தர்மத்தை நிலைநாட்டவே நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சிலகாகித ஹம்ஸ்வர லீலை

திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அருள் பெறும், அருள் வர்ஷிக்கும் சித்தர்கள் கோடி கோடியே. இதில் சிலகாகித சித்தர்கள் என்ற ஒருவகை அற்புத சித்தர்கள் திருஅண்ணாமலையை சதாசர்வ காலமும் கிரிவலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். பொதுவாக, 30000 என்ற எண்ணிக்கையில் வலம் வரும் இத்தகைய உத்தமர்கள் தங்கள் எண்ணிக்கையை 3000, மூன்று லட்சம் என்றவாறு எல்லாம் மாற்றிக் கொள்வதும் உண்டு. சிலகாகித சித்தர்களின் மகிமை என்னவென்றால் இவர்களை திருஅண்ணாமலை புனித வளாகத்தில், கிரிவலம் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதே. ஒரு மேகக் கூட்டத்தைப் போல், மேகங்கள் வடிவில் இவர்களின் உருவம் அமைவதால் சற்குருவின் வழிகாட்டுதலின்பேரில் மட்டுமே இவர்களை இனங் கண்டு கொள்ளவோ, தரிசிக்கவோ முடியும் என்றாலும் திருஅண்ணாமலையை வலம் வரும் பக்தர்கள் தாங்கள் கிரிவலம் வரும்போது தரிசிக்கும் அனைத்து மேகக் கூட்டங்களையுமே சிலகாகித சித்தர்கள் என்று நினைத்து தரிசனம் செய்வதால் அவர்கள் வெறும் மேகக் கூட்டங்களாகவே இருந்தாலும் அந்த பக்தர்களுக்கு சிலகாகித தரிசனப் பலன்களை வலம் வரும் பக்தர்களின் மூதாதையர்கள் பெற்றுத் தந்து விடுவார்கள் என்பதும் திருஅண்ணாமலை கிரிவல தரிசனப் பலன்களில் ஒன்றாகும்.

காமசமன தரிசனம்
திருஅண்ணாமலை

ஹம்ஸ்வரம் என்றால் என்ன ? ஹம் என்பதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு சித்தர்கள் குறிப்பது அனைத்து அட்சரங்களின் ஒலி ஒளிகளை இணைக்கும், சித்தர்கள் மட்டுமே அருளக் கூடிய யோக நிலையாகும். யோகம் என்றால் இணைப்பு. உதாரணமாக, மற்றுப் பற்று ... என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகத்தில் உள்ள வார்த்தைகள் ஹம்ஸ்வர முறையில் சித்தர்களால் இணைக்கப்படும்போது அந்தப் பதிகம் மட்டுமே குறைந்தது 300 நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாக அமைகின்றது. அணு என்பது நம்மைப் பொறுத்தவரையில் மேலோட்டமாக புரோட்டான் எலெக்ட்ரான் என்ற அடிப்படைத் துகள்களைக் கொண்டு அமைவது என்றாலும் இந்த அணுக்களில் உள்ள புரோட்டான் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையின் மாற்றம் மட்டுமே பிராணவாயு, ஹைட்ரஜன் போன்ற வாயுக்களை உருவாக்குகிறது என்பதை அறிவோம். இந்த வாயுக்களைக் கொண்டே சக்தி வாய்ந்த அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்றாலும் இந்த இரண்டு வாயுக்களின் இணைப்பு மட்டுமே பூலோகத்திற்கு அதி அத்யாவசியமான நீரை உருவாக்குகிறது அல்லவா ? இதுவே சித்தர்களின் அரிய பணி. மனிதன் அழிவிற்காக பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் அறிவையும் மக்களின் நன்மைக்காக, மேன்மைக்காக மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றவர்களே சித்தர்கள். நீரை பூலோக மக்களின் நன்மைக்காக அருளியது சுதீக்ஷண மகரிஷியின் தவப் பயன்தானே ? அதனால்தான் தினமும் நீரைப் பயன்படுத்தும் முன் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷியே போற்றி என்று கூறி சித்தர் பிரானுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாட்டை நம் சற்குரு பல்லாண்குகளுக்கு முன் அருளினார். இந்த ஒரே ஒரு வழிபாட்டை அடியார்கள் இத்தனை வருடம் இயற்றி வந்திருந்தால் கூட போதுமே, எந்த தொற்றுநோயையுமே கண்டு நாம் இன்று அஞ்ச வேண்டியதில்லை. இதனால் மாஸ்க் (முக ஆடை) அணிந்து நாமும் பயந்து கொண்டு மற்றவர்களையும் பயமுறுத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்காது.

எந்த ஒரு விஷயத்திற்குமே சற்குரு அளிப்பதே இறுதி விடை, ஒரே விடை என்றால் சிலகாகித சித்தர்கள் என்ற உத்தமர்களைப் பற்றி மட்டும் வேறு எவரிடமாவது இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியுமா என்ன. கிரிவலப் பாதையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தை நிறுவிய நம் சற்குரு முதன் முதலில் சிலகாகித சித்தர்களின் தரிசனத்தை தம் அடியார்களுக்கு பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் அனுகிரத்தையும் பூரணமாய்ப் பெற்றுத் தந்தார். இது 1993ம் ஆண்டில் நடந்த ஒரு குரு வீலைதானே, நமக்கு எப்படி இந்த அனுகிரகம் உதவி செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று நீங்கள் இங்கு காணும் சிலகாகித சித்தர்களின் தரிசனம் செவ்வாய் மடத்திலிருந்து பெறப்பட்டதே ஆகும். நம் சற்குரு ஆஸ்ரமத்தை நிறுவுவதற்காக ஹோமம் நிகழ்த்தியபோது திருஅண்ணாமலை செவ்வாய் மடத்தில் தம் அடியார்களுடன் தங்கித்தான் அந்த அரும்பணியை ஆற்றினார்கள் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். பூர்வ வாஸ்து ஹோமம் நிகழ்ந்த அன்று மாலைதான் தம் அடியார்களுடன் ஆஸ்ரம வளாகத்தில் எழுந்தருளி சிலகாகித சித்தர்கள் கூட்டத்தின் பலவிதமான தரிசனத்தை அடியார்களுக்குப் பெற்றுத் தந்தார். எப்படி ஒரு ஆலயத்தில் நடை சார்த்தும்போது இறுதி பூஜையாக பைரவருக்கு நன்றி தெரிவிக்கிறோமோ அதே போல் நம் சற்குரு பெற்றுத் தந்த சிலகாகித சித்தர்களை உடனிருந்து தரிசனம் செய்தது பைரவ வடிவில் வந்த ஒரு உத்தம அடியாரும் என்பதே அனைத்து உயிர்களுக்கும் கருணை வழங்கும் நம் சற்குருவின் மேன்மையாகும்.

ஸ்ரீபிட்சாடன மூர்த்தி
திருபாற்றுரை

திருஅண்ணாமலையில் நம் அகஸ்திய ஆஸ்ரமம் நிர்மாணிக்கப்பட்டபோது நடந்த வாஸ்து ஹோமத்தில் பங்கேற்ற அடியார்களுக்கு மட்டும்தான் சிலகாகித சித்தர்களின் ஆசி கனிந்தது என்று பொருள் அல்ல. அன்று மாலை யார் யாரெல்லாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து மலையை நோக்கி தரிசனம் செய்தார்களோ அவர்கள் அனைவருக்குமே சிலகாகித சித்தர்கள் அருட்கூட்டமாக வழங்கிய அற்புத தரிசனப் பலன்கள் எல்லாம் கனிந்திருக்கும் என்பதே உண்மை. இதற்காகத்தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முடிந்தவரை திருஅண்ணாமலை உச்சியை நோக்கி தரிசனம் செய்தவாறே கிரிவலம் வர வேண்டும் என்று நம் சற்குரு அருளுரை வழங்குகிறார். தற்போது ஏகப்பட்ட தரிசனங்களை கட்டடங்கள் மறைத்தவாறு எழுந்து உள்ளதைக் காண்கிறோம். போகப்போக இன்னும் எத்தனை எத்தனை தரிசனங்களை நாம் இழப்போம் என்று கூற முடியாது என்பதால் இருக்கும், கிடைக்கும் தரிசனப் பலன்களையாவது அடியார்கள் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஒரே வழி முடிந்தபோதெல்லாம் இயன்றவரை திருஅண்ணாமலையை கிரிவலம் வருவது ஒன்றுதான். போட்டோ வீடியோ என்னும் உபகரணங்கள் எல்லாம் ஏதோ பெயருக்கு நம் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையுமே தவிர, நாம் கிரிவலம் வந்து நம் சூட்சும சரீரத்தில் பெறும் பொக்கிஷங்களுக்கு இவை ஒரு அணு அளவு கூட நிகராக மாட்டா.

நாம் இப்போது தரிசனம் செய்யும் திருஅண்ணாமலை மலை வடிவில் இருந்தாலும் திருஅண்ணாமலையின் ஆதிவடிவம் மணி மாலை போன்றதே. யுகங்கள் தோறும் வைரம், பவளம், மாணிக்கம் என்று பல வடிவுகளில் எழுந்தருளிய திருஅண்ணாமலை ஆதியில் பல மணிகளைக் கோர்த்திருந்த வடிவில்தான் துலங்கியது. இந்த ஆதி வடிவை தரிசனம் செய்த நவநாத சித்தர்களின் அனுகிரகமே இன்றும் பூலோக மக்களுக்கு நலம் தரும் தேவாரம் என்பதான 32 தேவாரப் பதிகப் பாடல்களாகத் திகழ்கின்றன. திருஅண்ணாமலையை ஒன்று சேர்க்கும், இணைக்கும் மணிகளே திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் என்று ஒவ்வொரு தேவாரப் பதிகத்தை ஓதிய பின்னரும் கூறும் நம் சற்குரு வழங்கிய திருஅண்ணாமலை அகஸ்திய முற்றோதல் பத்ததியாகும். ஆக்சிஜன் ஹைட்ரஜன் என்ற இரு அணுவின் மூலக் கூறுகளே மக்கள் சமுதாயத்திற்கு அதி அத்தியவசியமான நீரைத் தோற்றுவிக்கக் கூடியவை என்றால் பல்லாயிரம் பிரணவ பீஜாட்சர மூலக் கூறுகளுடன் அமைந்த இந்த 32 பதிகங்கள் சாதிக்கும் அனுகிரகங்களை வாய் விட்டு விவரிக்க முடியுமா ? இந்த தேவார மணி மலையின் தன்மையை உணர விரும்புவோர்கள் முதலில் இரண்டே இரண்டு அடிப்படை மூலக் கூறு கொண்ட நீரை பயன்படுத்தும் விதமாக அமைந்த நம் முன்னோர்கள் அளித்த அர்க்யம், ஆசமணீயம், தர்ப்பணம் என்ற நீர் சார்ந்த வழிபாடுகளை தொடர்ந்து இயற்றி வர வேண்டும். அழகு, படிப்பு, செல்வம் போன்றவை பரம்பரையாக நம்மைத் தொடரும் நாம் விரும்பும் பாரம்பரியச் செல்வமாக இருந்தாலும் உண்மையில் ஒரு மனிதனைக் கரையேற்ற வல்லவை பக்தி என்ற பாரம்பரியமே ஆகும். அர்க்யம், ஆசமணீயம், தர்ப்பணம் என்ற பாரம்பரியச் செல்வங்களைக் குவித்தவர்களே ஸ்ரீகொன்றையடி விநாயகர் அருளும் கமணீய சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். இந்த பிலவ வருடம் இத்தகைய பீஜாட்சர வியாபகத்துடன் இணைந்திருப்பதே நாம் பெற்ற பெரும் பேறாகும். கம், பம், லம், வம் என்ற ஸ்ரீகொன்றையடி விநாயகர் அருளும் கமணீய சக்திகள் இந்த வருடத்தில் பல்கிப் பெருகுவதால் ஸ்ரீகொன்றையடி விநாயகரை வளர்பிறை சதுர்த்தி திதிகளில் வணங்கி நம் சற்குரு அருளிய தேவாரப் பதிகங்களை ஓதி வருவதால் இந்த ஆண்டில் மிகவும் சுலபமாக மணிமாலை சக்திகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதே நம் சற்குரு வழங்கும் இனிய அனுகிரகமாகும்.

இரட்டைப் பனைமரம்
அரண்மனைப்பட்டி

ஸ்ரீகொன்றையடி விநாயகரை தரிசனம் செய்து அரண்மனைப்பட்டியில் இந்த நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதிய பின்னர் திருஅண்ணாமலையை தேவாரப் பதிகங்களை ஓதியவாறு வலம் வந்து வணங்குவதால் மிகவும் அபூர்வமாக திருஅண்ணாமலையில் மிளிரும் மலரும் மணிமாலை சக்திகளைப் பெறலாம். இது எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் சித்தர்கள் அனுகிரகம் என்பதை நாம் சற்றும் பகுத்துணர முடியாது. ஜபமாலையைக் கொண்டு நாம் மந்திரங்களை ஜபிக்கும்போது அதில் அமையும் மேரு மணியை நாம் தாண்டிச் செல்லாது மீண்டும் ஜபத்தைத் தொடருவது போல் நம் சற்குரு அருளிய தேவாரப் பதிகங்களில் அமைந்த இடர் களையும் பதிகம் அமைகிறது என்பதே இந்த மேரு தேவாரப் பதிகத்தின் மகிமையாகும். அதனால்தான் ஒவ்வொரு முறை திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப அன்னதான வைபவமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வித அன்னதான வைபவமாக இருந்தாலும் அப்போது இந்த மேரு சக்திகளை பெருக்கும் இடர்களையும் பதிகம் நம் சற்குருவின் ஆசியால் ஓதப்பட்டது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தவாறே இந்த 32 தேவாரப் பதிகங்களையும் ஓதுவது சிறப்பு என்றாலும் குழந்தைகள், முதியவர்கள் பலரும் அமைந்த சத்சங்க வழிபாட்டை மேற்கொள்ளும்போது ஓரிடத்தில் அமர்ந்து இந்த தேவாரப் பதிகங்களை ஓதுவதும் ஏற்புடையதாகும். பிரம்மலிங்கம், கற்பக விநாயகர் ஆலயம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், பிருத்விலிங்கம், காமக்காடு, உண்ணாமுலை மண்டபம், அடிஅண்ணாமலை, அபயமண்டபம், நம் ஆஸ்ரமம், பஞ்சமுத தரிசனம், பச்சையம்மன் கோயில், துர்கை அம்மன் கோயில் போன்ற திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து தேவாரப் பதிகங்களை ஓதுவதும் ஏற்புடையதாகும்.

விசிறி சுவாமிகளைத் தரிசனம் செய்து யாராவது எந்த அனுகிரகத்தையாவது கேட்டால், “எங்க அப்பாவோ (திருஅண்ணாமலையான்) பெரிய பிச்சைக்காரன், அவனுடைய குழந்தையான நான் மட்டும் என்ன பணக்காரனா என்ன, நானும் ஒரு பிச்சைக்காரன்தான் ...”, என்று சொல்வார். ஆழ்ந்த பொருள் பொதிந்த சித்த வாசகம் இது. பொதுவாக, பிச்சைக்காரர்களுக்கு உணவு, உடை, செல்வம் என்று நாம் வழங்குவது வழக்கம். ஆனால், அகிலாண்ட நாயகனான சிவபெருமானுக்கு நாம் எதைத்தான் அளிக்க முடியும் ? ஆனால், அவரோ திருஓடு ஒன்றை ஏந்தி பிச்சை வாங்குவதற்கு தயாராகத்தான் இருக்கிறார். அதனால் நாம் ஒருவேளை சிவனுக்கு பிச்சை அளிப்பதாக இருந்தால் நம்முடைய ஆசை, காமம், குரோதம், பகைமை, பொறாமை போன்ற பல தீய குணங்களையும் சுபாவங்களையும் தானமாக அளிக்கலாம். ஆனந்தமாக ஏற்றுக் கொள்வான் நம் ஈசன். ஆனால், இந்த பிச்சை அளிப்பது முழுமையாக இருந்தால்தான் ஈசனுக்கும் சுவை, நமக்கும் பெருமை. அதாவது ஒரு முறை நாம் ஈசனுக்கு கோபம், ஆசை, காமம், பொறாமை இவற்றை தானமாக அளித்து விட்டால் மீண்டும் இத்தகைய நினைவுகள் நம்மை கனவிலும் தீண்டக் கூடாது. அப்போதுதான் அது முழுமையான “பிச்சையாக” இருக்கும். இருந்தாலும் மனித சுபாவம் அறிந்தவன் நம் ஈசன் என்பதால் முடிந்தபோதெல்லாம் இறைவனுக்கு இந்த பிச்சையை அளிப்பதால் பணச் செலவே இல்லாத இந்தப் பிச்சை நம்மை குணக் கோடீஸ்வரனாக ஆக்கும். இத்தகைய பிச்சையை முழுமையாக அளிக்க நமக்கு உறுதுணை செய்வதே 32 தேவாரப் பதிகங்களின் ஒரு பலனாகும்.

ஸ்ரீபார்த்தசாரதி கோயில்
திருஅல்லிக்கேணி சென்னை

ஒரு முறை பகவத் கீதை பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் நம் சற்குரு, “பகவத் கீதை பாராயணம் என்பது எத்தனையோ நன்மைகளைத் தரக் கூடியதுதான். ஆனால், பகவத்கீதையின் அர்த்தத்தை, பகவத்கீதை புகட்டும் பாடத்தை உணர்ந்து தெளிவதே மனிதர்களுக்கு பயன் தரக் கூடிய செயலாகும். உதாரணமாக, பகவான் ‘தர்மத்தை நிலை நாட்டவே நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்’, என்று உபதேசிக்கிறார் அல்லவா ? அப்படியானால் பகவானைத் தவிர வேறு எவரும் தர்மத்தை நிலை நாட்டுவதில்லையா ? தர்மத்தை நிலை நாட்டும் கிருஷ்ண பகவான் எங்கே, எவ்விடத்தில் அந்த தர்மத்தை நிலை நாட்டுகிறார் ? இதை ஒவ்வொரு அடியாரும் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். இதற்கு சரியான விடையை உங்களால் கண்டு கொள்ள முடிந்தால் அதுவே உங்கள் சாதனை வாழ்வின் கடைசிப் படியாக அமையும். அதன் பின்னர் நீங்கள் இறைவனை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டிய அவசியமே இருக்காது. உணர்ந்த பொருளை, அறிந்த தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறுவதாகத்தான் உங்கள் எஞ்சிய வாழ்வு அமையும் ...”, என்று பொருள் பொதிந்த அகஸ்திய கீதையை உபதேசித்தார்கள். இது அனைவருமே நிறைவேற்றக் கூடிய ஒரு ஆத்ம விசார பாடமாக இருந்தாலும் இந்த ஆத்ம விசாரத்தையும் தொடர்ந்து நிறைவேற்ற முடியாத அடியார்கள் பலர் உண்டு. அவர்களுக்கு கை கொடுப்பதே நலம் தரும் தேவாரப் பாராயணம் ஆகும். பொருள் புரிகிறதோ இல்லையோ, தொடர்ந்து நம் சற்குரு அளித்த தேவாரப் பதிகங்களை ஓதி வந்தால் சிறிது சிறிதாக கீதை புகட்டும் பாடத்தை, தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஆவோம். எல்லாப் பாதைகளுக்கும், வழிகளுக்கும், சுருக்கு வழி என்று உண்டு அல்லவா ? குறுக்கு வழியை காஞ்சி பரமாச்சாரியார், நம் சற்குரு போன்றோர் அங்கீகரிப்பதில்லை. இவ்வாறு காமத்தை வெல்வதற்கும் உள்ள சுருக்கு வழியே தேவாரப் பதிக முற்றோதல் ஆகும். திருஅண்ணாமலையில் உள்ள காமசமன தரிசனத்தை நோக்கியவாறே துர்கை ஆசனம் அல்லது துர்கா சரண ஆசனத்தில் நிலைத்து தேவாரப் பதிகங்களை ஒருமுகமாக ஓதுதல் என்பதே சித்தர்கள் அளிக்கும் சுறுக்கு வழியாகும். பல வருடங்களில் சாதிக்கக் கூடிய காமசமன அனுகிரகங்களை சில நாட்களிலேயே பெற்று விடலாம் என்பதே இத்தகைய தரிசனங்களின் மகாத்மியமாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் நிலை நின்றும் இந்த தேவார பதிகம் ஓதும் முறையை மேற்கொள்ளலாம்.

மனித மூளையில் கோடிக்கணக்கான செல்கள் உண்டு. இந்த செல்களின் பயன்பாடு பற்றி இன்றைய விஞ்ஞானம் எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை. மனித வாழ்நாளில் பாதிப் பகுதியை தூங்கியே கழிக்கும் ஒரு மனிதனின் தூக்கத்தை நிர்வகிப்பது ஒரே ஒரு செல் என்றால் நமது மூளையில் உள்ள மற்ற செல்களின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சிறுவயதில் படித்த பள்ளிக் கூடத்தின் பெயரையோ, நேற்று சாப்பிட்ட ஹோட்டலின் பெயரையோ எந்த வித கால வித்தியாசமும் இன்றி நம் நினைவுக்கு கொண்டு வரக் கூடியதே மூளையின் செயல் திறன் ஆகும். அறிவு ஜீவிகள் என்று நாம் புகழும் விஞ்ஞானிகள் கூட மூளையின் இரண்டு சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். சித்தர்கள், மகான்கள் போன்றோர் சுமார் ஐந்து சதவீத மூளையின் செயல் திறனை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மகான்களுக்கு 20, 30 சதவீதம் என்ற அளவில் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துவது சாத்தியமே என்றாலும் அந்த அளவிற்கு நம் பூலோகத்தில் தேவையில்லை என்பதே அதன் காரணமாகும்.

உதாரணமாக கோபால் (cobol) என்ற கம்ப்யூட்டர் மொழியைப் பற்றியோ மறைந்து போன பேஜர் (pager) என்ற தொலை தொடர்பு சாதனம் பற்றியோ உள்ள அறிவால் மனிதனுக்கு என்ன பயன் ? எப்படி 26 எழுத்துக்களே உடைய ஆங்கில மொழி இன்று உலகை ஆளும் ஒரு மொழியாக இருக்கிறதோ அது போன்றதுதான் நமது மூளையில் உள்ள செல்களின் செயல்திறனும் ஆகும். எப்படி ஆக்சிஜன் ஹைட்ரஜன் என்ற இரண்டு வாயுக்கள் இணைந்து நீரை உருவாக்கும் அற்புதத்தை நிகழ்த்துகின்றனவோ அது போன்றதே இந்த செல்களின் இணைப்பில் தோன்றும் பயன்பாடும் ஆகும். ஆனால், இந்த இணைப்பை நவநாத சித்தர்கள் என்ற உயர்ந்த நிலை சித்தர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் மாமறை இரகசியம் ஆகும். இத்தகைய ஒரு இணைப்பையே திருச்சிற்றம்பலம் என்ற திருவார்த்தையால் நவநாத சித்தர்கள் நிறைவேற்றுகின்றனர். இதற்கு அடிப்படையாக அமைவதே சிலகாகித சித்தர்களின் செயல்பாடு ஆகும். எனவே அது எழுத்துக்களின் இணைப்பாக அமைந்து மொழியாகத் தோன்றினாலும், மூலக் கூறுகளின் இணைப்பாக அமைந்து பல்வேறு பொருட்களாகத் தோன்றினாலும், சக்திகளின், பீஜாட்சரங்களின் இணைப்பாக அமைந்து இந்த உலகையே ஆளும் சக்தியாக இருந்தாலும் அனைத்தின் பின்னணியில் செயல்படுவதே சிலகாகித சித்தர்களின் அருட்பணியாகும். இந்த இணைப்பு இரகசியத்தை தொடர்ந்து சென்றால் பல சங்கம இரகசியங்களும் தெளிவாகும். சிவ சக்தி ஐக்யம், ஆண் பெண் இணைப்பு இரகசியங்கள் என்பவை எல்லாமே சிலகாகித இணைப்பு இரகசியங்களை குறிப்பவைதாமே. நம் சற்குரு திருஅண்ணாமலையை தொடர்ந்து வலம் வருவதால் இந்த உலகத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதன் பின்னணியில் அமைந்துள்ள இரகசியம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக வியாபித்து நிற்கிறது பார்த்தீர்களா ?!

ஸ்ரீவையாழி விநாயகர்
மப்பேடு சிவாலயம்

நாம் இரண்டு விதமான சக்தி பரிமாண மாற்றங்களைப் பற்றி அறிவோம். ஒன்றில் இரு சக்திகள் இணைகின்றன, மற்றொன்றில் ஒரே சக்தி இரு சக்திகளாகப் பிரிந்து செயல்படுகின்றது. இதில் இரு சக்திகள் இணைவதால் அதிக சக்தி ஏற்படும் என்பதை நம் பகுத்தறிவும் ஒப்புக் கொள்கிறது. விஞ்ஞானம் கூறுவதும் அதுதான். இதுவே ஆண் பெண் குழுமும் குடும்ப இணைப்பில் தோன்றும் சிவ சக்தி ஐக்ய இணக்கமாகும். ஆனால் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருப்பது என்பது இறுதி வரை ஏற்றுக் கொள்ளக் கூடிய பகுத்தறிவு வாதம் அல்லவே. இதைத்தான் நம் முன்னோர்களும் மகான்களும் சுட்டிக் காட்டினர், தங்கள் நடைமுறை வாழ்வில் சாதித்தும் காட்டினர். சிவ சக்தி ஐக்ய தரிசனம் கூறும் உன்னத உண்மையும் இதுவே ஆகும். ஆரம்பத்தில் கணவன் மனைவியாக இணையும் இருவரும் ஓரிரு சந்தானங்களைப் பெற்றெடுத்தவுடன் இந்த சிவ சக்திகளைப் பிரித்து அந்த சக்திகளை உலகிற்கு தாரை வார்த்து அளிக்க வேண்டும் என்பது நம் சற்குரு சுட்டிக் காட்டும் சித்த மகாத்மியமாகும். இணைப்பு, பிரிவு என்ற இரண்டு காரணங்களாலும் சக்தி தோன்றுவது இயற்கையே. இந்த இரண்டு விதமான சக்தி மாற்றத்தை முறையாக மக்கள் சமுதாய நன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு நிச்சயமாக நம் சற்குரு போன்ற வழிகாட்டிகளின் வழிகாட்டுதல் அவசியமே. கணவன் மனைவி என்ற இருவரும் உடலால் பிரிந்து உள்ளத்தால் இணைந்து நிறைவேற்றும் சாதனைகள் இந்த fusion, fission என்ற இரு விதமான சக்தி மாற்றங்களையும் உண்டாக்குவதால் இந்த சக்தி பரிமாணத்திற்கு ஈடு இணையே இல்லை என்பார் நம் சற்குரு. சிலகாகித சித்தர்கள் 3000 எண்ணிக்கையில் தோன்றுவதும், மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையிலும் தோன்றுவதுண்டு என்ற சித்த வார்த்தைகளில் பரிமளிக்கும் தத்துவங்கள் எத்தகைய பொருள் பொதிந்ததாய் விளங்குகின்றன ?

ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்

நாம் நினைப்பது போல் fusion, fission என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் என்பது சற்றும் எளிதல்ல. சித்தர்களைத் தவிர வேறு எவராலும் சாதிக்க முடியாத தத்துவமே இவை என்பதில் ஐயமில்லை. தன்னில் தானாய் இருக்கும் சிவ நிலையே பிரிவு என்று சாதாரண கண்ணோட்டத்தில் நாம் அறியக் கூடிய பௌதீக நிலையாகும். சிவனும் சக்தியுமாக இணைந்திருக்கும் நிலையையே நாம் இணைப்பு என்ற தத்துவமாக அறிந்துள்ளோம். புரியாது, தெரியாது என்பதற்காக எந்த இறை தத்துவத்தின் பலனையும் நாம் இழப்பதற்கு நம்மை விடுவதில்லை நம் முன்னோர்கள். புரிகிறதோ இல்லையோ இந்த பலவித இணைப்புகளின் பலவிதமான இரகசியங்களை சாதாரண ஒரு மனிதனும் புரிந்து கொள்ள உதவுவதே நம் பெரியோர்கள் அனுசரித்து வந்த குடுமி வகை சிகை பராமரிப்பும், பெண்களின் சடை வகைப் பின்னல் அலங்காரமும் ஆகும். குடுமி என்பதில் தலை கேசம் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சிவ தத்துவ ஐக்யமாகவும், பெண்களின் சடை அமைப்பில் மூன்றாக தலை முடி பிரிக்கப்பட்டு இணைக்கப்படுகிறது என்பதே இந்த தெய்வீக சங்கமத்தின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும். அலாகாபாத் திரிவேணி சங்கமத்தில், மற்றும் நம் புனித பாரதத்தில் அமைந்த சங்கமங்கள் அனைத்துமே இத்தகைய கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற சக்தி அம்சங்களைக் குறிப்பதாக அமைவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

பெண்கள் சடையைப் பின்னி இறுதியில் மூன்று மணிகள் கொண்ட ஒரு குஞ்சத்தை இணைக்கும்போது இந்த குஞ்சங்கள் பெண்களின் முதுகுத் தண்டின் முடிவில் அமைந்துள்ள மூலாதாரத்தை அடிக்கடி தீண்டுவதால் சிறிது சிறிதாக இந்த “தீண்டல்” இயற்கையாக குண்டலினியை எழுப்பும் ஒரு வழிபாடாக அமைகின்றது. முற்காலத்தில் இந்த குஞ்சத்தில் வைரம், மாணிக்கம் போன்ற மணிகள் அமைந்த வில்லைகளை வைத்து சூடுவதற்கு இதுவே காரணமாகும். பகட்டிற்காகவோ, வெறும் அலங்காரத்திற்காகவோ ஏற்பட்டதல்ல நம் முன்னோர்களின் செயல்முறைகள் அனைத்துமே. குண்டலினியின் தீண்டல் சக்தியில் குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பெண்கள் தங்கள் சடையை முன்னால் போடக் கூடாது என்று எச்சரித்து வந்தனர் நம் முன்னோர்கள். இவ்வாறு பெண்கள் தங்கள் சடையை முன்னால் போட்டுக் கொள்வதால் பிற ஆண்களின் காமப் பார்வை பெண்களின் முதுகுத் தண்டில் நிலைகொள்வதால் இத்தகைய பார்வை ஏக்கங்கள் பலவிதமான தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பெரியோர்களை, மகான்களை நமஸ்கரிக்கும்போது அவர்கள் அனுகிரக சக்திகள் விரயம் ஆகாது இருக்க பெண்கள் தங்கள் குஞ்சங்களை தங்கள் வலது கையால் பிடித்துக் கொள்வதால் இத்தகைய உத்தமர்கள் அளிக்கும் அருளாசி சுமங்கலிகளின் வலது கைரேகைகள் மூலமாக உடலை அடைந்து குடும்பத்திற்கு நன்மை பயக்கும். இத்தகைய அனுகிரகங்கள் எத்தனையோ பரம்பரைகளையும் தாண்டிச் செல்லும் இயல்புடையன என்பதே இந்த சடை, குஞ்சம், மணிகள் உணர்த்தும் பாடமாகும்.

காளி ஆசனம்
ஆரியங்காவு ஐயப்பதலம்

தற்காலத்திலோ இத்தகைய நீண்ட சடை உடைய பெண்களே அரிதாகி விட்டதால் இத்தகைய குஞ்சங்கள் அளிக்கும் அனுகிரகத்தை பெற விரும்பும் பெண்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்த துர்கை அம்மன் கோயிலிலோ அல்லது காமசமன தரிசனப் பகுதியிலோ இறைவனுக்கு குறைந்தது 21 முறை முன் தலை நன்றாக தரையைத் தொடுமாறு வணங்கி எழுவதால் திரிவேணி சங்கமம் அருளும் அனுகிரகத்தை பெறலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் வரப்பிரசாதமாகும். இந்த வழிபாட்டிற்குப் பின் தலை முடிக்கு செயற்கையான சாயப் பூச்சு மேற்கொள்வதை தவிர்த்தால்தான் வழிபாட்டின் பலன் பூரணமாகும். தற்காலத்தில் திருமணம் என்பதே அரிதாக வர, இதில் விளையும் (?!) முறையான சந்தான பாக்கியமும் அதனினும் அரிதாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான இரசாயன உரங்கள், மருந்துகளின் பயன்பாடு என்றாலும் ஜாதக அம்சங்கள் முறையாக கணிக்கப்படாததால் தம்பதிகள் இடையே ரஜ்ஜுப் பொருத்தங்கள் முறையாக அமையாததும் முக்கிய காரணமாகும். இதை முறைப்படுத்துவதாக அமைந்துள்ளதே ஸ்ரீவையாழி விநாயகர் எழுந்தருளியுள்ள மப்பேடு திருத்தலமாகும். ரஜ்ஜுப் பொருத்தங்களும் யோனிப் பொருத்தங்களும் சரியாக அமையாத குடும்பங்களில் தாம்பத்ய உறவுப் பிரச்னைகள் தோன்றுவது இயற்கையே. எனவே திருமணமான தம்பதிகள் மப்பேடு திருத்தலத்தை தரிசனம் செய்து ஸ்ரீவையாழி விநாயகரையும், ஸ்ரீவீர்யபாலீஸ்வரரையும், தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ள நவகிரக மூர்த்திகளையும் தரிசனம் செய்து, வழிபட்டு பயனடையுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

யோக ஆசனங்களில் காளி ஆசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உண்டு. மாதவிலக்கு பிரச்னைகளையும், தாம்பத்ய உறவு பிரச்னைகளையும் நீக்கி, ஆரோக்யமான சந்தானத்தைப் பெறுவதற்கு வழிகோலும் இந்த ஆசனம் தற்போது மறைந்து விட்டது என்றே கூறலாம். முற்காலத்தில் காளி ஆசனத்தில்தான் குழந்தைகளைப் பெற்றெடுத்துனர். இதனால் தாய்மார்களின் கனிவான பார்வையே அவர்கள் பெறும் குழந்தையின் மேல் படிய, சிறந்த ஆசீர்வாதத்தை அளிக்க ஏதுவாக அமைந்தது. தற்காலத்தில் குழந்தைப் பேற்றின்போது தாய் குழந்தையைப் பார்க்கும் முன் பல மருத்துவர்களும் செவிலிப் பெண்களும் குழந்தையை முதலில் பார்க்கும் நிலை ஏற்படுவதால் பெற்றோர்களின் முதல் ஆசீர்வாதத்தை குழந்தை பெற முடியாமல் போய் விடுகிறது. அது மட்டுமல்லாமல் காளி ஆசனத்தில் குழந்தைப் பேறு ஏற்படும்போது அது பூமியின் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப அமைவதால் பிறக்கும் குழந்தைகள் அறிவுத் திறனுடனும், வியாதிகள் எளிதில் நெருங்காத உடல் ஆரோக்கியத்துடனும் தோன்றுகின்றன. தற்காலத்தில் இத்தகைய பிறப்புகள் ஏற்படும் வாய்ப்பு இல்லாததால் குழந்தைகள் பிறந்த பின்னராவது போரூர், திருவானைக்காவல், கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு திருத்தலம் இவற்றை தரிசனம் செய்தலால் குழந்தைகள் நல்ல ஆரோக்யம் பெற ஏதுவாகும்.

ஸ்ரீவேதாந்த தேசிகர் காஞ்சிபுரம்

மேலும் காளி ஆசனத்தில் குழந்தை பிறக்கும்போது குழந்தையின் மூளைக்கு ஏகப்பட்ட இரத்தம் பாய்கிறது. இதுவே குழந்தைக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தந்து அது சிறந்த அறிவாளியாக மலர துணை செய்யும். கோச்செங்கட் சோழனின் தாய் தலை கீழாகத் தொங்கினாலும் குழந்தைப் பிறப்பின்போது காளி ஆசனத்தில் குழந்தையை ஈன்றெடுத்தாள். இதுவே அந்த குழந்தை வரலாறு காணாத அளவிற்கு சிவாலயங்களை கட்டும் சிவபக்தனாக மலர காரணமாக அமைந்தது என்பதே சித்தர்களின் அருள் மொழி.

வரும் 15.10.2021 வெள்ளிக் கிழமை ஸ்ரீஆயுர்தேவிக்கு உரிய சந்தான சௌபாக்ய பூஜை தினமாக அமைவது நம் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறே. பலவிதமான அபமிருத்யு தோஷங்களையும், சிசு வேதனைகளையும் தீர்க்கும் தினமாக இந்நாள் அமைகிறது. மூன்று ஆறு என்ற எண்களின் குசா இணைப்பு இத்தகைய சக்திகளைத் தோற்றுவிப்பதாகும். மேற்கண்ட ரஜ்ஜு தோஷங்களையும், சங்கம பிரச்னைகளையும், குழந்தைப் பேறு பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வாக, விடியலாக தோன்றுவதே வரும் வெள்ளிக் கிழமை அன்று திகழும் ஸ்ரீஆயுர்தேவி பூஜை தினமாகும். ஆயுர்தேவி பூஜையை எம்முறையிலும் நிறைவேற்றலாம் என்றாலும் இந்த ஆயுர்தேவி பூஜையை முடிந்த மட்டும் வெள்ளிக் கும்பத்தில், அதிலும் சிறப்பாக அஷ்ட லட்சுமிகள் உருவம் பொறிக்கப்பட்ட கலசத்தில் நிறைவேற்றுவதே சிறப்பாகும். கலச தீர்த்தத்தில் கங்கை, காவிரி (பவானி முக்கூடல்) போன்ற புனித தீர்த்தங்களை சேர்ப்பது சிறப்பு. குறைந்தது வானநீல வண்ணத்தில் அமைந்த மூன்று மீட்டர் நீளமுள்ள ரவிக்கைத் துணியை கலசத்திற்கு சார்த்தி, பூசை நிறைவில் அதை ஒன்பது கஜ புடவை, மாங்கல்யப் பொருட்கள், முழு தேங்காய் இவற்றுடன் சுமங்கலிகளுக்கு அளித்தல் கிடைத்தற்காரிய பேறாகும். ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஜயந்தி தினமாக இந்நாள் அமைவதால் அந்த உத்தமரின் அருளாசியும் இந்த பூஜையில் பல்கிப் பெருகும். வேதாந்த தேசிகரின் பெற்றோர்கள் இத்தகைய சுமங்கலி பூஜைகளைத் தொடர்ந்து 30 வருடங்கள் இயற்றிட அதன் கனிந்த அனுகிரகம் பெற்றவரே ஸ்ரீவேதாந்த தேசிகர் என்ற உத்தம ஆழ்வார் என்பதே நாம் நினைவில் கொள்ள வேண்டிய சுவையாகும்.

சிவஸ்வஸ்தி சக்கரம்

சிவஸ்வஸ்தி சக்கரம் என்ற ஒரு சக்கரத்தை நம் சற்குரு பல வருடங்களுக்கு முன்பே அருளியுள்ளார். இதன் மகிமையை உணர்ந்து கொள்ள பல பிறவிகள், பல்லாண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றாலும் இந்த பிறவியில் நாம் ஆரம்பித்து தொடர்ந்து இந்த சக்கர தியானத்தை, பயிற்சியை மேற்கொண்டால் காமம் என்பதை அறவே நீக்கும் உபாயத்தை பெற்றோர்கள் ஆவோம். பலருக்கும் உள்ளூர காமத்தை விட்டு விடும் விருப்பம் என்ற ஒன்றே முளைப்பதில்லை. காரணம் பஜ்ஜியாக இருந்தாலும், பட்டாடையாக இருந்தாலும் அதை விட்டு விடுவது என்பது சற்றும் சுவை அளிக்காது என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டதே அதன் காரணமாகும். ஆனால், எதையும் அறவே ஒழித்தால்தான் தியாகம் உணர்த்தும் பேரின்பத்தை உணர முடியும். இதற்கு ஆரம்பப் பாடமாக அமைவதே இந்த சிவஸ்வஸ்தி சக்கர வழிபாடாகும். வரும் வெள்ளிக்கிழமை அன்று அமையும் ஸ்ரீஆயுர்தேவி பூஜையில் கலச ஸ்தாபனத்தை மேற்கொள்ளும்போது பச்சரிசி மேல் சிவஸ்வஸ்தி சக்கரம் அமைத்து, வரைந்து, அதன் மேல் கும்ப கலசத்தை அமைப்பது சிறப்பாகும். இனியாவது தொடர்ந்து இந்த சக்கரத்தை முடிந்த போதெல்லாம் நம் வழிபாடுகளுடன் இணைத்து வழிபட்டு வருவதால் சுக்ர ஜோதி என்ற பெண்களிடம் தோன்றும் ஜோதியை நாம் தரிசிக்க முடியும். இந்த ஜோதி தரிசனத்திற்குப் பின்னரே பெண்களின் மேல் தோன்றும் மோகம் முற்றிலும் முறையும் என்பது மட்டுமல்லாது அடுத்து நாம் பெறும் ஸ்ரீசக்கர லோக தேவதைகளின் தரிசனத்திற்கும், ஸ்ரீலலிதா பரமேஸ்வரின் தரிசனத்திற்கும் இது அத்தியாவசியமானது என்பதே பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக இரகசியமாகும். இதே போல் பெண்களுக்கும் ஆண்களைப் பார்க்கும்போது வீர்ய ஜோதி என்ற செந்நிற ஜோதி தோன்றும். சுக்ர ஜோதியில் ஏற்படும் தெளிவின்மை பெண்கள் ஆண் தன்மையைப் பெறுவதற்கும், வீர்ய ஜோதியில் ஏற்படும் குறைபாடு ஆண்கள் பெண்களைப் போல் நடமாடுவதற்கும் காரணமாகும். மப்பேடு திருத்தலத்தில் அருளும் ஸ்ரீவையாழி விநாயகர், ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் இறை மூர்த்திகளின் தொடர்ந்த வழிபாடு இத்தகைய குறைபாடுகளைத் தீர்க்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் மப்பேடு

வையாழி கூத்து என்ற ஒருவித நடனம் முற்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. தற்போதைய jerk dance போன்றது என்றாலும் இத்தகைய வையாழி கூத்து நடனத்தை ஆடுபவர்கள் முழுக்க முழுக்க பெண் போகத்தை நாடாதவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இவர்களால் மட்டுமே இத்தகைய jerk கொடுத்து ஆட முடியும். நம் சற்குரு இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இப்போது ஆடுபவர்கள் வையாழி கூத்தில் ஒரே ஒரு குலுக்கலை (jerk) மேற்கொண்டாலே போதும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த உறுப்பைச் சரி செய்ய முடியாது ...”, என்பார். இத்தகைய ஒரு நடனத்தால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இதற்கான விளக்கம் ஒரு விரசத்தை உருவாக்கும் என்பதால் இந்த நடனத்தை மக்கள் எப்படி தற்கால வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே சித்தர்கள் இங்கு விவரிக்கிறார்கள். ஆண் பெண் நடனக் கலைஞர்கள் குறைந்தது ஒன்பது பேரை வைத்து அவர்கள் எத்தகைய நடனமாடுவதாக இருந்தாலும் அதை வையாழி கூத்தாகவே ஏற்றுக் கொண்டு, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஸ்ரீவையாழி கணபதி முன்போ அல்லது மப்பேடு திருத்தலத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த நடனத்தை மேள தாளத்துடன் நிகழ்த்தி நடன முடிவில் அந்த கலைஞர்களுக்கு வயிறார உணவளித்து ஆடை அணிகலன்களுடன் கௌரவிப்பதே தற்போது நிகழ்த்தக் கூடிய வையாழி கூத்து வைபவமாகும். இதனால் சந்ததிகள் இல்லாத பிரச்னைகளும், பிறந்த சந்ததிகள் புகை, மது, ஆடம்பரம் போன்ற கேளிக்கையால் வீணாகாமல் காக்கவும் இத்தகைய நடன நிகழ்ச்சிகள் துணை புரியும். கணபதி மூர்த்திகளில் பல தத்துவங்கள் இருந்தாலும், கணபதி வடிவங்களே பல தத்துவங்களைக் குறிப்பது என்றாலும் சித்தர்கள் நமக்கு புரிவதற்காக கற்பக, வையாழி, கொன்றை போன்ற சில தத்துவங்களை உபதேசிக்கிறார்கள்.

நவகிரகங்கள் மப்பேடு

கற்பக விநாயகர் என்னும் திருஅண்ணாமலையில் தெற்கு வாசலில் எழுந்தருளி உள்ள மூர்த்தி காலத்தைக் குறிப்பவர், வையாழி விநாயகர் அசைவால் தேசம் என்னும் இடத்தைக் குறிப்பவர், கால தேச பரிமாணங்களை இணைப்பவரே அரண்மனைப்பட்டியில் அருளும் கொன்றயடி விநாயகர். இதன் பொருட்டே வேறு எந்த இடத்திலும் நிகழ்த்தாத வேள்விகளையும், யாகங்களையும் நம் சற்குரு அரண்மனைப்பட்டி திருத்தலத்தில் மட்டுமே நிகழ்த்தினார். இந்த தெய்வீக இணைப்பைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் தலமே மப்பேடு ஆகும். இங்கு அருளும் ஸ்ரீசுதபுத மகரிஷி இடது காலையும் வலது காலையும் வைத்திருக்கும் யோகக் கோலமே சுதபுதசோதி யோகம் என்பதாகும். இத்தகைய சுதபுதசோதி யோகமே வரும் வெள்ளிக் கிழமை அன்று மலர்கின்றது என்பதே நாம் பெற்ற பேறு ஆகும். மூன்றின் குசம் ஆறு, ஆறின் குசம் மூன்று. இவ்வாறு மூன்றும் ஆறும் இணைவதாக வரும் 15.10.2021 அன்று ஆறைக் குறிக்கும் வெள்ளிக் கிழமையும் அமைவதே சுதபுதசோதி பரிணமிக்கும் ஜோதிட அம்சங்களாகும். வலது நாசியில் தோன்றும் சூரிய கலையும், இடது நாசியில் திகழும் சந்திர கலையும் சுசும்னா நாடியில் லயமாவதே சுதபுதசோதி ஆகும். குண்டலினி யோகம் பயிலும்போது இடது குதிங்காலை மூலாதாரச் சக்கரத்தின் கீழும், வலது குதிங்காலை மூலாதாரச் சக்கரத்தின் மேலும் வைத்துப் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், மூலாதாரச் சக்கரத்தையே காண முடியாத நிலையில் உள்ள நம்மைப் போன்ற அடியார்களுக்கு உதவுவதாக எழுந்தருளி உள்ளவரே ஸ்ரீசுதபுத மகரிஷி ஆவார். எனவே குண்டலினி யோகத்தில் முதலில் மூலாதாரச் சக்கரத்தை அடையாளம் கண்டு கொள்ளும் ஆரம்பப் பயிற்சிக்கு உரிய தலமே மப்பேடு ஆகும். அதனால்தான் இங்கு அனைத்து கிரகங்களிலும் உயர்ந்தவராக சூரிய பகவான் தோன்றி இந்த ஆரம்பப் பாடத்தை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கும் வகையில் எழுந்தருளி உள்ளார். சுத புத சோதி என்பதில் புத என்னும் கிழமை ஏழு கிழமைகளில் நடுநாயகமாக குசா சக்திகளுடன் மிளிர்வதும், இயக்கமில்லாமல் இயங்கும் சுசும்னா நாடி சூரிய சந்திர நாடிகளின் இடையே விளங்குவதும் நாம் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ள வேண்டிய யோகத் தத்துவங்களாகும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை தினம் அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைவது தனிச் சிறப்பாகும். அவிட்டம் தவிட்டுப் பானையெல்லாம் பொன் ... என்பது பழமொழி. அதாவது முற்காலத்தில் தவிட்டை இலவசமாக கொடுத்து வாங்குவர், அந்த அளவிற்கு மலிவாய்க் கிடைத்த பொருளே தவிடு. அதனால் உபயோகம் இல்லாத தவிடு கூட அவிட்டம் நட்சத்திர தினத்தன்று பொன் போன்ற விலைமதிப்பில்லாத சக்திகளை அருளக் கூடியது என்றால் ஸ்ரீஆயுர்தேவி என்ற உயர்ந்த தேவியை, நம் சற்குரு என்ற உயர்ந்தவரால், பொன் பெருகும் உயர்ந்த நாளில் ஆராதனை செய்வதால் கிட்டும் பலன்களை வர்ணிக்க யாராலும் இயலுமா ?!

ஸ்ரீகற்பக விநாயகர்
திருஅண்ணாமலை

சிவஸ்வஸ்தி சக்கரத்தில் ஒன்று முதல் ஒன்பது எண்களும் இடம் பெற்றுள்ளன என்றாலும் இதில் அனைத்து எண்களின் சக்தி லயமாகும் பூஜ்யம் என்பது சிறப்பிடம் பெற்றுள்ளதே நம் சற்குரு நமக்களித்த ஈடில்லா பொக்கிஷமாகும். எப்படி நவதேவிகளாய் உருவெடுத்த அம்பிகையின் திருஉருவம் விஜய தசமி அன்று பூரணம் பெறுகிறதோ அதேபோல ஒன்பது எண்களும் வரும் தசமி திதியில் பூஜ்யத்தில் பூரணம் கொள்கின்றன என்பதே எண் கணிதம் சுட்டிக் காட்டும் இரகசியம். கணக்கு வல்லுநர்களும், எண் கணித ஜோதிடர்களும் (numerologists) இந்த சக்கரத்தை வைத்து அதில் எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் இணைத்து ஓதி பயன் பெறலாம். உதாரணமாக, சிவயசிவ, சிவசிவ, நமசிவாய, சிவாயநம என்ற நான்கு சிவ மந்திரத்தையும் சக்கரத்தில் உள்ள நான்கு சிவ அட்சரங்களில் இணைத்து ஓதலாம். ஒரே ஒரு எண்ணில் வல்லமை பெறவே, அதன் சக்தியை முழுமையாக உணர்ந்து கொள்ளவே சுமார் 20 வருடங்கள் ஆகும் என்பதே சித்தர்களின் கணக்கு. ஆனால், இந்த ஸ்வஸ்தி சக்கரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வழிபட்டால் இந்த பிறவிக்குள்ளேயே அனைத்தை எண்களின் தெய்வீக சக்திகளையும் நாம் பெற முடியும் என்பதே நம்முடைய சற்குரு நமக்காக பரிந்து அளிக்கும் அனுகிரகமாகும். உதாரணமாக,
3 - 3 = 0
2+4-6=0
என்ற இரண்டு சமன்பாடுகளை எடுத்துக் கொண்டால் இடது பக்க எண்கள், வலது பக்க எண்களுக்கு சமமாக இருக்கும் என்ற கோட்பாடு உண்மையே என்றாலும் வலது பக்க எண்ணான பூஜ்யத்தை மட்டும் வைத்துக் கொண்டு இடது பக்க எண்களை யூகிக்கும் திறன் உடையவர் எவருமே இப்பூமியில் இல்லை என்லாம். ஆனால் கற்பக விநாயகரின் அருள் பெற்ற ஒரு பக்தரோ உள்ளங்கை நெல்லிக் கனியாய் இடது பக்க எண்களை எளிதில் கூறி விடலாம். காரணம் கால சக்கரத்தில் சற்றே பின் நோக்கி சென்றால் இடது பக்க சமன்பாட்டு எண்கள் பளிச்சிடும் அல்லவா ?

சீதாராம வைபோகம்
வையாழி விநாயக வைபோகமே

இதே போல ஒரு ஆணின் துணையை வெறுக்கும் ஒரு பெண் மற்றொரு ஆணிற்கு அடி பணிந்து சேவை செய்யலாம். இது வையாழி விநாயகரின் அனுகிரகமாகும். ஆனால், இந்த இரண்டு அனுகிரகங்களும் லயமாவது கொன்றையடி விநாயகர் திருத்தலத்தில். பக்தர்களுக்கு புரிவதற்காக இவ்வாறு கணபதி மூர்த்திகளின் சக்தி பரிமாணங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளனவே தவிர இறை மூர்த்திகளின் சான்னித்தியத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படுவது கிடையாது, அவ்வாறு சான்னித்திய குறைபாடு ஏற்படுவதுபோல் தோன்றினால் அது மனிதர்களின் கண்ணோட்டமே தவிர எந்த இறை மூர்த்தியும் இதற்கு பொறுப்பாக மாட்டார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர்களும், தாங்கள் எப்படிப் பிறந்தோம், அதாவது இயற்கையாகவா அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவா என்று தெரியாதவர்களும், பிராய்லர் கோழிகள், முட்டைகள் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளோரும், வீடியோவில் காமக் காட்சிகளைக் கண்டு உடல் மன ஆரோக்யத்தை இழந்தோரும், டெஸ்ட் ட்யூப் குழந்தைகளும் பெற்றோர்களும் வணங்கி வழிபட வேண்டிய மூர்த்தியே மப்பேடு ஸ்ரீவையாழி விநாயக மூர்த்தி ஆவார். இத்தகைய அனுகிரகத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களும் வையாழி விநாயகரின் அருள் வர்ஷிக்கும் பாங்கை ஆத்ம விசாரம் செய்து பல தெய்வீக இரகசியங்களை அறிந்து கொள்ளலாம். இந்த அனுகிரகத்திற்கு தொடர்புடைய ஒரு ராமலீலையை இங்கு விவரிக்கிறோம். ஸ்ரீராமபிரான் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லட்சம் ராம பாணங்களை எய்யும் ஆற்றல் உடையவர். அப்படியானால் ராமபாணத்தின் வேகம் என்ன என்று கணக்கிட்டால் நாம் தெய்வீக தத்துவத்தை இழந்தவர்கள் ஆவோம். நாம் நினைப்பது போல் ராமபாணம் என்பது ஒன்றின் பின் ஒன்றாக அமைந்து செல்வது அல்ல, அந்த லட்சம் பாணங்கள் அனைத்தும் ஏக காலத்தில் (simultaneous) பெருகி இலக்கை நோக்கிப் பாய்வனவாகும். அது ராவணனை வீழ்த்திய அம்பாக இருந்தாலும் சரி, கூனியின் கூனலை நிமிர்த்த எய்யப்பட்ட மண் உருண்டையால் தயார் செய்யப்பட்ட குச்சி அம்பாக இருந்தாலும் சரி, ராம பாணம் ராம பாணமே. அது பிறவிப் பிணிகளைத் தீர்க்கும், மாய்க்கும். இதுவே வையாழி வைபோகம் உணர்த்தும் உண்மையாகும்.

ஆனந்த பாஷ்பவாரி ஆஞ்சநேயர்
மப்பேடு

நம் பெரியோர்கள் நமக்களித்த பழமொழிகள் மட்டுமல்ல அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பல விளையாட்டுக்களும் நம் வாழ்க்கையை செம்மையாக நடத்திச் செல்ல உறுதுணை செய்பவையாகும். அத்தகைய விளையாட்டுக்களில் ஒன்று, இரு குழந்தைகள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்க ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவர்கள் இடையே புகுந்து எட்டு வடிவில் குழந்தைகள் இரயில் போல் வளைந்து வளைந்து செல்ல அப்போது பாடப்படும் ஒரு பாடல் ...
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் ...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம் ...
என்றவாறாக விரியும் இப்பாடல் நாம் வையாழி விநாயகரைத் துதிக்கும் வழிபாட்டையும் சுவாமி நமக்களிக்கும் கருணையையும் குறிப்பதாகும். சாதாரண விளையாட்டு என்றாலும் பிஞ்சு மனதில் பதியும் இந்த எட்டு எண் வடிவம் எந்த தவறான சூழ்நிலையிலும் மனம் மாசு அடையாத வல்லமையைக் கொடுக்கும், இதை அளிப்பவர் எட்டு எண்ணுக்குரிய பகவான் கிருஷ்ணர் ஆவார். பணிவையும் ஒற்றுமையையும் குழந்தைகள் மனதில் பதிக்கும் ஒரு சமுதாயப் பாடல் இது. இந்தப் பாடலில் நாம் செய்து கொள்ள வேண்டிய மாற்றம் ...
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஆயிரம் பூ பூத்துச்சாம் ...
என்பதே வையாழி பெம்மானின் வானளாவிய கருணை. ஆழி என்றால் கடல், வை ஆழி என்றால் கடலை, பிறவிப் பெருங்கடலையும் உள்ளங்கை தீர்த்தம் அளவிற்கு சுருக்குதல் என்று பொருள், என்ன பொருத்தமான இறை நாமம் !
பக்தியின் ஆரம்ப கட்டத்தில் குடங்களில் நீர் வார்த்து நறுமணம் பரப்பும் மலர்களை இறைவனுக்குச் சூட்டும் பக்தர்கள் விரைவில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க இறைவனை விழிக் கமலங்களால் அர்ச்சிக்கும் அனுகிரகத்தைப் பெறுவார்கள். இதை அளிக்க வல்லவரும் வையாழி விநாயகரே.

ஆனந்த பாஷ்பவாரி பரிபூர்ண
லோசன தரிசனம் மப்பேடு

குறைந்தது நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குடும்பம் கூட மேற்கண்ட கிருஷ்ணாமிர்தம் என்ற விளையாட்டை அவர்கள் இல்லங்களில் “விளையாடி” குடும்ப ஒற்றுமையை, சமுதாய ஒற்றுமையை, ஆரோக்யத்தைப் பெருக்கலாமே. இந்த கிருஷ்ணாமிர்த விளையாட்டில் வியக்க வைக்கும் முறையில் குசா சக்திகள் இணைவதே இந்த விளையாட்டின் மகத்துவமாகும்.

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனன் என்று ஆஞ்சநேய மூர்த்தியை அழைப்பதுண்டு. ராமபிரான் திருவடிகளையே நினைத்து நினைத்து கண்ணீர் மழையை வர்ஷித்ததால் ஆஞ்சநேயர் இந்த அடைமொழியைப் பெற்றார் என்றாலும் இந்த நாமத்தின் பின்னணியில் பல அற்புத கருத்துக்கள் உண்டு. அமிர்தானந்தா அன்னை இறை கீர்த்தனைகளை இசைக்கும்போது பல சமயம் அம்மாவின் விழியோரங்களில் கண்ணீர் பெருகும் ஆனந்தக் காட்சியை பலரும் தரிசனம் செய்து இருக்கலாம். கண்ணீர் வழியும் விதத்தைக் கொண்டே அது மனிதப் பிரிவில், லௌகீக பொருட்கள் கிட்டாததால் ஏற்பட்டதா, உணர்ச்சி மிகுந்த நிலையா, பக்திப் பெருக்கைக் குறிப்பதா என்றெல்லாம் கூறி விடலாம். பொதுவாக, விழிகளின் நடுவில் பொழிந்தால் அது மனிதக் கண்ணீர், பிரிவின் வருத்தத்தைக் குறிப்பது, விழிகளின் ஓரத்தில் வழிந்தால் அது தெய்வீகக் கண்ணீர், இறை தரிசனத்தில் விளையும் ஆனந்தத்தைக் குறிப்பது. நம் சற்குருவோ எந்த வருத்தமான சூழ்நிலையிலும் கூட கண்ணீர் சிந்தியதை எவரும் கண்டிருக்க முடியாது. ஆனந்த பாஷ்பவாரியையும் யாரும் அனுபவித்தது கிடையாது. அப்படியானால் அவர் இறைக் காட்சிகளைக் காண வில்லையா ?

ஒரு முறை தெய்வீக லோகங்கள் பலவற்றைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்தார் நம் சற்குரு. “நம் பூலோகத்தைத் தாண்டி இருப்பது கந்தவர்வ லோகம், அதைத் தாண்டி இருப்பது தேவ லோகம், இந்திராதிகள் இருப்பது, தேவ லோகத்தைத் தாண்டி பல லோகங்கள் சென்ற பின் வருவது வைகுண்டம், வைகுண்டத்தைத் தாண்டி வருவது கயிலாயம், கயிலாயத்தையும் கடந்தால் கவனிக்க ... ஈசன் உறையும் திருக்கைலாயத்தையும் கடந்தால் சக்தி லோகம், இதையும் கடந்து பின்னர் பல லோகங்களைக் கடந்தால் வருவது சத்திய லோகம், இதன் பின்னர் பல லோகங்களைக் கடந்தால் வருவது மங்கள கந்தர்வ லோகம், மங்கள கந்தர்வ லோகம் பலவற்றைக் கடந்து சென்றால் வருவதே குருமங்கள கந்தர்வ லோகம், அடியேன் இருக்கும் லோகம், இங்குதான் 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் உதிக்கின்றன ...”, என்று தம் குருமங்கள கந்தர்வ லோக சிறப்பைக் கூறி முடித்தார் நம் சற்குரு. பூலோகத்தைத் தாண்டி தேவ, தெய்வ லோகங்களுக்குச் சென்று விட்டாலே அங்கு “கண்ணீர்” என்பதே கிடையாது. இவ்வாறு பல தெய்வ நிலைகளை அடைந்தாலும் பூலோக வாசியான ராமபிரானின் திருவடிகளில் தன் பார்வை நிலை கொண்டதால் ஆனந்த பாஷ்பவாரியைப் பெருக்கினார் ஆஞ்சநேய மூர்த்தி, அன்னை அமிர்தானந்தா. பூலோகவாசிகளுக்கு சற்குருவாய் வந்து உதித்தாலும் உன்னத குருமங்கள கந்தவர்வ லோக வாசியாகவே என்றும் காட்சி அளித்தவரே நம் சற்குரு வெங்கடராம சுவாமிகள். அதனால்தான் நம் சற்குருவின் கண்கள் பூலோகத்தில் கண்ணீரை உகுக்கவில்லை.

தழுவக் குழைந்த தரிசனம்
பழையாறை

பல சமயங்களில் நம் ஆஸ்ரமத்தில் நம் சற்குருவின் அருகில் பல அடியார்கள் அமர்ந்திருக்கும்போது அந்த அடியார்கள் நம் சற்குருவைச் சுற்றி சுமார் 20, 25 பேர் அமரும் அளவிற்கு காலி இடத்தை விட்டே தள்ளி அமர்வதைப் பலரும் கவனித்திருக்கலாம். இது பற்றி கேட்டபோது நம் சற்குரு தனக்கே உரிய வினயத்துடன், “அடியேன் உங்களுக்கு மட்டும்தான் இறைவனைப் பற்றி கூறுகிறேன் என்று கிடையாது, ஏற்கனவே கூறிய பல லோக வாசிகளும் அடியேனின் உரையை கேட்க அங்கு வந்து குழுமியுள்ளனர். அவர்களுக்கு இடம் அளிக்கவே நீங்கள் உங்களையும் அறியாமல் சற்று தள்ளி அமர்கிறீர்கள். சில சமயங்களில் வானில் பிரகாசிக்கும் சிலகாகித சித்தர்களும் இங்கு உறைவதுண்டு. அவர்களின் பிரகாசத்தை உங்களால் தாங்க முடியாது என்பதால்தான் வெறும் வெற்றிடம் போன்ற அவர்கள் தரிசனத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள் ...”, என்றார். அப்படியானால் நம் சற்குரு என்ற ஒரே ஒரு பீடத்தைத் தரிசிப்பதால் கிட்டும் சற்குரு பீட தரிசனங்கள் எத்தனை எத்தனையோ ?!

ஒரு ரப்பர் ட்யூபை எடுத்துக் கொண்டு அதை மேலும் கீழும் பிடித்துக் கொண்டு முறுக்கினால் அது எட்டு என்ற எண் வடிவை உருவாக்கும் அல்லவா ? இதுவே இரு பரிமாணத்தில் வளையமாக இருந்தது முப்பரிமாணத்தில் எட்டாக தோற்றம் அளிக்கும் விந்தையாகும். இதுவே பகவான் கிருஷ்ணர் தானே அனைத்துமாக இருக்கிறேன் என்று உரைப்பதன் உட்பொருளாகும். இந்த கீதா வசனத்தை உணர விளையும் தம்பதிகள் ஒருவர் ஆடையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு வீட்டில் எட்டு வடிவில் தொடர்ந்து வலம் வந்து ஏதாவது ஒரு பகவத் கீதை சுலோகத்தை பாராயணம் செய்து வருதலால் கிட்டும், பெருகும் குடும்ப ஒற்றுமை அமோகம். இந்த ஒற்றுமை பெருக பெருக, அங்கு எட்டும் பூஜ்யமும் இணையும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆன்மீக தத்துவமாகும். ராதையும் கிருஷ்ணரும் இணைந்து தோற்றம் கொள்ளும் சித்திரங்களை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். எட்டு இடங்களில் வளைந்து காட்சி கொடுக்கும் கிருஷ்ணரின் அங்க லாவண்யங்களுடன் இணைவதே ராதையின் அங்க இலக்கணங்களுமாகும். நாம் தியாகமயமாக வையாழி கூத்து நடனத்தை மப்பேடு திருத்தலத்தில் நிகழ்த்தினால் அப்போது ஆண் பெண் இருவரின் நடனங்களில் இத்தகைய ராதா கிருஷ்ண வையாழி இணைப்புகள் தோன்றி நம்மை பிரமிக்க வைக்கும், நம் ஆன்மீக அறிவைப் பெருக்கும் என்பதே இந்தக் கூத்தின் பின்னணியில் திகழும் இரகசியங்களாகும்.

8 x 8 = 64 என்பது நீங்கள் அறிந்த கணிதமே. இரண்டை ஆறு மடங்காக பெருக்கினால் 64 என வரும் என்பதும் நீங்கள் அறிந்ததே. ஆனால், இந்த இரண்டு கணித சூத்திரங்களும் இணையும் தழுவக் குழைந்த தரிசனம் என்பதைப் பற்றி நாம் எந்த அளவிற்கு அறிந்துள்ளோம் என்பதே கேள்விக் குறி. தாந்திரீக சாஸ்திரத்தில் பல கோலங்களாக, கோணங்களாக விளக்கப்பட்டுள்ள ஆண் பெண் என்ற இணைப்பையே இத்தகைய தழுவக் குழைந்த தரிசனமாக நம் முன்னோர்கள் நம் வழிபாட்டிற்காக பழையாறை, சத்திமுற்றம் போன்ற பல திருத்தலங்களில் அளித்துள்ளனர். இந்த கோல இரகசியங்கள 64 திருவிளையாடல்களாக மதுரையம்பதியில் நிகழ்த்திக் காட்டியதும் நம்மை அரவணைக்கும் சிவபெருமானே. தழுவக் குழைந்த தரிசனம் எந்த அளவிற்கு இன்றைய உலகில் நம் அன்றாட வாழ்விற்கு துணைபுரியும் என்று விளக்குவதே கிருஷ்ணாமிர்த விளையாட்டும் அதன் அடுத்த கட்டமாக விளையும் கிருஷ்ணாமிர்த யோகமும் ஆகும். தம்பதிகள் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து வழிபடுவதே கிருஷ்ணாமிர்த யோகமாகும். இதன் பலன்களை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்றாலும் பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த யோகத்தின் மற்றோர் அம்சத்தை இங்கு அளிக்கிறோம்.

ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்
ஜீவாலயம் சென்னை

எதிர் எதிரே அமர்ந்திருக்கும் தம்பதிகள் ஒருவர் மார்புப் பகுதியை மற்றவர் நோக்கி இரு மார்பகங்களைச் சுற்றி எட்டு என்ற எண்ணைச் சுழற்றிக் கொண்டே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல இந்த எட்டு என்ற எண் மறைந்து அது பூகோளமாக, வட்டமாக காட்சி தர அந்த வட்டத்தில் பெண்ணுக்கு ஆணின் தத்துவ தரிசனமும், ஆணிற்கு பெண்ணின் தத்துவ தரிசனமும் கிட்டும். ஆரம்பத்தில் தத்துவார்த்தமாகத் தோன்றும் இந்தக் காட்சியில் பலவித குழப்பங்கள் ஏற்படுவது சகஜமே என்றாலும் தம்பதிகள் தொடர்ந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வந்தால் சிறிது சிறிதாக இந்த தத்துவங்கள் சுட்டும் உண்மைப் பொருள் தெரிய வரும். அது என்ன என்பதை சித்தர்கள் சுட்டிக் காட்டத் தயாராக இருந்தாலும் அதை ஆர்வமுள்ள தம்பதிகள் அனுபவித்துப் பார்த்தலே சுவை, இன்பமோ இன்பம், திகட்டாத பேரின்பம். பெண்களின் மார்பகங்கள் குறித்து எத்தனையோ அர்த்தத்தையும் அவசியத்தையும் நாம் உணர முடிந்தாலும், ஆண்களின் மார்பகங்களுக்கு நம்மால் சரியாக காரணத்தைக் கூற முடியவில்லை. மார்பகங்களே இல்லாத கிருஷ்ண பகவானே இந்த யோகத்தின் உட்பொருளை நமக்கு உணர்விக்கும் தெய்வ மூர்த்தி ஆவார். பகவான் கிருஷ்ணரின் அவதாரம் பூர்ணமானது, முழுமையானது என்று சித்தர்கள் பாராட்டுவது எத்தகைய பொருள் பொதிந்தது என்று நினைக்கும்போது நம் பிரமிப்பிற்கு எல்லையே இல்லை, இல்லை இல்லை !

தம்பதிகள் ஒருவர் ஆடையை மற்றொருவர் பிடித்த வண்ணம் எட்டு வடிவில் வலம் வருவதால் கிருஷ்ணாமிர்த சக்திகளைப் பெறலாம் என்று விவரித்தோம் அல்லவா ? இது உண்மைதான் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளதே இங்குள்ள வீடியோ படமாகும். தம்பதிகள் இருவரின் பாதங்கள் நான்கு என்பதாக அமைய அந்த நான்கு பாதங்களில் வலம் வந்து எட்டு என்ற எண்ணிற்கு இணையான குசா சக்திகளை ஒரு நாய் பெருக்குகிறது என்றால் இதை நாய் என்றா கூற முடியும் ? இந்த பைரவரின் கிருஷ்ணாமிர்த வலத்தில் இரண்டு விதமான சிவ சக்தி ஐக்யங்கள் ஏற்படுகின்றன. ஒன்று சிவத்தைக் குறிக்கும் இரண்டு முன் கால்களும், சக்தியைக் குறிக்கும் இரண்டு பின்கால்களும் ஏற்படுத்தும் ஐக்யம், வலமாக அமையும் வட்டமும், இடமாக அமையும் வட்டமும் மற்றோர் சிவசக்தி ஐக்யமாகும். இந்த இரண்டையும் இணைப்பவரே நீங்கள் காணும் பைரவ மூர்த்தி. இத்தகைய இணைந்த சிவசக்தி ஐக்ய பலன்களைப் பெற விரும்புவோர் திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசன எதிரிலோ, நிருதி லிங்கம் எதிரிலோ அல்லது சென்னை ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஜீவாலயத்திலோ மேற்கொண்டு பயனடையுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். பைரவ வழிபாட்டிற்கு உரிய திதி அஷ்டமி என்ற எட்டாம் திதியே என்று சுட்டிக் காட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் எத்தகைய நன்றிக் கடனையும் செலுத்த முடியுமா ?

சுக்ரபீட முத்திரை

எட்டில் உள்ள இரண்டு வட்டங்கள் இரண்டாம் பரிமாணத்தில் வெவ்வெறு திசையை நோக்கிச் செல்வதாகத் தோன்றினாலும் மூன்றாம் பரிமாணத்தில் இவை ஒன்றாக இணைந்து ஒரே திசையில்தானே செல்கின்றன. பெண்கள், ஆண்களின் எதிரிடைச் சக்தி உடையவர்கள் அல்ல அவர்கள் ஆண்களின் வாழ்வை பூரணிக்க, புனிதமாக்க இறைவனால் படைக்கப்பட்டவர்களே என்பதால்தான் நம் முன்னோர்கள் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தையே ஏற்படுத்தினார்கள். மாங்கல்ய தாரணத்தின்போது கூறும், “மாங்கல்யம் தந்துநானேனா ...”, என்ற சுலோகமும் இந்த உண்மைப் பொருளையே சுட்டுகிறது.

நம் சற்குரு உறையும் குருமங்கள கந்தர்வ லோகத்தில் 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன என்று கூறினோம் அல்லவா ? அது மட்டுமல்ல 108 பரிமாணங்களைக் கடந்து செல்லும் ஆற்றல் உடையவர்களுக்கு மட்டுமே குருமங்கள கந்தர்வ லோகத்தின் தரிசனமே கிட்டும் என்பதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும். இரண்டு மூன்று என்ற பரிமாணங்களே நம் தலையை சுற்ற வைக்கிறது என்றால் 108 பரிமாணங்கள் என்றால் ... ?

நம் சற்குருவால் அளிக்கப்பட்ட தியான முத்திரைகளில் ஒன்று சுக்ர பீட முத்திரை என்பதாகும். படத்தில் காட்டியபடி இரண்டு கை விரல்களின் நடுவில் அமையும் டைமண்ட் என்ற சுக்ர வடிவல் உள்ள துவாரம் வழியாக நமது இஷ்ட தெய்வத்தின் ஏதாவது ஒரு பகுதியை இதயம், கண், மான் மழு போன்ற ஆயுதங்கள், தும்பிக்கை போன்ற எந்த பொருளையம் நம் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். தியானத்திற்காக தேர்ந்தெடுக்கும் படத்தில் பிரகாசிக்குமாறு சக்தி வாய்ந்த மின்சார பல்புகளையும் இணப்பதால் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும். நம் சூட்சும சரீரத்தையே இந்த முத்திரையின் மூலம் பார்க்கிறோம் என்பதே இந்த முத்திரையின் தனிச் சிறப்பாகும்.

நமக்குத் தெரிந்த நண்பரோ, உறவினரோ நம் முன்னால் செல்லும்போது அவருக்குத் தெரியாமல் அவரை பின்தொடர்ந்து செல்ல முடியாது. சிறிது நேரத்தில் அவரையும் அறியாமல் சட்டென திரும்பி அவர் நம்மைப் பார்த்து விடுவார். காரணம் நாம் அவரைப் பார்க்கும்போது நம்முடைய பார்வை அவர் சூட்சும சரீரத்தில் பதிவதுதான். இந்த சூட்சும சரீரத்தையே நாம் மேற்கண்ட சுக்ர பீட முத்திரையில் இஷ்ட மூர்த்தியின் சூட்சும சக்தியுடன் இணைக்க முயற்சி செய்கின்றோம். சுக்ர பீடம் மற்ற இடங்களை விட மங்கலாக இருப்பதற்கு இந்த சூட்சும சுரீரம் மூலம் நம் பார்வை செல்வதுதான். திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை கிரிவலம் வரும்போதும், திருத்தலங்களில் மூர்த்திகளை தரிசனம் செய்யும்போதும் நின்றோ, ஓரிடத்தில் அமர்ந்தோ இந்த முத்திரைகளை அமைத்து தியானம் செய்து பயன்பெறலாம். இந்த தியானத்தின் உடனடிப் பலன் எதிர்காலத்தைப் பற்றிய அறிவை, தீர்க தரிசனத்தைப் பெறுவதுதான். புற்று நோய், தொற்றுநோய்கள் போன்ற அனைத்து நோய்களுமே முதலில் நம் சூட்சும சரீரத்தில்தான் குடியேறி நம்மைத் தாக்குகின்றன. இதை உணர்ந்து கொண்டால் எந்த வியாதியையும் முன்னரே இனங் கண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா ?

ராமகிரி

சுக்ர பீட முத்திரையை தம்பதிகள் இணைந்து நிறைவேற்றும் முறையையும் நமக்கு அளிப்பவரே மப்பேடு ஸ்ரீசுதபுத மகரிஷி ஆவார். கணவன் மனைவி எதிர் எதிரே அமர்ந்து கொண்டு கணவனின் இடது கை சுக்ர முத்திரை அமைப்பில் துலங்க, மனைவியின் இடது கை இதே அமைப்பில் கணவனின் கரங்களுடன் இணைய வேண்டும். தம்பதிகள் இருவரின் வலது கரங்களை இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பில் தோன்றும் சுக்ர டைமண்ட் வடிவ துவாரத்தின் வழியே தம்பதிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தங்கள் தியானத்தைத் தொடர வேண்டும். இந்த முத்திரையின் ஆரம்பக் கட்ட பலனாக குடும்ப ஒற்றுமை மலர்ந்து பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தியானம் தொடர, தொடர தம்பதிகளிடையே, குடும்பத்தில், சமுதாயத்தில் தோன்றும் வியாதிகள் மட்டும் அல்லாது விபத்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் முன்னறிவிப்பும் கிட்டும். இந்த தியானத்தை மேலும் தொடர்ந்தால் இந்த வியாதிகளை நீக்கும் முறைகளையும், விபத்துக்களால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்கும் தார்மீக முறைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

E = mc2 என்பது பௌதீக வல்லுநர்கள் அறிந்த ஒரு சமன்பாடு என்றாலும் இது தூல பொருட்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதே என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆன்மீக இரகசியமாகும். ஒரு துளி நீரின் சக்தியால் இந்த உலகையே அழித்து விடக் கூடிய ஒரு அணுகுண்டைத் தயாரித்து விடலாம் என்பதே ஐன்ஸ்டீன் விஞ்ஞானியின் மேற்கண்ட சூத்திரம் விளக்கும் சக்தி பற்றிய சமன்பாடு. ஒரு குண்டு போட்டு லட்சம் பேரை மாய்ப்பது அல்ல சித்தர்கள் கூறும் விஞ்ஞானம், ஒரு குண்டைப் போட்டு லட்சம் அரிசி மூட்டைகளை விழ வைக்கும் விந்தையைப் புரிபவர்களே சித்தர்கள். இந்த இரகசியம் பயன்படும் பல திருத்தலங்களில் ஒன்றே ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமகிரி திருத்தலமாகும். இங்கு நந்தி வாயிலிருந்து பொழியும் தீர்த்தம் இத்தகைய சூட்சும சக்திகளுடன் பொலிவதே நம் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறாகும்.

ஸ்ரீசாயுஜ்ய விநாயகர் ராமகிரி

குறைந்தது ஒன்பது வருடங்கள் மேற்கண்ட சுக்ர பீட முத்திரையை தொடர்ந்து தியானித்து வந்தவர்களே இந்த நந்தி வாய் தீர்த்தத்தில் பொலியும் தீர்த்தத்தின் சூட்சும சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்கள் ராமகிரியில் இந்த நந்தி மூர்த்தியை வணங்கி தங்கள் சுக்ர பீட தியான முத்திரையை தனியாகவோ தம்பதி சகிதமாகவோ நிறைவேற்றி நற்பலன் பெறலாம். ராமேஸ்வரத்தில் ராமச்சந்திர மூர்த்தி தன் நன்றியைத் தெரிவிக்க பூஜை செய்ய ஒரு சிவலிங்கத்தைப் பெற நினைத்தபோது அதற்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயர் கைலாயத்திற்கு பறந்து சென்று ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்தார் அல்லவா? அந்தச் சிவலிங்கத்தை வெகுதூரம் எடுத்து வந்தபோது ஏற்பட்ட களைப்பால் அவருக்கு மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்படவே அதை தீர்த்துக் கொள்ள ராமகிரி நந்தி தீர்த்தம் உதவியது என்பதே ராமகிரி திருத்தல வரலாறு கூறும் மகிமையாகும். உண்மையில் தாகம், பசி என்பவை ஆத்மாவில் தோன்றி அவை முதலில் சூட்சும சரீரத்தில் பதிந்து, பின்னர் அதை தூல சக்தியாக தூல சரீரமான உடம்பில் பசியாகவும் தாகமாகவும் உணர்கின்றோம். அதனால்தான் பசித்திருப்பவர்களுக்கு அளிக்கும் அன்னதானமும் நீர் வகை தானங்களும் தானத்தில் சிறந்த தானமாக சித்தர்களால் உரைக்கப்படுகிறது.

இவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி தாகம் தீர்க்க உதவிய அனுமன் தீர்த்தம் இன்றும் உத்தம மூர்த்திகளின் ஆன்மீக தாகத்தையும் தீர்க்கும் பொய்கையாக, பைரவ ஔஷதமாக, வாலீஸ்வர அமிர்தமாக விளங்குகிறது என்பதை இங்குள்ள வீடியோவே உங்களுக்கு உணர்த்தும். இங்குள்ள பைரவ மூர்த்தியின் சூட்சும உருவத்தை உங்களால் உணர முடிந்தால் நீங்கள் பிரமிப்பால் மயங்கிப் போய் விடுவீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. இன்றோ நாளையோ இன்னும் பத்து வருடங்கள் கழித்தோ உங்களால் இந்த மகிமையை உணர முடியாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து சுக்ர பீட முத்திரையை தம்பதி சகிதமாக பயின்று வந்தாலே போதும் உங்களுக்குக் கிட்டும் ஆன்மீக அனுபவங்கள் உங்களை மெய் மறக்கச் செய்யும், காலத்தின் மகிமையை, கால பைரவரின் மகிமையை, ஏன் இந்த பிரபஞ்சத்தின் மகிமையையே உங்களால் உணர முடியும். அப்போது E என்பது வெளியே உள்ள E அல்ல, அதை உள்ளே, உள்ளே உணர்வதே என்ற பெருமையையும், ஆனந்தத்தையும் நீங்கள் பெறுவீர்கள். வால் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எல்லையில்லாத, சூட்சுமமான, கண்ணுக்குப் புலப்படா என்பவை அனைத்தும் வாலறிவே, அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை இறைவனை வாலறிவன் என்று புகழ்கிறார். வாலீஸ்வரர் என்றால் ஆஞ்சநேய மூர்த்தி தன்னுடைய வாலால் இறைவனைக் கட்டினார் என்ற தூல பொருளைச் சுட்டினாலும் இதன் சூக்குமப் பொருள் நீண்ட வாலுடைய ஆஞ்சநேயப் பெருமான் தன்னுடைய சூக்கும அறிவால் உணர்ந்த இறை சக்தியையே இது குறிக்கிறது. இந்த சூட்சும அறிவைத் தரக் கூடியதே ராமகிரி நந்தி தீர்த்தமாகும்.

ஒரு துளி நீரால்
உலகை அழிப்பது
விஞ்ஞானம்
ஒரு துளி நீரால்
உலகை மீட்பது
மெய்ஞானம் !

ஒரு முறை ஒரு மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் கூடினர். மாநாடு ஆரம்பிக்கும் சற்று முன் திடீரென மின்சாரம் நின்று விடவே அனைத்து விளக்குகளும் அணைந்து இருள் சூழ்ந்தது. எதிர்பாராத இந்த களேபரத்தால் அங்கிருந்த பலரும் தங்கள் மேஜை மேல் இருந்த நீர் நிரம்பிய டம்ளரைத் தட்டி விட்டு விடவே அதனால் நீர் வீணாகியது ஒரு புறம் இருக்க வழிந்த அந்த நீரால் அந்த விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டிய குறிப்பு ஏடுகள் நனைந்து வீணாகி விட்டன. சற்று நேரம் கழித்து மீண்டும் மின்சாரம் வந்தபோது பெரும்பாலானவர்களின் டம்ளர்கள் சாய்ந்து நீர் கீழே கொட்டி விட்டது, சிலரின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்த நீரில் நனைந்து வீணாகியும் விட்டன.

தீர்த்தம் பொழியும் நந்தியும்
ஸ்ரீஉதீத மகரிஷி வழிபட்ட
சிவலிங்கமும் தக்கோலம்

ஆனால், பகவான் கிருஷ்ணரின் பெயரைக் கொண்ட ஒரே ஒரு எட்டெழுத்து இந்திய விஞ்ஞானி மட்டும் இடது கையில் நீர் நிரம்பிய டம்ளரையும் வலது கையில் தன்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பத்திரமாக பற்றிக் கொண்டு இருந்தார். இதைக் கண்ட அனைவரும் வியந்து இது எப்படி சாத்தியமாயிற்று என்று அவரை வினவவே தான் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்தபோது அங்கு மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி மின்சாரம் தடைபடப் போகிறது என்பதை தன் மூக்கின் புலன் சக்தியால் உணர்ந்ததால் தான் அவ்வாறு செயல்பட முடிந்தது என்று விளக்கினார். நம் சற்குருவோ, “அந்த விஞ்ஞானியின் மூதாதையர்கள் தொடர்ந்து நிகழ்த்தி வந்த அர்க்யம், ஆசமனீயம், தர்ப்பணம் என்ற நீர் சம்பந்தப்பட்ட பூஜைகளே அந்த விஞ்ஞானி பெற்ற சூட்சும அறிவிற்கு அடிப்படையாக அமைந்தன...”, என்று விவரித்தார்.

காயத்ரீ ஓதும் காயத்ரீ

ராமகிரி சிவத்தலத்தில் நந்தி வாய் வழியாக தீர்த்தம் வழிவதை நாம் இன்றும் தரிசித்துப் பயன் பெறலாம், மற்ற இடங்களில் உள்ள இத்தகைய தீர்த்தங்கள் தற்போது வறண்டிருப்பது போன்றே தோன்றுகின்றன. கரூர் அருகே உள்ள தேவர்மலை ஸ்ரீநரசிம்மர் ஆலயம், தக்கோலத்தில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் சிவத்தலம் போன்ற இடங்களில் உள்ள நந்தி மூர்த்திகள் நீர் சுரப்பின்றியே தற்போது காணப்படுகின்றனர். நீர் சுரந்தாலும், நீர் சுரப்பு மறைந்து பொலிந்தாலும் நம்பிக்கை உடையவர்களுக்கு இந்த நந்தி மூர்த்திகள் அளிக்கும் அனுகிரகத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படுவதில்லை என்பதே மெய்ஞானம் கூறும் உண்மையாகும். எப்படி மூலவரை நாம் திருத்தலங்களில் தரிசிக்க முடியவில்லை என்றாலும் தல விருட்சம், கொடிக்கம்பம், திருக்குளம் இவற்றின் தரிசனம் பக்தர்களுக்கு பூரணமான பலன்களை நல்கும் சக்தியுடன் துலங்குகின்றனவோ அது போன்றதே இந்த நந்தி மூர்த்திகள் வர்ஷிக்கும் அனுகிரகமும் ஆகும். உதாரணமாக, தேவர்மலை திருக்குள நந்தி மூர்த்தியின் தரிசனம் பெற்ற ஒரு அடியார் இல்லத்தின் முன்னே காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே ஒரு பசு பல மணி நேரம் அமர்ந்து தரிசனம் அளித்தது என்றால் நந்தி மூர்த்திகள் அருளும் அனுகிரகத்தை நாம் கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா என்ன ?

தற் கோலம் என்ன என்று உணர்த்துவதே தக்கோலத்தின் மகிமை. ஆம், “நான் யார் ?” என்று தெளிவாக உணர உறுதுணை செய்யும் தலமே தக்கோல நந்தி வாய் தீர்த்தத்தின் மகிமைகளுள் ஒன்றாகும். மனித உடல் ஆண் பெண் சங்கமத்தில் தோன்றுவதுபோல் தோன்றினாலும் ஏழாவது மாதமே அந்த உடலில் உயிர் தோன்றுகிறது. இதையொட்டியே வளைகாப்பு போன்ற பல்வேறு புனித சடங்குகளை நிகழ்த்தி அந்தப் புது உயிரை உடலில் வரவேற்கிறோம்.

ஸ்ரீஉதீத மகரிஷி தக்கோலம்

உயிர் தோன்றும்போது தசவாயு என்ற பிராணன் முதலாக தனஞ்செயன் ஈறாக உள்ள பத்து வாயுக்களும் உயிருடன் சேர்ந்தே மனித உடலினுள் பிரவேசம் கொள்கின்றன. மனித உயிர் பிரியும்போது பிராணன் முதலிலும் மற்ற வாயுக்கள் பத்து நாட்களில் ஒவ்வொன்றாக மனித உடலை விட்டுப் பிரிகின்றன. இது மனித உயிர் கொள்ளும் மாற்றம். சற்குருவைப் பெற்றவர்களுக்கோ உயிருடன் சேர்ந்து தசவாயுக்களும் நொடியில் பிரிந்து விடுகின்றன.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்ற மிருத்யுஞ்சய மந்திரத்தின் உண்மைப் பொருளை உணர்வதே சற்குருவைப் பெற்றவர்களின் மகிமையாகும். பத்துத் தலையையுடைய ராவணனின் கர்வத்தை அடக்கிய சிவபெருமான் என்றெல்லாம் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடல்களில் வரும் வர்ணனைகள் எல்லாம் சிவனை நம்புவோர்க்கு இந்த தசவாயுக்கள் கொள்ளும் மாற்றத்தையே குறிக்கின்றன. நம் சற்குரு அருளிய 32 தேவாரப் பதிகங்களை தினமும் ஓதி வருபவர்கள் இந்த தசவாயுக்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளத் தேவையில்லை என்பதே இந்த இறை கீர்த்தனை உணர்த்தும் ஆறுதலாகும். இந்த இரகசியங்கள் அனைத்தையும் உணர உதவுவதே தக்கோலம் திருத்தலம் ஆகும். இவ்வாறு தசவாயுக்களைப் பற்றி உணர்வதால் என்ன பயன் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். நம் உடலின் அனைத்து இயக்கங்களும் தசவாயுக்களால்தான் ஏற்படுகின்றன. எனவே தசவாயுக்களை ஆளக் கூடிய மனிதன் உறக்கம், கண் இமைப்பது, இருமல், தும்மல் போன்ற தன்னிச்சையாக நடைபெறும் காரியங்களையும் வென்ற “தனஞ்சயன்” ஆகிறான். இதுவே அர்ச்சுனனுக்கு அமைந்த நாமத்தின் மகிமையாகும்.

தக்கோலம்

உடலுக்குள் உயிர் இருக்கிறதா, உயிருக்குள் உயிர் இருக்கிறதா ? உடலுக்குள்தான் உயிர் இருக்கிறது என்பதே நாம் இதுவரை அறிந்த, பிறர் சொல்லக் கேட்ட கூற்று. சித்தர்களே எதற்கும் இறுதி விடை அளிக்கக் கூடியவர்கள். நம் சற்குரு கூறுவதோ உயிர் என்ற பரந்த சாம்ராஜ்யத்தின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய ஊரே உடல் என்பதாகும். பிலவ வருடமும் 2021ம் இணைவது மூன்றும் ஐந்தும் இணைவதுதானே. இதுவே உதீத என்பதும் தக்கோலம் என்பதும் இணையும் இந்த வருடத்தின் மகாத்மியமாகும். தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஉதீத மகரிஷி இவ்வருடம் உடல், உயிர், தச வாயுக்கள், சூட்சும சரீரம் பற்றிய இரகசியங்களை சிறப்பாக அருள்வதால் இந்த அரிய அனுகிரக சக்திகளை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மனிதன் உடலைச் சுருக்க வேண்டியவன், தெய்வீகத்தைப் பெருக்க வேண்டியவன். உண்டி சுருங்கினால் அனைத்தும் சுருங்கும் என்பது மனிதர்களின் நிலையாக இருந்தாலும் கடவுளை உணர்ந்த உத்தம மகான்களின் நிலையோ இதற்கு நேர் எதிராக இருப்பதுதான்.

சத்ய சாய்பாபா ஆனந்த தியானம் என்று அரிய தியானத்தை மேற்கொள்வார். தன் பூத உடலை அணுவிலும் சிறியதாக மாற்றிக் கொண்டு தன் சூக்கும உடலை ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்திற்கு பெருக்கிக் கொண்டு தியானத்தில் அமர்வார். பூமியின் குறுக்களவே வெறும் 9000 மைல்கள் என்றால் இந்த ஒரு லட்சம் மைல் விஸ்தீரணத்தில் அடங்கும் உயிர்கள் எத்தனை எத்தனை. ஏன் பாபா ஒரு லட்சம் மைல் அளவிற்கு தன் சூட்சும உடலை வியாபிக்கிறார் ? புத்தர் போன்ற மகான்களின் சூட்சும உடல் 30 மைல் தூரத்திற்கு பரவி இருந்ததாம். அப்படியானால் நாம் வாழும் பூமியின் சூட்சும சரீரம் எந்த அளவிற்கு பரவி இருக்கும் ? இதை யாராவது நினைத்துப் பார்த்தோமா ? இதுவே மகான்களின் அரிய சேவை. எனவே சத்யசாய் பாபாவின் தியானம் வெறும் தூல உயிரினங்களுக்கு மட்டும் அல்ல, பூமியை வலம் வரும் எண்ணற்ற சூட்சும சரீரங்களின் மேன்மைக்கும் என்பதை உணர்ந்தால்தான் மகான்களின் சேவையை ஒரு துளியாவது உணர்ந்தவர்கள் ஆவோம்.

இவ்வாறு ஆனந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் பாபாவின் கோர்த்த விரல்களின் வழியே இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பிரவேசம் செய்து, இரு கைவிரல்களுக்கு இடையே உள்ள ஆனந்தபுட்குழி என்ற தேவாமிர்த தீர்த்தக் குளத்தில் மூழ்கி, பெறற்கரிய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மீண்டும் தங்கள் இருப்பிடத்தை அடைகின்றன. அதனால்தான் பல சமயங்களிலும் அவர்களை அறியாமலேயே எல்லையில்லா பரவசத்தை, விவரிக்க முடியாத ஆனந்தத்தை மக்கள் அடைகின்றனர். இதன் பின்னணி சக்தியாக அமைவதே ஸ்ரீசத்ய சாய்பாபா, நம் சற்குரு, ஸ்ரீஉதீத மகரிஷி போன்ற மகான்களின் தன்னலம் கருதா தியானம் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? கலியுக மனிதனோ உறக்கம், உணவு இவற்றால் தூல உடலை ஓரளவு பெருக்கும் முறையை அறிந்திருந்தாலும் சூக்கும உடலைப் பெருக்கும் முறையை சற்றும் உணரவில்லை. சூட்சும உடல் பெருக்கத்திற்கு, உண்மையான ஆன்மீக சேவைக்கு மனிதன் தன்னை அர்ப்பணிக்க உதவுவதே சுக்ரபீட முத்திரை தியானமும், நலம் தரும் தேவாரப் பதிகங்கள் பாராயணமும் ஆகும்.

சுக்ரபீடம் தக்கோலம்

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

ஒரு முறை ஒரு அடியார் தன்னை வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் சொந்த வேலைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, தன்னை யாரும் மதிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அதைக் கேட்ட நம் சற்குரு, “அம்மா, நீங்கள் சுமைதாங்கி போல் நின்று அனைவருக்கும் சேவை செய்யத்தானே இருக்கிறீர்கள் ...”, என்று கூறினார். சுமைதாங்கி என்பது ஐந்து எழுத்து பீடத்தின் மேல் அமையும் மூன்று எழுத்து (குரு) கட்டிடம்தானே. எத்தனையோ வருடங்களுக்கு முன் நம் சற்குரு அளித்த வழிகாட்டுதல் இது என்றாலும், மூன்றும் ஐந்தும் இணையும் இவ்வருடத்தில்தான் அந்த அடியாருக்கு மேற்கூறிய வார்த்தைகள் தங்கள் ஆழ்ந்த அர்த்தத்தை புலன்களின் பரிதிக்குள் கொண்டு வருகின்றன என்பதே எண்கணித சூத்திரத்தின் மகத்துவமாகும். எந்தச் சுமையையும் நீ சுமந்து வருந்தாதே, அனைத்தையும் குருவிடம் சமர்ப்பித்து விடு என்பதே சுமை தாங்கி உணர்த்தும் பாடமாகும்.

தக்கோலம் திருத்தலத்தில் அமைந்துள்ள சுக்ர பீடத்தை பல ஆலயங்களிலும் அடியார்கள் தரிசனம் செய்து இருக்கலாம். இந்த பீடங்களின் எண்ணிக்கையில் சற்றே மாற்றம் தெரியும் என்றாலும் இந்த பீடங்கள் உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றுதான். அதுவே மனிதனின் தூல உடலையும் சூக்கும உடலையும் இணைக்கும் அரும்பணியாகும். நமது மூக்கின் உள் புகும் காற்றிற்கும் மூக்கிலிருந்து வெளி வரும் காற்றிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை. அதிக பட்சம் வெளி வரும் காற்று சற்று உஷ்ணம் கூடியதாக இருக்கும். உண்மையில் மூக்கினுள் புகும் காற்றிற்கும் வெளி வரும் காற்றிற்கும் 108 சூட்சும இரகசியங்கள் உள்ளன. இதை உணர்த்துவதே ஆலயங்களில் உள்ள சுக்ர பீடங்களாகும். இதை அடியார்கள் உணர்ந்து கொள்ள உதவுவதே பிலவ வருடத்தில் நிகழ்த்தும் வழிபாட்டுப் பலன்களில் ஒன்றாகும்.

ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள்
தக்கோலம்

பிராணாயாமம் மூலம் 108 சுக்ர பீட இரகசியங்களில் ஒன்பதை மட்டுமே உணர முடியும். இந்த இரகசியங்களே தற்போது மனிதனின் எந்த உடல் நோயையும் தீர்க்கக் கூடிய அளவிற்கு அமிர்த சக்திகளைக் கொண்டதாக அமைகின்றது என்றால் மற்ற தத்துவங்களின் பலன்கள் எந்த அளவிற்கு சுவை உள்ளதாக இருக்கும் ? சுக்ர பீட முத்திரையைப் பற்றி எதுவும் அறியாதவர்களும் கூட திருத்தலங்களில் உள்ள சுக்ர பீடங்களின் எதிரே அமர்ந்து கொண்டு அமிர்த சக்திகள் பெருகும் வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய சுக்ர பீடங்களைத் தரிசனம் செய்து வருவதால் உயிர், உடல், தசவாயுக்கள் பற்றிய இரகசியங்களை சிறிது சிறிதாக உணர்வார்கள்.

எப்படி மூக்கினுள் புகும் காற்றிற்கும், வெளிவரும் காற்றிற்கும் இடையே ஏகப்பட்ட இரகசியங்கள் உள்ளனவோ அதே போல் இந்த சுக்ர பீடங்களின் உள் புகும் காற்றிற்கும், இந்த பீடங்களில் உள்ள துவாரங்களின் வழியே வெளி வரும் அமிர்த ஔஷத கிரணங்களுக்கும் இடையே பலவித இரகசியங்கள் அமைந்துள்ளன. இந்த சுக்ர பீடங்களைப் பற்றி ஓரளவு உணர்ந்து கொண்டால் கூட மனிதன் எந்தக் கோயிலையும் விட்டு வெளியே வர மாட்டான் என்பதே சற்குருவின் உபதேசம். துர்கை, அம்பாள், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி போன்ற எந்த பெண் தெய்வத்திற்கும் உரிய அஷ்டோத்திர துதியைத் தொடர்ந்து இந்த சுக்ர பீடங்க்ளின் எதிரே அமர்ந்து ஓதி வருவதும் பலன்களை துரிதமாக்கும். மலடி என்ற பெயர் வாங்கிய பெண்கள் கூட இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள் என்றால் இதன் மகிமைதான் என்னே ?

ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தி
தக்கோலம்

ரமண மகரிஷி திருஅண்ணாமலையில் விருபாட்சி குகை, பாதாள லிங்கம் போன்ற பல இடங்களில் அமர்ந்து தியானம் புரிந்தாலும் அனைத்து இடங்களிலும் எறும்புகள் பகவானின் உடலைக் கடித்து “தொந்தரவு” செய்தன என்பதை நாம் அறிவோம். உண்மையில் மகான்களின் பார்வையோ இதை வேறு விதமாகப் பார்க்கும். எறும்புகள் கடிக்கும்போது சுக்ராமிர்தம் என்ற ஒரு வகை உணவு சக்தி இவ்வாறு தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகான்களுக்கு உணவாக எறும்புகளால் பரிமாறப்படுகிறது என்பதே நாம் இதுவரை உணராத பிப்ல இரகசியம். இதனால்தான் பல மகான்களும் உணவின்றியே பல நாட்களுக்கு தியானத்தில் ஆழ முடிகிறது. மனிதர்களாகிய நாம் இத்தகைய எறும்புகளின் “கடி” மூலம் பிப்ல சக்தியைப் பெற முடியாது என்றாலும் கோயிலை வலம் வரும் எறும்புகளுக்கு தான்ய ரவைகளை சர்க்கரையுடன் சேர்த்து அளித்து பிப்ல சக்தியை “வருந்தாமல்” பெறலாமே.

பிப்பிலம் என்றால் எறும்புகள் என்று பொருள். தக்கோலத்தில் அருளும் ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தியே எறும்புகள் மட்டுமே பெற்ற அபூர்வ அமிர்த சக்திகளை அளிக்கும் மூர்த்தியாவார். தற்போது வெட்டவெளி மூர்த்தியாக ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தி துலங்கினாலும் இம்மூர்த்தியின் வரலாறு மிகவும் புராதானமானதே. கரிசலாங்கண்ணி, செம்பருத்தி போன்ற குறைந்தது ஐந்து தைலங்களால் இம்மூர்த்திக்கு காப்பிட்டு தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு ஆராதனை செய்வதால் சக்தி குறைவால், தற்காலத்தில் கூறப்படும் vitamin deficiency நோய்கள் அனைத்துமே துரித நிவாரணம் பெறும்.

“எறும்பு ஊர்வதைப் போல் ...”, என்ற ஒரு வழக்கு உண்டு. பணிவையும் அடக்கத்தையும் குறிப்பதே எறும்பின் இத்தகைய செயல்பாடு. எறும்பைத் தவிர மற்ற எந்த உயிரினத்திலும் நாம் காண முடியாத ஒர் அற்புத பண்பாடு. அதனால்தான் நம் சற்குரு எறும்புகள் வழிபட்ட திருவெறும்பூர் திருத்தலத்தில் திருப்பணி நிறைவேற்றியபோது ஒருவர் பின் ஒருவராகவே படிகளில் ஏற வேண்டும் என்றும் ஒருவர் பின் ஒருவராகவே படிகளில் இறங்க வேண்டும் என்றும் பணித்தார்கள். இவ்வாறு தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அடியார்கள் மேல் அன்பைப் பொழிந்தவரே நம் சற்குரு. இந்த அன்பின் ஒரு துளியையாவது நாம் பெற வழிகோலுவதே தக்கோலம் திருத்தலத்தில் நாம் இயற்றும் ஸ்ரீநந்தாமிர்த லிங்க மூர்த்தியின் வழிபாடாகும். நந்தா விளக்கு என்று அணையாமல் தொடர்ந்து ஒளி வீசும் திருத்தல தீபங்களைக் குறிப்பார்கள். ஆனால், அமிர்த சக்திகளையே நந்தாமல், குறையாமல், தொடர்ந்து எப்போதும் ஒரு சிவலிங்க மூர்த்தி தன் அனுகிரகமாக அளிக்கின்றார் என்றால் இந்த சிவலிங்க மூர்த்தியை நாம் அறிந்து கொள்ள அருள்சுரந்த நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ?












சுக்ராமிர்தம் வேறு
சுக்லாமிர்தம் வேறு
என்று அடியார்கள்
உணர்வதே
நாம் சற்குருவிற்கு
அளிக்கக் கூடிய
குரு காணிக்கையாகும் !

சுக்லாமிர்தம், சுக்ராமிர்தம் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள், பக்தர்கள் அல்ல, உணர வழிகோலுவதே ஆலயங்களில் உள்ள சுக்ர பீடங்களாகும். இந்த சுக்ர பீடங்களில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே பிரதிபலிப்பது மக்களின் சுக்லாமிர்த சக்திகள், இந்த பீடங்களிலிருந்து வெளியே பிரகாசிப்பது சுக்ராமிர்த இறை சக்திகள். இந்த வித்தியாசத்தை மக்கள் தொடர்ந்து சென்று, அவர்கள் பக்தர்களாக இறையடியார்களாக மலர, மிளிர வழிகாட்டுவதே ஆலய சுக்ர பீடங்களாகும். நம்முடைய ஆசைகள், பொறாமை எண்ணங்கள், வெறுப்புகள் இவற்றை பிட்சையாக ஏற்றுக் கொண்டு அன்பு, கருணை, பொறுமை போன்ற இறைப் பொக்கிஷங்களை அளிக்கும் பிட்சாடன மூர்த்தியின் அனுகிரக பாங்காகும்.

ஸ்ரீஔர்வ தட்சிணாமூர்த்தி
தக்கோலம்

திருத்தலங்களில் உள்ள சுக்ர பீடங்களைப் போன்றே நம் உடலிலும் சுக்ர பீடங்கள் உள்ளன. ஒரே ஒரு அங்குலாஸ்திதியில் மட்டும் இத்தகைய முன்னூறுக்கும் மேற்பட்ட சுக்ர பீடங்கள் நிறைந்துள்ளன என்றால் கடவுள் கருணை எல்லையில்லாததுதானே ? இத்தகைய அமானுஷ்ய சுக்ர பீட சக்திகளைப் பயன்படுத்தாதது யார் குறை ? இதையே மகான்கள் கடவுள் கருணையே வடிவானவர் என்று கூவிக் கொண்டே இருந்தார்கள், கூவிக் கொண்டே இருக்கிறார்கள், கூவிக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு மனித உடலில் கோடி கோடியாய்த் துலங்கும் சுக்ர பீடங்கள் அனைத்தின் வழியாகவும் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்து எல்லையில்லா ஆனந்தம் பெற்றவரே ஸ்ரீசைதன்ய மகா பிரபு ஆவார். இந்த எல்லையில்லா ஆனந்தம் சைதன்யருக்கு மட்டுமே சொந்தமா என்ன ? உங்களுக்கும் தான் ... இதற்கு வழிகாட்டுவதே தக்கோலம் திருத்தலம்.

ஔர்வர் கர்ப்பத்தில் சிசுவாய் இருக்கும்போது அம்மகரிஷியின் தாய் அந்தச் சிசுவை அசுரர்களிடமிருந்து காக்க கர்ப்பத்தையே தன் தொடைக்கு மாற்றிக் கொண்டார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். ஊரு என்றால் தொடை, தொடை கர்ப்பத்தில் தோன்றியதால் ஊரு என்பது ஔர்வ என்று ஆயிற்று. கேட்பதற்கு இது சாதாரணமாக இருந்தாலும் அந்தத் தாய் அடைந்த வேதனையை இறைவன் என்ற அனைவருக்கும் தாய் மட்டுமே உணர முடியும். இந்த கற்பனைக்கெட்டாத கர்ப்ப வேதனைக்கு செவி சாய்த்து அத்தாயின் வேதனைகளை ஏற்றுக் கொண்டவரே தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். தட்சிணா மூர்த்தியின் தலை சற்றே இடது பக்கம் சாய்ந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் பல துன்பங்களை அடைவார்கள் என்று என்று யார் பயமுறுத்தினாலும் அதைக் கேட்டு சற்றும் கலங்காது தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தியை அடிப் பிரதட்சணம் செய்து வணங்கி வந்தால் சுகப் பிரசவத்தைப் பெறுவார்கள் என்பது இத்தல குரு கடாட்சமாகும். பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் பலவிதமான உடலுறவுப் பிரச்னைகளையும் “திரப்படுத்தி” இல்லறம் நல்லறமாய்த் துலங்க அருள்புரிபவரே தக்கோலம் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். “ஔர்வ” என்பது சித்தர்கள் சூட்டிய காரணப் பெயரே. இந்த நாமத்தை ஆண்கள் தியானித்து வந்தாலே பல பிறவிகளின் தவறுகள் மாயமாகும், பொடிப் பொடியாகும்.

தக்கோலத்தில் எழுந்தருளிய நடராஜப் பெருமான் ஒளர்வ தாண்டவ அதுல்ய நடனம் என்ற ஒரு அற்புத நாட்டியக் கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். தற்காலத்தில் மாப்பிள்ளை பெண் நிச்சயம் ஆகி விட்டாலும் திருமணத்திற்கு சற்று முன் இந்த தம்பதிகள் மாறி விடுகின்றனர், இதில் பல திருமணங்களும் நின்று போய் விடுகின்றன, சில சமயங்களில் இத்தகைய மாற்றங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள் மனம் பேதலித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போய்விடுவதும் உண்டு.

ஸ்ரீநடராஜப் பெருமான்
தக்கோலம்

இத்தகைய எதிர்பாராத மாற்றங்களை நிவர்த்தி செய்து நல்ல முறையில் திருமணங்கள் இனிதே அமைய வழிகோலுபவரே தக்கோல நடராஜப் பெருமான் ஆவார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் தக்கோல ஔர்வ தட்சிணா மூர்த்தியையும் நடராஜப் பெருமானையும் வேண்டி மாப்பிள்ளை பெண் வீட்டார் ஆயுர்தேவி பூஜை போன்று கங்கை காவிரி தீர்த்தங்களை கொதிக்க வைத்து அதில் வெட்டிவேர், துளசி, ஏலக்காய், சுக்கு, கடுக்காய் என்ற ஐந்தையும் சேர்த்து ஒரு வெள்ளி அல்லது வெண்கலப் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தை சுத்தமான மஞ்சள் துணியால் மூடி வைத்து விட வேண்டும். தினமும் இந்த கலசத்தை அர்த்தநாரீஸ்வரராகப் பாவித்து மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் இல்லங்களில் அப்பர் பெருமானின் வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் தேவார தாண்டக பதிகத்தை ஓதி வர வேண்டும். மூன்று மாதங்கள் திருமணத்திற்கான இடைவெளி காலம் இருப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 45 நாட்கள் கழித்த பின்னர் இந்த கலச செம்புகளை எதிர்காலத் தம்பதிகள் மாற்றிக் கொண்டு பூஜைகளைத் தொடர வேண்டும். மாதவிலக்கு நாட்களில் பெண்ணின் உற்றம், சுற்றத்தார் இந்த பூஜைகளைத் தொடர்தல் நலம். திருமணம் இனிது நிறைவேறிய பின்னர் இந்த கலச செம்புகளில் உள்ள தீர்த்தங்களைக் கலந்து தக்கோலம் இறை மூர்த்திகளுக்கு, குறிப்பாக ஔர்வ தட்சிணா மூர்த்திக்கும், நடராஜ பெருமானுக்கும் நன்றி தெரிவித்து இத்திருத்தலத்தில் உள்ள எந்த மூர்த்திக்கும் வேண்டுமானாலும் அபிஷேகம் நிறைவேற்றி விடலாம். இது முடியாதபோது இந்த திருத்தலத்தில் உள்ள நந்தி வாய் தீர்த்தத்திலும் சேர்த்து விடலாம். இதனால் திருமண சம்பந்தங்களில் தோன்றும் எத்தகைய குழப்பங்களும் தீரும், குடும்ப ஒற்றுமை பெருகும். ஏற்கனவே திருமணம் ஆகிய தம்பதிகளும் மேற்கூறிய பூஜையை தம்பதிகள் இருவரும் சேர்ந்து குறைந்தது 21 நாட்களுக்கு நிறைவேற்றி, தக்கோல மூர்த்திகளை தரிசனம் செய்து பலன் பெறலாம்.

கைகேயியின் உத்தரவை சிரமேற்கொண்டு ராமச்சந்திர மூர்த்தி வனவாசத்திற்கு சென்றபோது சீதையும் உடன் வருவதற்குத் தயாரானாள். இதைக் கண்ட ராமபிரான் அதை விரும்பாததுபோல் உரைத்திடவே சீதையோ தான் ராமபிரானுடன் வருவதால் அவருடைய பிரம்மசர்ய விரதத்திற்கு எந்தவித பங்கமும் தன்னால் ஏற்படாது என்று உறுதி அளித்த பின்னரே சீதையை தன்னுடன் அழைத்துச் சென்றார் என்பது நீங்கள் அறிந்ததே. வனவாசம் முடிந்த பின்னர் மனிதன் என்ற முறையில் தம்பதி சகிதமாக தக்கோலம் திருத்தலத்திற்கு சீதையுடன் எழுந்தருளி கிரிஜா கன்னிகாம்பாள் தாயாருக்கு நன்றி தெரிவித்தார் ஸ்ரீராமபிரான். கிரிஜா என்றால் இமவானின் மகள் என்று பொருள். கன்னித் தன்மையில், கற்பில் இமயமலையைப் போல் உயர்ந்தும், மலைபோன்ற திர தன்மையும், திடத் தன்மையையும் கொண்டிருந்த சீதையால் வழிபடப்பட்ட அம்பிகையே ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் ஆவாள். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண் பெண் இருவருமே இத்தகைய உயர்ந்த நடத்தையை அருங்குணமாக பெற உதவுவதே ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதேஸ்வரர் வழிபாடாகும்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி
தக்கோலம்

ஸ்ரீஹம்ஸ்வர பெருமாள்
தக்கோலம்

ராமபிரானுடன் தக்கோலம் திருத்தலத்தை தரிசனம் செய்தபோது ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் தேவியால் ஹம்ஸ்வரம் என்ற அபூர்வ சக்தியைப் பெற்றாள் சீதாதேவி. இந்த ஹம்ஸ்வரம் என்ற சக்திகளே லவ குசா என்ற இரு சக்திகளாய் வால்மீகி முனிவரின் அனுகிரகத்தால் பூரணம் பெற்று லவன், குசன் என்ற பக்திச் செல்வங்களாய் இன்றளவும் இப்பூவுலகை வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே சீதை ராமபிரானைப் பிரிந்து பூமியில் சென்று மறைந்தாள் என்பதை விட ஹம்ஸ்வர பூரணம் பெற்ற சீதை இறைவனுடன் வைகுண்டம் ஏகினாள் என்று உணர்த்துவதே ஹம்ஸ்வர லீலையின் மகத்துவம். மனிதனை புனிதப்படுத்துவதே, பூரணமாக்குவதே ஹம்ஸ்வரம். இந்த ஹம்ஸ்வரத்தை சாதாரண மக்களும் உணர்ந்து பயன்பெற அருளும் தலமே தக்கோலமாகும்.

பிரம்மம் என்பது மனிதனையும், செடியையும், விலங்கையும் இணைப்பது, இணைந்ததுதானே. இந்த இணைப்பை உருவாக்குவதே ஹம்ஸ்வரம் ஆகும். இந்த ஆரம்ப கட்ட பயிற்சிக்கு உறுதுணை செய்வதும் தக்கோலம் என்றால் மிகையாகாது. இத்தலத்தில் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி தன்னுடைய இடது காலை மடக்கி உயர்த்தி, வலது காலை தொங்க விட்டு இருப்பதும், ஸ்ரீஹம்ஸ்வர பெருமாள் தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்டு அமர்ந்திருப்பதும் இத்தகைய ஹம்ஸ்வர யோகத்தின் தன்மையை சாதாரண பக்தர்களும் புரிந்து கொள்ள துணை புரிகின்றன.

தந்தை எவ்வழி, மகனும் அவ்வழி என்பது போல் தந்தையான பெருமாள் இடது காலைத் தொங்க விட்டு அமர்ந்திருப்பதுபோல் தந்தையை பின் பற்றும் தனயனாக, எப்போதும் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து அருள் புரியும் பிரம்ம தேவரும் இங்கு இடது காலைத் தொங்க விட்டு அமர்ந்து இருப்பது வேறு எத்தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வ காட்சியாகும்.

ஸ்ரீசிசிர துர்கை தக்கோலம்

பாகப் பிரிவினை, சொத்துத் தகராறு, உறவுப் பிரச்னைகள் போன்றவற்றால் பெற்றோர்களுடன் பகைமை கொண்ட குழந்தைகள் தக்கோலம் திருத்தலத்தில் செவ்வாய்க் கிழமை பிரம்ம மூர்த்தியையும், புதன் கிழமை பெருமாள் மூர்த்தியையும் தரிசனம் செய்து இவர்கள் முன் அமர்ந்து தங்கள் பிரச்னையை வாய் விட்டுக் கூறுவதால் எத்தகைய குடும்ப சம்பந்தமான பிரச்னைகளுக்கும் உரிய தீர்வுகள் இந்த மூர்த்திகளால் உணர்த்தப்படும், மனம் உண்டால் மார்க்கமும் உண்டே.

ஒரு தமிழ் வருடத்திற்கு ஆறு ருதுக்கள் உண்டு. இதில் மாசி, பங்குனி என்னும் இரண்டு மாதத்திற்கு நிரவி நிற்பதே சிசிர ருது காலமாகும். பெண்கள் எந்த ருதுவில் அவர்கள் பூப்பு எய்துகிறார்களோ அதைக் கொண்டு கணக்கிடும் ருது சாங்கியங்களும் உண்டு. பொதுவாக அக்னி அம்சங்கள் ஜனன ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால் அத்தகைய பெண்களுக்கு இயற்கையாகவே உடல் சூடு அதிகமாக இருக்கும், அதனால் அவர்கள் “ஒல்லி பிச்சானாகவே” இருப்பார்கள். இதனால் அவர்கள் தாம்பத்ய உறவிலும் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும், சந்தான பாக்கியமும் தடைப்படுவது உண்டு. எனவே இவ்வாறு ஒல்லியாக இருக்கும் பெண்கள் இந்த சிசிர ருதுக் காலத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்ற நான்கு அஷ்டமி திதிகளிலும் தக்கோல சிசிர துர்கைக்கு கழுத்து முதல் முழங்கால் வரை பசு வெண்ணெய் காப்பிட்டு வழிபடுவதால் அற்புதமான உடல் ஆரோக்யத்தையும் குடும்ப வாழ்வையும் பெறுவார்கள். உலைக்கலன்கள், தீயணைப்பு துறை போன்று அக்னி சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பை நல்குபவளே சிசிர துர்கை ஆவாள். பஞ்சபாண்டவர்களின் தேவியான துரோபதை துர்கையின் ருத்ர, ரௌத்ர அம்சங்களைப் பூண்டவள். அவ்வாறு இருக்க துரியோதனனின் அரண்மனையில் துச்சாதனனால் எவ்வாறு துரோபதையை துகிலுரிய முடிந்தது ? சித்தர்களே இதற்கு விடையளிக்கக் கூடியவர்கள். முந்தைய ஒரு பிறவியில் தக்கோலம் சிசிர துர்கையை வழிபட்டு அனுகிரகம் பெற்ற ஒரே காரணத்தால் துச்சாதனனால் துரோபதையின் வஸ்திரத்தைத் தொடவே முடிந்தது. உடலின் வலது பாகம் உஷ்ண தத்துவத்தையும், இடது பாகம் சீதள தத்துவத்தையும் குறிப்பதால் வலது காலை மடித்து இடது காலின் பின் வைத்திருக்கும் துர்கையின் இந்த சீதள கோலமே பக்தர்களுக்கு குளிர்ச்சியை தர வல்லதாகும். பலரும் அதிகம் படிப்பதால் மூளை சூடு அதிகமாகி பைத்தியம் பிடித்தது போன்ற நிலையை அடைவர். இவ்வாறு அதீத மூளை உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் கரிசலாங்கண்ணி தைலத்தால் சிசிர துர்கைக்கு காப்பிட்டு வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள்.

நந்திவாய் தீர்த்தம்
தக்கோலம்

ஆஸ்ட்ரல் பயணம் என்று அழைக்கப்படும் சூட்சும சரீரம் கொள்ளும் பயணத்தில் அத்தகைய சேவையில் ஈடுபட்டவர்கள் எத்தகைய இடையூறும் அடையாதவாறு காப்பதே சிசிர துர்கையின் “கோலம்”. இத்தகைய கோலத்தில்தான் நம் சற்குருவும் சூட்சும சரீர பயணத்தை மேற்கொள்வார். இது சம்பந்தப்பட்ட மேலும் தகவல்களை உரிய குருநாதர் மூலம் அறிந்து கொள்வது சிறப்பு என்றாலும் அத்தகையோர் தக்கோலம் ஸ்ரீசிசிர துர்கையை வழிபடுவதால் தக்க வழிகாட்டுதல்களைப் பெறுவார்கள். தக்கோலம் திருத்தலத்தில் சிசிர துர்கை மட்டும் அல்லாது அனைத்து மூர்த்திகளும் கொள்ளும் கோலமே சற்று வித்தியாசமாகவே இருப்பதை பக்தர்கள் எளிதில் தரிசிக்க முடியும். இதையே அகஸ்திய நாடிகளும்,
தக்கோலம் மாற்றும் பெருங் கோலம்
எக்காலும் நீ மறவா அருட்கோலம்
வாக்காலும் மனதாலும் உண்ணாவில் அவனுறைய
இக்காலே ஏகுவாய் சதுர்தீர்த்த தக்கோலம்
என்று தக்கோல மகிமையை சிறப்பாக இத்தல நந்தி வாய் தீர்த்தத்தின் மகிமையை உரைக்கின்றன. உண்ணா என்றால் உள் நா என்று பொருள், உண்ணாத அதாவது வாய் மூலம் பெறாத என்ற பொருளும் உண்டு. உண்ணாமுலை அம்மன் என்றால் அம்பாளின் சக்தியை முலைப் பால் சக்தியாக, வாயால் அருந்த வேண்டிய அவசியம் இல்லாமல் அளிக்கக் கூடியவள், அருள் சுரக்க வல்லவள் என்ற அற்புத பொருள் உண்டு. அனைத்து சிவனடியார்களும், நாயன்மார்களும், நால்வர் பெருமக்களும், திருஞானசம்பந்தர் மட்டும் அல்ல, அனைத்து சித்தர்களும் மகான்களும் உண்ணாமுலைத் தாயின் அருள் அமிர்தத்தை சுவைத்தவர்களே.

தக்கோலத்தில் பல காலம் உறைந்து வழிபட்ட ஸ்ரீஔர்வ மகரிஷியோ,
ஆதியும் தக்கோலம்
அந்தமும் தக்கோலம்
மீதியும் தக்கோலம்
சோதியும் தக்கோலம்
சுந்தரம் தக்கோலமே
என்று சிறப்பித்துப் பாடுகிறார். இவ்வாறு “சதுர்தீர்த்தம்” என்று சித்தர்களால் அழைக்கப்படும் நந்திவாய் தீர்த்தத்தின் மகிமையை உணர விரும்புவோர் ஒரு வெள்ளிச் செம்பில் இத்தீர்த்தத்தை எடுத்து பத்திரமாக தங்கள் வீட்டில் வைத்திருந்து ஒரு மண்டலத்திற்குக் குறையாமல் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து தர்ப்பணம் இட்டு வருதல் சிறப்பு.

ஸ்ரீஜலநாதேஸ்வரர் தக்கோலம்

தக்கோல ஈசனின் திருநாமம் ஸ்ரீஜலநாதேஸ்வரர் என்பதாகும். இதில் உள்ள ஜல என்பதைப் பற்றி விவரிக்க ஒரு சதுர்யுகமும், நாத என்பதைப் பற்றி விவரிக்க ஒரு சதுர்யுகமும், ஜலநாத என்பதைப் பற்றி விவரிக்க ஒரு சதுர்யுகமும் தேவைப்படும் என்றால் ஈசனின் கால் கட்டை விரல் நுனியை மட்டும் ஒரு சதுர்யுக காலத்திற்கு நம் சற்குரு தரிசனம் செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே ?!

ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீஞானசம்பந்தர்
தக்கோலம்

அரிதிலும் அரிய இந்த ஜலநாத சக்திகளை சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்வது இயலாத காரியம் என்றாலும் சித்தர்களும் மகான்களும் கீர்த்தனைகள், வழிபாடுகள், தான தர்ம முறைகள் பலவற்றை அளித்து பக்தர்கள் இந்த ஜலநாத சக்திகளை பெற அனுகிரகம் செய்துள்ளனர். நாத விந்து கலாதீதா என்று முருகப் பெருமானை விளிக்கின்றார் அருணகிரி நாதர். இவ்வாறு நாதத்திற்கு அதீதமாக இருக்கும் இத்தல முருகப் பெருமானே நாத சக்திகளை தன்னுடைய அனுகிரகமாக அளிக்கின்றார். தோத்திரபூர்ணாம்பிகையின் கரம் பிடித்து வேள்வித் தீக்குள் மறைந்த திருஞானசம்பந்தப் பெருமானும் இந்த நாத சக்திகளை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிப்பதற்காகவே இவ்வாறு சில நிமிடங்களே மலரும் ஒரு திருமண வைபவ நிகழ்ச்சியைப் புனைந்தார். சம்பந்தப் பெருமானின் அதீத சக்திகள் அனைத்தையும் நாத சக்தியாக மாற்ற அருள்புரிந்தவரே இத்தல முருகப் பெருமான் ஆவார். அதை இன்றும் பக்தர்கள் தரிசித்து மகிழவே இங்கு சம்பந்தப் பெருமான் முருகனை வணங்கி அருள் பெறும் கோலத்தில் திகழ்கிறார். தம்பதிகள் சங்கமத்தில் தோன்றுவதும் ஜலநாத சக்திகளே. இந்த நாத சக்திகளை ஊர்த்துவம் பெறச் செய்தால் மட்டுமே குண்டலினி யோகத்தில் பூர்ணம் பெற முடியும். கோடியில் ஒருவருக்கே இந்த ஜலநாத சக்திகளைப் பற்றி அறிய முடியும். அத்தகைய சூட்சுமத்தை அறிந்த பலரிலும் ஒருவரே இந்த நாத சக்திகளை உத்தம சற்குரு மூலம் முறையாகப் பயன்படுத்தி இறை தரிசனம் பெற முடியும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
உய்யக்கொண்டான்மலை

இதுவே பத்துக் கோடியில் ஒருவர் மட்டுமே இறை தரிசனம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றார் என்று சித்தர்கள் கூறும் இரகசியத்தின் பின்னணியாகும். வளைந்தது வில்லு என்று தொடங்கும் மணிவாசகப் பெருமானின் தேவாரப் பதிகமும் இத்தகைய ஜலநாத சக்திகளை அருளக் கூடியதே. இந்த ஜலநாத சக்திகளின் ஊர்த்துவ வேகத்தை சாதாரண மக்களும் பெறும் வகையில் அமைந்துள்ளதே இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் உந்தீபற என்ற வார்த்தையின் மகாத்மியமாகும். இந்தப் பதிகத்தில் உள்ள “உந்தீபற” என்பதும் “தக்கோலம்” என்பதும் ஐந்து அட்சரங்களுடன் விளங்குவது ஏதோ எதேச்சையான ஒரு இணைப்பு அல்ல. அதனால்தான் எந்த தேவாரப் பதிகமாக இருந்தாலும் அந்தப் பதிகத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் வரிசைக் கிரகமாகவே எந்தப் பாடலையும் விட்டு விடாது, மாற்றாது பாட வேண்டும் என்பதில் நம் சற்குரு உறுதியாக இருப்பார்கள்.

நாதம் விந்து கலை சக்திகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் திருச்சி உய்யக்கொண்டான்மலையில் அருள்புரியும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தல் சிறப்பு. தக்கோலம், உய்யக்கொண்டான் மலை இந்த இரு நடராஜ மூர்த்திகளின் கோலத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை ஆத்ம விசாரம் செய்து பார்த்தலே இந்த மூர்த்திகளின் அனுகிரகத்தை பக்தர்கள் பெறுவதற்கு அனுகிரகமாக அமையும் முதல் படியாகும்.

“பழங்கஞ்சி” காஞ்சிமுனி

காஞ்சி கனிந்த கனி தினமும் நீராடுகையில் கிணற்றில் ராட்டினம் மூலம் நீர் இறைக்காது கயிறு கொண்டே நீர் இறைத்து தனக்கு அளிக்கும்படிக் கூறுவார்கள். இந்தப் “பழங்கஞ்சி” முறையைப் பற்றிய விளக்கத்தை அளிப்பவர்களே சித்தர்கள். இவ்வாறு நீர் இறைக்கையில் இதில் தோன்றும் ஜலநாத சக்திகளையே மக்களுக்கு எல்லாம் நித்திய அனுகிரகமாக அளிக்கிறார் கனிந்தகனி. இந்த ஜலநாத சக்திகள் ராட்டினம் மூலம் பின்னமடைந்து விடாமல் இருக்கவே கை மூலம் அடியார்கள் நீர் இறைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு சுக்ர சக்திகள் மிகுந்த தேங்காய் நார் கொண்டு நீர் இறைத்து மக்களுக்கெல்லாம் சுக்ர சக்தியை அளிக்கும் அரும்பணியை நம் அடியார்கள் கூவத்தூர் திருத்தலத்தில் சமீபத்தில் மேற்கொண்டார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. இவ்வாறு கனிந்தகனியைப் பின்பற்றி பல அடியார்களும் கயிறு கொண்டு நீர் இறைத்து சமுதாயத்திற்கு அரும்பணி ஆற்றினர், இன்றும் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர். அத்தகைய அன்பு உள்ளம் கொண்ட அடியார்களுக்கு ஆறுதல் அளிக்கவே எப்போதோ தன் உயிரை இறைவன் திருவடிகளில் அர்ப்பணிக்க வேண்டிய கனிந்தகனி நூறு வயதைத் தாண்டியும் இப்புவியில் பூத உடலில் நடமாடினார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். கர்நாடக சங்தீக் கலையில் சிறந்து விளங்கியவரே கனிந்தகனி. தன்னுடைய தபோ சக்திகளை கிணற்றில் நீர் இறைத்தல் என்ற ஒரு திருப்பணி மட்டும் அல்லாது ஜலதரங்கம் என்ற வாத்தியத்தை வாசிப்பதாலும் இந்த நாத சக்திகளை உலகிற்கு அர்ப்பணிக்க வழிகாட்டிய பெருந்தகையே காஞ்சி மகான் ஆவார்.

தன்னைச் சுற்றிலும் நீர் சிறிது நிரம்பிய பீங்கான் பாத்திரங்களை அரை வட்ட வடிவில் வைத்துக் கொண்டு அதை ஒரு குச்சியால் தட்டி தட்டி வாசிப்பதே ஜலதரங்கம் என்ற இசையாகும். இதில் பல விதமான அடிப்படை “தரங்கம்” அதாவது அலைகள் உண்டாகின்றன. ஒன்று, குச்சியால் தட்டப்படும் பாத்திரங்களில் ஏற்படும் ஒலி அலைகள், அடுத்து பாத்திர அதிர்வுகளால் அவற்றில் உள்ள தண்ணீரில் ஏற்படும் ஒலி அலைகள், அடுத்து தண்ணீரின் மேற்புறத்தில் தோன்றும் காற்றலைகள். இந்த அதிர்வுகளால் ஏற்படும் ஒலி அலைகளே ஜலதரங்கம் என்ற இன்னிசை அலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஜலதரங்கம் என்ற இசையே தக்கோலம் திருத்தலத்தில் ஔர்வ தாண்டவ அதுல்ய நடன அனுகிரகமாக, நந்திவாய் தீர்த்தமாக, கோயில் பிரகார சுவற்றில் கொலுவீற்றிருக்கும் ஸ்ரீஉதீத மகரிஷியின் மேல் பொலியும் காற்று, மழை, மின்னல் போன்ற இயற்கை சக்திகளின் அனுகிரக அலைகளாக இந்த பிரபஞ்சத்தை வலம் வருகின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும், தக்கோலம் திருத்தலத்தில் கிட்டும் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

பண்டைய காலத்தில் ஆஸ்ரமங்கள், மகரிஷிகளின் தவக் குடில்கள் அனைத்துமே நதியோரங்களிலேயே அமைந்திருந்தன. உடல் சுத்திக்கு இந்த நதிகள் முக்கியம் என்று நாம் கூறினாலும் உடல் சுத்தியை விடவும் மன சுத்தியும், உள்ள சுத்தியும் முக்கியமாக இருப்பதால் இந்த நதிகளின் மேல் உலாவும் ஜலதரங்க சக்திகளைப் பெறுவதற்காகவே தவக் குடில்கள் நதியோரங்களில் அமைக்கப்பட்டன. சாதாரணமாக அன்றில் பறவைகள் தரையில் இறங்குவதில்லை என்பதால் இவைகளைப் பார்க்க முடியாது என்றாலும் தக்கோலம் திருத்தலத்தில் பொலியும் அபூர்வ ஔர்வ தாண்டவ அதுல்ய நடனத்தில் தோன்றும் ஜலதரங்க சக்திகளை “அருந்துவதற்காகவே” இந்த அன்றில் பறவையும் தக்கோலம் திருத்தலத்தில் இறங்கிய கோலத்தை அடியார்கள் கண்டு இரசிக்கலாம். ஜலதரங்க சக்திகளைப் பக்தர்கள் நிறைந்த அளவில் பெறக் கூடிய தலங்களுள் தரங்கம்பாடி, வேதாரண்யம் போன்ற தலங்களும் அடங்கும்.

ஸ்ரீகுயத்தலை விநாயகர்
தக்கோலம்

குயத்தலை வழிபாடு என்ற ஒன்றை சித்தர்கள் இவ்வருட அனுகிரகமாக அடியார்களுக்கு அளிக்கிறார்கள். தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீகுயத்தலை விநாயகரே இத்தகைய அபூர்வ அனுகிரகங்களை வர்ஷிக்கும் மூர்த்தியாவார். சென்னையில் உள்ள கொசத்தலையாறு என்ற ஆற்றில் தன் எழுதுகோலை நனைத்து ஒவ்வொரு சிசுவின் தலையெழுத்தையும் பதிக்கிறார் பிரம்ம மூர்த்தி. குயத்தலை என்பது பிரம்மாவின் கையெழுத்தைப் பெற்ற தலையாகும், அதாவது பிரம்மா என்ற “குயவனின்” கையெழுத்தை பூண்ட தலை. தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீகுயத்தலை விநாயக மூர்த்தி இந்த தலையெழுத்தையும் மாற்றவல்ல தெய்வ மூர்த்தி ஆவார், பிரம்மாவின் கையெழுத்தை தன் அங்குசம் என்னும் ஆயுதத்தால் மாற்றும் வள்ளலே ஸ்ரீகுயத்தலை விநாயகர். இதையே “தக்கோலம் மாற்றும் பெருங்கோலம்...”, என்று அகத்திய நாடிகள் குறிக்கின்றன. குயத்தலை என்பது ஐந்து அட்சரங்களுடன் பொலிவதால் சித்தர்கள் அளிக்கும் குயத்தலை வழிபாடு இந்த பஞ்சாட்சர ஆண்டில் இந்த எழுத்துக்களின் சக்திகளை மாற்றும் என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய அனுகிரகமாகும். இரண்டு குயத்தலை வழிபாட்டு முறைகளை இங்கு அடியார்கள் நலன் கருதி அளிக்கிறோம்.

1. திருத்தல பிரகாரங்களை, மலைத் தலங்களை கிரிவலமாக நடைபிரதட்சணமாக வலம் வருதல்.
2. பிரகார வலம், கிரிவலம் வரும்போது வாய் விட்டோ மனதிற்குள்ளோ ஏதாவது காயத்ரீ மந்திரங்களை, சிறப்பாக நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதுதல்
3. கை விரல்களில் ஏதாவது காயத்ரீ முத்திரை விதானத்தை, அல்லது குரு குக, குக குரு முறையில் வைத்துக் கொள்தல், அதாவது வளர்பிறை நாட்களில் குரு விரல் நுனி சுக்ர விரலின் முதல் அங்குலாஸ்திதியை தொடுமாறும், தேய்பிறை நாட்களில் சுக்ர விரலின் நுனி குரு விரலின் முதல் அங்குலாஸ்திதியை தொடுமாறும் வைத்துக் கொள்ளுதல்
4. மனதிற்குள் சிவஸ்வஸ்தி சக்கரத்தை நினைத்துக் கொண்டு அதில் உள்ள நான்கு சிவ மந்திரங்களிலும் இந்த காயத்ரீ மந்திர பதங்களையோ அல்லது தேவாரப் பாடல் வரிகளையோ இணைத்துக் கொள்தல்
5. நாக்கை மடித்து உள்நாக்கைத் தொடுமாறோ அல்லது கூடிய வரை உள்ளே நகர்த்தி வைத்துக் கொள்தல் மற்றோர் முறையான குயத்தலை வழிபாடு
1. கிரிவலப் பாதையில் அல்லது திருத்தலங்களில் ஏதாவது ஒரு மூர்த்தியை தரிசித்தவாறு பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்தல். பத்மாசனம் அவசியம்.
2. கையில் ஏதாவது ஒரு காயத்ரீ முத்திரையை அமைத்துக் கொள்தல் அல்லது குரு குக, குக குரு முறையில் கை விரல்களை அமைத்துக் கொள்தல்

வளர்பிறை (குருகுக) முத்திரை
(தேவாமிர்த சின்முத்திரை)

தேய்பிறை (குககுரு) முத்திரை
(ஜீவாமிர்த சின்முத்திரை)

3. ஒரு அடியார் வாய் விட்டு ஓங்காரம் இசைத்தல் அல்லது மந்திரங்களை ஓதுதல்
4. ஓதப்பட்ட மந்திரங்களை, ஓங்காரத்தைக் கேட்டு மற்ற அடியார்கள் இசைத்தல்
5. கண் பார்வையை மலையை நோக்கி, இறை மூர்த்திகளை நோக்கி செலுத்தி பார்வையை தரிசனத்தின், இறை உருவின் இரு விளிம்புகளில் படர விடுதல்

மேலே உள்ள இரு குயத்தலை வழிபாட்டு முறைகளும் உதாரணத்திற்காக அளிக்கப்பட்டுள்ளனவே தவிர அடியார்கள் தாராளமாக இவையல்லாமல் தங்களுக்குப் பிடித்த எந்த ஐந்து வழிபாட்டு முறைகளை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம், இந்த பஞ்சாட்சர ஆண்டில் பலன்களை பெருக்கிக் கொள்ளலாம். இத்தகைய குயத்தலை வழிபாட்டிற்கு அருளும் மூரத்தியாக ஸ்ரீகுயத்தலை விநாயகர் அருள்வதால் இவரை ஒரு முறையாவது வணங்கி மேற்கண்ட வழிபாட்டை தொடங்குதல் நலமாகும். அபூர்வமான ஐந்து வித அமிர்த சக்திகள் இந்த வழிபாட்டில் இணைவதால் இதை பஞ்சாமிர்த குயத்தலை வழிபாடு என்றும் அழைப்பது உண்டு. இந்த அமிர்த சக்திகளே எந்த மனிதனின் தலையெழுத்தையும் மாற்றவல்ல சக்தி பெற்றவை.

இது உண்மைதான் என்று உறுதிப்படுத்துவதற்கு நம் ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு “குயத்தலை” கொண்ட அடியாரும் இந்த செய்திகளை உங்களுக்குத் தருவதற்கு பெருமளவில் உதவி செய்துள்ளார் என்பதே நம் சற்குருவின் பெருமையை நிலைநாட்டும் குயத்தலை சக்திகளாகும். ஒரேயொரு குயத்தலை அடியாரைப் பெற்றவரா நம் சற்குரு, இல்லவே இல்லை, மேற்கண்ட குயத்தலை வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் இயற்றும் ஒவ்வொரு அடியாருமே குயத்தலை அடியாராக மாற அருள்புரிபவரே தக்கோலம் ஸ்ரீகுயத்தலை விநாயகர் ஆவார்.

ஸ்ரீசூர்யசுத தட்சிணாமூர்த்தி
தக்கோலம்

இந்த குயத்தலை சக்திகளை கர்நாடக இசைப் பாடல்கள் மூலமாகவும் பக்தர்கள் பெற வழிகோலுவதே அமிர்தவர்ஷினி ராகப் பாடல்களாகும். நாம் வாழும் பூமி நான்கில் மூன்று பங்கு தண்ணீரால் சூழந்தது என்பதை அறிவோம். மனித உடலும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. எனவே அமிர்தவர்ஷினி ராகத்திற்கும் மனித உடலுக்கும் எத்தகைய நெருங்கிய தொடர்பு உள்ளது ? அது மட்டுமல்லாது ஜலதரங்கம் ஆதியில் 22 செம்பு அல்லது பீங்கான் பாத்திரங்களில் நான்கிற்கு மூன்று எந்த அளவில் நீர் நிறைத்து பாடப்பட்ட இன்னிசை இசைக் கருவியாகும். இவ்வாறு மதுரை, திருநெல்வேலி, செட்டிக்குளம் போன்ற திருத்தலங்களில் உள்ள இசைத்தூண்களும் இவ்வாறு 22 இசைத் தூண்களில் தோன்றும் இசையின் வெளிப்பாடாகவே உள்ளன. மனித உடலில் உள்ள அடிப்படை கட்டிடமான குரோமோசோம் என்பவை மொத்தம் 22 ஜோடியாக அமைந்துள்ளதால் இன்னிசைப் பாடகர்கள் தங்கள் சொந்த அதிர்வை 23வது ராக அதிர்வாக கூட்டி இசைத்தால் நிச்சயம் அமிர்தவர்ஷினி ராகத்தில் மழைபொழியும் என்பார் நம் சற்குரு. முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்ட ஆனந்த அம்ருதகர்ஷினி என்று தொடங்கும் அமிர்தவர்ஷினி ராகப் பாடல் ஜலதரங்கம் இசைக்கருவியில் தக்கோலம் திருத்தலத்தில் இசைப்பதால் கிட்டும் புண்ணிய சக்திகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மனித உடலில் 23வது குரோமோசோம் என்பது ஆண் பெண் என்ற பால் சக்திகளை உணர்த்துவது என்பது நீங்கள் அறிந்ததுதானே. அமிர்தவர்ஷினி ராகத்தில் உள்ள ஐந்து அட்சரங்களும் அதாவது ச, (ரி), க, ம, ப, (த), நி என்ற அட்சரங்களே தக்கோலம் திருத்தலத்திற்கும் அமிர்தவர்ஷினி சக்திகளுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இன்னிசை சக்திகளாகும்.

பொதுவாக, மழை நீரில் ஆயிரம் துளி நீரில் ஒரு துளி அமிர்த சக்திகளைப் பெற்றிருக்கும். ஆனால், திருத்தலங்களிலோ திருஅண்ணாமலை போன்ற கிரிவலப் பாதைகளிலோ பொழியும் மழைத் துளிகள் அனைத்துமே அமிர்தசக்திகளைக் கொண்டதாக இருக்கும். தக்கோலம் என்ற அமிர்தசக்திகள் நிறைந்த திருத்தலத்தில் பொழியும் ஒவ்வொரு மழைத்துளியுமே பஞ்சாமிர்தம் என்ற அபூர்வ அமிர்த சக்திகளை உடையதாகத் துலங்கும் என்பதே தக்கோலத்தில் மட்டுமே பெறக் கூடிய அமிர்த சக்திகளின் சிறப்பாகும்.

ஸ்ரீசௌரிராஜ சாந்த மூர்த்தி
தக்கோலம்

அமிர்தவர்ஷினி ராகத்தில் ரி, த என்ற இரண்டு அட்சரங்களும் வர்ஜிதமாக இருப்பதற்கு, இசைக்கப்படாமல் இருப்பதால் தோன்றும் தெய்வீக சக்திகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டாவது, ஆறாவது அட்சரங்கள் வர்ஜிதமாக உள்ள அமிர்தவர்ஷினி ராகமே ஜலதரங்கம் இசையாக ஜனகரின் அரண்மனையில் தினமும் பொழிந்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அமிர்தவர்ஷினி சுவையாகும்.

வாசி யோக கலையில் வலது மூக்கில் பொழிவது சூரிய சக்திகளுடனும், இடது மூக்கில் பொழிவது சந்திர சக்திகளுடனும் துலங்கும் என்பது முதல் கட்ட நிலையாகும். வலது இயக்கம் பெறும் சுவாசம் சூரிய கலையாகும், இடது இயக்கம் பெறும் சுவாசம் சந்திர கலையாகும் என்பது இரண்டாம் கட்ட நிலையாகும். இதில் வலது மூக்கின் வழியாகச் சென்றாலும் இடது மூக்கின் வழியாகச் சென்றாலும் அதை நாக்கின் சூழற்சியால் உரிய கலைக்கு மாற்றும் நிலையே மூன்றாவது நிலையாகும். இவ்வாறு நாக்கை 360 டிகிரி கோணத்தில் திருப்பி அதை அப்படியே மடித்து தொண்டைக் குழிக்குள் நிலை நிறுத்தும் அற்புதத்தை நேரில் கண்டு இரசித்த அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. இந்த மூன்றாம் கட்ட நிலைக்கு அடியார்களைத் தயார் செய்வதே மேற்கண்ட பஞ்சாமிர்த பயிற்சி யோகமாகும். பல்லாண்டுகள் தொடரும் கடினமான பயிற்சி இதற்கு தேவைப்படும் என்றாலும் இத்தகைய ஒரு நிலையும் உண்டு என்று இன்று நமக்கு உணர்த்தும் தகுதி பெற்ற ஒரே சற்குரு நம் சற்குரு என்பதே நாம் பெருமை கொள்ள வேண்டிய அற்புதமாகும். இந்த கலை சுவாச உணர்வு திரமாகிய பின்னரே பிருத்வி, அப்பு என்ற பூதங்கள் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள இயலும். இவ்வாறு பூத உணர்வு பெற்ற பின்னரே நம் எதிரே உள்ளவர் என்ன நினைக்கிறார் என்பதையும் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு உரிய தீர்வையும் இந்த சுவாசத்தில் ஏற்படும் கலை, பூத நிலைகளால் பகுத்துணர முடியும். இதுவே உண்மையான “பகுத்தறிவு”. உதாரணமாக, தன் வீட்டின் பக்கத்தில் மலிவாகக் கிடைக்கும் ஒரு நிலத்தை வாங்கலாமா என்பது பற்றிய அறிவை சூரிய கலையில் பிருத்வி பூதம் கொள்ளும் மாற்றத்தால் உறுதியாகக் கூற முடியும். இத்தகைய பூத நிலை இயற்கையாக அதாவது பிரச்ன நேரத்தில் சம்பவிக்காவிட்டால் ஒருவர் வாங்கும் சொத்தால் பிரச்னைகள் ஏற்படும் என்பது உறுதி.

மாதா அமிர்தானந்தா போன்ற மகான்கள் தங்கள் சுவாசத்தை தங்கள் விரல் வைத்து அடிக்கடி சரி பார்த்துக் கொள்வதற்கு இதுவே காரணமாகும். தங்கள் மூக்கில் கையை வைத்துத்தான் கலையையும், பூதத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டிய ஆரம்ப நிலையில் அவர்கள் இல்லையென்றாலும் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை சற்குரு, ஜகத்குரு என்ற முறையில் ஏற்றிருப்பதால் கனிந்தகனி, நம் சற்குரு போன்றோர் இத்தகைய செயல்பாடுகளைக் காண்பிப்பது உண்டு. தக்கோலம் திருத்தலத்தில் எந்நேரமும் பொழியும் அமிர்த சக்திக் கலைகளை உணர்விப்பதே இங்கு நீங்கள் காணும் வீடியோவாகும்.

முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்ட இந்த ஆனந்த அமிர்த கர்ஷினி என்ற கீர்த்தனை மட்டும்தான் அமிர்த சக்திகளைத் தோற்றுவிக்கும் என்று கிடையாது. தீக்ஷிதர் அளித்த அனைத்து கீர்த்தனைகளிலும் குருகுக என்ற சொற்றொடர் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள். குருகுக என்பது எண்கணித ரீதியாக தக்கோலம் திருத்தலத்திற்கு உரிய ஐந்து என்ற எண்ணை (3+2=5) குறிப்பதே இந்த கீர்த்தனைகளின் உள்ளார்ந்த அமிர்த சுவையாகும். இந்த அமிர்த ராகத்தை நீங்கள் கேட்டு அமிர்தம் பெருக்கும் நாளும் 23 என்ற பஞ்சாமிர்த சக்திகளைக் குறிக்கும் திர வார நாளில் அமைவதும் ஒரு அமிர்த சுவையே, அமுத சுவையே. இத்தகைய திர வாரம் ஒன்றில்தான் பல யுகங்களுக்கு முன் நீலகண்டன் அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அளித்தான் என்பதும் நீங்கள் அறிந்த ஆலால சுவைதானே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல் மேற்கண்ட பஞ்சாமிர்த யோகத்தை ஆரம்பத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பயின்று வர வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக இந்த வழிபாட்டிற்கு ஆகும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

அமுத சுவையை ஊட்டும் அமிர்த கீதம்

ஆலால நாயனார் என்று சுந்தர மூர்த்தி நாயனாரை அழைப்பதுண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் நெடுங்காலம் தங்கி சேவை சாதித்த தலங்களுள் ஒன்றே திருவாரூர். புற்று மண்ணாலான சுயம்பு மூர்த்தி. எல்லையில்லா பேரழகு பொலியும் மூர்த்தி. இதை குறிப்பதாக தேவாரப் பாடல் ஒன்றில், “அன்றில் முட்டா அடையும் சோலை ஆரூர் அகத்தீரே ...”, என்று எம்பெருமானை விளிக்கின்றார். செய்யுள் பாடும்போது இவ்வாறு “முட்டா” என்ற எதிர்மறை சொல் “முட்டும்” என்ற நேர்மறை பொருளைக் கொடுப்பதாக அமைத்துக் கொள்வது ஒரு நெறி. திருத்தல சிறப்பாக சாதாரணமாக வானத்திலேயே சஞ்சரிக்கும் அன்றில் பறவை ஆரூர் ஈசனின் அழகைப் பருகுவதற்காக தரையில் “முட்டி” திருவாரூர் திருத்தலத்திற்கு இறங்கி வந்தது என்பது நாயனார் அளிக்கும் தேவார சுவை. இதையே தக்கோலம் திருத்தலமும் சுட்டிக் காட்டுகின்றது, அதாவது எல்லாத் தலங்களிலும் குறிப்பிட்ட காலத்தில், நேரத்தில் பொழியும் அமிர்த சக்திகள் தக்கோலம் திருத்தலத்தில் மட்டும் எந்நேரமும் பொலிகின்றது, இதை நிரந்தரமாகப் பருகுவதற்காக தங்கிய அன்றில் பறவையை இங்கு தூண் ஒன்றில் நாம் தரிசிக்க முடிகிறது என்பதே தக்கோலம் அருளும் அன்றில் சுவை, அமிர்த சுவை.

இதுவே சுந்தரம் தக்கோலம் என்ற ஔர்வரின் வார்த்தைகளில் எதிரொலிக்கும் ஒரு பொருள். அன்றி இல் என்பதே அன்றிலாகும், நீ இல்லாமல் நான் இல்லை என்ற நெருக்கத்தைக் குறிப்பதே அன்றில் பறவை. உன்னுடைய இதயமே நான் வாழும் இல். என் இதயத்தில் நிரந்தரமாய் இல் அமைத்து வாழ்பவன் நீயே. ஆரம்பத்தில் நீயில்லாமல் நான் இல்லை என்று இறைவனை நேசிப்பவன் பக்தன், அடுத்து நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்று இறைவனே பக்தனை நேசிக்கும் உயர்ந்த நிலையே அன்றில் நிலையாகும். இதை உணர்த்துவதே காஞ்சி கனிகண்ணன் வரலாறு ஆகும்

ஸ்ரீபராய்த்துறை நாதர்
திருப்பராய்த்துறை

பொன்னார் மேனியன், பசும்பொன் மயிலாம்பிகை, மழபாடியுள் மாணிக்கம் என்றெல்லாம் இறைவனை இறைவியை நாயன்மார்கள் புகழ்ந்து பாடுகின்றார்கள் அல்லவா ? ஆழ்ந்த பொருள் கூடிய பதங்கள் இவை அனைத்துமே. இதன் பொருளை அடியார்கள் உணர்ந்து பயன்பெற அவர்களுக்கு உதவி புரிவதே மேற்கூறிய பஞ்சாமிர்த வழிபாடாகும். ஒன்பது சரீரங்களின கூடே நம் மனித உடல் என்பதாகும். இந்த ஒன்பது உடல்களையும் தூய்மைப்படுத்தினால்தான் இறை தரிசனத்தைப் பெற முடியும். இதற்கு உதவுவதே பஞ்சாமிர்த வழிபாடு. இவ்வாறு நம் உடல் தூய்மை அடைய அடைய நம் உடலைச் சுற்றியுள்ள aura என்ற ஒளி வளையத்தில் பெரிதும் மாற்றம் ஏற்படும். இறைவனை சுற்றியுள்ள இந்த ஒளி வளையத்தையே திருவாசி என்று அழைக்கிறோம். மனிதனுக்கும் இத்தகைய திருவாசிகள் உண்டு என்றாலும் அவை தெளிவாகவோ, பிரகாசமாகவோ இருப்பதில்லை. மேற்கூறிய பஞ்சாமிர்த வழிபாட்டால் மனிதனின் திருவாசி தூய்மை பெறும் என்றாலும் இந்த திருவாசியை இறைவனுடைய திருவாசி அளவிற்கு தூய்மை பெற வழிவகுப்பதே சித்தர்கள் கூறும் பசும்பொன் வளைய வழிபாடு. அதாவது மேற்கூறிய பஞ்சாமிர்த வழிபாட்டில் சிவஸ்வஸ்தி சக்கரத்தில் உள்ள சிவ நாமங்களை மானசீகமாக எழுதுவதாகவோ, அல்லது ஏதாவது ஒரு கிரிவல தரிசனத்தை நோக்கும்போது அதற்கு வஸ்திரம் சாற்றும்போது அந்த வஸ்திரம் மஞ்சள் நிறம் உடையதாக நம் நினைவில் கொண்டு வர வேண்டும் என்பதே பசும்பொன் வளைய வழிபாடு. ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களால் உடனே இந்த நிலைக்குத் தாவுவது கடினம் என்றாலும் சிறிது சிறிதாக பல வருடங்கள் கழித்தாவது இந்த பசும்பொன் வளைய வழிபாட்டை அடியார்கள் மேற்கொள்தல் சிறப்பாகும்.

ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை
திருப்பராய்த்துறை

இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சி. திருச்சியில் வர வேந்தன் என்ற பெருமாள் நாமம் கொண்ட ஒரு அடியார் இருந்தார். அவரோ தோல் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். ஒருமுறை நம் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது அவரை நம் சற்குரு விசாரித்து அவர் வீட்டிலிருந்து திருப்பராய்த்துறை திருத்தலத்திற்கு நடந்து செல்லுமாறும், அவ்வாறு சென்று அங்குள்ள ஆலயமணிக்கு தாமே கையால் அரைத்த சந்தனத்தை பொட்டிட்டு வணங்கி வருமாறும் கூறினார். என்ன ஆச்சரியம், ஒரே ஒரு முறை இயற்றிய இந்த வழிபாட்டால் அவர் தோல் கம்பெனியில் வேலையை விட்டு விட்டு உணவுத் துறை சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் இன்று வரை அந்த வேலையிலேயே நிம்மதியாக இருக்கிறார். பொதுவாக, தோல் சம்பந்தப்பட்ட பணிகள் மக்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தில் ஒரு முட்டுக் கட்டையாய் இருக்கும் என்பது நீங்கள் உணர்ந்ததே.

இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சி நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் நம் சற்குருவின் அவதார நட்சத்திரமான ரோகிணி அன்றுதான் நீங்கள் இங்கு காணும் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை, இறைவன் ஸ்ரீபராய்த்துறை நாதர், ஆலயமணி முதலியவற்றின் புகைப்படங்களை தரிசனத்தற்காக அளிக்க முடிந்தது என்பதே குருவின் திருவருளாகும். அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை எடுத்த அடியாரும் உண்ணாநோன்பு ஏற்று நடந்தே சென்றுதான் இந்த புகைப்படங்களை எடுத்தார் என்பதும் நம் சிந்தனைக்கு உரியதே.

திருப்பராய்த்துறை ஆலயமணி

நாம் உணரக் கூடிய மூன்று தெய்வீக மஞ்சள் நிறங்களை நம் சற்குரு அருளியுள்ளார். சிவபெருமானின் தன் தலையில் சூடிய மூன்றாம் பிறை சந்திரன், திருப்பராய்த்துறை திருத்தலத்தில் நாம் சந்தனப் பொட்டை ஆலயமணிக்கு வைக்கும் போது தோன்றும் மஞ்சள் நிறம், பத்துக் கட்டளைகளை மோசசிற்கு அளித்தபோது இறைவன் தோன்றிய மஞ்சள் நிறம் என்ற மஞ்சள் நிறங்களை நம் சூட்சும உடல் பெறுமாறு செய்தலே சாதாரண மக்களும் இறைவனை நோக்கி முன்னேறும் சாதகனின் பாதையாகும். தம்பதிகளின் சங்கமத்தில் மஞ்சள் நிறத்தில் சிவஸ்வஸ்தி அட்சரங்களை நினைவு கொள்ள முடிந்தால் அப்போது சிரமமின்றி இந்த மஞ்சள் நிறத்தை தம்பதிகள் அந்த மஞ்சளில் பதிக்க முடியும். ஒரு சில நிமிடங்களே நிகழக் கூடியது இந்த சங்கம நேரம் என்றாலும் பல மணி நேரங்கள், பல தடவை இதனால் கிடைத்த ஆனந்தத்தை தம்பதிகள் நினைவில் நிரவுகிறார்கள் அல்லவா. இதற்கு காரணம் அஸ்வமேத யாகப் பலனை இறைவன், தம்பதிகளின் சூட்சும உடலில் பதிப்பதுதான். இவ்வாறு நாம் சிவ அட்சரங்களில் பதிக்கும் தெய்வீக மஞ்சள் நிறமே நம் சூட்சும உடலில் நிரவி சூட்சும உடலின் ஒளி வட்டத்தையே மாற்றி விடும் சக்தி பெறும்.

சூட்சும உடலில் நிரவியுள்ள இந்த மஞ்சள் நிறத்தை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மஞ்சளும் பச்சையும் ஒன்றுக்கொன்று இணைந்து தோன்றுவதால் முதலில் இந்த மஞ்சள் நிறத்தை பச்சை நிறத்திலிருந்து தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் பிரித்த அங்த மஞ்சள் நிறத்தின் பிரகாசத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இப்போது பசும்பொன் மயிலாம்பிகை என்று திருப்பராய்த்துறையில் பொலியும் அம்பாளின் நாம மகிமை புரிகின்றது அல்லவா ? உண்மையில் பசும் என்ற வார்த்தை புதிய (fresh) என்ற பொருள் தந்தாலும் புதிதாக பச்சையிலிருந்து “பகுத்தறிவால்” மஞ்சளைப் பிரிக்க அருள் தரும் தேவியே ஸ்ரீமயிலாம்பிகை ஆவாள். வரும் தீபாவாளிக்கு முதல் நாளான புதன் கிழமை அன்று சதுர்த்தசி திதியாக துலங்குவதால் குறைந்தது 12 அகல் தீபங்களை காவிரி ஆற்றிலோ அல்லது திருத்தல பிரகாரத்திலோ ஆல இலை அல்லது வாழை மட்டை தட்டிலோ ஏற்றி வழிபடுவதால் இதை கிருஷ்ண அங்காரக தீப ஜோதியாக ஏற்று சாட்சாத் கிருஷ்ண பகவானே இந்த ஜோதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இத்தகைய வழிபாட்டை தக்கோலம் திருத்தலத்தில் நிகழ்த்துவதும் அல்லது மறுநாள் விடியற்காலை அவரவர் இல்லங்களில் இவ்வாறு 12 தீபங்களை ஏற்றி வழிபடுவதும் அற்புத கிருஷ்ணாமிர்த சக்திகளைத் தோற்றுவிக்கும்.

இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபாடுகளை இயற்றும் முறையை இங்குள்ள படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு எண் எட்டு முறையில் ஒரு குடம் தண்ணி ஊத்தி என்றவாறு வழிபாடுகளை இயற்றும்போது இத்தகைய எட்டைக் குறிக்கும் அமிர்த ஜோதிகளை இல்லங்களில் ஏற்றி வைத்து வழிபாடு நிறைவுறும் வரை தீபங்களை ஒளி வீசச் செய்வதாலும் சிறப்பான குடும்ப ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை சக்திகளை, கிருஷ்ணாமிர்த சக்திகளை பக்தர்கள் உருவாக்கலாம். இத்தகைய வழிபாட்டில் கௌராங்கர் என்று அழைக்கப்படும் சைதன்ய மகா பிரபு ராதையுடன் இணைந்த கிருஷ்ண பகவானை தரிசித்தாராம். இந்த அற்புதத்தை சூட்சுமமாக வர்ணிப்பதே இங்கு நீங்கள் காணும் சித்திரம்.

வஜ்ர தம்ப சக்கரம்

கிருஷ்ணாமிர்த ஜோதி வழிபாடு

அக்னி தம்பனம், ஜல தம்பனம் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது நீர் சக்தியை, அக்னி சக்தியை தம்பனம் செய்து, நீரில் மிதக்கும் வித்தையையோ, அக்னியில் உலாவும் அதிசயத்தையோ நீங்கள் பார்த்து இருக்கலாம். வெறுமனே மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக தங்கள் சித்திகளை, சக்திகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லவே சித்த பெருமக்கள். ஜலதம்பன யோகத்தில் நீரில் மிதக்கும் நம் கோவணாண்டிப் பெரியவரின் திருவிளையாடலைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளோம். வைரத்தின் வஜ்ர சக்திகளை தம்பனம் செய்து மக்களுக்கு எல்லாம் அனுகிரகமாக அளிக்கக் கூடியவரே திருமழபாடியுள் உறையும் ஸ்ரீவஜ்ரதம்பேஸ்வர சிவமூர்த்தி ஆவார். ஆனால், இறைவனால் தம்பனம் செய்யப்பட்ட இந்த வஜ்ர சக்திகளை தற்காப்பு சக்திகளாக, நோய் நிவாரண சக்திகளாக, இறைவனை உணரும் ஆன்ம சக்திகளாக மாற்ற வல்லவர்கள் சிலகாகித சித்தர்களே. இத்தகைய சிலகாகித நோய் நிவாரண சக்திகளை தன்னுடைய உழவாரப் பணிகளின்போது திருமழபாடி திருத்தலத்தில் புனருத்தாரணம் செய்த பெருமை நம் சற்குருவையே சாரும். வெறெங்கும் காண முடியாத ஸ்ரீஜுரஹரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளிய அற்புத திருத்தலமே திருமழபாடி.

உலகில் உள்ள வைரங்கள் பெரும்பாலானவற்றை சேர்த்து அப்போது தோன்றும் ஒளியில் இந்த உலகத்தையே அழிக்க திட்டம் தீட்டிய ஒரு எதிர்மறை எண்ணம் கொண்ட வில்லனைப் பற்றி நீங்கள் திரைப்படங்களில் பார்த்து இரசித்திருக்கலாம். நாம் பலமுறை வலியுறுத்தி வந்ததுபோல் இத்தகைய அழிவு சக்திகளுக்கு மாற்றாக உலகில் உள்ள வைரங்களின் சக்திகளை எல்லாம் தம்பனம் செய்து அதை பிரபஞ்ச ஜீவன்களின் நன்மைக்காக குறிப்பாக அவர்களின் ஆரோக்கியத்திற்காக அருள்புரியும் மூர்த்தியே திருமழபாடி ஈசனாவார்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கரிசலாங்கண்ணி என்ற மூன்று எண்ணெய்கள் கலந்த நோய் நிவாரண தைலத்தால் மூலவருக்கும், ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்திக்கும் காப்பிட்டு, மூலவரின் முன்னுள்ள மூன்று நவகிரக “மண்டலம்” என்ற பள்ளங்களில் தாமரைத் தண்டு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபடுதலால் தீர்வு அடையாத வியாதிகளே இல்லை எனலாம்.

ஸ்ரீகிருஷ்ணாமிர்த ஜோதி
அலங்காரம்

இங்குள்ள லட்சுமி தீர்த்தத்திலிருந்து நீர் இறைத்து அத்துடன் கொள்ளிடத் தீர்த்தத்தில் பாரிஜாதம் அல்லது Confidence நறுமணம் கலந்து அம்பிகைக்கு அபிஷேகம் நிறைவேற்றுதலால் முறையான வருமானத்தை, பண வரவை, செல்வ விருத்தியைப் பக்தர்கள் பெறலாம்.

மக்கள் அனைவரும் தனியாக கடலில் மிதக்கும் தீவுகள் அல்ல, அவர்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்திருப்பவர்களே என்பார் அன்னை அமிர்தானந்தா. மக்களே அவ்வாறு செயல்படும்போது இறை மூர்த்திகள் மட்டும் தனித்திருப்பார்களா என்ன ? வேறு எங்கும் காண முடியாத சதுர் சக்தி நந்தி தேவதைகள் என்போர் திருமழபாடி திருத்தலத்தில் எழுந்தருளி பிரபஞ்ச ஆலயங்களில் உள்ள சதுர் சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி பிரபஞ்சத்திற்கு அளிக்கும் அற்புத பணியை மேற்கொள்கின்றனர். உதாரணமாக, நீங்கள் மேலே கேட்ட திருப்பராய்த்துறை திருத்தலத்தில் ஒலித்த ஆலயமணியின் நான்கு ஒலிக் கற்றைகளையும் வஜ்ர நாதமாக மாற்றி அதை பிரபஞ்சம் அனைத்திற்கும் அளிக்கும் “சதுர்” வல்லமை உடையவர்களே இந்த நந்தி மூர்த்திகள். சதுராக்னி தேவதைகள், சதுராங்க தேவதைகள், சதுரார்த்த தேவதைகள் என்ற தேவதைகள் அனைவரும் சதுர் நந்தி தேவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களே.

இங்கு நிகழ்ந்த உழவாரத் திருப்பணியின்போது அம்பாளின் நேர் பார்வையில் அமைந்த இலக்குமி தீர்த்த நீரால் அடியார்களுக்கு “வஜ்ர தம்ப” சக்திகளை வர்ஷித்தவரே நம் சற்குரு. 32 தேவாரப் பதிகங்களை நாம் ஓதும்போது, குறிப்பாக திருமழபாடி திருத்தலத்தில் ஓதப்படும் பதிகங்களை நான்கு நான்காக சதுராங்க அம்சம் உடையவைகளாகப் பிரித்து அதை கிருஷ்ணாமிர்த சக்திகளாக (8 x 4 = 32) அளிப்பவர்களும் இந்த சதுர் நந்தி மூர்த்திகளே.

ஸ்ரீஅகத்திய பிரான் திருமழபாடி

உதாரணமாக கிருஷ்ணாமிர்த வழிபாடு என்பதில் ஏற்றப்படும் தீபங்கள் (1+7=8) எட்டு என்ற எண்ணிக்கையில் இருப்பதால் நம் அடியார்கள் இந்த பூஜைகளை அவரவர் இல்லங்களிலோ திருத்தலங்களிலோ இயற்றினாலும் அந்த ஜோதியை சதுர் ஜோதிகளாகப் பிரித்து சதுர் நந்தி மூர்த்திகள் தங்கள் அனுகிரகங்களையும் அதில் பதிக்கிறார்கள் என்பதே சற்குருமார்கள் தங்கள் அடியார்களுக்கு அளிக்கும் வழிபாட்டின் பலன்களாகும்.

இந்த திருத்தலத்தில் திருப்பணி நிறைவேற்றிய போது ஒரு அடியாரை தேள் கடித்து விட்டது. இது குறித்து நம் சற்குருவிடம் செய்தி தெரிவிக்கப்பட்டபோது நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “தேள் கொட்டி விட்டதா, இல்லை கர்மம் கொட்டி விட்டதா ?” என்று திருப்பிக் கேட்டார். இதுவே திருமழபாடி திருத்தல மகிமைகளுள் ஒன்று. எத்தகைய கடுமையான கர்ம வினைகளும் கொட்டி விடும், “கீழே சிந்தி மறைந்து விடும்” என்ற மகிமையும் மழபாடியுள் மாணிக்கமே. இத்தகைய கடுமையான கர்ம வினைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வல்லமை ஸ்ரீவஜ்ரதம்பேஸ்வரருக்கு மட்டுமே உண்டு. வஜ்ரம் என்றால் இடி, மின்னல் என்ற பொருளும் உண்டு. இடி என்றால் வஜ்ரத்தின் ஒலி தன்மையை மட்டும், மின்னல் என்றால் வஜ்ரத்தின் ஒளி தன்மையை மட்டும் குறிக்கும் என்பது நாம் கையாளும் பொதுவான பிரயோகம். ஒளியும் ஒலியும் இணைந்து உருவாகும் அதீத சக்தியே இடி அல்லது மின்னல் என்பதாகும். வெகு தூரத்தில் மின்னல் மின்னுவதையும் சற்று நேரம் கழித்து அதனால் தோன்றிய இடி சப்தமாக ஒலிப்பதையும் நாம் பல முறை கேட்டிருக்கிறோம் அல்லவா ? ஒரே ஒரு இடியில் தோன்றும் மின்சார சக்தியை நாம் சென்னை போன்ற மாநகருக்கே அளித்து விடலாம் என்றால் இடி எந்த அளவிற்கு சக்தி உடையதாக இருக்கும். இத்தகைய அதீத சக்தி வீணாக பூமியில் பட்டு மறைகிறதே என்று மக்கள் நினைப்பது அறியாமையே. இடி, மின்னல் பற்றிய அடிப்படை அறிவைப் பெறாமல் எவரும் இறைக் காட்சியைப் பெறவே முடியாது என்பதும் வஜ்ரதம்பேஸ்வர மூர்த்தி அளிக்கும் ஞானமாகும்.

ஸ்ரீசதுர்நந்தி மூர்த்திகள்
திருமழபாடி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர். தெய்வத்தால் ஆகாதது என்று உண்டு என்னா ? ஆனால், இது தெய்வத்தால் கூட ஆகாது என்று நினைப்பவர்கள் உத்தம குருவைக் கண்டு பிடித்து அவர் வழி நடந்தால் அவர்கள் எதையும் சாதிக்கலாம் என்று உணர்த்துவதும் திருமழபாடியில் உறையும் ஸ்ரீஅகத்திய பிரானின் மகிமையாகும். இவ்வாறு குருவைக் காண கை கால், உடல் தேய அலைந்தவரே நம் சற்குரு. இவ்வாறு அலைந்து திரிந்து குருவான கோவணாண்டியைப் பெற்று மக்களுக்கு இடி சக்தியை, மின்னல் சக்தியை கிருஷ்ணாமிர்த சக்திகளாக மேற்கண்ட தீப வழிபாட்டின் மூலம் அருளியுள்ளார் என்றால் இதன் மகத்துவத்தை தொடர்ந்து நிறைவேற்றினால்தானே இதன் அருமை தெரியும். எப்படி எங்கோ தொலையில் இடியாக மின்னலாக தோன்றும் இறை சக்தியை நம் அருகில் கேட்க நேர்ந்தால் நம்மை கதி கலங்கச் செய்கிறதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல மேற்கண்ட கிருஷ்ணாமிர்த ஜோதி வழிபாட்டில் இணையும் இடி மின்னல் சக்திகள். ஆனால் அக்னி சக்திகளை, நீர் சக்திகளை தம்பனம் செய்து அளிப்பது போல் ஜோதி சக்திகளையும் தம்பனம் செய்து கிருஷ்ணாமிர்த வழிபாட்டில் அளிக்க வல்லவர்களே சிலகாகித சித்தர்கள். இதை தம் அடியார்களுக்கு அனுகிரகமாக அளிப்பவரே நம் சற்குரு.

மனிதனின் செயல்கள் பல பல. ஒருவரைத் திட்டுவது, விலங்குளை அடிப்பது, கர்ப்பிணியைக் கொல்வது, ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களையே கொன்று விடுவது என்றெல்லாம் எத்தனை எத்தனையோ கர்ம வினைகள் உண்டு. இவை அனைத்தையும் இறை வழிபாட்டால், தான தர்மங்களாலோ, பூஜை முறைகளாலோ தீர்த்து விட முடியாது.

பொன்பனை திருமழபாடி

சாதாரணமான இறைவழிபாட்டால் தீர்க்க முடியாத கர்ம வினைகளை இடி பூஜைகள் மூலம், திருக்கார்த்திகை தீப ஒளி பிரகாசத்தின் மூலம் தீர்த்து மக்களைக் காத்து வருகிறான் நீலகண்டன். எனவே மின்னல், இடி மூலம் பஸ்மமாகும் கர்ம வினைகள் கோடி கோடி. இத்தகைய கர்ம வினைகளையும் தீர்க்கவல்ல ஒரு மூர்த்தி உண்டென்றால் அவரே ஸ்ரீவஜ்ரதம்பேஸ்வரர் என்னும் நாமம் கொண்ட திருமழபாடி ஈசன் ஆவார். அதனால்தான் திருமழபாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியால் மரணம் என்ற வார்த்தையை எவரும் கேட்க முடியாது என்பதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். அதே சமயம் இடியில், மின்னலில் தோன்றும் அதீத ஜோதி சக்திகளை திருமழபாடியைச் சுற்றியுள்ள தாவரங்கள் அனைத்துமே பெற்றிருந்தன, பெற்றிருக்கின்றன என்பதே சித்தர்கள் கூறும் தெய்வீக இரகசியம். இங்கு பாயும் பொன்னி நதி என்னும் கொள்ளிடம் நதி இத்தகைய தெய்வீக சக்திகளின் மிகப் பெரிய பொன் பெட்டகமாக இருப்பதால்தான் சுந்தர மூர்த்தி நாயனார் பொன்னார் மேனியனே என்று இறைவனை வர்ணித்துள்ளார். இத்தகைய பொன் சக்திகளை ஓரளவேனும் பெற விரும்பும் பக்தர்கள் இங்குள்ள தல விருட்சமான பொன் பனைக்கு தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து குறைந்தது 21 முறை வலம் வந்து தம்பதி சகிதமாக வணங்குதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே.

மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது 30 கோடி வோல்ட் 30 ஆயிரம் ஆம்பியர் மின்சார சக்தியுடன் தோன்றுவதே ஒரு மின்னல் என்று கூறுவது விஞ்ஞானம், மேகங்களே இல்லாமல் ஐயர்மலை என்னும் ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருத்தலத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதே சிலகாகித சித்தர்களால் நிகழ்த்தப் பெறும் இடி பூஜை. ஸ்ரீஅறுமுக சுரேஸ்வரர் என்னும் சித்தப் பெருமான் தலைமையில் நிறைவேற்றப்படும் இந்த இடி பூஜையில் பஸ்மமாகாத கர்மவினைகளே இல்லை எனலாம். ஐயர்மலையில் இறைவனுக்கு சூட்டப்பட்ட மலர்களே மறுநாள் காலையில் பார்க்கும்போது கருகி, சருகாய்த் தோற்றமளிக்கும் என்றால் இத்தனை கர்ம வினைகளைத் தாங்கும் ஈசனை, ஈறில் பெருமையை, இறைவனை தியாகராஜன் என்று கூறுவது எத்துணை பொருத்தம்.

ஸ்ரீஜூரஹரேஸ்வரர் திருமழபாடி

அறுமுக சித்தர் என்னும் நாமத்தில் பொலியும் ஆறுமுகம் என்பது காரணப் பெயரே. சிவபெருமானின் மூன்றாம் கண்ணிலிருந்து தோன்றியவரே ஆறுமுகப் பெருமான். இதே ரீதியில் சிவபெருமானின் குசா சக்தி என்று நல்லதையே நிறைவேற்றும் சக்தி உடைய ஆறுமுகங்களை பெற்றவரே ஐயர்மலையில் உறையும் ஸ்ரீஅறுமுக சுரேஸ்வர சித்தர் ஆவார். மனிதர்களையே காண விழையாதவர். காரணம் மனிதர்களிடமிருந்து வெளியாகும் தீய ஒளிக் கதிர்கள் தன்னுடைய நிற மாலையை பாதிப்பதால் இடி பூஜையை முறையாக நிகழ்த்த முடியாது என்பதே இந்த சித்தர்பிரானின் சமுதாய நலன் கருதிய அருட்பணியாகும். ஆயினும் திருமழபாடி போன்ற தலங்களில் நிரவும் இடி, மின்னல் சோதிகளை ஈர்த்து மக்களுக்கு அருள் வழங்கும் காரியத்தை இச்சித்தர் பிரான் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றார் என்பதே நம் சற்குரு விவரிக்கும் சித்த மகாத்மியமாகும். திருமழபாடியில் இறைவன் முன் விளங்கும் மூன்று நவகிரக பள்ளங்களில் மூன்று எண்ணெய்க் கலவையால் தீபம் ஏற்றி வழிபடுவதன் மகத்துவமே இவ்வாறு மின்னல் இடியில் தோன்றும் மின் சக்திகளை மக்களுக்கு, தம்பதிகளுக்கு, அனைத்து உயிரினங்களுக்கும் அனுகிரகமாக வழங்குவதற்காகவே.

சுந்தரி தீர்த்தத்தில் சுந்தரி
திருமழபாடி

மோசஸ் தீர்க்கதரிசி தன் இரு கைகளையும் விரித்து இறைவனை வேண்ட செங்கடல் இரண்டாய்ப் பிரிந்து வழிவிட அதில் மக்கள் எல்லாம் சென்று கொடுங்கோல் அரசனிடமிருந்து தப்பித்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை சித்தரிப்பதே இங்குள்ள வீடியோ காட்சி. அதில் உள்ள காயமடைந்த நொண்டி வாத்தும் கடல் கடந்து வருதற்காகக் காத்திருந்து பின்னர் செங்கடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து மக்களைக் காப்பாற்றினார் மோசஸ். இது என்றோ நடந்த கதை அல்ல என்று உறுதி செய்பவரே நம் சற்குரு.

நம்முடைய கடவுள் நம்பிக்கை என்பது மந்தமாக இருக்கும் ஒரு நொண்டி வாத்தாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை பூரணமாகப் பெற்ற நம் சற்குரு போன்ற உத்தமர்களால் காப்பாற்றப்படுவோம் என்பதே திருமழபாடி நமக்கு அளிக்கும் உறுதிப்பாடான அனுகிரகங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் ராஜராஜ சோழனின் ஆயுதக் கிடங்கு திருமழபாடியில் அமைக்கப்பட்டு இங்கு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதற்கு காரணமே இந்த மண்ணில் விளையும் தன்னம்பிக்கை சக்திகளே. இங்கு விளையாத தன்னம்பிக்கையோ, இறை நம்பிக்கையோ, குரு நம்பிக்கையோ வேறு எங்குமே தோன்றாது, வளராது என்று ஆணித் தரமாக உறைப்பவரே நம் சற்குரு. ராஜராஜ சோழனின் அன்னைக்கு மெய்க் காப்பாளானாக ஒரு பிறவியில் தெய்வீகப் பணிகள் இயற்றிய நம் சற்குரு இந்த விஷயத்தில் உறுதி அளிப்பது என்ன பொருத்தமான விஷயம்.

ஸ்ரீகுரு பைரவர்
திருமழபாடி

ஸ்ரீகால பைரவர்
திருமழபாடி

திருமழபாடியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே வீரம் செறிந்ததாக இடி சக்திகளையும் தாங்குவதாக அமையும் என்றால் இத்தலத்தில் மிளிரும் தர்ப்பைகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன ? சாதாரணமாக தர்ப்பைகள் 10000 வோல்ட் மின்சாரத்தையும் எளிதில் கடத்தும், ஆனால் இந்த தர்ப்பைகளைத் தொட்டால் தொடுபவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதே தர்ப்பைகளில் தோன்றும் மின்சாரத்தின் வினைப்பாடு. திருமழபாடி திருத்தலத்தில் கிட்டும் தர்ப்பைகளோ ஒரு லட்சம் வோல்ட் மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் இயல்பு உடையனே என்பதே இத்தர்ப்பைகளின் சிறப்பாகும். இந்த அற்புத தர்ப்பைகளை சித்தர்கள் பாடி என்று அழைக்கின்றனர். இந்த தர்ப்பைகளின் மகிமைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக இத்தலத்தில் எழுந்தருளிய மூர்த்திகளே ஸ்ரீகால பைரவர், ஸ்ரீகுரு பைரவர் ஆவர். இந்த தர்ப்பைகளின் மகிமைகளை எத்தனை யுகங்கள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் திருமழபாடியில் விளங்கும் தர்ப்பைகளை இத்தலத்தில் அருளும் இரு பைரவ மூர்த்திகளுக்கு சமர்ப்பித்து அந்த தர்ப்பைகளில் தர்ப்பணம் இடுவதால் எத்தகைய அகால மரணம் அடைந்த ஆவிகளுக்கும் விமோசனம் கிட்டும் என்பதே இந்த தர்ப்பைகளின் மகிமைகளில் ஒன்றாகும். மற்ற விவரங்களை தக்க சற்குருவை நாடி அறிந்து கொள்ளவும். தர்ப்பணத்தின்போது படுக்கை வசத்தில் வைக்கப்படும் தர்ப்பைகளில் கால பைரவரின் சக்திகளும், நிலை வசமாக வைக்கப்படும் தர்ப்பைகளில் குரு பைரவரின் சக்திகளும் நிரவி நிறையும் என்பதே இந்த தர்ப்பைகளின் மகத்துவமாகும். திருமழபாடியில் கிட்டும் தர்ப்பைகளை இத்திருத்தலத்தில் பொலியும் காவிரிக் கரையில் தர்ப்பணம் இடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நியதி இருப்பதால் பக்தர்கள் எக்காரணம் கொண்டும் இந்த தர்ப்பைகளை வேறெங்கும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கால கோல நந்தி
மூர்த்திகள் திருமழபாடி

எப்படி திருமழபாடி திருத்தலத்தில் நம் அடியாருக்கு உழவாரத் திருப்பணியின்போது தேள் கொட்டியதை அதை ஒரு அசாதாரணமான கர்ம வினைக் கழிப்பாக நம் சற்குரு விளக்கினாரோ அதே போல் இங்கு நீங்கள் காணும் ஸ்ரீபைரவர் ஆடையின்றி துலங்குவதும் ஒரு அனுகிரகமே. இத்தகைய அரிய அனுகிரகத்தை அளிப்பதற்காகவே நம் சற்குரு கடுமையாக நோயுற்று இருந்தபோது ஆடை எதுவுமே இன்றி விளங்கினார்கள் என்பதை ஒரு சிலரே அறிந்திருக்கலாம். அப்படியானால் நம் சற்குருவிற்கும் குரு பைரவருக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா என்று ஆத்ம விசாரம் செய்து அறிவதால் கிட்டும் ஆன்மீக விளக்கங்கள் ஆயிரம் ஆயிரம். அந்த விளக்கங்களை அடியார்கள் எளிதில் நிறைவேற்றி ஆன்மீக அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவதும் திருமழபாடி பூமியே.

திருமழபாடி திருத்தலத்தில் அபூர்வமாக கால நந்தி, கோல நந்தி என்ற இரு நந்திகளை அடியார்கள் தரிசிக்கலாம். ஆவுடைமேல் அமர்ந்திருப்பவர் கால நந்தி, அவரைத் தொடர்ந்து அருள்பவர் கோல நந்தி. மனிதர்களுக்கு மட்டும்தான் ஜாதகப் பொருத்தம் என்று பலரும் எண்ணி வருகின்றோம். அனைத்து மிருகங்களுக்கும், ஏன் தாவரங்களுக்கும் கூட ஜாதகப் பொருத்தங்கள் உண்டு. மரங்கள், செடிகள், பசு, நாய் போன்ற அனைத்து விலங்கினங்களுக்கு அமையும் ஜாதகங்கள் பற்றிய விளக்கங்களை வராஹமிகிரர் அருளியுள்ளார். விலங்குகள், தாவரங்கள் இவற்றோடு மனிதர்கள் தொடர்பு கொண்டுள்ளதால் இவைகளைப் பற்றி அறிய வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க பலரும் பூரணமான ஆறாம் அறிவைப் பெறாததாலும் குறைந்து அறிவு குணாதிசயங்களை நிவர்த்தி செய்ய இந்த ஜாதக அறிவு தேவைப்படுகிறது. பொதுவாக, பசு, எருமை, நாய் போன்ற வளர்ப்பு மிருகங்கள் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள உதவுவதே திருமழபாடி திருத்தலத்தில் அருள்புரியும் கால கோல மூர்த்திகள் ஆவர்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருமழபாடி

அக்காலத்தில் இத்தகைய அறிவை கட்டாயமாக வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புகட்டியதற்கு காரணமே அக்காலப் படை யானைப் படை, குதிரைப் படை என்ற மிருகங்கள் மிகுந்த படையாகத் திகழ்ந்ததோடு அல்லாமல் இத்தகைய படை வீரர்களுக்கு உணவு அளிக்க பசுக் கூட்ட பராமரிப்பும் அவசியமானதாக இருந்தது அல்லவா ? அதிகார நந்தியின் திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் நிகழ்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமே. தன் எஜமானர்களையும், குழந்தைகளையும், சொத்தையும் காப்பாற்றிய நாய்கள், டால்பின் மீன்கள், முதலைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறு வளர்ப்பு மிருகங்கள் என்பவை நம் கண்ணுக்கு மிருகங்களாய் காட்சி அளித்தாலும் அவை நம்முடன் தொடர்பு கொண்ட முற்பிறவி ஜீவன்கள் என்பதால் நாம் எந்த அளவிற்கு அவர்களுடன் அன்புடன் பழகுகின்றோமோ அந்த அளவிற்கு, ஏன் சில சமயங்களில் நம்முடைய அன்பையும் விஞ்சுவதாக அவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். இந்த அன்பு பரிமாற்றத்தை ஆக்கப்படுத்துவதே திருமழபாடியில் துலங்கும் கால கோல நந்தி மூர்த்திகளின் வழிபாடாகும்.

இந்த கால கோல நந்தி மூர்த்திகளுக்கு நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் காப்பிட்டு வஸ்திரம் சாற்றி, பச்சரிசி பருப்பு பசு நெய் கலந்த சாதம் நைவேத்யம் படைத்து பக்தர்களுக்கு தானம் அளித்தலால் முரட்டுக் குணம் உள்ள குழந்தைகள், கணவன், மனைவி திருந்துவர், வெளிநாடுகளில் பணி புரிவோர் நன்னிலை பெறுவர். இரட்டைக் குழந்தைகளின் ஆரோக்யம் பெருகும். இந்த நந்திகளின் முதல் பிரசாதத்தை தம்பதிகளோ, இரட்டைக் குழந்தைகளோ பெற்றால் நாம் நினைக்கும் காரியம் நல்லபடியாய் முடியும் என்பதும் இந்த நந்திகள் கூட்டும் சகுன சாஸ்திரமாகும்.

ஸ்ரீகைலாசநாதர் ஆலம்பாக்கம்

மழபாடியில் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய வைத்தியமே மழபாடி வைத்தியம் என்பதாகும். சுவாமியின் நாமம் ஸ்ரீவைத்யநாதர் என அமைவதிலிருந்தே நீங்கள் இத்தலத்தில் பெருகும் நோய் நிவாரண சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ளலாம். எந்த உடல் வியாதியாக இருந்தாலும் உடலில் சற்றும் வேதனை ஏற்படாதவாறு நோய் நீக்கும் மருத்துவ முறையே மழபாடி வைத்தியம் என்பதாகும். இத்தகைய வைத்தியத்தைப் பற்றி எடுத்தியம்ப வல்லவர் நம் சற்குரு ஒருவரே என்பதற்கு காரணம் நம் சற்குரு மட்டுமே இத்தகைய “மழபாடி வைத்திய” முறையில் தம் சீடர்களின் கர்மத்தைத் துடைத்தார் என்பதை அவருடன் கூடவே இருந்து பலன்களை கண் கூடாக உணர்ந்தவர்கள் மட்டுமே மழபாடி வைத்தியத்தின் சுகத்தை அனுபவித்திருக்க முடியும். இன்று இத்தகைய வைத்திய முறையைப் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றாலும் மாதம் ஒரு முறை குறைந்தது மூன்று நாட்கள் திருமழபாடியில் தங்கி இறைவனை கண்ணாரக் கண்டு, இங்குள்ள பொன்னி நதிக் கரையில், ஆற்று மணலில் பாடி தர்ப்பைகளை தரிசித்தவாறே காலாற நடந்து வந்தால் எத்தகைய வியாதிகளும் அற்புதமான முறையில் குணமடையும். என்ன ஒரு அற்புத மழபாடி வைத்தியம் ?! இந்த மழபாடி வைத்தியத்தால் தீராத உடல் நோய், மன நோய், தொற்று நோய்களே இல்லை எனலாம்.

திருமழபாடியில் மட்டுமே நாம் பெறக் கூடிய பாடி தர்ப்பைகளில் இரகசியத்தைப் பற்றி அறிவோமா. ஒரு முறை திருமழபாடி அருகில் மழை வேண்டி வருண ஜபம், ஹோம பூஜைகள் நடத்தினர். ஆனால், ஒரு சொட்டு மழை கூட அந்த பூசைகளால் கிட்டவில்லை. அப்போது அங்கு முகாமிட்டிருந்த நம் காஞ்சிப் பெரியவரை அணுகி இவ்வாறு “மழை மறுத்த” காரணத்தை அறிய வேண்டினர். கனிந்த கனி அவர்கள் கூறுவதை எல்லாம் பொறுமையுடன் கேட்டு விட்டு, வருண ஹோமத்திற்கு அமைக்கப்பட்ட செங்கற்களின் அமைப்பைக் காட்டும் போட்டோ ஏதாவது இருக்குமா என்று கேட்டார். அவர்கள் தயாராக வைத்திருந்த போட்டோக்களை பெரியவரிடம் காட்டினர்.

காஞ்சி முனி அந்த போட்டோக்களை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு அந்த ஹோமத்திற்கு பிரதான கர்த்தவாக அமைந்தவரிடம், “நீங்கள் ஹோமம் இயற்றியபோது மந்திர உச்சரிப்புகளை எல்லாம் சரியாகத்தான் ஒலித்தீர்கள், அதில் எந்தவித தவறும் கிடையாது. ஆனால், ஹோம குண்டம் அமைக்கும் முறையில் சில தவறுகள் ஏற்பட்டு விட்டன ...”, என்று கூறி ஹோம குண்டத்தின் கற்களை எப்படி வைக்க வேண்டும் என்றும் குறிப்பாக ஹோம குண்டம் அமையும் கோணம் மிக மிக முக்கியம் என்பதையும் விளக்கமாகத் தெரிவித்தார். அனைவரும் பிரமிப்படைந்து அவர் கூறிய ஹோம நுணுக்கங்களைக் குறித்துக் கொண்டனர். சற்று நேர அமைதிக்குப் பின் பெரியவர் தொடர்ந்து, “ஆனால், இந்த வருண ஹோமத்தை அடியேன் இங்கிருந்து சில நாட்கள் கழித்து புறப்பட்ட பின்தான் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அடியேன் இங்கு இருக்கும் வரை மழை பெய்யாது,” என்று கூறவே அவர்களும் ஆச்சரியம் அவர்கள் முகத்தில் குடியேற அங்கிருந்து கிளம்பி விட்டனர். இதுவே பெரியவர் கூறிய பாடி இரகசியம், இடைவெளி இரகசியம்.

ஆலம் விழுதென துணையிருக்கும்
ஸ்ரீஅருந்ததி அம்மன்
ஆலம்பாக்கம்

இத்தகைய பாடி இரகசியம் திருமழபாடியில் உள்ள பாடி தர்ப்பைகளில் மட்டும் குடியேறவில்லை. இத்திருத்தல அம்பாள் ஸ்ரீசுந்தராம்பிகை, அழகம்மை என்ற திருநாமம் பூண்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே. பெண்களின் இரு தனங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும். அவ்வாறு முறையான இடைவெளி இருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே எந்த அளவு ஒற்றுமை ஓங்கும், அன்பு பெருகும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தாய்ப்பால் அமுதம் எந்த குணநலன்களைக் கொண்டிருக்கும் என்பதை எல்லாம் இந்த “இடைவெளி” இரகசியங்கள் விளக்குகின்றன. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பார்கள். திருமழபாடியில் மேற்கூறிய மருந்து இரகசியத்தை திருமழபாடியில் கர்ப்பமுற்ற பெண்கள் மூன்று நாட்கள் நிறைவேற்றுவதால் அவர்கள் தாய்ப்பால் சுரப்பில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க சுந்தராம்பாள் அருள்வாள். தற்போது கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு கருப்பையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதில்லை, சுரப்பதில்லை என்ற கோளாறுகளும் வெகுவாகத் தோன்றுகின்றது. இதற்கு கைமேல் பலனளிப்பதும் மேற்கூறிய வழிபாடே. தேவை நம்பிக்கை, நம்பிக்கையே.

வேறெங்கும் காண முடியாத ஸ்ரீமழுவாடீஸ்வரர் என்ற சிவக் கோலத்தை திருமழபாடியில் பக்தர்கள் தரிசிக்கலாம். இறைவன் மேல் பேரன்பு பூண்ட சித்தர்கள், மகான்கள் போன்ற எண்ணற்றோர் எம்பெருமானுக்கு பல்வேறு ஆயுத வடிவில் உருக் கொண்டு சுவாமியின் திருவுருவத்தை அலங்கிரிக்கின்றனர். ஆனால், இந்த அலங்காரங்கள் என்பவை வெறும் அழகிற்காகவோ, ஆடம்பரத்திற்காகவோ அல்ல. ஒவ்வொரு ஆயுதத்தின் பின்னாலும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான அனுகிரக சக்திகள் பொதிந்துள்ளன. அவ்வப்போது பூமியில் தோன்றும் நம் சற்குரு போன்ற மகான்களே இத்தகைய ஆயுதங்களின் மகிமைகளை அந்தந்த யுகத்திற்கு பயன்படக் கூடிய முறையில் எடுத்துக் கூறி எல்லையில்லா இறை சக்தியை மக்கள் உணர்ந்து பயன்பெற வழிகாட்டுகின்றனர். மானும் மழுவும் சிவபெருமானின் பிரதான ஆயுதங்களாக வர்ணிக்கப்படுகின்றன. இந்த ஆயுதங்களில் மழு என்ற ஆயுதத்தின் தூல உருவத்தையே நாம் திருமழபாடியில் தரிசனம் செய்து பயன் பெறுகின்றோம். மூன்று பரிமாணம் உடையதாக இவ்வுலகம் தோன்றுவதால் மூன்று பரிமாணம் பெற்ற அறிவைப் பெருக்கிக் கொள்ள இந்த மூர்த்தியின் வழிபாடு அவசியமே. நீலம், அகலம், உயரம் என்று மூன்று பரிமாணங்கள், இவற்றைப் பதிக்கும் கோண அளவு என்பது பற்றிய விளக்கங்கள் இந்த மழு மூர்த்தியின் வழிபாட்டால் பெருகுகின்றன. இன்று உலகம் முழுவதும் விளங்கும் தலைசிறந்த கட்டிடக் கலை வல்லுநர்கள் அனைவரும் ஒரு காலத்தில் இந்த மூர்த்தியை முறையாக வணங்கி அனுகிரகம் பெற்றவர்களே.

ஸ்ரீமழுவாடி ஈஸ்வரர்
திருமழபாடி

இன்று உலக அதிசயமாக எஞ்சினியர்களால், கட்டிடக் கலை நிபுணர்களால் புகழப்படும் தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த தபதிகளை திருமழபாடி திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீமழுவாடி ஈசனை ஒரு மண்டல காலத்திற்கு வணங்கி அருள் பெறுமாறு பணித்தார் ஸ்ரீகருவூர் சித்தர் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் வாஸ்து ரகசியங்களில் ஒன்றாகும். சாம்பிராணியில் Confidence வாசனை திரவியம் கலந்து மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் இவ்வாலயம் முழுவதும் தூபம் எழுப்பி வழிபடுவதே ஸ்ரீமழுவாடீஸ்வரருக்கு ப்ரீதியான வழிபாடாகும். நாமறியா எல்லாக் கோணங்களிலும் இந்த தூப புகை நிரம்பி நிறையும் என்பதே நாம் அறியா சித்த இரகசியம். வேத மந்திரங்கள் அனைத்தும் காயத்ரீயில் லயமாகும், காயத்ரி மந்திரம் ஓங்காரத்தில் ஐக்கியம் ஆகும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம் சற்குரு ஒவ்வொரு அடியாரையும் காணும்போது ஓம் என்று கூறிதான் வரவேற்பார். இந்த ஒரே ஒரு ஓங்கார மந்திரத்தில் அனைத்து வேத சக்திகளும், காயத்ரீ மந்திர சக்திகளும் லயமாகி அடங்கி விடுகின்றன என்றால் நம் சற்குரு ஒலிக்கும் ஒரே ஒரு ஓங்கார கீதத்தின் மகிமையை உணர, உரைக்க எத்தனை யுகங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த ஓங்கார கீதத்தை நேரில் அனுபவித்த அடியார்கள் இனியும் பெற வேண்டிய குபேர சம்பத்து என்று ஏதாவது உண்டா என்ன ?

ஸ்ரீகால பைரவர் ஸ்ரீகுரு பைரவர்
ஆடியா ? திருமழபாடியா ?

ஆடி என்பதற்கு ஒளியைப் பிரதிபலிக்கும் உபகரணம் என்றும் பொருள் உண்டு. கண்ணாடி என்பது இதுவே. நம் சூட்சும சரீரத்தின் இயல்பை நம்மையும் அறியாமல் நமக்கு உணர்த்தக் கூடியதே முகம் பார்க்கும் கண்ணாடி என்பதாகும். அதனால்தான் நம் பெரியோர்கள் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்கும்படிக் கூறுவார்கள். இரவில் நம்முடைய சூட்சும சரீரம் பல லோகங்களுக்கு சென்று வந்து கிரகித்த நற்பலன்களை பெறுவதற்கு உறுதுணை புரிவதே இந்த கண்ணாடி தியானமாகும். கேரளாவில் சித்திரை வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகளின்போது இவ்வாறு கண்ணாடி முன் பழம், பூ, தீபங்கள் போன்ற மங்கள பொருட்களை வைத்து அதைப் பார்த்த பின்னரே மற்ற காரியங்களை நிகழ்த்தும் வழக்கும் இன்றும் உண்டு அல்லவா ? இந்த அனுகிரகங்களையே கரதரிசனம் என்பதாக மிகவும் எளிய முறையில் தினந்தோறும் இத்தகைய சூட்சும தரிசனங்களை நம் உடலில் நிரவும் அற்புத வழிபாட்டு முறையை நம் சற்குரு அருளியுள்ளார். இத்தகைய “ஆடி அனுகிரகம்” என்ற சூட்சும அனுகிரகத்தை திருமழபாடியில் இரண்டு, இரண்டாக அருளும் பைரவர், திருஅண்ணாமலையார், தட்சிணா மூர்த்தி, நந்தி மூர்த்திகள், சுப்ரமண்ய மூர்த்திகள் போன்றோர் பல மூர்த்திகளும் அருளமுதத்தை திகட்ட திகட்ட அருள்கின்றனர் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அனுபூதியாகும். இத்தகைய மூர்த்திகள் அனைவரும் பல்வேறு உருவங்களுடன் திகழ்ந்தாலும் எந்த மூர்த்திக்கும் உண்மையில் எந்த வித உருவமும் இல்லை என்பதே நாம் ஆடி தியானத்தில் இறுதியில் உணரக் கூடிய உண்மையாகும். இந்த இறுதி உண்மையை உணர்வது என்பது கடினமோ கடினம் என்பதால்தான் திருமணம் என்ற ஒரு பந்தத்தை ஏற்படுத்தி அதை வலுவுடையதாக வச்சிரம் என்ற பசையால் இணைத்து இறுதியில் அந்தப் “பசையின்” மூலமே நாம் இறை அனுபூதி பெறுவதற்கு வழிகாட்டுபவர்களே சித்த பெருமக்கள் ஆவர்.

ஸ்ரீஅதிகார நந்தி
(மறைந்து பொலியும் ஆடியுடன்)
திருமழபாடி

அங்காளி தேவியிடம் பக்தர்கள் கொள்ள வேண்டிய அன்புப் பசையின் வலிமையை விவரிப்பதே இங்கு நீங்கள் கேட்கும் துதி. இந்த தெய்வீக பந்தத்தை அனைத்து நிலையிலும் உள்ள மக்கள் பெறுவதற்காக இறை மூர்த்திகள் வசிஷ்டர் போன்ற ரிஷிகள் வடிவிலும், நந்தி மூர்த்திகள் வடிவிலும், சுந்தர மூர்த்தி நாயனார் போன்ற மனித வடிவிலும் தோன்றி நமக்கு வழிகாட்டி வருகின்றனர். சிவபெருமான் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து அதில் தோன்றிய ஈசனின் சொந்த பிரதிபலிப்பைப் பார்த்து சுந்தரா, அழகிய உருவம் கொண்டவனே வருக என்று பணிக்க சிவசொரூபமாக தோன்றியவரே சுந்தர மூர்த்தி நாயனார் என்பதை நீங்கள் அறிவீர்கள். சுந்தர மூர்த்தி நாயனார் தன் ஆடியுடன் அதாவது தன் பத்தினியுடன் எழுந்தருளிய கோலத்தை இங்கு நீங்கள் தரிசித்து பயன் பெறலாம். இத்தலத்தில் எழுந்தருளிய மூர்த்திகள் அம்பிகை அல்லாது விநாயகர் உள்பட பல மூர்த்திகளும் இத்தகைய சுந்தர வடிவில் திகழ்வதற்கு உதவும் இத்திருத்தல மகிமையை எப்படித்தான் புகழ்வது ?

ஸ்ரீசுந்தர விநாயகர்
திருமழபாடி

திருமழபாடியில் துலங்கும் வச்சிரம் என்னும் சுவையை, ஆடி அனுகிரகத்தை வசிஷ்டர் தம்பதிகள் பெற்ற அருந்தவத்தின் மூலம் நாம் அறிய உதவுவதே ஆலம்பாக்கம் திருத்தலமாகும். திருமழபாடி திருத்தலத்தில் அருந்ததி என்ற உத்தமியைத் தன்னுடன் இணைத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் வசிஷ்டரின் தவக் கோலத்தையும் நீங்கள் கண்டு மகிழலாம். சப்தரிஷிகளில் நடுநாயகமாக, குசா சக்திப் பொலிவுடன் துலங்கும் வசிஷ்டர் மகரிஷியின் பத்தினி ஆவதற்காக பல இடங்களில் தவம் இயற்றினாள் அருந்ததி. இறுதியில் இந்த தவம் கனிந்த இடமே திருமழபாடி அருகில் உள்ள ஆலம்பாக்கம் திருத்தலமாகும். வானில் சப்தரிஷி மண்டலமாய்ப் பொலியும் நட்சத்திரங்களில் வசிஷ்டருடன் இணைந்து தலங்கும் அனுகிரகத்தை அருளியவரே ஆலம்பாக்கம் திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீகைலாச நாதர் அருளினார் என்றால் இந்த மூர்த்தியின் மகிமையை, தொன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? அருந்ததி தன் கணவருடன் இணைந்ததை இந்த உலக மக்கள் அனைவரும் உணர்ந்து பயன்பெறவே திருமண நாளன்று அருந்ததி பார்க்கும் வைபவம் இன்றளவும் திருமண வைபவங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால், பகலில் சப்தரிஷி மண்டலத்தையோ அருந்ததி நட்சத்திரத்தையோ தரிசிக்கும் அளவிற்கு நாம் தெய்வீக பார்வையை பெறா விட்டாலும் அவரவர் திருமண நாள் அன்றாவது ஆலம்பாக்கத்தில் அருள்புரியும் ஸ்ரீஅருந்தவ அம்மன் சமேத ஸ்ரீகைலாச நாதரை வழிபட்டு இழந்த புண்ணிய சக்திகளுக்கு ஓரளவு பிராயசித்தத்தை பெறலாம். ஆல் போல் சந்ததி தழைத்து வாழவும் இறுதி காலத்தில் ஆலம் விழுதென மனைவியும் மக்களும் தங்களைப் பாதுகாக்கவும் ஒவ்வொருவரும் அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலமே திருமழபாடி அருகிலுள்ள ஆலம்பாக்கமாகும். தாமே கையால் அரைத்த மஞ்சளை ஆலம் இலையில் எடுத்து வந்து இத்தலத்தை அடிப் பிரதட்சணமாக வந்து வழிபட்டு அம்பிகைக்கு அளித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

நம் சற்குரு கோவணாண்டிப் பெரியவருடன் இத்தலத்திற்கு வந்தபோது நல்ல வெயில் காயும் மதிய நேரமாக இருந்தது. அப்போது இங்கு இருந்த ஒரு ஆலமரத்தில் சற்றே இளைப்பாறலாம் என்று சிறுவனை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார். ஸ்ரீரங்கத்திலிருந்து நடந்தே வந்த சிறுவனுக்கு நிழலில் இளைப்பாறுவதென்றால் அதிலும் ஆலமர நிழல் என்றால் சொல்லவா வேண்டும் ? என்ன அதிசயம், எப்போதும் “விழிப்பாக” இருக்கும் சிறுவனும் பெரியவரின் மடியில் படுத்த அடுத்த விநாடியே தன்னையும் அறியாமல் தூங்கி விட்டதுபோல் சிறுவனுக்குத் தோன்றியது.

ஸ்ரீவசிஷ்ட மகரிஷி திருமழபாடி

அப்போது கண்டது கனவா நனவா என்று இன்றுவரை சிறுவனுக்குச் சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அந்த பிரமையில் ஒரு அழகிய மாது தன் கணவனுக்கு பாதபூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டான் சிறுவன். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தி மாதின் ஒளிப் பிரவாகத்தை என்றுமே அச்சிறுவன் கண்டதில்லை, கண்களை கூசச் செய்யும் அத்தகைய ஒரு ஒளிப் பிரவாகம், ஒளிப் பிரகாசம். “தூக்கம்” களைந்து எழுந்தவுடன் கோவணாண்டியைக் கேட்ட முதல் கேள்வி, “வாத்தியாரே, அந்த ஒளி மாது யார்?” என்பதுதான். பெரியவருக்கு வந்ததே கோபம், “ஆமாண்டா, நீ பாட்டுக்கு கோயில் மாடு மாதிரி தூங்கிக்கிட்டு இருப்பே. அந்த கனவில் அருந்ததி வந்தா கூட அவ யாருன்னு என்னைக் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும் ?” என்று கேட்டார். கோவணாண்டியின் கோபம் பொய்க் கோபம்தான் என்பதை சில நிமிடங்கள் கழித்து புரிந்து கொண்ட சிறுவன் அதன் பின்னர் பெரியவர் அளித்த மின்னலில் இணையும் இடி சப்தம், மின்சார சக்திகள், தர்ப்பையில் பிரவாசம் கொள்ளும் மின்சக்திகள், ஒளியும் ஒலியுமாக இணைந்து சிதறாமல் காட்சி அளித்த வசிஷ்ட மகரிஷியின் பத்தினியில் ஒளி ரூபம் இவை அனைத்தையும் விவரித்தார் கோவணாண்டி. இவை அனைத்தையும் விவரிக்க யுகங்கள் போதாது என்றாலும், இந்த சித்த பொக்கிஷங்களில் ஓரளவு அடியார்கள் பெற உதவுவதே ஆலம்பாக்கம் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளின் மகிமையாகும்.

அருமை ததி என்பதே அருந்ததி என்பதாகும். அருமையான, பெறற்கரிய குளிர்ச்சி என்பதையே ததி என்ற சொல் குறிக்கும். ஆலமர நிழல் எத்தகைய கோடை வெயில் காயும் நேரத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் இயல்புடையது. அது போல் எத்தகைய வறுமை நிலையிலும், துன்பம் தகிக்கும் சோக நிலையிலும் கணவனுக்கு ஆறுதலான குளிர் சக்தியை ஊட்ட வேண்டியவளே மனைவி என்னும் அருந்தவ நிழல் என்பதை தம்பதிகள் உணர உதவும் தலமே ஆலம்பாக்கம்.

வச்சிரம் என்னும் அரிய பசை சக்தி மிகுந்த மூலிகையே பூண்டு என்பதாகும். அதிலும் மலைப் பூண்டு என்பது இத்தகைய “பசை” சக்தியை அதிக அளவில் கொண்டுள்ளதால் தம் அனைத்து அன்னதான கைங்கர்யங்களிலும் மலைப் பூண்டை அன்னதான பிரசாதத்தில் அதிகமாகச் சேர்த்து திருஅண்ணாமலையை வலம் வரும் பக்தர்களுக்கெல்லாம் “அன்புப் பசையை” தாயினும் சாலப் பரிந்து ஊட்டியவரே நம் சற்குரு.

ஸ்ரீகாத்யாயனி தேவி திருமழபாடி

பூண்டு என்பது ரஜோகுணத்தை உருவாக்கும் என்பதால் அதைப் பலரும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. தற்போதைய சூழ்நிலையில், உணவில் கலந்துள்ள அதிகப்படியான ரசாயண சக்திகளையும் எதிர்க்க உதவுவதே ரஜோ குணம் என்பதால் அன்னதானம் போன்ற பூஜைகளில் பூண்டை மிகுதியாக சேர்த்துக் கொள்வதில் தவறேதும் கிடையாது என்பதே நம் சற்குரு அளிக்கும் விளக்கம். இறைவனை, தெய்வீகத்தை இழித்துப் பேசிய ஒரு கும்பலை எதிர்ப்பதற்காக வீறு கொண்டு எழுந்த விவேகானந்தர் காட்டியது ரஜோ குணம்தானே ? இதைத் தவறு என்று யாராலும் சொல்ல முடியுமா ?

பூண்டு அளிக்கும் ரஜோகுணம் என்னும் சக்தியை ஒருவிதத்தில், ஒரு கோணத்தில் பார்க்க முடிந்தால் அதுவே தம்பதிகள் இடையே இருக்க வேண்டிய ஈர்ப்பு சக்தி ஆகும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் அனுகிரகத்தைப் பெறுவதற்காக உலகில் எதை வேண்டுமானாலும் மீறி செயல்படலாம் என்பார். உதாரணமாக, தாய் கைகேயியின் பேச்சை மீறி ராமபிரான் அமர வேண்டிய சிம்மாசனத்தில் அமர மறுத்தார் பரதர், மூன்றடி நிலம் தானமளிப்பதற்காக குரு சுக்ராச்சாரியாரின் பேச்சை மீறினான் சீடனான மகாபலி, தந்தையான இரண்யாட்சனின் வார்த்தையை மீறி நரசிம்மரை அன்பு செய்தான் மகன் பிரகலாதன், அண்ணன் ராவணனின் வார்த்தைக்கு எதிராக ராம பிரானுடன் சேர்ந்து கொண்டான் தம்பி விபீஷணன், கணவனின் சொல்லை மீறி பல கோபியர்களும் பகவான் கிருஷ்ணனுடன் கூடி ராச லீலையில் பங்கேற்றனர். இதுவே பிரம்ம சக்தி என்பதாகும். அநாதியான பிரம்மம் ஒன்றாகத்தான் இருந்தது. தன்னைத் தானே அனுபவிக்க வேண்டும் என்பதாக இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த இந்த சக்தியையே நாம் பிரம்மாண்டம், பிரம்ம அண்டம் என்று அழைக்கிறோம். இவ்வாறு பிரம்மத்திலிருந்து பிரிந்த சக்தியையே நம் சற்குரு அசைவற்ற பொருளும் நீயே என்ற அங்காளித் துதியாக அளிக்கின்றார் என்றால் கடினமோ கடினம் என்று கூறும் ஒரு தத்துவத்தை எளிமையோ எளிமை என்று அளிக்கும் நம் சற்குருவிற்கு இணை யாருளர் ? பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியே மாயை என்று அழைக்கப்படும் தேவியின் தோற்றமாகும். இந்த தேவியே துர்கை என்ற அவதாரமாக, காத்யாயனியாக அவதரித்து இறை பக்தி என்ற தத்துவத்தின் மூலம் பிரம்மாண்ட அறிவைப் புகட்டி அதன் மூலம் இறைவனை, பிரம்மத்தை அடைவதற்கு, அதாவது பிரம்மத்தில் இலயமாகும் இரகசிய அறிவை ஊட்டுகிறாள்.

திருமழபாடி

இங்கு ஒரு விளக்கத்தை பக்தர்கள், அடியார்கள் அவசியம் உணர்ந்து கொள்ள வேண்டும். ராமகிருஷ்ணர், மாதா அமிர்தானந்தா போன்ற மகான்கள் மகாபலி சக்கரவர்த்தி குருவை மீறி இறை தரிசனத்தைப் பெற்றான் என்று கூறுவார்கள். இவர்கள் கூறும் “இறைவன்” என்பது வேறு, நம் சற்குரு போன்ற உத்தம ஞானிகள், அரவிந்த மாதா போன்றோர் தெரிவிக்கும் இறை தத்துவம் வேறு. அதனால்தான் அரவிந்த மாதா கடவுள், இறைவன் என்ற பதங்களை பிரயோகம் செய்யவே மாட்டார்கள். நடைமுறையில், பொதுமக்கள் மத்தியில் புழங்கும் ஒரு சாதாரண வார்த்தையாக “இறைவன், கடவுள் ...” போன்ற வார்த்தைகள் மாறி விட்டாலும் பிரம்மம் என்ற இறுதி தத்துவத்தையே, அனைத்திலும் உயர்ந்த புலன்கள் கடந்த தத்துவத்தையே நம் சற்குரு குறிக்கின்றார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கு வலியுறுத்துகிறோம். இந்த உயர்ந்த தத்துவத்தையும் எளிமைப்படுத்தி மக்களுக்கு வழங்க எழுந்தருளிய மூர்த்தியே திருமழபாடியில் அருளும் ஸ்ரீகாத்யாயனி தேவி ஆவாள்.

பிரச்ன உபநிஷத் அல்லது காத்யாயன உபநிஷத் என்ற வேதத்தை அர்த்தம் புரிந்து காத்யாயனி துர்கையின் முன் ஓதுதல் சிறப்பாகும். இதை கடினம் என்று நினைப்பவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் தேவார பதிகத்தை குறைந்தது ஒன்பது முறை வாய்விட்டு ஓதுதல் நலம். வழிபாடு செய்பவர்கள் மேற்கு திசை நோக்கி காத்யாயனி தேவிக்கும், நடராஜப் பெருமானுக்கும் இடையே அமர்ந்து கொள்தல் நலம். எத்தகைய துயரங்கள் ஏற்பட்டாலும், துன்பங்கள் விளைந்தாலும் மனதிற்கு ஆறுதல் அளிப்பதே, வயதானவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே மேற்கு திசை நோக்கி செய்யும் வழிபாடுகளுக்கும், மேற்கு திசையை நோக்கி எழுந்தருளிய லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் போன்ற இறை மூர்த்திகளை வழிபடுவதும் ஆகும். இவ்வாறு திருமழபாடியில் மேற்கு திசையை நோக்கி வழிபாடுகள் இயற்றும்போது அபூர்வமாக ஒரே கல்லில் உருவான சோமாஸ்கந்த மூர்த்திகள் அத்வைதம் என்ற மேலாடையால் மக்களின் துயர்களைத் துடைக்கும் அனுபவத்தை நேரில் உணர்ந்து மகிழலாம்.

ஒரே கல்லாலான
சோமாஸ்கந்த மூர்த்தி திருமழபாடி

பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து நதியில் நீராடி விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ண பகவான் மற்ற அனைவரும் நீராடி கரையேறி விட்டாலும் தான் மட்டும் நதியில் நின்று கொண்டே இருந்தார். இதைக் கண்ட மற்றவர்கள், “போதும், கிருஷ்ணா விளையாடியது போதும், எழுந்து வா ...”, என்று கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. கிருஷ்ணன் நதியிலேயே நின்று கொண்டிருந்த காரணத்தை உணர்ந்து கொண்ட துரோபதை தன்னுடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து நதியில் விட்டெறிந்தாள். அதைப் பற்றிக் கொண்டு இடையில் உடுத்திக் கொண்டு நதிப் பிரவாகத்திலிருந்து வெளியேறினார் கிருஷ்ண பரமாத்மா. அதைக் கண்ட பஞ்ச பாண்டவர்கள் உட்பட அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர். நீரினுள் நின்றிருந்த கிருஷ்ண பரமாத்மாவின் ஆடை தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்ற இரகசியத்தை உணர்ந்ததால்தான் துரோபதை இவ்வாறு துரிதமாகச் செயல்பட்டாள் என்று உணர்ந்ததே அவர்கள் அடைந்த வெட்கத்திற்குக் காரணம்.

பகவானுக்காக ஒரு பாதி ஆடையை இழந்த துரோபதை மறு பாதியை என்ன செய்தாள் ? இதுவே இருடிகள் மகாபாரதம் அளிக்கும் விளக்கம். வலது குரு விரலில் சக்ராயுதம் சுழன்றதால் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை துடைக்கவே துரோபதையின் மறுபாதி வஸ்திரம் பயன்பட்டது. அப்போது சக்ராயுதமாக விளங்கியவரே நம் சற்குரு. அதனால்தான் எத்தகைய வேதனைகளை அடைந்தவர்களும் நம் சற்குருவை தியானித்தால், சரணடைந்தால் அந்த வேதனை நிச்சயமாகத் துடைக்கப்படும். இது உண்மையான சத்தியமே என்று தன்னுடைய உயிர் நீங்கிய பின்னர் சற்குருவின் திருவுடல் தீயில் கருகி வெந்தபோதும் தன் வலது கரத்தை சிதையிலிருந்து எழுப்பி வாடிய உயிர்களுக்கெல்லாம் ஆறுதல் என்ற மழை நீரை, அமிர்த வர்ஷத்தை திருஅண்ணாமலை புனித பூமியில் பொழிந்தவரே நம் சற்குரு.

ஸ்ரீபாலாம்பிகை திருமழபாடி

பொன்னி நதி என்னும் கொள்ளிட நதி திருமழபாடி திருத்தலத்தில் உத்தர வாகினியாக, வடக்கு நோக்கிப் பாய்கிறாள். உத்தரம் என்றால் வடக்கு திசையை மட்டும் குறிப்பதல்ல, பதில், பாதுகாப்பு என்ற பொருட்களும் இதில் அடங்கும். மக்கள் உள்ளத்தில் எழும் எத்தகைய கேள்விகளுக்கும் குரு வாய் மொழியாக பதிலளிக்கும் தெய்வமே திருமழபாடி ஸ்ரீபாலாம்பிகை ஆவாள். சற்குரு கிட்டவில்லையே என்று ஏங்குவோர்கள் புனர்பூச நட்சத்திர நாட்களிலும், ரோஹிணி திரிதின நாட்களிலும், இவை கூடும் வியாழக் கிழமைகளிலும் திருமழபாடியில் அருள்புரியும் ஸ்ரீபாலாம்பிகையைத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதால் சற்குரு கிட்டும் வரை அடியார்கள் மனதில் தோன்றும் வினாக்களுக்கு பதில் கூறுவாள் என்பதே இந்த அன்னையின் மகிமைகளுள் ஒன்றாகும். மேலும் ஸ்ரீபாலாம்பிகை தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அம்சங்களுடன் பொலிவதால் எத்தகைய உறவுப் பகைமையையும், மனத் தாங்கல்களையும் வேரறுக்கும் பாலம் அம்பிகையாகவும் திகழ்கிறாள். தலைமுறை தலைமுறையாக தோன்றிய பகைமை உணர்வுகளை நீக்கி, விவாகரத்து பெற்ற தம்பதிகளையும் இணைக்கும் பெருமை உடையவளே பாலாம்பிகை ஆவாள்.

தரங்கம்பாடி, வேதாரண்யம், ராமேஸ்வரம் போன்ற பல திருத்தலங்களிலும் அலைகள் பாடி மக்களின் கேள்விகளுக்கு விடை கூறும் அதிசயத்தை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். தரங்கம் மட்டுமா பாடி பதில் கூறும் ? ஆலம் என்ற ஆல விழுதுகளும் ஆடி அசைந்து ஆலம்பாக்கம், ஆலம்பாடி, காரைக்குடி அருகே பட்டமங்கலம் போன்ற பல தலங்களில் தங்கள் பதிலைக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த பதிலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம்தான் தெய்வீகத்தில் ஆழ்ந்து மூழ்கவில்லை. இந்த பதிலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ பல்லில்லா பழிச் சொல் என்ற பல் இல்லாதவர்கள் நமக்கு வழங்கும் சாபத்திலிருந்து மீள இத்தகைய ஆலமரங்களின் அருகில் நாம் நிறைவேற்றும் வழிபாடுகள் துணைபுரிகின்றன. பல் மருத்துவர்கள், பல் வியாதிகளால் துன்புறுவோர் இத்தகைய திருத்தலங்களில் முற்றலாமை இளநாகமோடு என்ற தேவாரப் பாடலைப் பாடி இத்திருத்தலங்களில் உள்ள ஆலமரங்களை வலம் வந்து வணங்குவதால் அற்புத பலன்களைப் பெறுவார்கள்.

ரமண மகரிஷியைத் தரிசிக்க தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும் பகவான் கூறும் வார்த்தைகளை செவிமடுக்க அவர் வாயையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், பகவானோ ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு பல மணி நேரம் அமர்ந்திருப்பார். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியத்தை உரைக்க வல்லவரே நம் சற்குரு ஆவார். ரமணர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஸ்ரீதட்சிணா மூர்த்தி மானிட வடிவில் கல்லால மரத்தின் அடியில் திருஅண்ணாமலை உச்சியில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை காண முடியும். அதை தரிசிப்பதோடு மட்டுமல்லாமல் ரமண மகரிஷியைக் காண அங்கு கூடிய மக்களின் உள்ளங்களில் எழுந்த கேள்விகளுக்கான விடையை கல்லால மரத்தின் விழுதுகள் காற்றில் அசைந்து எழுப்பும் ஒலியிலிருந்து கிரகித்து மக்களின் உள்ளங்களில் நிறைக்கும் அற்புதமான பணியைத்தான் பகவான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பாம்பின் கால் பாம்பறியும் ! இவ்வாறு அடுத்த ரமணர் உருவாகும் விதத்தை நம் சற்குரு அளித்து விட்டார், அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்புதானே ?

அழகு, அறிவு பிரமிப்பைக் கொடுக்கும், அன்பே நெருக்கத்தைக் கொடுக்கும் என்பார்கள். இமயமலையின் உச்சியைக் காணும்போதோ, கடற்கரையில் அமர்ந்து தொடு வானத்தைப் பார்க்கும்போதோ நாம் எல்லையில்லா பிரமிப்பை அடைகிறோம். ஆனால், மலையின் உச்சிக்கோ கடலின் ஆழத்திற்கோ செல்ல நாம் சற்றும் முயற்சிப்பதில்லை. காரணம், அதை நினைத்தாலே நமக்குத் தோன்றும் பயமே காரணம். ஆனால், நன்றாக நீந்தத் தெரிந்தவர்களோ, மலையேறுவதையே பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கோ இந்த செயல்கள் எல்லாம் ஆனந்தத்தையே அளிக்கின்றன. இதுவே அகத்தில் ஈசனை தரிசிக்கும் அனுபவமும் ஆகும். எவரும் உடனே கடலில் போய் நீந்த முயற்சிப்பது கிடையாது,

சூரியனும் சந்திரனும் இணைந்து
பொலியும் திருமழபாடி

முதலில் வாய்க்கால், ஆறு என்று படிப்படியாக நீச்சலில் அனுபவம் பெற்ற அதன் பின்னரே ஆழ்கடலில் நீந்தும் வல்லமை பெறுகிறார்கள். அதுபோல் கடவுளை அடையும் அனுபவத்திற்கும் உறுதுணையாக அமைவதே திருமணம் என்ற ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனப் பொருத்த உறவாகும். இதன் பயனாக அமையும் “வச்சிர உறவே” படிப்படியாக ஈசனிடமும் நம்மைச் சேர்க்கும் வச்சிர உறவாக மாறும் என்பதே திருமழபாடியில் நாம் இயற்றும் வழிபாடுகளின் மகத்துவமாகும். இதனால்தான் மகான்கள் அனைவரும் அறிவைப் பெருக்கும் ஏட்டுப் படிப்பை நாடாது அன்பைப் பெருக்கும் இறைவழியில் முன்னேறி மற்றவர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்கிறார்கள். அரவிந்த மாதாவும் படிப்பு என்றால் அதை இறைவனை அறிவதற்காக மட்டுமே, அவருடன் நெருங்கிய, மிக நெருங்கிய உறவைக் கொள்வதற்காக மட்டுமே என்று கூறுவார்கள்.

“பாடி நாயகன்” ஸ்ரீமகாவிஷ்ணு
திருமழபாடி

சூரியனை நாம் நேரே காண முடியாது, காணக் கூடாது. அதே சமயம் சூரியனின் சக்தியை மக்கள் சற்றும் குறையாமல் பெறுவதற்காகவே ஏத்தாப்பூர் போன்ற சூரிய சக்தித் தலங்களில் இறைவனே எழுந்தருளி சூரிய பகவானின் சக்தியை மக்கள் பெற்று அதை இறைவனைக் காணும் “வச்சிரமாக” மாற்றும் முறையைப் புகட்டுகிறார். ஏதாப்பூர் போன்ற சூரிய சக்தித் தலங்களும் சூரிய நமஸ்கார பத்ததியும் பக்தியை, இறை நம்பிக்கையை வச்சிரமாக மாற்ற துணைபுரியும் குரு வழிகாட்டுதல்களாகும். எதையும் ஆக்க முடியாது, அழிக்கவும் முடியாது என்பது உண்மையே. “தீய எண்ணங்கள் தோன்றி விட்டால் அதை அழிக்க முடியாது, எதையும் அழிப்பது எங்கள் வேலையும் அல்ல...”, என்பார் நம் சற்குரு. தீய எண்ணங்கள் நல்ல எண்ணங்களின் பிரவாகத்தால், சூரிய ஒளியின் சக்தியால் பட்டுப் போய் பலனில்லாமல் நசியச் செய்வதே பட்டமங்கலம், ஏத்தாப்பூர், திருமழபாடி போன்ற சூரிய சக்தித் தலங்களில் பக்தர்கள் மேற்கொள்ளும் வழிபாடுகளின் மகிமையாகும். எந்த இறை அனுபூதிக்கும் மூதாதையர்களின் அனுகிரகம், ஆசீர்வாதம் அவசியம் என்பதால் இந்த ஆசீர்வாத சக்திகளை முழுமையாகப் பெறும் பொருட்டு சூரிய சந்திர மூர்த்திகள் இணைந்து அருளும் திருமழபாடி திருத்தலத்தில் அரிதிலும் அரிய பாடி தர்ப்பைகளைக் கொண்டு தர்ப்பணம் அளித்து மூதாதையர்கள் அருளும் “பால வச்சிர” சக்திகளை பெருக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். முழுமையான சூரிய கிரகணத்தை ஒட்டி இந்த படத்தில் பொழியும் இத்தகைய மழபாடி சூரிய சக்திகளை பக்தர்கள் வேறு எங்குமே தரிசிக்க முடியாது என்பதே இந்த தர்ப்பைகளின் மகத்துவமாகும்.

பகவான் கிருஷ்ணர் நீராடும்போது துரோபதை தன்னுடைய ஒரு பாதி சேலையைக் கிழித்து பகவானுக்கு அளித்தாள். அந்த சேலையின் மறுபாதியையும் பகவானின் துன்பம் தீர்க்கவே அளித்தாள் என்பதே சித்தர்களின் இருடிகள் பாரதம் கூறும் வரலாறு ஆகும். இவ்வாறு பகவானின் துயர் தீர்க்க துரோபதை உதவி புரிந்ததால் ஒரு பெண் அடையக் கூடிய அதிகப்படியான வேதனைக்கும் ஒரு மாமருந்தை அளித்து அவள் துயரத்தை மாற்ற அருள் புரிந்தவரே பகவான் கிருஷ்ணர் ஆவார்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
ஸ்ரீசாந்தநாதர் ஆலயம் புதுக்கோட்டை

துரோணாச்சாரியனின் மைந்தன் அஸ்வத்தாமன் நண்பன் என்ற முறையில் துரியோதனனுக்கு உதவி புரியும் நோக்கத்துடன் பஞ்சபாண்டவர்கள் உறக்கும்போது அவர்களைக் கொன்று விடத் திட்டம் தீட்டினான். ஆனால், பகவான் கிருஷ்ணரின் அருளால் அவன் உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று நினைத்து அவர்களைக் கொன்று விட்டான். தரும புத்திரன் முதலாக சகாதேவன் ஈறாக பாண்டவர்கள் ஐவருக்கும் வாரிசாகத் தோன்றியவர்களே துரோபதையின் மைந்தர்களான உபபாண்டவர்கள். இந்த ஐந்து செல்வங்களையும் பறிகொடுத்த துரோபதையின் மனோநிலை எப்படி இருக்கும் ? ஆறாத் துயரில் மூழ்கினாள் துரோபதை. தன் உயிரையும் விட்டு விடத் துணிந்தாள். பகவானின் குரு விரலில் சக்ராயுதத்தால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக சேலையை அளித்த துரோபதையின் சேவை அமைந்தது. இத்தகைய ஒரு சேவைக்கு வழிகாட்டியதே ஒரு பிறவியில் துரோபதை திருகோகர்ண திருத்தலத்தில் (தற்போதைய புதுக்கோட்டை) ஸ்ரீவேதநாயகி சமேத ஸ்ரீசாந்தநாதர் சிவாலயத்தில் உள்ள சகஸ்ரலிங்கத்தை தினமும் ஆயிரம் முறை வலம் வந்து வழிபட்டதாகும். இங்கு நந்தியும் சகஸ்ரலிங்க மூர்த்தியும் வெவ்வேறு தளத்தில் அமைந்து இருப்பது மட்டுமல்லாமல் இங்குள்ள சகஸ்ரலிங்கம் பக்தர்களால் வலம் வரக் கூடிய முறையில் அமைந்திருப்பதும் சிறப்பாகும்.

காத்யாயன உபநிஷத் என்ற வேத மந்திரத்தை ஓதி ஸ்ரீகாத்யாயனி தேவியை வழிபடும்படி நம் சற்குரு தெரிவிக்கிறார் அல்லவா ? காத்யாயன உபநிஷத் என்ற வேதத்தை கேட்ட உத்தம சீடர்களில் ஒருவர் நாமம் காத்யாயனர் என்பதும் அவரே உபபாண்டவர்களில் ஒருவராக பின்னர் பிறப்பெடுத்து தாய்க்கு உதவும் தனயனாக ஆறாத் துயரத்திலிருந்து மக்களைக் காக்க அரும்பாடுபட்டார் என்பதே திருமழபாடி வரலாறு உணர்த்தும் பாடமாகும். இரு வேறு தளத்தில் அமைந்த நந்தி மூர்த்தியையும் லிங்க மூர்த்தியையும், அதிலும் சிறப்பாக சகஸ்ரலிங்க மூர்த்தியையும் இவ்வாறு வழிபடுவதால் புண்ணிய சக்திகள் பன்மடங்காய்ப் பெருகி விரையில் பெருந்துன்பம் என்னும் மாமலையும் கரையும் என்பதே இத்தகைய வழிபாடுகளின் மகிமையாகும்.

சாந்தவெளி தர்ப்பணம் என்ற ஒரு அரிய தர்ப்பண வழிபாட்டை சித்தர்கள் அளிக்கிறார்கள். ஆடி மாதம் சந்திரனுக்கு உரியது, ஆவணி மாதம் சூரியனுக்கு உரியது. இவ்வாறு ஆடி மாதத்தில் வரும் அமாவாசை பௌர்ணமிகளில் காருகுடி திருத்தலத்திலும், ஆவணி மாதம் வரும் அமாவாசை பௌர்ணமிகளில் திருமழபாடி திருத்தலத்திலும் தர்ப்பணம் அளித்து மூதாதையர்களை வழிபடுவதே சாந்தவெளி தர்ப்பணம் ஆகும். சொத்து இழப்பு, நெருங்கிய உறவினர் இழப்பு, தீரா நோய்கள் போன்ற எத்தகைய எதிர்பாராத வேதனைகளுக்கும் ஆறுதல் அளிக்க வல்லதே மேற்கூறிய தர்ப்பண வழிபாடுகளாகும். இறைவனின் வலது பாகம் சூரியனைக் குறிப்பது, இடது பாகம் சந்திரனைக் குறிப்பது. சந்திரனைக் குறிக்கும் இடது பாகத்தில் காருகுடி சூரிய சந்திர மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதும், சூரியனைக் குறிக்கும் வலது பாகத்தில் திருமழபாடி திருத்தலத்தில் சூரிய சந்திர மூர்த்தி எழுந்தருளி இருப்பதும் இத்தகைய சந்திரனை நாடிய சூரிய அம்சங்களையும், சூரியனை நாடிய சந்திர அம்சங்களையும் கொண்டிருப்பதால் இந்த அபூர்வ சாந்தவெளி வழிபாடு எத்தகைய புண்பட்ட மனதிற்கும் சாந்தி அளிக்கக் கூடியதே, அமைதி அளிக்கக் கூடியதே.

எல்லையில்லாதது பரம்பொருள் ஒன்றே, மற்ற அனைத்திற்கும் ஏதாவது ஒரு எல்லை உண்டு. இந்த இரண்டையும் இணைக்கக் கூடிய தலமே திருமழபாடியாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam