெறுகிறது. இப்பூஜையை மேற்கண்ட முறையில் வஞ்சுள துவாதசியன்று செய்திடில், சந்தர்ப்ப சூழ்நிலை, குடும்பப் பொறுப்பு மற்றும் பல காரணங்களினால் பல விஷயங்களை வெளிச் சொல்ல இயலா பெண்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டுவதோடு, இதனால் ஏற்படும் அபகீர்த்திகளும், துன்பங்களும் விலகும்.
தீய கர்மவினைகளைக் குறைக்கும் சில எளிய வழிமுறைகள்
இறைவனானவன் நமக்கு 70/80 எனப்பல ஆண்டுகள் ஆயுளளித்து அதற்குள் நம் கர்மவினைகளைக் குறைத்து, பக்தியில் ஆழ்த்தி, பிறப்பற்ற நல்வழிக்கு ஆயுட்காலத் திட்டமளிக்கின்றான். ஆனால் பிறந்தபோது பிராரப்த கர்மாவாக (இப்பிறவியில் அனுபவிக்க வேண்டியவை) கொண்டு வந்ததைவிட, முறையற்ற வாழ்க்கையால் இறக்கும் போது கூட்டிச் செல்கின்ற வல்வினைகளையே மனிதன் பெருக்கிக் கொள்கின்றான். ஆயிரமாயிரம் இறையாலங்கள், நூற்றுக்கணக்கான புண்ணிய நதிகள் / தீர்த்தங்கள் , ஹோமம், அன்னதானம், பித்ரு தர்ப்பணம் போன்ற எத்தனை வழிபாட்டு முறைகளிருப்பினும் மனிதன் ஏதோ சுயநல கோரிக்கைகளுக்காகவும், தற்காலிக மன அமைதிக்காகவும் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றான்.
“சற்குருவைப் பெற்றால் அனைத்தையும் பெற்றாற்போல” என்ற சத்ய வாக்கினை இதழ்தோறும் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வலியுறுத்தி வருகின்றோம். சற்குருவைப் பெற்றுவிட்டால் போதும், அவரே நம்முடைய நடைமுறை வாழ்க்கையைக் கண்காணித்து இலைமறைகாயாக நம்முடன் வாழ்ந்து நம்மை உய்விக்கின்றார். ‘எந்த விதமான இன்ப, துன்பங்களும் நம் கர்மவினைகளால் நமக்கு வருபவையே தவிர பிறரால் எதுவும் ஏற்படுவதில்லை’‘ என்ற உத்தம நிலையை உய்த்துணர பல உன்னத நிலைகளைக் கடந்தாக வேண்டும். உத்தம இறைநிலையை அடைவதற்கு குறுக்கே நிற்பவை நமது தீவினைக் கர்மங்களே கலியுகத்தில் மனம் அடங்கிய பூஜையும், உள்ளத்தால் உய்ர்ந்த பக்தியும் பெறுவதற்குக் கோயில் உழவாரத் திருப்பணி, முறையான பித்ரு தர்ப்பணங்கள், ஏழை எளியோர்க்குத் தான தர்மங்கள் ஆகிய மூன்றும்  முக்கியமானவையாகும். மேலும் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் மேலும் தீவினைகளைச் சேர்க்காதிருக்க, சில எளிய ஆன்மீக வழிமுறைகளை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் அருளியுள்ளார்கள். தெய்வீக வாழ்க்கையில் திளைப்பதற்குப் பல எளிய வழிமுறைகள் உண்டு. அவற்றை முறையாகச் செய்து வந்தாலே போதும், நிதமும் நாம் கூடுதலாகக் கர்ம வினைகளை நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.
1. நெற்றியில் விபூதி/குங்குமம்/சந்தனம்/ திரிபுண்ட்ரம் போன்றவற்றை அவரவர் குல தர்மத்திற்கேற்றவாறு இட்ட பின்னரே வெளியே செல்ல வேண்டும்.
2. பூணூல், கறுப்புக் கயிறு, காசிக் கயிறு, (வசதியிருப்பின்) மோதிரம், கடுக்கன் – போன்றவற்றை அவரவர் குடும்ப வழக்கு, வசதிக்கேற்ப அணிந்து சென்றிடுக!  இவைதாம் எதிர் சக்திகள் (negative forces) தீவினைகளிடமிருந்து நம்மைக் காக்கும் இரட்சை, உபகரணங்கள்.
3. அந்தந்த தினத்திற்குரிய வண்ண ஆடைகளை அணிந்திடில் எடுத்த (நல்) காரியம் சுபமாக முடிவதோடு, ஏனைய தடங்கல்களும் தணியும்.
ஞாயிறு – ஆரஞ்சு ; திங்கள் – வெள்ளையில் சிவப்பு ; செவ்வாய் – சிகப்பு ; புதன் – பச்சை ; வியாழன் – மஞ்சள்/பொன்னிறம் ; வெள்ளி – வெள்ளையில் நீலம் ; சனி – நீலம்/கறுப்பு .
4. தோல் பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். தோல் பர்ஸ, பெல்ட், காலணி, ஷூ, கைப்பை ஆகியவற்றைத் தவிர்த்திடுக, எத்தனையோ விலங்குகளைக் கொன்று தயாரிக்கப்படும் தோல் பொருட்களில் அவ்விலங்குகளின் பரிதாபக் குரல்கள் பதிந்து இருக்கும். இதனால் நம் வாழ்வில் பரிதாப நிலை உண்டாகும்.
5. தினமும் கோவிலுக்குச் சென்று கோயிலுள் கீழே கிடக்கும் கற்பூரக் காகிதம், தேங்காய் நார் ஓடு, பழைய அகல் விளக்கு, பூ கட்டிய இலைகள், நார் போன்றவற்றைப் பெருக்கி எடுத்துச் சிறிய அளவில் கோயில் உழவாரத் திருப்பணியைக் கௌரவம், அந்தஸ்து பாராது செய்து வந்தால்... இது மிகச் சிறந்த வழிபாஉ ஆவதோடு நம் தீவினைகளைக் கழிக்க வல்லது.
6. தினமும் பசுவை வலம் வந்து ஓரிரு  வாழைப் பழங்களை அளிக்கும் உத்தமகாரியத்தை மேற்கொண்டிடுக.
7. பசு, காக்கை, அணில், கருடன், துளசி, வில்வம் போன்றவற்றிற்கு நம்மைவிட பல தெய்வீக சக்திகள் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்காவது உணவிட்ட பின்னரே/நீர் ஊற்றிய பின்னரே நாம் உணவேற்பது என்ற வைராக்கியத்தை வாழ்நாள் முழுவதும் கொண்டிடுக.
8. வெளிச் செல்லுமுன் துளசி அல்லது வேப்பமரமும் வில்வமரமும் இணைந்த தரிசனம், ஏழு அல்லது ஒன்பது கலசங்கள் உள்ள கோபுர தரிசனம், பசு, கன்றினை வலம் வருதல் போன்றவற்றைச் செய்து சென்றிடில் எடுத்த நற்காரியம் தடங்கல்களின்றி நிறைவேறும்.
9. இல்லத்தில் பூஜைமணி, உடுக்கை, மிருதங்கம், வீணை, வயலின், சங்கு போன்றவற்றின் புனித ஒலிகள் நிறையுமாறு செய்திடுக. வாத்திய ஒலிகளுக்கும், பூஜை மணிக்கும் எதிர்வினைப் படிவுகளைக் (Deposit of Negatives forces) களையும் சக்தி உண்டு.
10. வானத்தில் Ozone எனப்படும் நற்கதிர்கள் (Positive Rays) நிலவுவதைப் போல் பூஜை மணியின் புனித சப்தமானது வீட்டிற்குள்ளேயே ஓஸோன் நற்கதிர்ப் படிவுகளை ஏற்படுத்துகிறது. இது பலரும் அறிந்திராத ஆன்மீக ரகசியமாகும்.
11. வெளி இடங்களில் நீர் அருந்துவதைத் தவிர்த்தால் பல வகையான தீவினைகளைச் சேர்ப்பது தவிர்க்கப்படும். ஏனெனில் நீர் மூலமாகத் தான் தீவினை சக்திகள் வேகமாகப் பரவுகின்றன. ஆனால் அதே சமயத்தில் புனிதமான நீருக்கும் பெருவாரியான தீவினைகளைக் களையும் சக்திகளும் உண்டு. எனவே வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதை மேற்கொள்ள வேண்டும்.
12. இயன்ற வரையில் பருத்தி ஆடைகளையே அணிந்திடுக. பஞ்சபூத சக்திகள் நிறைந்திருக்கும் பருத்தி ஆடையில் தெய்வீக சக்திகள் எளிதில் சேர்கின்றன. தீய சக்திகளின் வடிவு ஓரளவு பருத்தி ஆடையில் ஏற்பட்டிடினும் துவைக்கின்ற போது அப்படிவு பெரும்பாலும் நீங்கி விடுகின்றது. எனவே தான் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு!” என்ற ஆன்றோர் வாக்கு ஏற்பட்டது.

ஐயர்மலை மகிமை

திருச்சி – குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளுடன் தங்கி உழவாரத் திருப்பணி, அன்னதானம், கிரிவலம் மற்றும் பல இறைப்பணிகளைச் செய்யும் பாக்யம் பெற்றார். தம் சற்குரு நாதரிடமிருந்து பெற்ற ஆன்மீக பொக்கிஷங்களின் சிறு தொகுப்பிது!
இங்கு கார்த்திகைத் தீபத்தைத் தரிசனம் செய்ய வரும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் அளிப்பதும் பங்குனி உத்திரம், மகா சிவராத்ரி போன்ற விசேஷ தினங்களில் இரத்தினகிரியை வலம் வரும் அடியார்களுக்கு உண்ண உணவும், நீர்மோர் பானகம் போன்ற தாக சாந்திகளை அளிப்பதாலும் பெறற்கரிய பேற்றைப் பெறலாம் இறைவனருளால்!
அய்யர்மலை கிரிவல முறை : பெறற்கரிய மானுடப் பிறவியை பெற்ற நாம் காலத்தை ஒரு நொடிப் பொழுதேனும் வீணாக்காது இறை சேவையில் செலுத்த வேண்டும். ஒரு மனிதன் இறைவனுக்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் வாழ்ந்த நாட்களையே அவன் உண்மையில் வாழ்ந்த நாட்களாக இறைவனால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றெல்லாம் வீணாகக் கழிந்த காலமே! ஐயர்மலை ஈசனை முறையாக கிரிவலம் வந்து கலியுக மக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற சித்தர்கள் அருளியுள்ள வழிமுறைகளைக் காண்போம்.

ஸ்ரீபாலூட்டிப் பிள்ளையார்
ஐயர்மலை

பாலூட்டிப் பிள்ளையார் :- ஐயர்மலையில் கிரிவலத்தைத் துவங்குமுன் பாலூட்டிப் பிள்ளையாரை தரிசிக்க வேண்டும். மலையடிவார மண்டபத்தில் முதன்மையாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியே பாலூட்டிப் பிள்ளையார் ஆவார். இவரை தரிசனம் செய்து கற்பூரம், பசு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஆனால் அச்சன்னிதானத்தில் கிடக்கும் கற்பூரக் காகித உறையையோ, எரிந்த தீக்குச்சிகளையோ, தேங்காய் நார் போன்ற குப்பைகளையோ, அகற்றி வழிபடுவது உத்தமமான வழிபாடாகும். அபாரசக்திகள் உடைய திவ்ய மூர்த்தி இவர்! பாலூட்டிப் பிள்ளையார் ஐயர்மலையில் தோன்றிய நிகழ்ச்சியே ஓர் அற்புத சரித்திரமாகும்.
“லால்” என்றால் சிகப்பு என்று பொருள்.  “லால்குடி“ என்றால் செந்தாமரைச் சிகப்பாய் பூத்து இருக்கும் திவ்ய தேவ அமிர்தத்தைப் பருகு என்று பொருள். அத்தகைய உன்னத அமிர்தத்தைத் தான் பெற வேண்டி தன் தாயாகிய பிரவர்த்த ஸ்ரீமதி அம்மனைப் பிரார்த்தித்தார் பிள்ளையார்! எங்கு தெரியுமா? அதுவே திருச்சி அருகே உள்ள லால்குடி! லால்குடியில் அருளாட்சி புரியும் ஸ்ரீமதி அம்பிகை, பிள்ளையாரின் வேண்டுகோளை ஆமோதித்து, “மகனே! ஞானப்பால் வேண்டுமென்றால் அமிர்தமய அமிர்தவர்ஷிணி ராகத்தில் நாதம் மீட்டும் தட்சிணாமூர்த்தியின் அனுக்கிரகம் வேண்டும். நாதத்தால் உருகிப் பாடி உன் தந்தையாகிய சிவபெருமானை மகிழ்விக்க வேண்டும்“, என்று அமிர்தம் பெறும் வழியைக் கூறினாள். எம்பெருமானை கானத்தால் மகிழ்விக்க அற்புத வீணை வேண்டுமல்லவா! அதற்காக நல்லதோர் வீணையைத் தேடி அலைந்தார் பிள்ளையார். தீவிரமான முயற்சிக்குப் பின் சிறந்த வீணை ஒன்றைப் பெற்று அதில் அருமையான கீதங்களை இனிமையாக உள்ளம் உருகிப்பாடினார் மகாகணபதி! கணபதியின் கானாமிர்தத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு ஞானாமிர்தத்தை அளிக்க முன்வந்தார், வீணா தட்சிணாமூர்த்தியாக! “அப்பா கணபதி! உனக்கு ஞானப்பாலை அளிக்கின்றேன். நீ இரத்தின கிரீஸ்வரர் மலைக்குச் சென்றுதான் இந்தப் பாலை பருக வேண்டும்!” என்று அருளாணையிட்டார் லால்குடி ஈசன். பிள்ளையார் அவ்வாறே ஞானப்பாலை எடுத்துக் கொண்டு இரத்தினகிரி அடிவாரம் சென்று அமர்ந்தார். அதேசமயம் பிள்ளையார் ஞானப்பால் பருகப் போவதை தேவர்களும், ரிஷிகளும் முனிவர்களும் மகான்களும் தங்கள் ஞானக் கண்ணால் கண்டு தாங்களும் அந்த தேவாமிர்தத்தில் ஒரு பங்கைப் பெற பேராவல் கொண்டனர். தங்கள் சுயரூபத்துடன் நேராகப் பிள்ளையாரிடம் சென்றால் அவரிடமிருந்து பாலைப் பெற முடியாது என்று எண்ணிய அவர்கள் சிறுசிறு குழந்தைகள் வடிவெடுத்து இரத்தினகிரியை அடைந்து பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டனர்.
பாலூட்டும் பிள்ளையார்.
பிள்ளையார் அமிர்தப் பாலை வேண்டுமென்றே வழியவிட்டு, சிந்தி மெதுவாக உறிஞ்சி அருந்தத் தொடங்கினார். வாயில் இருந்து சிறிது பால் கீழே வழிந்தது. குழந்தை வடிவிலிருந்த் தேவர்களும், ரிஷிகளும் “பாலை எனக்குத்தா, எனக்கு எனக்கு”, என்று அழுது அடம்பிடித்து அவர் திருவாயிலிருந்து வழிந்த பாலை பருகினர், பிள்ளையாரும் “சிறுபிள்ளைகள் தானே பருகிவிட்டுப் போகட்டும்”, என்று அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டார். அன்றிலிருந்து இரத்தினகிரி பிள்ளையாருக்குப் “பாலூட்டிப் பிள்ளையார்“ என்ற பெயர் வழங்கலாயிற்று.. இவருக்குப் பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை இங்கு ஏழைக் குழந்தைகளுக்குத் தானம் அளிப்பதால்.....
1. குழந்தைகளின் ஆயுள் பெருகும்.
2. ஆரோக்கியமான வாழ்வை குழ்ந்தைகள் பெறுவர்.
3. குழந்தைகள் சீரான உடல் வளர்ச்சியையும் மன வளர்ச்சியையும் பெறுவர்.
4. மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் நன்னிலை பெறுவர்.
பாலூட்டிப் பிள்ளையார் ஞானப் பாலை தான் பருகியதோடு மட்டுமல்லாமல் எல்லாக் குழந்தைகளுக்கும் ஞானப்பாலை அளித்து அவர்கள் பேரானந்த நிலையை அடைய வழிகாட்டினார். எனவே இந்த அற்புத கருணாமூர்த்தியின் திவ்ய தரிசனம் என்றும் உன்னத பரந்த நோக்கை மனிதன் பெற வழி கோலுகிறது. ஞானப்பால் உண்டவுடன் தனது அற்புத வீணாகானத்தால் எம் பெருமானை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார் பிள்ளையார். எனவே கல்வீணையை ஏந்தி காட்சி தரும் வீணா தட்சிணா மூர்த்தியை லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் தான் காணலாம். பாலூட்டி பிள்ளையாரைத் தரிசிக்கு முன் வீணா தட்சிணா மூர்த்தியைத் தரிசிப்பது பன் மடங்குப் பலன்களைத் தரும்.
பாலூட்டிப் பிள்ளையாரின் திருவிளையாடல்.!
பத்ரஜலன் என்ற மிளகு வியாபாரியும், அனந்த ஐயன் என்ற மிளகாய் வியாபாரியும், சித்ர விஜயன் என்ற புளி வியாபாரியும், சம்பரன் என்ற எண்ணெய் வியாபாரியும், காலவிதன் என்ற வெல்ல வியாபாரியும், தான விஜயன் என்ற அரிசி வியாபாரியும், சிகாமணி என்ற நவதானிய வியாபாரியும், மாசிலாமணி என்ற தங்க, நவரத்தின வியாபாரியும் தங்கள் குடும்பத்தோடு பல குதிரைகள், மாடுகள் பூட்டிய வண்டிகளில் ஏற்றிய வியாபாரப் பொருட்களோடும் புதுச்சேரியிலிருந்து சோழநாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதையறிந்தான் மாறவர்மன் என்ற கொள்ளைக் கூட்டத் தலைவன். இந்த விலையுயர்ந்த வியாபாரப் பொருட்களை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டான். எல்லாவிதப் போர் திறமைகளிலும் தேர்ந்த கொள்ளைக்காரர்கள் நூறு பேருக்குக் குறையாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சகல ஆயுதங்களுடன் குதிரைகள் மேல் அமர்ந்து இரத்தினகிரி அருகே பதுங்கி இருந்தான் கொள்ளையடிப்பதற்காக!

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
லால்குடி

ஸ்ரீஸ்ரீமதி அம்மன்
லால்குடி

இரத்தினகிரிக்கு அருகில் வந்த வியாபாரிகள் தங்கள் வண்டிகளை நிறுத்தி இரவு தங்குவதற்காகக் கூடாராம் அமைத்தனர். அவ்விடத்திற்கு ஒரு சிறுவனாக வடிவம் தாங்கி வந்தார் பாலூட்டிப் பிள்ளையார்! கூடாரத்திலோ வியாபாரிகள் குழந்தைகள் பருகுவதற்காக தங்கக் கொப்பரைகளிலும், வெள்ளிக் கொப்பரைகளிலும் பால் நிரப்பி வைத்திருந்தனர். சிறுவன் வடிவில் வந்த பிள்ளையார் “பால் கொடுத்தால் பாதகம் வராமல் காப்பேன்“ என்று கூவிக் கொண்டே ஒவ்வொரு கூடாரமாக வருகிறார். தங்கக் கிண்ணங்களிலும் வெள்ளிக் கிண்ணங்களிலும் பாலை ஊற்றிக் குழந்தைகளுக்குப் பருக கொடுத்தனர் தாய்மார்கள்! பிள்ளையாராகிய சிறுவனைப் பார்த்த குழந்தைகள் அவருக்குப் பால் கொடுத்தால் தான் தாங்கள் குடிப்போம் என்று அடம் பிடித்தனர். தாய்மார்கள் “நீங்கள் பாலைக் குடியுங்கள் எஞ்சிய பாலை இந்தச் சிறுவனுக்குக் கொடுப்போம்”, என்று சமாதானப்படுத்தி பாலைப் பருகும்படிக் கூறினர். குழந்தைகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வேறுவழி இல்லாமல் எல்லாத் தாய்மார்களும் ஒன்றாகக் கூடி “தம்பி! உனக்குப் பால் தருகிறோம். நீ பாலைக் குடித்துவிட்டு எங்கள் குழந்தைகளையும் பாலை அருந்தச் செய்யவேண்டும்”, என்று பிள்ளையார் சிறுவனிடம் கேட்டுக் கொண்டனர்! அதற்குப் பிள்ளையார் ஒரு நிபந்தனை விதித்தார்! “எனக்குத் திருப்தி ஆகும் வரை அருந்துவதற்குப் பால் கொடுக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தைகளை பாலை பருகச் செய்வேன்”, என்று தாய்மார்களிடம் கூறினார். தாய்மார்களும் , “இவன் சிறுவன் தானே எவ்வளவு பால் குடித்துவிடப் போகிறான் அதிகபட்சம் ஐந்தாறு குவளை தானே குடிப்பான். நம்மிடமோ நூற்றுக் கணக்கான பசுக்கள் உள்ளனவே. அதனால் கவலையில்லை”, என்று நினைத்து பிள்ளையாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். எல்லாத் தாய்மார்களையும் ஒன்றாகக் கூடச் சொன்னான் சிறுவன்!
“சொன்ன வாக்குத் தவற மாட்டீர்களே?” என்று ஒவ்வொரு தாய்மார்களிடமும் தனித் தனியாக கேட்டு உறுதிசெய்து கொண்டான் பிள்ளையார் சிறுவன். விநாயகர் சிறுவனைப் பார்த்த எந்தத் தாயும் அவர் வார்த்தையை மறுக்க முடியாமல் ‘சரி‘ என்று ஒத்துக் கொண்டனர். அனைத்துக் குழந்தைகளும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புகள் போல் பிள்ளையாரைச் சுற்றி அவர் பின்னாலேயே ஓடினர். இப்போது பிள்ளையார் மீண்டும் ஒரு நிபந்தனை விதித்தார். அது என்ன?
“எனக்கு பால்தர இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்”, என்பது தான் பிள்ளையாரின் அடுத்த நிபந்தனை. கணபதியைச் சுற்றியுள்ள குழந்தைகள் தங்கள் தகப்பனாரிடம் அடம்பிடிக்க ஆரம்பித்தன. அனைத்து வியாபார தந்தைமார்களும் ஒன்றாகக் கூடி சிறுவன் பிள்ளையாரின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டனர். ‘இப்போது எனக்கு முதலில் தங்கக் குவளையில் பால் வேண்டும்’, என்றான் சிறுவன். எல்லாக் குழந்தைகளும் தங்களிடமிருந்து தங்கக் குவளைப் பாலை பிள்ளையாரிடம் நீட்டி “இதை எடுத்துக் கொள், இதை எடுத்துக் கொள்”, என்று போட்டி போட்டுக் கொண்டு கூறின.
கணபதி சிறுவனுக்கு மிக்க மகிழ்ச்சி!! தாய்மார்களையும், தந்தைமார்களையும் தங்கக் குவளையில் பாலை ஊற்றச் சொன்னார் பிள்ளையார். அவர்கள் ஊற்றிய பாலை எடுத்துக் குழந்தைகள் பிள்ளையாரிடம் கொடுத்தனர். பிள்ளையார் பாலைக் குடிக்க ஆரம்பித்தார் ! குடம் குடமாய்ப் பாலைக் குடித்தார்! எல்லோரும் அசந்து விட்டனர். குடங்களிலிருந்த பால் எல்லாம் தீர்ந்து விட்டது! பிரமிப்பால் அனைவரும் செய்வதறியாதிருந்தனர். பிள்ளையார் ஒரு சொட்டு பால் பாக்கியில்லாமல் எல்லாப் பாலையும் அருந்தித் தீர்த்து விட்டார்!

கூடுதல் பூஜைகள்

கூடுதல் பூஜைகளின் முக்யத்வம்
நவகிரஹ அனுக்ரஹம், ஞாபக சக்தி, மன உறுதி, வைராக்யம், தான, தர்ம எண்ணங்கள், வாழ்க்கைக்குப் போதுமான பணவரவு, நல் ஆரோக்கியம், பெரியோர்களின் ஆசி, ஸ்ரீலட்சுமி கடாட்சம், நல்ல வீடு, ஒழுக்கம் நிறைந்த குழந்தைகள், அமைதியான வாழ்க்கை, பகையை எதிர்த்து நிற்கும் மனோசக்தி – போன்ற அனைத்தும் கூடினால்தான் நம் வாழ்க்கை சாந்தமாக நடைபெறும். நம் முறையான வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியானால்தான் நாம் தெய்வீகத்தில் நிலை பெற வேண்டும் என்றும் பலர் எண்ணுவதுண்டு! இதில் எவ்விதத் தவறுமில்லை! ஆனால் என்று நம் ஆசைகள் தீர்வது? என்று நாம் நிறைய பணம் சம்பாதித்து ஆசைகளைத் தீர்த்து தெய்வீகத்தில் காலடி எடுத்துவைப்பது? அதற்குள் இளமையும், சக்தியும், பதவியும் போய்விடுமே! சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இல்லறத்தில் இருந்து கொண்டே தெய்வீக காரியங்களை பெருமளவில் நிகழ்த்திட சத்சங்கமே உதவுகிறது. ஒரு புறம்....
1. நம் கர்மவினைகளைக் கழித்தாக வேண்டும்.
2. மறுபுறம் தினமும் சேர்க்கின்ற தீவினைக் கர்மவினை மூட்டைகளுக்குப் பரிஹாரம் காண வேண்டும்.
3. கலியுகத்திற்குரிய வன்முறை, கொள்ளை, முறையற்ற காமச் செயல்கள் போன்றவற்றை நம் வாழ்வில் எதிர் கொண்டாக வேண்டும்.
4. விட்டுப்போன குலதெய்வ பூஜை, பித்ருபூஜை, ஹோம வழிபாடுகளை நடத்தியாக வேண்டும்.
5. தினசரி குறைந்தபட்சமாகச் சில பூஜைகள், ஜபம், தானதர்மங்கள், நித்ய கர்மாக்களை முறையாகச் செய்தால் தான் நித்ய வாழ்க்கை சுமூகமாகும்.
இவற்றையெல்லாம் கூட்டித் தரும் எளிய வழியே கூட்டுப் பிரார்த்தனையாகும். நவம்பர் 1997 வரை நாம் பல பெரிய சோதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வலியுறுத்தி வருகிறோம். எனவே உங்கள் ஊர்ப்பகுதியில் பலர் ஒன்று கூடி தினந்தோறும் சற்குருவருளால் அளிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட பூஜைகளை நிகழ்த்தி வந்திடில் பரவெளியும், இல்லங்களும் புனிதமாகி அனைவரும் தெய்வீக நல்ல எண்ணங்களிலேயே உறையும் பாக்யம் கிட்டும்! ஜாதி, சமய மத பேதமின்றி, ஆண், பெண் , குழந்தைகளுடன் கூடுகின்ற “கூட்டுப் பிரார்த்தனைக்கு“ பன்மடங்கு சக்தி உண்டு. கோயில்களில் நிகழ்த்துகின்ற கூட்டுப் பிராத்தனைகளோ அங்கே எங்கும் என்றும் எப்போதும் திருஉலாவருகின்ற சித்புருஷர்களின், மஹரிஷிகளின், யோகி, ஞானியரின் ஆசியுடன், கூடி வழிபாட்டுப் பலன்களை மேன்மேலும் விருத்தி செய்து பரிபூர்ணமடையச் செய்கின்றது. நாம் முறையாகச் செய்திடாத, விட்டுப் போன நித்ய பூஜைகளுக்குக் கூட்டு வழிபாடுதான் எளிய பிராயச்சித்தமாகிறது! கோயில் வழிபாட்டின் தத்துவமே இதுதான்!
பிப்ரவரி 1997 கூடுதல் பூஜைகள்

தேதி

பாராயண வழிபாடு

1.2.1997

 அபிராமி அந்தாதி/ ஸ்ரீகாளி ஸஹஸ்ரநாமம்

2.2.1997

இந்திராக்ஷீ கவசம்

3.2.1997

சக்தி மஹிம்ன ஸ்தோத்ரம்

4.2.1997

கற்பகாம்பாள் அஷ்டோத்திரம் (10 முறை) சஹஸரநாமம் ஒரு முறை

5.2.1997

ஸ்ரீசுதர்சன சகஸ்ரநாமம்

6.2.1997

ஸ்ரீநரசிம்ஹ சகஸ்ரநாமம்

7.2.1997

வினாயக கவசம் (5 முறை)

8.2.1997

வில்வாஷ்டகம் (10 முறை)

9.2.1997

ஸ்ரீஅன்னபூர்னேஸ்வரி (சகஸ்ரநாமம் அல்லது அஷ்டோத்திரம் 10 முறை)

10.2.1997

ஸ்ரீசூர்யநாராயண அஷ்டோத்திரம் (10 முறை)

11.2.1997

ஸ்ரீகாயத்ரீ சகஸ்ரநாமம்

12.2.1997

ஸ்ரீகுருவாயூரப்பன் சகஸ்ரநாமம்

13.2.1997

ஸ்ரீமூகாம்பிகை அஷ்டோத்திரம் (10 முறை)

14.2.1997

ஸ்ரீலக்ஷ்மி சகஸ்ரநாமம்

15.2.1997

 ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்

16.2.1997

ஸ்ரீநவக்கிரஹ அஷ்டோத்திரம்

17.2.1997

ஸ்ரீசனீஸ்வர சகஸ்ரநாமம்

18.2.1997

ஸ்ரீசுப்பிரமண்ய சகஸ்ரநாமம்

19.2.1997

ஸ்ரீசூர்ய சகஸ்ரநாமம்

20.2.1997

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்

21.2.1997

தட்சிணா மூர்த்தி சகஸ்ரநாமம்

22.2.1997

ஸ்ரீகணேச சகஸ்ரநாமம்

23.2.1997

ஸ்ரீசர்வேஸ்வர சகஸ்ரநாமம்

24.2.1997

ஸ்ரீசுக்ராஷ்டோத்ரம் (10 முறை)

25.2.1997

ககார கணபதி சகஸ்ரநாமம் (“க“ வரிசையில் சஹஸ்ரநாமம்)

26.2.1997

ஸ்ரீபாதுகா சகஸ்ரநாமம்

27.2.1997

ஸ்ரீசடாரி சகஸ்ரநாமம்

28.2.1997

ஸ்ரீவராக சகஸ்ரநாமம்

குறிப்பு : சஹஸ்ரநாமமெனில் (1000 போற்றிகள்) குறைந்தது ஒரு முறையும் . அஷ்டோத்திரம் (100 போற்றிகள்) எனில் குறைந்தது 10 முறையும் ஓதிடுக!
பிப்ரவரி 1997 நித்ய கர்ம தான தர்ம சாந்தி

தேதி

தினசரி கர்ம – நிவர்த்தி             (தான தர்மங்கள்)

 பலன்கள்

1.2.1997

பச்சை குத்துபவர்களுக்கு ஆடைதானம்

நெடுங்காலம் பிரிந்தோர் கூடுவர்.

2.2.1997

பள்ளிச் சிறுவர்களுக்கு பாலதானம்

படிப்பில் முன்னேற்றம்.

3.2.1997

கர்ப்பிணிகள், 70/80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளுக்குப் பாத பூஜை

பிரசவ வேதனைகள் தணியும்.

4.2.1997

குழந்தைகளுக்குப் பால் தானம்

செய்யும் தொழிலில் புகழ் கிட்டும்.

5.2.1997

புல்லாங்குழல் கலைஞர்களுக்கு/ வாத்யம் விற்போர்க்கு உதவி

சோக நினைவுகள் மாறும்.

6.2.1997

சூர்யநாராயண ஸ்வாமிக்கு பூஜை   வடமொழி, தமிழ் வேதம் ஓதுவோர்க்கு உதவி

பணக் கஷ்டம் தீரும்.

7.2.1997

முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்த பாலை நோயாளிக்கு அளித்தல்

நோய் தீரும்.

8.2.1997

மரப்பாச்சி பொம்மைத் தொழிலாளர்கட்கு அன்னதானம், ஆடைதானம்

சந்தேகங்களால் பிரிந்த தம்பதியர் சேவர்.

9.2.1997

முதியோர்க்கு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட உதவி – சேவை

 இடுப்பு சம்பந்தமான நோய்கள் தீரும்.

10.2.1997

வைக்கோல் விற்போர்க்கு உதவி

எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி

11.2.1997

ஏழை பிரம்மச்சாரிகளுக்கு உணவு, உடை தானம்

பேசாத குழந்தைகள் பேசுவர்.

12.2.1997

குப்பை கூட்டுவோர்க்கு உதவி செய்தல்

மறதியால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

13.2.1997

ரெட்டை மாட்டு வண்டி, வண்டிக்காரர், மாடுகளுக்கு உதவி/அச்சு போடுதல்

உத்யோக வரும்படி கூடும்

14.2.1997

பசுவிற்கு பூஜை

பித்ருக்களின் ஆசி கிட்டும்.

15.2.1997

ஏழையான எண்ணெய் செக்கு ஆட்டுவோர்க்கு ஆவன உதவி

பெருங்கடன்கள் தீர வழிபிறக்கும்.

16.2.1997

தோல் கருவி வாத்யக்காரர்களுக்கு உதவி

வீட்டில் குழந்தை ஒலி கேட்கும் பாக்யம் கிட்டும்.

17.2.1997

ஏழை இரும்பு வியாபாரிகளுக்கு அன்ன, ஆடைதானம்

எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி & நேர்மையான உயர் பதவி விரைவில் கிட்டும்.

18.2.1997

வயது முதிர்ந்த வெள்ளி வியாபாரி/ நகைத் தொழிலாளர்களுக்குப் பூஜை/ உதவிகள்

தரித்திர நிலை தணியும்.

19.2.1997

ஏழைகளின் சைக்கிளுக்கு ரிப்பேர் செய்ய உதவி

அலுவலகத்தில் பகை தீரும்.

20.2.1997

ஏழை நெசவாளர்க்கு அன்னம், மருந்துகள், டானிக்குகள் தானம்

வீட்டில் அடிக்கடி நோய்வாய் படுதல் தணியும்.

21.2.1997

கோணி சாக்கு தைப்போர்க்கு உதவி

இழந்த பொருள் கிட்டும்.

22.2.1997

காளை மாட்டிற்கு உணவு

நல்ல உத்யோகம், மாறுதல் கிட்டும்.

23.2.1997

இன்று பிரதோஷ பூஜை நடைபெறாக் கோயில்களில் சிறு அளவிலேனும் பூஜை நடைபெற உதவி

 முறையான பதவி உயர்வு

24.2.1997

வயதான ஏழை சுமங்கலிக்கு சிவப்பு நிற ஆடை தானம்

உடல் வலி நோய்கள் தீரும்.

25.2.1997

துளசிச் செடிக்கு பூஜை

நற்செய்தி தேடி வரும்.

26.2.1997

கயிறு திரிப்போர்க்கு உதவி

 மனத் தாங்கல்கள், வருத்தங்கள் தீரும்.

27.2.1997

கருவேப்பிலை பொடி கலந்த அன்னம் தானம்

ஆண்களுக்குப் பெண்களால் வரும் துன்பம் தீரும்.

28.2.1997

தடிதாங்கி நடக்கும் முதியோர்க்கு உதவி

பில்லி சூன்யத் துன்பங்கள் தீரும்.

விசேஷ தினங்கள் :- பிப்ரவரி -1997
7.2.1997 – தை அமாவாசை (விளக்கம் ஜனவரி 1997 இதழில்)
12.2.1997 – விஷ்ணுபதி (விளக்கம் ஜனவரி 1997 இதழில்)
13.2.1997 – ரத சப்தமி
18.2.1997 – வஞ்சுள மஹா துவாதசி
21.2.1997 – பௌர்ணமி
22.2.1997 – மாசி மகம்
7.3.1997 – மஹா சிவராத்ரி

கூடா நாட்கள் (பிரபலாரிஷ்ட யோக நாட்கள்) - பிப்ரவரி 1997ல் பிரபலாரிஷ்ட யோக நாட்கள் இல்லை. பிரபலாரிஷ்ட யோக நாட்கள் அல்லது கூடாநாட்களில் அனைத்துச் சுப கார்யங்களையும், கடன் கொடுத்தல்/வாங்குதல் பிரயாணம் போன்ற காரியங்களையும் தவிர்த்தல் வேண்டும்.

இறைத் தொண்டில் பரிணமிக்க ஓர் அழைப்பு
உள்ளத்து உணர்வாய் இருக்கும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாசகர்களுக்கு, ஸ்ரீஅகஸ்திய விஜயத்திற்குச் சந்தா சேர்த்துத் தருவது, நமக்கும் அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் அருள்வாழி காட்டவல்ல ஒரு தெய்வ சேவையாகும். ,தெய்வநெறி பரப்பும் புனிதமான காரியமாகும். இந்த இறைத் தொண்டில் , சுயநலமற்ற திருச்சேவைப் பணியில், தியாகத்தில் தங்களையும் பங்கு கொள்ளும்படிக்கரம் குவித்து அழைக்கின்றோம்.
வாழ்த்துச் சந்தா :-  ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாசகர்களாகிய உங்களுக்கு வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் உறவினர்களும், நண்பர்களும் இருப்பார்கள், அவர்களுக்கு நீங்கள் “வாழ்த்துச் சந்தா” என்ற வகையில் பிறந்த நாள் வாழ்த்தாக/புதுமனை புகுவிழா வாழ்த்தாக/ புத்தாண்டு வாழ்த்தாக / திருமண நாள் வாழ்த்தாக / தீபாவளி வாழ்த்தாக/ பொங்கல் வாழ்த்தாக மற்றும் எல்லா நற்செயல்களுக்கும் , இனிய இறை வாழ்த்தாக ஆண்டுச் சந்தா அனுப்பலாம்..

 

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam