ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது எப்படி ? |
நான் மிகவும் நல்லவன், ஒரு பாவமும் அறியாதவன்! இது ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் சான்றிதழ். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாக இருந்தால் நாம் தினந்தோறும் சந்திக்கும் கொலை, கொள்ளை, பொய், புரட்டு, நம்பிக்கை துரோகம் போன்ற சீர்கேடான சம்பவங்கள் தோன்ற வாய்ப்பே இருக்காது. இதிலிருந்து நாம் அறிவது என்ன? ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழவே எண்ணுகிறான்; அது முடியாவிட்டாலும் எல்லோரும் அவனை நல்லவனாகவே மதிக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனது ஆழ்மனம் நல்லதையே விரும்புகிறது. அவனது ஆத்மா தூய்மையானது. அது இறைவனின் ஆலயம்!
அவனது உள்ளத்தில் உறையும் பரமாத்மாவை உணராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவனது பிறப்பும் அவன் வளர்ந்த சூழ்நிலையுமே ஒரு மனிதனின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. எனவே ஒரு மனிதனின் பிறப்பிற்கும் வளர்ப்பிற்கும் காரணமாக அமைபவர்கள் அவனது தாய் தந்தையர்களே.
ஒவ்வொரு தாய் தந்தையரும் உத்தம குழந்தையைப் பெறும் உபாயத்தையும், குழந்தையை சரியான விதத்தில் வளர்க்கும் முறையையும் அறிந்து செயல்பட்டால் எல்லா மனிதனும் மகாத்மாவாக மலர்வது உறுதி!
இதை கருத்தில் கொண்டு, உலகத்தவர் அனைவரும் நற்கதி அடைய அருந்தொண்டாற்றி வருகிறார் திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை 1001-வது குரு மகா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ-ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள்.
தமது சற்குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் குருகுல வாசத்தில் உய்த்துனர்ந்த அரும்பெரும் ஆன்மீகப் பொக்கிஷங்களில் ஒரு சிறு துளியை இங்கு அள்ளி வழங்குகிறார் ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள்.
முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக இறைப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அன்னதானம், கோயில் திருப்பணி, இலவசமருத்துவ உதவி, ஆன்மீக பிரசுரங்கள், திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப அன்னதானம், கோ சம்ரட்சணை, இலவச கல்வி உதவி போன்ற பல்வேறு திருப்பணிகளை நிறைவேற்றி ஆன்மீக இமயமாய் உயர்ந்து நிற்கிறார் ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள்
அனைவரும் இங்கு விளக்கியுள்ள கருத்துக்களை உய்த்துணர்ந்து, நன்மக்களைப் பெற்று, அவர்களை இறை நெறியில் வளர்த்து, பரம்பொருளின் பேரருளுக்குப் பாத்திரமாகும்படி குருவருளையும் திருஅண்ணாமலையாரின் திருவருளையும் பிரார்த்திக்கிறோம்.
ஓம் குருவே சரணம்
எழில்மிகு காவேரிக் கரையில் அமைந்துள்ள சுவாமிமலை சிவாலயத்தில் முனி சிரேஷ்டர் அகத்திய பகவானும், அவர்தம் அருமை சீடர்களும் பற்பல ஆன்மீக இரகசியங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். கருணைக் கடலாம் அகத்திய ரிஷி உலகத்தவர் நன்மைக்காக அள்ளி வழங்கும் அன்புப் பொக்கிஷங்கள் என்னவென்று அறிவோமா?
போகர்: மகாதேவா! பால முருகனின் தரிசனம் மனதிற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது.
ஸ்ரீமுருகப் பெருமான்
வாலிகண்டபுரம்
அகத்தியர்: ஆமாம், அன்பு சீடனே! தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன் அல்லவா? அவன் தரிசனம் இனிமையான ஒன்றுதான்.
போகர்: ஞான பிரபோ! குழந்தை என்றாலே குதூகலம்தான். அத்தகைய குழந்தைச் செல்வத்தின் கையில் தானே எதிர்காலமே இருக்கிறது?
அகத்தியர்: அதில் சந்தேகமில்லை, எனதருமை போகா! ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்ததாக உருவாக்கித் தரும் பெரிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது.
புலிப்பாணி: பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைப்பது எவ்வாறு, குருதேவா?
அகத்தியர்: இதற்கு தாய், தந்தையர் பெற்றிருக்க வேண்டிய சில அடிப்படைத் தகுதிகள் உண்டு. முதலாவதாக தாய், தந்தையர் இருவரும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். அவர்கள் பக்தி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தாலே போதுமானது.
நாயன்மார்களிடத்தும், ஆழ்வார்களிடத்தும் இருந்தது பக்தி. சிவபெருமானே! நான் உன்னை மறந்தாலும் என் நா உன் திருநாமத்தைச் சொல்வதை மறக்காது! என்று கதறி அழுத நாயன்மார்கள் பக்தியைச் சாதாரண மக்களிடம் காண்பது அரிது. பக்தியோடு கூடிய நம்பிக்கை இருந்தால் மிக சிறப்பு.
பெற்றோர்கள் தங்களுடைய தாய், தந்தையரை அன்புடன் பராமரித்து அவர்களுடன் மனப்பூர்வமான ஆசிர்வாதத்தைப் பெற்றிருத்தல் முதல் தகுதியாகும்.
தான் மட்டும் சுகமாக வாழ்ந்து கொண்டு தாய், தந்தையரைப் பராமரிக்காமல் அவர்களை அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பும் தவறான செயலையும், வீட்டில் வேலைக்காரராகவோ, வேலைக்காரியாகவோ பயன்படுத்தும் தன்மையும் முதலில் செய்யாதிருக்க வேண்டும்.
போகர்: தாய், தந்தையரை பூஜிக்கும் எளிய முறை யாதோ, குருதேவா?
அகத்தியர்: தினமும் தாய், தந்தையரின் பாதங்களை ஒரு முறையாவது தொட்டு வணங்கி விட்டு வெளிச் செல்லல் வேண்டும். அலுவலக வேலை முடிந்து மாலை வீடு திரும்பியவுடன் மீண்டும் தாய், தந்தையரின் பாதங்களை வணங்க வேண்டும்.
புலிப்பாணி: தாய், தந்தையருக்கு அன்பும், வணக்கமும் மனதில் இருந்தால் போதாதா? இந்த வெளி வேஷமெல்லாம் தேவைதானா? என்று சிலர் கூறுவதுண்டே, குருதேவா?
அகத்தியர்: உண்மைதான்! ஆனால் பெற்ற தாய், தந்தையருக்கு வணக்கம் செலுத்துவதை நடிப்பாக நினைக்கின்ற இளைய தம்பதிகளைத் திருத்தவே முடியாது. இவர்களுக்கு தெய்வ நம்பிக்கை வராது.
போகர்: குருதேவா! எதற்காகப் பெற்றோர்களை வணங்கி வெளிச் செல்ல வேண்டும், வணங்கி உள்ளே வர வேண்டும்?
அகத்தியர்: நாம் குழந்தையாக இருந்த போது எத்தனையோ முறை அவர்களை எட்டி உதைத்திருப்போம். அப்போது தாய் தந்தையர் நம்மைக் கடிந்து கொண்டார்களா? உதைத்த கால்களுக்கு கொலுசு போட்டு மகிழ்ந்திருப்பார்களே! எட்டி உதைத்த பாதங்களில் முத்தமாரி பொழிந்திருப்பார்களே! குழந்தைப் பிராயத்தில் செய்த தவறுக்குப் பரிகாரமாகத்தான் அவர்களை வணங்கி வெளிச் செல்ல வேண்டும்; வணங்கி உள்ளே வர வேண்டும், வெறும் நடிப்புக்காக அல்ல!
தாய், தந்தையரின் அருமை தெரியாமல் நடிப்பு என்று நினைத்தால் கணவன், மனைவிக்கு எப்படி தெய்வ நம்பிக்கை வரும்? ஆகவே கண்ணால் பார்க்கின்ற நம் தாய்தந்தையரை முதலில் தெய்வமாக நினைக்கத் தெரியாதவர்கள் பிற்காலத்தில் எப்படித் தங்கள் குழந்தைகளை அறிவாளிகளாக உருவாக்க முடியும்? எப்படி அவர்களைச் சீராக வளர்க்க முடியும்? எப்படித் திறமையுள்ள மகனாய்ப் பார்க்க முடியும்?ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் திறமைசாலிகளாய்ப் பார்க்க வேண்டும், அவர்களை திறமையுள்ளவர்களாய் வளர்க்க வேண்டும் என்றால் முதலில் தங்கள் தந்தை, தாயை மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
போகர்: தாய், தந்தை வழிபாட்டிற்குப் பின் பெற்றோர்கள் அடுத்து செய்ய வேண்டிய சேவை என்ன, குருதேவா?
அகத்தியர்: தாய், தந்தையரை முறையாக வணங்கி அவர்களின் மனப்பூர்வமான, பரிபூர்ண ஆசியை பெற்ற தம்பதியர் அடுத்து செய்ய வேண்டியது இறை சேவை.
தன்னால் ஒரு பெரிய கோயிலைக் கட்ட முடியாதவர்கள் ஏற்கனவே சத்சங்கமாய் பலர் ஒன்று கூடி தெய்வ நம்பிக்கையோடு பூரணமாய்க் கட்டிய கோயிலைப் பராமரிக்கின்ற பண்பாடு ஒவ்வொரு தம்பதியருக்கும் இருக்க வேண்டும்; வர வேண்டும்.
கோயிலைப் பராமரிக்க வேண்டுமென்றால் நித்திய கட்டளைகளையோ, பிரம்மோற்சவமோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் அந்தக் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க தங்களால் முடிந்த சேவைகளைச் செய்தால் போதும்.
புலிப்பாணி: குருதேவா! கோயிலைப் பராமரிக்கத்தான் சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்திருக்கிறார்களே என்பது சிலரின் எண்ணம்.
அகத்தியர்: உண்மைதான். ஆனால் சம்பள ஆட்கள் ஒரு கோயிலுக்குப் போதுமானதாக இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் நோய்வாய்ப்பட்டோ, வேறு காரணங்களாலோ துப்புரவுப் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். எனவே சம்பள ஆட்களைக் காரணம் காட்டி கோயிலில் சேவை செய்யாதிருப்பது தவறு.
தம்மால் முடிந்த ஒரு சிறு சேவையாவது தினமும் ஒரு கோயிலில் செய்து பழக வேண்டும் தம்பதியர்கள். இவ்வாறு செய்வதால் நம்மையும் அறியாமல் நம் உள்ளத்தில் தூய எண்ணங்கள் உதயமாகும். இறை நம்பிக்கையோடு செய்கின்ற சேவையால் கிடைக்கின்ற எண்ணத்தால் தர்ம சிந்தனைகள் உள்ளத்தில் உருவாகும்.
போகர்: குருதேவா! தர்மம் செய்வதால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் சோம்பேறித் தனத்தை வளர்ப்பதாக ஆகும் என்பது சிலரின் வாதம்!
அகத்தியர்: (புன்சிரிப்புடன்) அது தவறான எண்ணம். சோம்பித் திரிகின்றவனுக்கு இறைவனே உணவு கொடுப்பதில்லை. அப்பொழுது உன்னால் ஒரு சோம்பேறிக்கு உணவு கொடுக்க முடியுமா?
ஆகவே நீங்கள் உணவு அளிக்கிறீர்கள் என்றால் அதைப் பெறுகின்றவன் யாருக்காவது, எந்தப் பிறவியிலாவது உணவு இட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இறைவன் உங்கள் மூலம் உணவளிக்கமாட்டார்! இதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி உணவிட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தால், உங்கள் உள்ளமே யாருக்கு கொடுக்க வேண்டும் என்று சீர்தூக்கிப் பார்த்துச் செய்யும். ஆகவே தர்ம சிந்தனைகள் வளர்ந்தால் தியாக நினைவுகள் உள்ளத்தில் உருவாகும்
போகர்: அன்பின் சிகரமே! தியாக நினைவுகள் நன்றாக நிறைவேற தம்பதிகள் என்ன செய்ய வேண்டும்?
அகத்தியர்: உன்னத தியாக நினைவுகள் நிறைவேற சத்சங்கம் நிச்சயம் தேவை. தம்பதிகள் தங்களை ஒரு சத்சங்கத்தோடு பிணைத்துக் கொள்ள வேண்டும். சத்சங்கத்தில்தான் தியாக நினைவுகளுக்கும், தியாகச் செயல்களுக்கும் வழிகள் உண்டு. சத்சங்க வழிகாட்டியானவர் உங்கள் மனம் புரிந்துகொள்ளும் வகையில் உங்களைத் தியாகச் செயலுக்குத் தயார் செய்கிறார்.
இந்த தியாகச் செயலானது முறைப்படுத்தி செயல்படுத்தப்படும்போதுதான் உடலில் உள்ள இரத்தமானது தெய்வ அனுகிரகம் பெற்ற பெரியோர்களின் ஆசியை கிரகிக்கும் சக்தியைப் பெறுகிறது. அவ்வாறு பெரியோர்களின் ஆசியைப் பெற்ற உதிரமானது முறையாக இறைவன் அருளாலும் தூய்மைப்படுத்தப்பட்டு சக்தி பெற்ற விந்தாக உடலில் மாறுகிறது.
இப்பொழுது இறைவனின் பேரருட் கருணையால் பெரியோர்களுடைய ஆசியும், தான தர்மத்தால் வந்த புண்ணியத்தின் ஆசியும், தியாகத்தின் செயலால் வந்த ஆசியும், சத்சங்கத்தால் சேவை செய்த புண்ணியத்தின் ஆசியும் ஒன்றாய்ச் சேர்த்து உயர்நிலையாம் உயிர்நிலைக்கு ஆதாரமாகி உத்தம குழந்தை பிறக்க இறைருள் கூட்டுகிறது.
போகர்: சற்குரு மகாதேவா! இவ்வாறு பிறந்த குழந்தையை எப்படி ஒரு தாய், தந்தை வளர்க்க வேண்டும்?
அகத்தியர்: அன்பு சீடனே! 15 வயது வரை தாய், தந்தையருக்கு அளவு கடந்த பொறுப்புகள் இருக்கிறது.
குழந்தையை எந்த காரணத்தைக் கொண்டும் இரும்புத் தொட்டிலில்/தூளியில் போடக் கூடாது. ஏனை/தொட்டில்/தூளி மர உத்திரத்தில் எட்டிய நிலையில் இருக்க வேண்டும். இரும்பு உபகரணங்களையோ, கம்பிகளையோ, வளையங்களையோ தூளி கட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவை தூளியின் எந்தப் பகுதியையும் தொடாதவாறு மிகவும் கவனமாக அமைக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு இரும்பு வளையத்தில் தூளியைக் கட்டுவது தவறு. ஆனால் இரண்டு இரும்பு வளையங்களுடன் இடையே ஒரு மரக்குச்சியைச் செருகி அதில் தூளியைக் கட்ட வேண்டும். பெற்ற்றோர்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
போகர்: குருதேவா! மர உத்திரத்தில் தூளி கட்டுவதன் அவசியம் என்ன என்பதை விளக்க வேண்டுகிறோம்!
அகத்தியர்: உடம்புக்கும் இரும்பிற்கும் தொடர்பு ஏற்படுவதைத் தவிர்க்கவே மர உத்திரத்தில் தூளியைக் கட்டுகிறோம். இரும்பில் பசுந்துளிர் மின்சக்தி இருக்கிறது. இரும்பு வளையத்தில் தூளியைக் கட்டினால் தூளி வழியாக அந்தப் பசுந்தளிர் மின் சக்தி குழந்தை உடலில் பாயும். அந்த மின்சக்தி குழந்தை தாங்கும் சக்தியை விட அதிக அளவில் இருப்பதால் குழந்தை மனோதிடத்தை இழக்கிறது. ஆகவே மரத் தொட்டிலிலோ அல்லது மர உத்திரத்தில் கட்டிய தூளியிலோ குழந்தையை உறங்க வைத்தால் குழந்தையின் மனோதிடம் வளர ஏதுவாகிறது. குழந்தையின் மனோதிடத்தை வளர்க்கும் பெரிய பொறுப்பை தாய், தந்தையர் சிறப்பாக இம்முறையில் செயலாற்ற வேண்டும்.
தற்காலத்தில் இரும்புச் சுருள் கம்பிகளில் (springs) தூளியைக் கட்டுகின்றனர். இது தவறான செயலாகும்.
முடிந்த மட்டும் உத்திரத்தில் தூளியை ரோகிணி நட்சத்திரத்தன்று கட்ட வேண்டும்.
புலிப்பாணி: ரோகிணியில் தூளியைக் கட்டுவதன் மகத்துவம் யாதோ, குருதேவா?
அகத்தியர்: அஞ்சனாதேவி சிவனை நோக்கிக் கடுமையாக தவம் செய்தாள். எம்பெருமானின் பேரருட் கருணையால் கர்ப்பந்தரித்து மகாசுந்தர புருஷனாக ஆஞ்சநேய சுவாமியைப் பெற்றெடுத்தாள். ஆஞ்சநேய சுவாமியை ஆலமரக்கிளையில் ஈசனுக்குச் சாற்றிய வஸ்திரத்தில் தொட்டில் கட்டினாள். அப்பொழுது பிரம்மாவின் திருவருளால், ரோகிணி நட்சத்திரத்தில் தொட்டிலில் குழந்தையை இட்டால் குழந்தையின் மனோதிடத்திற்குக் குறைவு இருக்காது! என்று பிரம்மா அருளாசி வழங்கினார். ஆகவே ரோகிணி நட்சத்திரத்தில் தொட்டிலைக் கட்டி அதில் குழந்தையை இடுதல் மிகவும் முக்கியம். தாய், தந்தையர் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
போகர்: குருதேவா! வெளியூருக்கோ, மற்ற இடங்களுக்கோ செல்லும் போது அங்கே தூளி கட்ட வேண்டிய சூழ்நிலையில் பெற்றோர்கள் என்ன செய்வது?
அகத்தியர்: ரோகிணி நட்சத்திரத்தன்று கட்டிய தூளித் துணிகளை ஒன்றிரண்டு அதிகப்படியாக (Spare) பெற்றோர்கள் வைத்திருக்க வேண்டும். இரயில் வண்டிகளில் பயணம் செய்யும் போதோ, வெளியிடங்களிலோ, அந்த தூளியையே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு ரோகிணி நட்சத்திரத்தில் கட்டிய தூளியில் குழந்தையைப் படுக்க வைப்பதால் பாதுருதி என்ற தேவதையின் அருளால் குழந்தையின் மூளை வளர்ச்சியானது முறைப்படுத்தப்பட்டு மனோதிடத் தெளிவை வளர்க்கிறது. இதை ஒவ்வொரு தாய், தந்தையரும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும். எங்கு பிரயாணம் செய்தாலும் ரோகிணி நட்சத்திரத்தில் கட்டிய தூளியை உடன்கொண்டு சென்று அதில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தையின் மனோதிடம் வளரத் தாய் தந்தையர் ஒரு சிறந்த கருவியாக அமைகிறார்கள்.
சுத்தமான பருத்தியாலான துணியையே தூளி கட்ட பயன்படுத்த வேண்டும். அந்தத் துணியை அம்பாளுக்கு அல்லது சிவனுக்கு அல்லது எந்த இஷ்ட தெய்வத்திற்காவது சார்த்தி பின்னர் பயன்படுத்துவது விசேஷமான பலன்களைத் தரும். வேஷ்டி, புடவை போன்ற எல்லாத் துணிகளையும் தூளிக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் பட்டு துணியில் தூளி கட்ட கூடாது.
தொட்டில்களில் (cradle) குழந்தையை இடும்போது, மரத்தொட்டில்களையே (wooden cradles) பயன்படுத்த வேண்டும். இரும்புத் தொட்டில்கள் கூடாது. பஞ்சு மெத்தையை பயன்படுத்த வேண்டும். Rubber, foam sheets பயன்படுத்த கூடாது. மரத்தொட்டிலில் குழந்தையை இட வேண்டும் என்றால் திருவாதிரை நட்சத்திரத்தில் தான் இட வேண்டும்.
போகர்: திருவாதிரை நட்சத்திரத்தில் குழந்தையை மரத் தொட்டிலில் இடுவதன் முக்கியத்துவம் என்ன, குருதேவா?
அகத்தியர்: வசுதேவர் தேவகியிடமிருந்து தனக்கு பிறந்த எட்டாவது குழந்தையாகிய கிருஷ்ண பரமாத்மாவை எடுத்துச் சென்று கோகுலத்தில் யசோதா அருகில் விட்டு விடுகிறார். நந்தகோபர் கண்ணனைப் பார்த்த மகிழ்ச்சியில் அருகில் இருந்த மரத்தொட்டிலில் திருவாதிரை நட்சத்திரத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் கண்ணனை இட்டார். இவ்வாறு இடுவதால் ஜெய துர்கையின் அருளாசி கூடி சூழ்நிலை சந்தர்ப்பங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சக்தி குழந்தைக்கு வருகிறது.
ஆகவே திருவாதிரையில் குழந்தையை மரத்தொட்டிலில் இட்டால் சூழ்நிலை சந்தர்ப்பங்களை எப்படிச் சந்திப்பது என்ற திறமையை குழந்தையிலிருந்தே ஜெயதுர்க்கா தேவி வளர்த்து விடுகிறாள்.
இதிகாசம், புராணங்களில் நடந்த நிகழ்சிகளைக் கலியுக மக்களுக்கு எடுத்துக் கூறுவதே இறைவனின் அவதார புருஷர்கள் பெற்ற நலன்களையும் திறமைகளையும் நாமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மக்கள் அனைவரும் இந்த முன் மாதிரிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
முடிந்த மட்டும் தாயோ, தந்தையோ அல்லது குடும்பத்தில் உள்ள, நிறைய குழந்தைகளைப் பெற்று வளர்த்த பெரியவர்களோ குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைக்க வேண்டும்; தொட்டிலிலிருந்து குழந்தையை எடுக்க வேண்டும்.
போகர்: பெற்றோர், பெரியோர்களே குழந்தையைத் தொட்டிலில் இட வேண்டும் என்பது ஏன், குருதேவா?
அகத்தியர்: குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைக்கும்போது பல கூறு ஆவி பிரிப்பு என்னும் செயல்பாட்டின்படி அது தன் முன் வினைகளை நிறைவேற்றுவதற்காக astral travel செய்வதுண்டு. அவ்வாறு செய்யும் போது எந்தவிதத் துன்பமும் ஏற்படாமல் பத்திரமாகத் திரும்ப, பெரியோர்களின் ஆசி தேவை.
இறைநினைவோடு தாய், தந்தையர், பெரியவர்கள் குழந்தையை தொட்டிலில் இடும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் மற்றவர்களை விட்டு குழந்தையைத் தொட்டிலில் இட்டால் முறையான ஆசியைக் குழந்தை பெறாததால் astral travel முடிந்து திரும்பவும் உடலுக்குள் நுழைவது கடினமாகிறது. கட்டாயப்படுத்தப்பட்டு உடலில் நுழையும் போது உடல் “பயம்” என்ற தன்மையைச் சந்திக்கின்ற நிலைமை ஏற்படுகிறது.
இதுவே குழந்தைகள் பிற்காலத்தில் காரணம் தெரியாமலே பல விஷயங்களுக்குப் பயப்படும் அவல நிலைக்கு காரணமாகிறது. எனவே அஞ்சா நெஞ்சம் கொண்ட, ஒரு போர் வீரனை ஒத்த தைரியத்தைப் பெற வேண்டுமென்றால் குழந்தைப் பிராயத்திலிருந்தே இந்த தைரியத்தை வரவழைக்க வேண்டும். இதற்குத் தாய், தந்தையர்கள் தங்கள் வீட்டு மிக முக்கிய பெரியவர்களை அழைத்து அவர்கள் கையால் பூசம் நட்சதிரத்தன்று புதுத் துணியை மாற்றி அதில் இட வேண்டும்.
போகர்: என் ஐயனே! பூசம் நட்சதிரத்தன்று குழந்தையைத் தொட்டிலில் இடும் வழக்கம் எவ்வாறு வந்தது?
அகத்தியர்: எம்பெருமான் ஸ்ரீமன் நாராயண பகவானின் திருவருளால் கர்ப்பத்திலேயே நாராயணா என்னும் திருமந்திரத்தை நாரத முனிவரால் உபதேசிக்கபட்டவர் பிரகலாத மூர்த்தி. பிரகலாதனை அவருடைய தாயார் பூசம் நட்சத்திரத்தில் தூளியில் இட்டு வளர்த்தனள். எத்தகைய சோதனைகளையும், துன்பங்களையும் சிறுவனாக இருக்கும் போது திடமனதுடன் பிரகலாத மூர்த்தி சந்தித்ததற்கு இதுதான் மிக முக்கிய காரணம்.
எனவே பெற்றோர்கள் இதை உணர்ந்து குழந்தைகளை பூசம் நட்சத்திரத்தன்று தூளியில் / தொட்டிலில் இட்டு வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு 15 வயது வரும் வரை இந்த நட்சத்திரத்திலேயே படுக்கை அமைத்து கொடுக்கலாம்.
போகர்: குருதேவா! குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகும் கூட பூசம் நட்சத்திரத்தன்று படுக்கை அமைத்துக் கொள்ளவது விசேஷமான பலன்களைத் தரும் அல்லவா?
அகத்தியர்: நிச்சயமாக! குழந்தைகள் கல்லூரிகளில் பயிலும் நிலை வரும்போது வசதியுள்ளவர்கள் அவர்களுக்கு கட்டில் வாங்கித் தருவதாக இருந்தால், மரக்கட்டில்களை பூசம் நட்சதிரத்தன்று வாங்கிப் படுக்கை அமைத்து தர வேண்டும். அவ்வாறே படுக்கை (bed), விரிப்புகள் (bed-sheets) தலையணைகள் வாங்குவதையும் பூசம் நட்சத்திரத்தன்று செய்வது விசேஷமான பலனைத் தரும்.
போகர்: குருதேவா! குழந்தையாய் இருக்கும் போதே Astral Travel நடைபெறுகிறதா?
அகத்தியர்: ஆமாம்! கலியுகத்தில் குழந்தைகள் மூன்று வயது வரை முன்வினைகளை நிறைவேற்றுவதற்காக Astral Travel செய்கின்றன. தெய்வீக வாழ்க்கை நடத்தும் பெற்றோர்களுடைய குழந்தைகள் ஐந்து வயதுவரை Astral Travel செய்யும். கனிந்த கனி என்று சித்தர்களால் போற்றப்படும் காஞ்சி பரமாச்சாரியார் தனது 12வது வயதிலும் கூட Astral Travel செய்து உன்னத இறைப்பணி செய்தார்.
குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். குழந்தையானவன் / குழந்தையானவள் உடம்பில் சுறுசுறுப்பும், தெம்பும் வருவதற்காகத் தாயானவள் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவ நாம ஜபத்தை 10,000 உருக்களுக்குக் குறையாமல் உருவேற்றிப் பின் பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பும் தெம்பும் தேவையான அளவு கிடைகிறது.
தாய்மார்கள் இங்கே கவனிக்க வேண்டியது, அஸ்வினி நட்சத்திர நாள் வரும் வரை குழந்தைகளுக்குப் பாலூட்ட காத்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸ்வினி நட்சதிரத்தன்று சிவ நாம ஜபத்தை 10,000உருக்கள் உருவேற்றி அதன்பின் பாலூட்டினால் அபரிமிதமான சுறுசுறுப்பையும் தெம்பையும் குழந்தைகள் பெற ஏதுவாகும் என்பதே.
முடிந்த போதெல்லாம் முதன்முதல் உணவூட்டும் போதும் அசுவினி நட்சதிரத்தன்று சிவநாம ஜபத்தை 10,000 உருக்கள் உருவேற்றிப் பின் உணவூட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு தேவையான சக்தியை உணவின் மூலம் பெற எம்பெருமான் திருவருள் புரிகிறார்.
முதன் முதல் குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்கும்போது, ஆடையை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அணிவிக்க வேண்டும். நூல் ஆடையை மட்டுமே குழந்தைகளுக்கு முதலில் அணிவிக்க வேண்டும்.
போகர்: மகாபிரபோ! மிருகசீருஷ நட்சத்திரத்தில் புத்தாடை அணிவிப்பதன் மகத்துவத்தை அறிய விரும்புகிறோம்.
அகத்தியர்: மிருகசீருஷ நட்சத்திரத்தில் புது ஆடையை அணிவித்தால் குழந்தைகளுக்கு உடம்பில் தீர்க்க சுந்தரா என்ற தேவியின் அருளால் தன் மானத்தை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமானது குழந்தையிலிருந்தே வளர்கிறது. இவ்வாறு செய்வதால் பிற்காலத்தில் மானம், ஈனம் இழந்து திரிய மாட்டார்கள்.
கங்கைக்குக் குழந்தையாக பீஷ்மர் பிறந்தவுடன் மிருகசீருஷ நட்சத்திரத்தில் கங்கா தேவி பீஷ்மருக்கு ஆடை அணிவித்தாள். கடைசிவரை சிறப்புடன் வாழ்ந்து உலகம் போற்றும் உத்தமராய் தன் மானத்தைக் கடைசிவரை காப்பாற்றி வாழ்ந்தார் பீஷ்மர்.
குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த போதும் இவ்வாறு மிருகசீருஷ நட்சத்திரத்தன்று புத்தாடைகள் அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முறையால் தீர்க்க சுந்தர தேவியின் பூரண அருட்கடாட்சம் பெற்று சிறப்பான வாழ்கையைப் பெறலாம்.
கர்ப்பத்திலிருந்து வளர்ந்த முடி தேவமுடியாகக் கருதப்படுகிறது. அதை இறைவனுக்கு சமர்ப்பிப்பது விசேஷம். முடி மூலமாகவே இறைவன் தனது சக்தியை குழந்தையின் உடலுக்குள் செலுத்தி முறையான மூளை வளர்ச்சிக்கு அனுகிரகம் செய்கிறார். எனவே முதல் முடியான திருமுடியை இறைவனுக்குச் சேர்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் திருமுடி எடுத்துக் காது குத்துவதால் குழந்தைகளின் புத்தி கூர்மையாகும்.
குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது, புதுப்பாடங்கள் தொடங்குவது, வீட்டில் அம்மா, அப்பா புதுப்பாடங்கள் சொல்லித் தருவது, எந்த புதுப்பாடமாக இருந்தாலும் அதைச் சொல்லித் தருவது போன்ற எல்லாக் காரியங்களையும் அஸ்வினி, ரோகினி, திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களில் தொடங்கி வைக்க வேண்டும்.
இந்த நட்சத்திரங்களில் முதன்முதலில் ஆரம்பித்துச் செய்கின்ற படிப்பு எளிதில் ஒருவர் மனதில் பதியும். குழந்தைகள் கடினமான விஷயங்களையும், எளிதாக கிரகித்துக் கொள்ளும் சக்தியை இந்த நட்சத்திரங்களின் அனுகிரகத்தால் பெறுகிறார்கள். எனவே குழந்தைகள் சீரிய கல்வி அறிவைப் பெற தகுந்த நட்சத்திரத்தில் புதுப்பாடங்களை ஆரம்பித்து வைப்பது பெற்றோர்களின் கடமையாகும்.
பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் போன்ற பொருட்கள் முதன்முதலில் வாங்கித் தருவது, முதலில் எழுதுவது போன்றவற்றை இந்த நட்சத்திரங்களில் தான் செய்ய வேண்டும்.
போகர்: குருதேவா! குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதை அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் என்று அருளினீர்கள். எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் எந்தெந்த நட்சத்திரங்களில் பள்ளியில் சேர்ந்தால் விசேஷமான பலன்களைப் பெறலாம் என்பதையும் அறிய விரும்புகிறோம், குருதேவா!
அகத்தியர்: எனதருமை சீடனே! எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளை எந்த நட்சத்திரத்தில் பள்ளியில் சேர்ப்பது என்பது குரு மூலமாகவே ஒவ்வொரு தாய், தந்தையரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், முதலில் புதிதாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது எந்த நட்சத்திரத்தில் சேர்க்க கூடாது என்பதை ஒவ்வொரு தாய், தந்தையரும் அறிந்து கொள்ள வேண்டும்.
குரு, சுக்ர மூடங்களில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது சரியல்ல. புதிய படிப்புகளை தொடங்கவும் கூடாது.
போகர்: குருதேவா! பலர் அறியாமையால் தங்கள் குழந்தைகளைத் தகாத நட்சத்திரத்தில் சேர்த்து அதனால் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்துகின்றனர். அவர்கள் தவறுக்கான பிராயச்சித்த முறைகள் ஏதேனும் இருந்தால் கருணை கொண்டு அம்முறைகளை விளக்க வேண்டும், குருதேவா!
அகத்தியர்: மனிதனின் எல்லாத் தவறுகளுக்கும் பிராயச்சித்தம் அளிப்பதாக இருந்தால் தவறுகளும், பிராயாசித்தமுமே வாழ்க்கையாகி விடும். பிராயச்சித்தம் என்பது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தகுதியறிந்து அளிக்க வேண்டிய ஒன்று! இருப்பினும் உலக மக்களின் நல்வாழ்வையே உயிர் மூச்சாக கொண்டு வாழும் எனதருமைச் சீடன் கேட்பதால் இங்கு சில பிராயச்சித்த முறைகளை அருளுகின்றோம்.
ஒவ்வொரு தாய் தந்தையரும் முதன்முதலில் எந்த நட்சத்திரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தோம் என்பதை எழுதி வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். சேர்க்க வேண்டிய நட்சத்திரத்தில் ஒருகால் அறியாமையால் தவறு செய்து இருந்தால் அதற்குப் பரிகாரங்களையும் குழந்தைக்காக தாய், தந்தையே செய்திடல் வேண்டும்.
இவ்வாறு தவறான நட்சத்திரங்களில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்திருந்தால், குழந்தை கவனக் குறைவாகவும், படிப்பில் அதிக நாட்டமில்லாமலும், பள்ளிக்குப் போகின்றேன் என்று ஊர் சுற்றி வருவதும்,ஆசிரியை, ஆசிரியர்களை எதிர்த்துப் பேசி படிப்பைக் கெடுத்து கொள்வதும், தீய சகவாசங்களை ஏற்படுத்திக் கொண்டு தான்தோன்றித் தனமாய் அலைகின்ற நிலையும் ஏற்பட்டு விடுகின்றது. பெற்றோர்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள சத்சங்கம் நிச்சயம் தேவை.
பரிகாரங்களில் எளிமையான பூஜைகளை முடிந்த மட்டும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தும், பிரசாதங்களை தாய், தந்தை செய்து கோயில்களில் தருமமும் செய்தல் வேண்டும். அந்தக் குழந்தைகள் பள்ளியை முடித்து வெளிவரும் வரை வாரத்திற்கு ஒரு நாள் பள்ளியில் சேர்த்த கிழமையை பிரசாதம் தருவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேல் படிப்பு, உயர் படிப்பு இவை படிக்க சேர வேண்டிய முறையை குருவை கேட்டுச் செய்யவும்.
குசந்தைகள் பிறந்த |
பள்ளியில் சேர்க்க |
பரிகாரமாக தானம் செய்ய |
அசுவனி |
உத்திராடம் |
கொழுக்கட்டை |
பரணி |
கிருத்திகை |
தேங்காய் சாதம் |
கிருத்திகை |
பரணி |
கொண்டைக் கடலை சுண்டல் |
ரோகினி |
திருவாதிரை |
தேங்காய் சாதம் |
மிருகசீருஷம் |
கேட்டை |
தக்காளி சாதம் |
திருவாதிரை |
திருஓணம் |
சோளாப்பூரி |
புனர்பூசம் |
கேட்டை |
எலுமிச்சை சாதம் |
பூசம் |
சித்திரை |
கறிவேப்பிலை சாதம் |
ஆயில்யம் |
திருஓணம் |
வெங்காயக் குழம்பு |
மகம் |
கிருத்திகை |
கை முறுக்கு |
பூரம் |
உத்திராடம் |
பால் பேணி |
உத்திரம் |
பூரம் |
கேரட் சாதம் |
அஸ்தம் |
சுவாதி |
தயிர் சாதம் |
சித்திரை |
ரேவதி |
மிளகாய் பொடி இட்லி |
சுவாதி |
ரோகினி |
ரவா தோசை |
விசாகம் |
ரேவதி |
மைசூர் பாகு |
அனுஷம் |
மிருகசீருஷம் |
எள்ளு சாதம் |
கேட்டை |
ரோகினி |
புளியோதரை |
மூலம் |
உத்திரம் |
மசால் வடை |
பூராடம் |
உத்திரம் |
இடியாப்பம் |
உத்திராடம் |
பூராடம் |
மஞ்சள் பூசணி சாம்பார் சாதம் |
திருஓணம் |
சதயம் |
வெண் பொங்கல் |
அவிட்டம் |
ஆயில்யம் |
குருமா சாதம் |
சதயம் |
அஸ்தம் |
ஆப்பம் |
பூரட்டாதி |
ஆயில்யம் |
பூரி உருளை கிழங்கு |
உத்திரட்டாதி |
அவிட்டம் |
மசால் தோசை |
ரேவதி |
அஸ்தம் |
வற்றல் குழம்பு |
குழந்தைக்கு பெயர் வைக்கின்ற நிலை: குழந்தை பிறந்த நட்சத்திரத்திற்கு உகந்த நாம எழுத்துக்களில் பெயரை ஆரம்பித்து வைக்கவேண்டும். பெயர் எழுத்துக்களின் கூட்டு எண் பிறந்த தேதிக்குப் பகையில்லாத வகையில் அமைத்து பெயர்களை குழந்தைக்குச் சூட்டுதல் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
9. கணக்கில் (Mathematics) குழந்தைகள் திறமைசாலியாக ஆகவேண்டும் என்றால் பரணி நட்சத்திரத்தில் கணக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும்.
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம் போன்ற நட்சத்திரங்களில் கணக்குப் பயிற்சிகளையும், செயல்முறைபாடுகளையும் தொடர்ந்து பழகிக் கொண்டு வந்தால் வெற்றி பெற வாய்ப்பாக அமையும்,வணிகவியல் (Commerce) பாடத்திற்கும் இந்த நட்சத்திரங்களே உகந்தவை.
ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகளில் பயிற்சி பெற அஸ்வினி, புனர்பூசம், பூசம் போன்ற நட்சத்திரங்களில் ஆரம்பித்துப் பயிற்சியைத் தொடங்கிச் செய்து வந்தால் குழந்தைகள் நல்ல நிலையை அடைவார்கள்.
Physics, Chemistry போன்ற பாடங்களில் சிறந்து விளங்க ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் ஆரம்பித்துத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
எல்லா விஞ்ஞானப் பாடங்களுக்கும் (Science Subject) பூரம், உத்திரம் நட்சத்திரங்களில் ஆரம்பித்துப் பயிற்சியை தொடர்வது சிறந்த பலன்களைத் தரும்.
Computer Science பயில்வோர் ஹஸ்தம், சுவாதி நட்சத்திரங்களில் பயிற்சியை ஆரம்பித்துச் செய்து வர வேண்டும்.
சரித்திதிரம், பூகோளம் (History, Geography) பாடங்களை கேட்டை, மூலம் நட்சத்திரங்களில் தொடங்கி வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.
Engineering, Medical Science படிப்புகளை திருவோணம் நட்சத்திரத்தில் தொடங்கி செய்வது விசேஷமான பலன்களைத் தரும்.
சட்டப்படிப்பு (Law) படிப்போர் சுவாதி, விசாகம், அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம் நட்சத்திரங்களில் ஆரம்பித்துச் செயலாற்ற வேண்டும்,
10. தாய், தந்தையர் குழந்தைகளை வைத்து வாரம் ஒரு முறையாவது நவக்கிரக சாந்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரந்தன்று நவக்கிரக சாந்தி செய்ய வேண்டும். அதனால் நவகிரகங்கள் சகாயமாக அமைந்து அறிவோடும் திறமையோடும் குழந்தைகள் வாழ வழி செய்கின்றன.
ஒன்பது கிரங்களின் அஷ்டோத்திரத்தை (108 பெயர்கள்) படித்து நமஸ்கரித்தல் எளிமையான நவக்கிரக சாந்தியாகும்.
11. குழந்தைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தருவதாக இருந்தால் (மூன்று சக்கர சைக்கிள், சைக்கிள், two wheelers etc) புனர்பூசம், சுவாதி போன்ற நட்சத்திரங்களில் வாங்கித் தருவது உத்தமம். பத்திரமாக குழந்தைகள் பிரயாணம் செய்ய இந்த நட்சத்திரங்கள் உதவி புரியும்; குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் ஏதுவாக இருக்கும்.
12. குழந்தைகளுக்கு நோய் வந்தால் நோய் நிவர்த்தி அடைய உரித்தான மருந்தகளை அஸ்வினி நட்சதித்திரத்தில் கொடுத்தால் துரிதமாக குணமாகும்.
மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம் நட்சத்திரங்களில் குழந்தைகள் முறையாக எண்ணெய் தேய்த்து தலைக்குத் குளித்தால் அதிகமாக நோய் நாடாது. தலைக்குக் குளித்த பின் முறையாக தூபமிடுவதால் எந்தவிதமான பிணிகளும், தோஷங்களும் குழந்தைகளை அண்டாது.
13. குழந்தைகள் Foot ball, cricket போன்ற விளையாட்டுகளிலும், இயந்திரங்களையும் இயக்குவது (treadle, sewing machine etc.) Computer Operations போன்றவற்றிலும் ஈடுபடுவதை ஹஸ்தம், சித்திரை,உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திரங்களில் ஆரம்பிக்க வேண்டும்.
Typewriting, Shorthand, Photography, Driving பயிற்சிகளையும் இந்த நட்சத்திரங்களிலேயே தொடங்கிச் செய்ய வேண்டும். எல்லாவித practical training செய்வதற்கும் இந்த நட்சத்திரங்கள் உகந்தவை.
14. Agriculture Subject பூச்செடிகள் வைத்தல், மரம் நடுதல், தோட்டம் அமைத்தல் போன்றவற்றை அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் நட்சத்திரங்களில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.
15. பாட்டு, நடனம், இசைக் கருவிகளை வாசித்தல் இவைகளை சதயம், உத்திரட்டாதி, ரேவதி, திருவோணம், அனுஷம், சுவாதி, சித்திரை, ஹஸ்தம், உத்திரம் நட்சத்திரங்களில் தொடங்கிப் பயில வேண்டும்.
ஆரோக்கியமான உணவு
போகர்: குருதேவா! குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எத்தகைய உணவுகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டுகிறோம்.
அகத்தியர்: உடலையும், உள்ளத்தையும் திறம்பட வளர்க்கும் எண்ணற்ற உணவு வகைகள் உள்ளன. அவைகளைக் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் ஏற்பதால் குழந்தைகளும் பெரியவர்களும், அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
அந்தந்த நட்சத்திரத்தில் ஏற்க வேண்டிய ஆரோக்கியமான உணவு
நட்சத்திரம் | ஏற்க வேண்டிய உணவு | பலன்கள் |
அசுவனி |
சிறுவர்களுக்கு வல்லாரை பொடி, தூதுவளைப் பொடி, |
ஞாபக சக்தியை வளர்க்கும் |
பரணி |
கருவேப்பிலைப் பொடி சாதம் |
சோர்வை அகற்றும் |
கிருத்திகை |
அகத்திக்கீரை பிசைந்த உணவு |
உச்சரிப்புகளில் தெளிவு கிட்டும் |
ரோகினி |
முருங்கைக் கீரை பிசைந்த உணவு |
தாய்மொழி அல்லா பிற மொழிகளைக் கற்கின்ற திறமை உருவாகும் |
மிருகசீருஷம் |
வேப்பம்பூ - (வேப்பம் பூவை பச்சடியாக சாதத்தில் கலந்து கொடுக்கலாம்) |
கேட்டதை கிரகிக்கின்ற சக்தி பெருகும் |
திருவாதிரை |
வில்வம் 5 இதழ், மிளகுத் தூள், ஒரு பூண்டு மூன்றையும் |
படிப்பில் குழப்பங்கள் வராது |
புனர்பூசம் |
தூதுவளை பொடி பிசைந்த சாதம், குறைந்தது 3 |
மறதி வராது, படித்ததை நினைவு கூறும் சக்தியைப் பெருக்க வழி |
பூசம் |
பசலை கீரை பிசைந்த சாதம் |
எழுத்தில் தெளிவு பெற வழி செய்யும் |
ஆயில்யம் |
எண்ணையில்லாத உணவுப் பொருட்கள் |
எழுத்துப் பிழைகள் குறையும் |
மகம் |
பாகற்காய்ப் பொடி சாதம், குறைந்தது மூன்று உருண்டைகள் கொடுக்கவும் |
தூக்கத்தில் முறுக்குவது, அலறுவது குறையும் |
பூரம் |
வெள்ளை பூசணிக்காய் அல்வா, அளவோடு கொடுக்க வேண்டும் |
ஆழ்ந்த தெளிவு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் |
உத்திரம் |
பொன்னாங்கன்னிக் கீரை பிசைந்த சாதம் |
பாடங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி பெற வாய்ப்புண்டு |
அஸ்தம் |
அருகம்புல் பொடி சாதம். அருகம்புல் பொடியை சாதத்தில் |
பாடங்களை மனனம் செய்வதற்குச் சக்தியைக் கொடுக்கிறது |
சித்திரை |
வாழைத்தண்டு உணவு - பொரியல், கூட்டு |
பெண் குழந்தைக்குப் பேச்சு திறமை அதிகமாக வளரும் |
சுவாதி |
அரைக்கீரை உணவு |
வினாக்களையும், விடைகளையும் பொருத்திப் பார்கின்ற திறமை வளரும் |
விசாகம் |
பருப்பு கீரை கடைந்து சாதத்தில் பிசைந்து கொடுக்கவும் |
விளையாட்டு திறமை அதிகரிக்கும் |
அனுஷம் |
ஆராக்கீரை பொரியல் |
இரத்த ஓட்டத்தைச் சமன்படுத்தி அவசரமாக காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்கு வழி வகுக்கும் |
கேட்டை |
புதினாக்கீரை துவையல் |
குழந்தைகள் படிப்பில் படபடப்பு இல்லாமல் சமத்துவத்தை அளிகிறது |
மூலம் |
கொத்தமல்லி துவையல் |
வாய்ப்பாடு மனனம் செய்வதற்கு தெளிந்த நினைவைத் தருகிறது |
பூராடம் |
வெண்டைக்காய் கறி |
பேச்சில் நிதானத்தைக் கொடுக்கிறது |
உத்திராடம் |
தேனில் ஊறிய இஞ்சி |
அதிகமாகப் படித்தால் சூடு ஏறாமல் சூடு சமனியாய் வைக்கும் |
திருஓணம் |
வெள்ளை வெங்காயச் சாறு அல்லது பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிய தயிரில் போட்டு உண்பது |
பார்த்ததை கிரகிக்கின்ற சக்தி பெருகும் |
அவிட்டம் |
பாலில்தேன் கலந்து மூன்று வேளையாவது பருக வேண்டும் |
இதனால் படிக்கின்றவர்களுக்குத் தேவையான உடல் ஓய்வு கிடைத்து புத்துணர்ச்சி பெறுவார்கள் |
சதயம் |
தேனில் ஊற வைத்த சீமை அத்திபழம் |
பழைய பாடங்களை மீண்டும் நினைவு கூறும் சக்தி கிடைக்கும். பெரியவர்கள் பழைய நினைவுகளை நினைவு கூற வழி வகுக்கும் |
பூரட்டாதி |
தேனில் ஊற வைத்த பெரு நெல்லிக்கனி |
சமயோசித புத்தி வளர ஏதுவாக இருக்கும் |
உத்திரட்டாதி |
வெள்ளை அல்லது சிவப்பு முள்ளங்கி அல்லது முள்ளங்கிச் சாறு |
கலந்தாலோசிக்கும் திறமை பெருகும் |
ரேவதி |
பாலில் வேக வைத்த மலைப் பூண்டு அல்லது நெய்யும், |
எழுத்து வேகத்தைத் தருகிறது |
மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தையின் வயது, விருப்பத்தைப் பொறுத்து, சித்த வைத்தியர்கள், பாட்டிமார்களை ஆலோசித்து கவனமாக, தேவையான அளவு கொடுக்கவும். பெரியவர்களும் இந்த உணவுப் பழக்கத்தைக் கையாண்டு அளப்பரிய பயன்களைப் பெறலாம்
போகர்: குருதேவா! குழந்தைகளுக்கான எளிய பூஜை முறைகளை எடுத்துரைக்க வேண்டுகிறோம்!
அகத்தியர்: பூஜை என்பது மிகவும் கடினமானதொரு காரியம் என்ற எண்ணும் நிலையையே கலியுகத்தில் காண்கிறோம். இறைவனுக்கும், ஏழை எளியவர்க்கும் செய்யப்படும் அனைத்து சேவையும் பூஜையே! அன்பை அடிப்படையாக கொண்ட அனைத்துச் செயல்களும் பூஜையே! அன்பே சிவம்!
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் குழந்தைகள் யாம் அறிவிக்கும் செந்தமிழ்த் துதியை பன்னிரண்டு முறைக்குக் குறையாமல் தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் சொல்லிவர வேண்டும்! இது மிகவும் எளிமையான, ஆனால் மிக்க சக்தி வாய்ந்த பூஜை முறையாகும்,
ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி
துடையூர்
அசுவனி:
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே !
பரணி:
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே!
கிருத்திகை:
நனவினும் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே!
ரோகினி:
ஈன்றாளுமாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் திருப்பாதிரி புலியூர்த்
தோன்றாத் துனையாயிருந்தனன் றன்னடி யோங்களுக்கே
மிருகசீரிஷம்:
பற்றாய் நினைந்திட போது நெஞ்சே யிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யாலைகடல் மூடினுங் கண்டேன் புகல்மைக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்றன மொய்கழலே
திருவாதிரை:
விடையான் விரும்பி யென்னுள்ளத் திருந்தானினி நமக்கிங்
கடையா வவல மறுவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பாதிரிப்புலியூர்
உடையா னடியாரயடி யோங்கட் கரியதுண்டே
புனர்பூசம்:
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே
பூசம்:
இடுக்கண் பட்டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினு மருளின்னாமுற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே
ஆயில்யம்:
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சிவாயவே
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஓமாம்புலியூர்
மகம்:
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமார்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே
பூரம்:
புறம்புயத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவி கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே
உதித்ரம்:
கோலக்காவிற் குருமணியை குடமூக்குறையும் விடமுணியை
ஆலங்காட்டி லந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறை எம்பசும் பொன்னைச்
சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே
அஸ்தம்:
விண்ணுலா வுந்நெறி வீடுகாட்டுந் நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள் வேடங்களே
சித்திரை:
பங்க மென்னப்படர் பழிகளென் னப்படா
புங்க மென்னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கமாறுஞ் சொன்ன அடிகள் வேடங்களே
சுவாதி:
கரைத லொன்றும் மிலை கருதவல்லார் தமக்
குரையி லூனம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயுந்தேவன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள் வேடங்களே
ஸ்ரீஅகத்திய பெருமான்
வேதாரண்யம்
விசாகம்:
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேய்வனே!
அனுஷம்:
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை யாரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
கேட்டை:
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
மூலம்:
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போ நமதுள்ள வினைகளே
பூராடம்:
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னி னண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே
ஸ்ரீஞானசரஸ்வதி
வேதாரண்யம்
உத்திராடம்:
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றனண்ணாமலை
சிந்தி யாவெழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே
திருஓணம்:
ஒருமை பென்மையுடை யன்சடையன் விடையூரும் இவனென்ன
அருமையாக வுரைசெய்ய அமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமை பெற்ற கடல்கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமைபெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே
அவிட்டம்:
மறைகலந்த ஒலி பாடலோடாடலராகி மழுவேந்தி
இறைகலந்த இனவெள்வளை சோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறைகலந்த பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே
சதயம்:
நீர் பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இனவெள்வளை சோரஎன் உள்ளங் கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே
புரட்டாதி:
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வெள் திருக்கைவேல் – வாரிக்
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை
உத்திரட்டாதி:
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடிய வினைத் தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே
ரேவதி:
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.
போகர்: குருதேவா! உத்தமக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சிறந்த நெறிமுறைகளையும், அவ்வாறு பெற்ற குழந்தைகளை நன்முறையில் வளர்க்கும் உன்னத விதிமுறைகளையும் மக்கள் அனைவரும் உறுதியாகக் கடைப்பிடித்து அருள்வழி காண ஆதிசக்தியின் திருவருளை வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.
(சீடர்கள் அனைவரும் அகத்திய மாமுனிவரின் பொற்பாதங்களை வணங்கி தியானத்தில் ஒன்றினர்)
குழந்தைகளுக்கான தெய்வீக பாடங்கள்
1. காலையில் எழுந்தவுடன் கண்கண்ட தெய்வமாம் தனது பெற்றோர்களை தியானித்து வணங்க வேண்டும்
2. தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தெய்வமாக மதித்து, மிக மரியாதையுடன் பழக வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை நிந்திபதோ அல்லது கேலி செய்வதோ கூடாது.
3. தன்னைவிட வயதில் மூத்தவரிடம் மரியாதையும், சக தோழர் / தோழியரிடம் அன்பு செலுத்துதல் வேண்டும். பேச்சில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அறவே கூடாது.
4. முதியோர், ஊனமுற்றோர் போன்றோரை அவமதியாது அவர்களுக்கு தன்னால் இயன்ற சிறு சேவைகளை அவ்வப்போது செய்வது அவர்களின் மனமார்ந்த ஆசியைப் பெற்று தரும்.
5. கோயில்களுக்கு செல்கையில் அங்கு கிடக்கும் எரிந்த தீக்குச்சி, காகிதம், பழத்தோல், தேங்காய் ஓடு, நார் போன்ற குப்பைகளை அகற்றும் எளிய திருப்பணியைத் தங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டும். சுலபமான இந்த திருப்பணியே ஒரு மனிதனை உன்னத ஆன்மீக நிலைக்கு உயர்த்திச் செல்லும் சக்தி வாய்ந்தது!
6. மேலும் பெற்றோர்கள் தினந்தோறும் தான தர்மங்களை சிறிய அளவிலாவது(காக்கைக்கு உணவு, பசுவிற்கு கீரை/பழம், நாய்க்கு பிஸ்கட் அளித்தல் போன்றவை) தங்கள் குழந்தைகள் மூலமாக செய்துவர வேண்டும்.
சிறு வயதில் துவங்கும் இதுபோன்ற தெய்வீகப் பழக்கங்களே குழந்தைகள் மனதில் ஆழ பதிந்து, எதிர்காலத்தில் எப்போதும் இறைநினைவுடன் வாழ்ந்து, பல நற்காரியங்களை செய்ய தேவையான அஸ்திவாரமாக அமைகிறது!
புதன்கிழமை, நவமி, புனர்பூச நட்சத்திர நாட்களில் வித்யா விருத்தி தைலத்தை சரஸ்வதிதேவிக்கு, ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்திக்கு ஏற்றி வழிபட்டால், குழந்தைகள் கல்வியில் மேன்மை அடைய உதவும்.
புதனும் நவமியும் கூடும் நாள் சரஸ்வதி கடாட்சம் நிறைந்து, நிரவி, விரியும் கல்வி சக்தித் திருநாளும் ஆகும். தம் ஞானதெய்வ குருவாம் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் மூர்த்தியிடம்கலைமகள் பிரம்ம ஞானம் பற்றி உபதேசம் பெரும் அபூர்வமான திருநாள் இது. இத்தகைய திவ்யமான சரஸ்வதி சக்தி நாட்களில் உடையார்கோயில், வேதாரண்யம், துடையூர் ஓமாம்புலியூர் தலங்களில் குடும்பத்தோடு வழிபட்டு வருக.
ஓம் குருவே சரணம்